திங்கள், 8 பிப்ரவரி, 2010

எழுத்தாளர் ஜெயந்தன் காலமானார்



மணப்பாறை, ​ பிப்.​ 7:​ திருச்சி மாவட்டம்,​​ மணப்பாறையைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் கிருஷ்ணன் ​(எ)​ ஜெயந்தன் ​(72) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.​ ​ ​ இவருக்கு மனைவி நாகலட்சுமி,​​ மகன்கள் சீராளன்,​​ அன்பு,​​ மகள் வளர்மதி ஆகியோர் உள்ளனர்.​ ​ ​ மணப்பாறையில் 1938-ம் ஆண்டு பிறந்த இவர் நூற்றாண்டு கண்ட நகராட்சிப் பள்ளியிலும்,​​ வட்டார அரசுப் பள்ளியிலும் இன்டர்மீடியட் படிப்பு வரை படித்தார்.​ இவரும்,​​ யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப்பில் ஆசிரியராகப் பணியாற்றி சென்னையில் வசித்து வரும் மணவை ​ முஸ்தபாவும் பள்ளி நண்பர்கள்.​ ​ ​ ​ மணவை முஸ்தபாவுடன் இணைந்து 1956-ம் ஆண்டு மணவைத் தமிழ் மன்றத்தைத் தொடங்கியவர்.​ தொடக்கத்தில் ஆசிரியராகவும்,​​ வருவாய்த் துறை அலுவலராகவும் இருந்து,​​ பின்னாளில் கால்நடைப் பராமரிப்புத் துறை ஆய்வாளராக சென்னையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.​ ​ ​ ​ சிறு வயதில் நாடகக் கலையின் மீது ​ கொண்ட ஈடுபாடு காரணமாக நாடக நடிகராக நடித்தார்.​ தமிழ் இலக்கிய ஈடுபாடு காரணமாக நூற்றுக் கணக்கான சிறுகதைகள்,​​ கவிதைகளை எழுதியுள்ளார்.​ கோடு என்ற சிற்றிதழையும் நடத்தி வந்தார்.​ ​ ​ ​ இவருடைய சிறுகதைகள் கோமல் சாமிநாதனின் சுபமங்களா,​​ கணையாழி உள்பட பல்வேறு முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளன.​ நிராயுதபாணியின் ஆயுதங்கள்,​​ பகல் உறவு,​​ நாலாவது பிரயாணம்,​​ இந்தச் சக்கரங்கள்,​​ ஞானக் கிறுக்கன் ஆகியவை இவரது சிறுகதைத் தொகுப்புகளில் குறிப்பிடத்தக்கது.​ ​ சிறந்த முற்போக்கு சிந்தனைவாதியாக வாழ்ந்த இவர்,​​ இறுதிக் காலத்தில் பிறந்த மண்ணில் இருக்க விரும்பியதால்,​​ மணப்பாறையில் சிந்தனைக் கூடல் என்னும் அமைப்பைத் தோற்றுவித்து,​​ எழுத்து மற்றும் பேச்சுப் பயிற்சியை அளித்து வந்தார்.​​ ​ தற்போது 1,000 பக்கங்களுக்கும் அதிகமான அறிவியல் பூர்வமான நாவல் ஒன்றை எழுதி வந்தார்.​ அதற்குள் அவரை மரணம் தழுவிக் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக