திங்கள், 8 பிப்ரவரி, 2010

உலகில் வாழும் தமிழர்கள் தம்மை பாதுகாக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் சிங்கப்பூர் பிரதிநிதி

பதிந்தவர்_கனி on February 7, 2010
பிரிவு: செய்திகள்

உலகத்தமிழர்கள் தம்மை எவரும் தொடுவதற்கு அனுமதிக்க முடியாதவாறு ஒன்றுபட்டு நிற்க வேண்டும். சென்னையில் நேற்று ஆரம்பமான உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சிங்கப்பூரைச் சேர்ந்த சிவகாமிதேவி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு நேற்று சென்னையில் ஆரம்பமானது. மலேசியா, சிங்கப்பூர், சிறிலங்கா ஆகிய நாடுகள் உட்பட பலநாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இரு தினங்கள் இடம்பெறும் இந்த மாநாட்டை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கே.கிருஷ்ணசாமியால் ஒழுங்கு செய்யப் பட்ட இந்த மாநாட்டை மலேசியாவின் பினாங் பிரதி ஆளுநர் பி.ராமசாமி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை பாதுகாப்பதற்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று ராமசாமி ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

சிறிலங்காவில் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை உலகில் எந்த நாட்டிலும் வாழும் தமிழர்களுக்கும் ஏற்படக்கூடாது. இதனை ஒரு பாடமாக கொண்டு உலகத்தமிழர்கள் தம்மை எவரும் தொடுவதற்கு அனுமதிக்க முடியாதவாறு ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று சிங்கப்பூரில் இந்து வந்த பிரதிநிதி சிவகாமிதேவி தெரிவித்தார்.

கூடுதலான பெண்கள் எம்முடன் இணைந்து உரிமைக்காக போராடவேண்டும். இந்த மாநாடு உலகில் உள்ள சகல தமிழர்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் படங்கள் கொண்ட கண்காட்சியும் மாநாட்டில் இடம் பெற்றது. மாநாடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

(Visited 25 times, 21 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக