வியாழன், 7 மே, 2020

சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்

சித்திரை முழுமதி நாளில்

தொல்காப்பியர் நாள்

கோவிலூர் திருமடமும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து  2010இல் நடத்திய தொல்காப்பியர் கால ஆராய்ச்சிக் கருத்தரங்கத்தில் தொல்காப்பியர் காலம் கி.மு.711 என்றும் சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியத்தை அரங்கேற்றினார் என்றும் அந்நாளையே தொல்காப்பியர் பிறந்த நாளாகக் கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இதனை அரசிற்குத் தெரிவித்து அப்பொழுது நடைபெற இருந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவிக்கும்படியும் அரசிற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், திருவள்ளுவர் ஆண்டிற்கும் இதற்கும் குழப்பம் வந்து விடுமோ என்ற ஐயத்தில் இருந்த அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தமிழறிஞர்கள் எதிர்பார்த்தவாறு அதனை அறிவிக்க வில்லை.
எனினும் எனினும் இப்பொழுது சித்திரை முழுமதிநாளில் தொல்காப்பியர் நாளைச் சிறப்பிக்க அரசு ஆணையிட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. முதல்வருக்கும் தமிழக அரசிற்கும் நம் பாராட்டுகள்!
அரசாணை த.வ.செ.(த.வ.12)து.  நிலை எண் 148 நாள் 15.11.2019 இல்  சித்திரை முழுமதி நாளில் – இவ்வாண்டு சித்திரை 24, 2051 – 07.05.2020 அன்று – சென்னை கடற்கரைச்சாலையில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக வளாகத்திலும் குமரி மாவட்டம் காப்பி(ய)க்காட்டிலும் உள்ள தொல்காப்பியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி சிறப்பிக்க அரசு ஆணை இட்டுள்ளது.
ஆனால், இதற்கு முந்தைய தொல்காப்பியர் சிலைகளையும் சிறப்பிப்பதே முறையாகும். இவற்றையும் உள்ளடக்கி அரசு மற்றோர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.
தொல்காப்பியரைப் போற்றுவதற்கு அரசிடம் திட்டம் ஏற்கப்பட்டும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. தொல்காப்பியர் புகழரங்கம் முதலான ஐந்து புகழரங்கங்கள் நிறுவுவதாகச் சட்ட மன்றத்தில் அப்போதைய கல்வி அமைச்சர் தம்பிதுரை கலைபண்பாட்டுத் துறை,  கொள்கை விளக்கக்குறிப்பு 2001-2002 கோரிக்கை எண் 51இல்  அறிவித்தார்.  அதற்கான இடம் தேடுதல் தொடர்பான தொடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் எதுவும் அமைக்கப்படவில்லை.
  “தொல்காப்பியர் புகழரங்கம் சென்னையிலும், இளங்கோவடிகள் புகழரங்கம் கோயம்புத்தூரிலும் சைவக் குரவர்களுக்கான புகழரங்கம் மதுரையிலும் ஊரகக் கலை வல்லுநர்களுக்கான புகழரங்கம் திருநெல்வேலியிலும் பரதநாட்டியக்கலை வல்லுநர்களுக்கான புகழரங்கம் தஞ்சாவூரிலும் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த அரசிற்குப்பல முறை முறையீடு செய்தோம்.
அரசு போற்றும் புரட்சித்தலைவி செ.செயலலிதா முதல்வராக இருந்த பொழுது வெளியிட்ட அறிவிப்பைச் செயல்படுத்தாமல் புதிய அறிவிப்பாகத் தொல்காப்பியர் சிலை  சென்னையில் நிறுவப்படும் என 2018 நிதி நிலை அறிக்கையில் அறிவித்தனர். இதன்படி மார்ச்சு 2019இல் தொல்காப்பியர் சிலை திறந்து வைக்கப்பட்டது. (எனினும் தொல்காப்பியர் புகழரங்கம் நிறுவ அரசிற்குத் தொடர்ந்து முறையீடு அனுப்பப்படும். அல்லது சட்டமன்றத்தில்  உறுப்பினர்கள் கேட்டு உறுதி மொழி வாங்கப்படும்.) தலைநகரத்தமிழ்ச்சங்கம் சார்பில் தொல்காப்பியர்சிலை சென்னையில் நிறுவ இசைவும் இடமும் வேண்டித் தமிழ்க்காப்புக்கழகமும் அரசிடம் முறையிட்டது. அரசே தொல்காப்பியர் சிலை நிறுவியதில் மகிழ்ச்சி.
அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் தலைநகரத் தமிழ்ச்சங்கம் முதலான தமிழ் அமைப்புகளின் முன்னெடுப்புடன் கன்னியாகுமரி மாவட்டம் காப்பிக்காட்டில், தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. ஆனி 26, 2047 /10.07.2016  அன்று தொல்காப்பியர் சிலை நிறுவப்பட்டது. அண்மையில் நிறுவப்பட்ட முதல் தொல்காப்பியர் சிலை இதுதான்.
1981 ஆம் ஆண்டு மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற பொழுது க.க.நகரில் (இப்போது நீதிமன்றம் எதிர்ப்புறம் உள்ள சாலைப்பிரிவில் தோரணவாயில் முன்னால், தொல்காப்பியர் சிலை அமைக்கப்பட்டது.
செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் ஆவணி 25, 1942 / செப்.10, 1911 அன்று குன்னூரில் நூலகம் அமைத்து அங்கே தொல்காப்பியர் சிலையை நிறுவியுள்ளா்(தினஇதழ் நாள் மாசி 07, 2046 வியாழன் 19.02.15 பக்கம் 15). அதன் நிலை என்ன என்று தெரியவில்லை.
இத் தொல்காப்பியர் சிலையை அறிந்து தூய்மைப்படுத்தி நன்கு பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து அதையும் திருத்தப்படும் ஆணையில் சேர்க்க வேண்டும்.
சென்னை, குமரி மாவட்ட ஆட்சியர்களுக்கு மகுடைச் சூழலில் தமிழன்பர்களை வரவழைப்பதற்கு வாய்ப்பின்மையால், தொல்காப்பிய நூற்பாக்கள் சிலவற்றை ஓதச் செய்யலாம் எனத்தெரிவித்து மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளோம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொல்காப்பிய ஒலிப்பேழைகளை வெளியிட்டுள்ளது. அவற்றை அங்கிருந்து பெறலாம். அதற்கு வாய்ப்பில்லையேல் அந்நிறுவனத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தோம். இருவரையும் தொடர்பு கொள்ள முயன்ற பொழுது சென்னை ஆட்சியர், ஆட்சியகத் தொலைபேசிகள் இணைப்பு கிடைக்கவில்லை.
குமரி மாவட்ட ஆட்சியர் தவறாமல் மாலை அணிவித்துச் சிறப்பிப்பதாகத் தெரிவித்தார். மூவாப்புகழ் தொல்காப்பியரை நினைந்து போற்றும் அன்று தொல்காப்பியம் அரங்கேறிய பொழுது புலவர் அவைத்தலைவராக இருந்த அதங்கோட்டாசான் சிலை கேட்பாரற்று இருப்பது சிறப்பாக இருக்காது. எனவே, அதங்கோட்டில் உள்ள அதங்கோட்டாசான் சிலையைத் தூய்மை செய்யும் அப்பகுதி அதிகாரி மூலம் மாலை அணிவிக்கவும் ஏற்பாடு  செய்யுமாறும் வேண்டினேன். மின்னஞ்சலைப்பார்த்து உரியவாறு செய்கிறேன் என்றார். அன்புடன் செவிமடுத்த குமரி மாவட்ட ஆட்சியர் திரு பிரசாந்து எம்.வாடுநெர் இ.ஆ.ப. (Prashant M. Wadnere I.A.S.)அவர்களுக்குப் பாராட்டுகள்!
ஆட்சியருக்கு நினைவூட்டுமாறு தெரிவித்த தலைநகரத் தமிழ்ச்சங்க நிறுவனர் புலவர் த.சுந்தரராசனிடம் சிலைக்கு மாலை அணிவிக்கும் பொழுது தொல்காப்பிய நூற்பாக்கள் ஐந்து ஓதுமாறும் தெரிவித்துள்ளேன்.
தொல்காப்பியர் நாளில் மதுரையில் உள்ள தொல்காப்பியர் சிலைக்கும் மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் சிறப்பிக்க வேண்டும். எனவே, இது குறித்து மதுரை ஆட்சியருக்கும் மின்னஞ்சல் அனுப்பினோம். அவருடன் தொடர்பு கொள்ள முயன்ற பொழுது அவர் வெளிப்பணிகளுக்குச் சென்றிருந்தமையால் அணுக்க உதவியாளரிடம்தான் பேச முடிந்தது. அவரிடம் விவரத்தைத் தெரிவித்தேன்.
மேலும் தொல்காப்பியர் சிலை சிறப்பிக்கப்படுகையில் மதுரையில் உள்ள பிற புலவர்களின் சிலைகளுக்கும் அந்தப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் மூலம் மாலை அணிவிக்க ஏற்பாடு செய்வது தமிழ்ப்புலவர்களைப் போற்றுவதாகும்.
இவைபோல்  தமுக்கம் திடலின் முன்புறம் சங்கப்புலவர் நினைவுத் தூண் உள்ளது. தமிழன்னைச் சிலையைப் போற்ற ஆணை பிறப்பித்த அரசு இதனைக் கவனிக்காமல் விட்டுள்ளது. (இடைச்)சங்கப்புலவரான தொல்காப்பியர் சிலையைச் சிறப்பிக்கும் பொழுது சங்கப்புலவர்களின் நினைவுத்தூணைப் புறக்கணிப்பது முறையில்லை யல்லவா? ஆதலின் சங்கப்புலவர் நினைவுத்தூணில் மலர் தூவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
அரசின் ஒதுக்கீடு இல்லை என்றாலும் சிறப்பிக்க முடியும். அரசாணை இல்லாமல் எப்படி ஆட்சியர் சிறப்பிப்பார் என எண்ணக் கூடாது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அருந்தமிழ்ப்புலவரைப்  போற்றுவதற்கு அரசாணை தேவை என்பதில்லை. முன்நிகழ்வுகள் நினைவை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
மதுரையில் நான் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநராக இருந்த பொழுது 1991இல் சித்திரைப் பொருட்காட்சியின் தொடக்க விழாவன்று தமிழன்னை சிலைக்கும் சங்கப்புலவர் நினைவுத்தூணுக்கும் மின்னொளி ஏற்பாடு செய்து பேரவைத்தலைவர் சேடப்பட்டி இரா.முத்தையா, அமைச்சர்  பெருமக்கள் முதலானோரால் மாலை அணிவிக்கச் செய்தேன். தமிழன்னை சிலையைவாவது கேள்விப்பட்டுள்ளோம். சங்கப்புலவர் நினைவுத் தூண் இருப்பதை  இப்பொழுதுதான் அறிய வருகிறோம் என்றனர். அந்த அளவிற்கு மக்களால் மறக்கப்பட்டிருந்தது. 
ஆனால் அதன் பின்னர், மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் தமுக்கம் திடலில் எந்நிகழ்ச்சி நடந்தாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால், இருண்டு கிடக்கும் தமிழன்னை சிலையையும் சங்கப்புலவர் நினைவுத்தூணையும் மின்னொளியால் அழகு செய்து ஒளியூட்ட நடவடிக்கை எடுத்தேன். அவர்கள் ஒத்துழைப்பால் இதுவரை இவை புறக்கணிக்கப்படாமல் உள்ளது.
அதுபோல் மாவட்ட ஆட்சியகம் முன்புறம் சாலைப்பிரிவின் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலை யாராலும் அறியப்படாமல் கட்சிக்கொடிகளைக் கட்டும் இடமாகவும் சுவரொட்டி ஒட்டும் பீடமாகவும்தான் இருந்தது. 1991 தை 2 அன்று தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மாலை அணிவித்ததும்தான் பொதுமக்கள் திருவள்ளுவர் சிலை இருப்பதையே அறிந்தார்கள்.
மதுரையில் உள்ள புலவர்கள் சிலைகளை மதுரை மாநகராட்சியினர் என் வேண்டுகோளை ஏற்று, திங்கள்தோறும் தூய்மைப்படுத்தினர். இவற்றை நினைவுகூர்வதன் மூலம் அரசின் செலவினத்தை எதிர்நோக்காமல் மாவட்ட ஆட்சியகமும் மாநகராட்சியும அப்பொழுது பணியாற்றியதுபோல் இப்போதும் இயலும் என்ற நம்பிக்கை உள்ளது.
“தொல்காப்பியரின் காலத்தை அறிவிக்க வேண்டும்!”  என என் செவ்வி(பேட்டி)க் கட்டுரையில் “மதுரையில் 1981 தமிழ்மாநாட்டின்போது வைக்கப்பட்ட தொல்காப்பியர் சிலை வேப்பமரம் மூடியபடி இருக்கிறது இன்று!” எனக் குறிப்பிட்டிருந்தேன்(ஆரா, தமிழக அரசியல் தொகுப்பு 6: இதழ்29 நாள் 19.02.2014). அதனடிப்படையில் நான் மாவட்ட ஆட்சியருக்கும் உலகத்தமிழ்ச்சங்கம்/தமிழ்வளர்ச்சித்துறைக்கும் மடல் அனுப்பினேன். உலகத்தமிழ்ச்சங்கத் தனி அலுவலர் முனைவர் பசும்பொன், தானே உரிய ஏற்பாடு செய்துதருவதாகக் கூறி மூடப்பட்ட மரக்கிளைகளை அகற்றி மக்கள் பார்க்கும்படி மாற்றினார். 
ஆதலின் மதுரையில் தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிவிப்பதுடன் அச்சிலை தொடர்ந்து பேணப்படவும், தமிழ்ப்புலவர்கள், சங்கப்புலவர் நினைவுத் தூண் ஆகியவற்றில் மாலை அணிவிக்கவும் ஆவன செய்வது சிறப்பாக இருக்கும்..
சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் பொழுது கட்சிகளுக்குச் சிலைகளை ஒதுக்குவதுபோல் அல்லாமல் எல்லாத் தொல்காப்பியர் சிலைகளும் மதிக்கப்பட வேண்டும்.
ஒல்காப்புகழ் தொல்காப்பியர் புகழ்பாடி ஒண்டமிழ் வளர்ப்போம்!

இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை-அகரமுதல நாள் சித்திரை 24, 2051 – 07.05.2020

செவ்வாய், 5 மே, 2020

ஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு

அகரமுதல

ஞாலம்

‘கவிதைக் குரல்கள்’

கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு

சென்னையில் செயல்பட்டு வரும் ஞாலம் இலக்கிய இயக்கம் ஆண்டுதோறும் பாவேந்தர் விழாவை முன்னிட்டு ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு மகுடை (கோரானோ) தாக்கத்தின் காரணமாகத் தாழ்ச்சியாக வெளிவர இருக்கிறது. கவிதைக் குரல்கள் என்னும் தலைப்பில் வெளிவர இருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பிற்குக் கவிஞர்கள் தாங்கள் விரும்பும் தலைப்பில் தங்கள் கவிதைகளையும் ஒளிப்படத்தையும் தங்களைப் பற்றிய சிறு குறிப்பையும் muhilairaja@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம். கவிதைகள் நாற்பது அடிகளுக்கு மிகாமல் புதுக்கவிதையாகவோ மரபுக் கவிதையாகவோ அமையலாம். எந்தக் கட்டணமும் கிடையாது. நூலின்  ஒரு படி மட்டும் அன்பளிப்பாக வழங்கப்படும். எவ்வளவு விரைவில் அனுப்ப இயலுமோ அவ்வளவு விரைவில் அனுப்பி உதவுக.
தொடர்புக்கு: 9444365642

அன்புடன் முகிலை இராசபாண்டியன்

ஞாயிறு, 3 மே, 2020

01.02.1965 : உலகில் மொழிக்காகக் கைதான முதல் பேராசிரியர் சி.இலக்குவனார்


01.02.1965 உலகில் மொழிக்காகக் கைதான முதல் பேராசிரியர் சி.இலக்குவனார்

மறைமலை இலக்குவனார் :

என்னுடைய பதிவு 2/5/65 அன்று என் தந்தையார் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் படி தளைப்படுத்தப்பட்ட செய்தியைக் குறித்தது. இது தொடர்பாக இன்னும் பல செய்திகளைக் கூறவேண்டும். ஆனால் இதற்கு முன்னதாக 1/2/65 அன்று இந்தியக் குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்ட செய்தியைக் கூறவேண்டும். இதற்கு முன்னர் இதனைப் பதிவு செய்துள்ளேன். எனினும் புதிய நண்பர்கள் பலர் கேட்பதால் அந்தச் செய்தியை மீண்டும் இங்குப் பதிவு செய்கிறேன்.ஏற்கெனவே படித்தவர்கள் கடந்து செல்க.
1/2/1965 மாலை 5/30 இருக்கும். திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திற்கு எதிரில், மலைப்பாதையில் அமைந்திருந்த ‘குறள்நெறி அச்சகம்’ பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அந்த இந்திஎதிர்ப்புக் கொந்தளிப்புச் சூழலில் அடுத்துவரும் இதழ் அச்சாகிக்கொண்டுள்ளது. முந்தைய நாள் திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியற்கல்லூரியில் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்திய கொடுமையை விளக்கும் மாணவர் கையறிக்கை ஒன்று அப்போதுதான் அச்சுப்பொறியில் (டிரெடில்) ஏற்றப்பட்டிருந்தது.
வரவேற்பறையாகச் செயல்பட்ட முன்னறையில் மேலாளர் இருக்கையின் எதிரே என் தந்தையார் அமர்ந்திருந்தார். நான் பொறி இயங்கும் உள்கூடத்திலிருந்து வெளியே வரவேற்பறைக்குத் தற்செயலாக வந்தபோதுதான் காவல்துறையின் ஈப்பு அச்சகத்தின் முன்வந்து நிற்பதைக் கவனித்தேன். பருமனாகவும் நடுத்தர உயரத்துடனும் இரட்டைநாடிக் கட்டமைப்புடன், சதுரமான சட்டகம்கொண்ட மூக்குக் கண்ணாடி அணிந்த ஆய்வாளர் உள்ளே நுழைந்தார்.
இரும்புக்கம்பிகள் மட்டுமே சுற்றுவேலிபோல் அமைந்திருந்தமையால் குறைந்தது பத்துக்காவலர்களாவது வெளியே, திசைக்கொருவராகச் சிதறிய நிலையில் நின்றுகொண்டிருந்தார்கள் எனத் தோன்றியது.
உள்ளே நுழைந்த ஆய்வாளரை நோக்கி’ஐயா, வாருங்கள்! என்ன செய்தி?” என என் தந்தையார் வினவினார்.
“Dr. Ilakkuvanaar! I am Sachchithaanantham,Inspector at Thirupparankundram police station.”
“ம்ம்..சொல்லுங்கள்”
“Dr.Ilakkuvanaar, You are under arrest”
“என்ன காரணத்திற்காக எனத் தெரிந்துகொள்ளலாமா?”
““Dr.Ilakkuvanaar. You are the father of Anti-Hindi agitation”
‘ஐயா! அவ்வளவு பெருமைக்கு நான் உரியவன் அல்லன். இது மாணவர்கள் நடத்தும் போராட்டம். தங்கள் வருங்காலம் குறித்த கவலையில் போராடுகிறார்கள்.”
“No. Dr.Ilakkuvanaar! We know everything. You are leading this agitation. Come on! Let us go”
ஆய்வாளர் சச்சிதானந்தம் சற்று உரத்த குரலுக்கு சொந்தக்காரர். அழுத்தம் திருத்தமாகவும் சுருக்கமாகவும் அவர் நிகழ்த்திய உரையாடல் ஐம்பத்தைந்தாண்டுகள் கடந்தபின்னும் இன்னும் என் அகச்செவியில் ஒலிக்கிறது.
ஒரு பெரிய நீலவண்ணக் காவல்துறைப்பேருந்தும் இரண்டு ஈப்புகளும் வெளியே நின்றுகொண்டிருப்பதை அப்போதுதான் முழுமையாகப் பார்த்தேன்.
ஓர் ஈப்பில் தந்தையாரை ஏற்றிக்கொண்டு ஆய்வாளர் சச்சிதானந்தம் ஏறிக்கொண்டார்.பிறகு உசுபுசு என மூச்சுவிட்டும் உர்ரென உறுமியவாறும் வண்டிகள் கிளம்பின.வெளியே சீருடையில் பத்துப்பேரும் வெள்ளுடையில் பதினைந்துபேரும் நின்றிருந்தார்கள் என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது.
ஒருவரைக் கைது செய்ய ஏன் இத்துணைக் காவலர்கள்?? எனக்கு அப்போது விளங்கவில்லை. காலம் செல்லச்செல்லத் தான் அந்தக் கைது—மாணவர் மனங்கவர்ந்த ஒரு பேராசிரியரைத் தளைப்படுத்தும் கைது_எவ்வளவு முதன்மையான நிகழ்ச்சி என்பது எனக்கு விளங்கியது.தங்கள் தலைவராக மாணவர்கள் கொண்டாடும் பேராசிரியரைக் கைது செய்வதனை ஒருவேளை அந்த மாலைப்பொழுதில் மாணவர்கள் அறிந்துகொள்ளநேரிட்டால் எவ்வளவு கொந்தளிப்பும் குழப்பமும் ஏற்பட்டிருக்கும்?
காவல்நிலையத்தின் எண்ணை நான் இப்போது மறந்துவிட்டேன். பி2 என எண்ணுகிறேன். ஆய்வாளர் ஒருவர் எங்கள் வீட்டுக்குவந்து இரண்டு மாற்று உடைகள் வாங்கிச்சென்றார். நாங்கள் கேட்ட எந்த வினாவுக்கும் அவர் விடைவழங்கவில்லை,”இதோ நாளை வந்துவிடுவார்.இரண்டு மாற்று உடைகள் போதும்.”எனக் கூறிச் சென்றார்.
அரைமணி நேரம் கழித்துத் தொலைபேசி வந்தது.”நாளைக் காலை எட்டரையிலிருந்து ஒன்பது மணிக்குள் காலைச்சிற்றுண்டி கொண்டுவாருங்கள். இன்னும் நடுவர்முன் முன்னிலைப்படுத்தவில்லை. ஆகவே சிறைக்கு அழைத்துப்போகவில்லை. காவல்நிலையத்தில்(ரிமாண்டு) தளைப்படுத்தியுள்ளனர். எனவே வீட்டு உணவு கொடுக்கலாம்.”எனக் காவல்நிலையத்திலிருந்து கூறினார்கள்.
மறுநாள் காலை, சிற்றுண்டியை எடுத்துச்சென்றேன். அங்கே அவர் பி2 காவல்நிலையத்தில் இல்லை. பி4-க்குக் கொண்டுபோயுள்ளனர்.’என மறுமொழி கூறினர்.
பி4 காவல்நிலையம் சென்றேன்.
”அவர் பி6 நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே ஆய்வாளர் தமது வீட்டிலிருந்து சிற்றுண்டி கொடுத்துவிட்டார். கவலையின்றி வீட்டுக்குச் செல்லுங்கள்” என என்னை ஆற்றுப்படுத்தினர்.
வீட்டுக்கு வந்தவுடன் தந்தையார் கைது நாளிதழ்களில் பரபரப்புச் செய்தியாக வெளிவந்ததைப் படிக்கவே நேரம் போதவில்லை. காலையில் அலைந்தது அலுப்புத்தரவில்லை; சிற்றுண்டி அருந்தவேண்டும் என்னும் எண்ணமும் ஏற்படவில்லை.
கல்லூரி மூடப்படிருந்தமையால் வெளியே செல்லும் வேலையில்லை. எனினும் கடைத்தெரு வரை காலார நடக்க விழைவு உந்தியது.
வெளியே புறப்பட்டவுடன் சற்றுத்தள்ளி எதிர்ப்புறம் அமைந்திருந்த வீட்டில் தமிழ்நாடு பல்தொழில்நுட்பநிறுவனத்தின் முதல்வர் திருஞானசம்பந்தன் கல்லூரி கிளம்பிக்கொண்டிருந்தார்.
வாயிற்படியிலிருந்து கீழிறங்கித் தெருவுக்கு வந்தவர் எதிர்ப்பட்ட என்னைக் கண்டு என் காதில்” The fools have arrested a great scholar. Time will teach them befitting lessons,” என் காதில் கிசுகிசுத்தார்.
பத்திரிகைக்கடையில் சுவரொட்டி காற்றில் அசைந்துகொண்டிருந்தது.
“சித்தப்பாவுக்கு அரிவாள் வெட்டு
இலக்குவனார் கைது”
என்னும் தொடர்கள் தினத்தந்தி சுவரொட்டியில் இடம்பெற்றிருந்ததை நான் மறந்தாலும் என் மனக்கண்முன் இன்றும் அவை பசுமையாகக் காட்சியளிக்கின்றன.
மறைமலை இலக்குவனார்