சனி, 12 நவம்பர், 2016

ஆள்வோர் பொறுப்பு மிகப் பெரிது! – சி.இலக்குவனார்




தலைப்பு-ஆள்வோர் பொறுப்பு-சி.இலக்குவனார் ;thalaippu_aalvoar_poruppu_ilakku

ஆள்வோர் பொறுப்பு மிகப் பெரிது!

      தம் கட்சிக்குள்ளேயும் தம்மை வீழ்த்தும் பகைவர் நண்பர்போல் நடித்துக்கொண்டிருப்பர். அவர்களையும் அறிந்து களைதல் வேண்டும். உண்மை நண்பர்களை அறிந்து அவர்களிடம் பொறுப்புகளை ஒப்புவித்தல் வேண்டும். பதவியை அடைய நண்பர்போல் வருவர்; பதவியில்லையேல் பகைவராய் மாறுவர். ஆதலின், பதவி பெறினும் பெறாவிடினும் தம்மைச் சார்ந்து நிற்போரை அறிந்து அவர் உவப்பன செய்தல் வேண்டும். பகைவரையும் நண்பராக்கும் பண்பும் பெறுதல் வேண்டும். நண்பரைப் பகைவராக்கும் செயல்களில் நாட்டம் கொள்ளுதல் கூடாது. நாட்டை அடிமைப்படுத்த முயலும் பிற நாட்டாரை வெல்லும் வகையோ, நட்பாக்கிப் பகைமையொழித்து ஒத்து வாழும் வகையோ நன்கு அறிந்திடல் வேண்டும். ஆதலின் மன்பதை காக்கும் மாண்புறு கடமையை ஏற்போர் பொறுப்பு மிகப் பெரிது.
அட்டை,இலக்குவம், காவியா பதிப்பகம் - wrapper, kavyapathippagam, ilakkuvam

பேராசிரியர் சி.இலக்குவனார்:
இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 748

மறுமை – மீண்டும் பதவியில் அமரும் தன்மை: சி.இலக்குவனார்

தலைப்பு-மீண்டும் பதவியில் அமரும் தன்மை, சி.இலக்குவனார் ;thalaippu_marumai_ilakku

மறுமை – மீண்டும் பதவியில் அமரும் தன்மை

 மனநலத்தி னாகு மறுமைமற் றஃது      
    மினநலத்தி னேமாப் புடைத்து (குறள் 459) 
  மறுமை -மீண்டும் அப்பதவியில் அமரும் தன்மை, மன நலத்தின் ஆகும்-உள்ளத்தின் சிறப்பால் உண்டாகும், மற்று அஃதும்-மீண்டும் அங்ஙனம் ஆவதும், இனநலத்தின்-சூழ்ந்திருக்கும் இனத்தின் சிறப்பால், ஏமாப்பு உடைத்து-வலிமை உடையது ஆகும்.
      அரசியல் பதவிகளில் மீண்டும் மீண்டும் அமர்ந்து தொண்டாற்றும் நிலைமை எல்லோர்க்கும் கிட்டுவது அன்று. ஒரு முறை ஆண்ட பின்னர் மறுமுறை மக்களால் அமர்த்தப்பட வேண்டுமாயின், சிறந்த நற்பண்பு உடையராய் இருத்தல் வேண்டும். அங்ஙனம் அமர்ந்தாலும், நல்லறிஞர் புடைசூழ இருந்தால் எவரானும் அகற்ற முடியாத வலிமை பெற்றோராய் இருக்கலாம். இல்லையேல் சுற்றியிருப்போரே பொறாமை காரணமாகப் பதவியினின்றும் அகற்றுவதற்குரிய வழிகள் தேடுவர்.
      ‘மறுமை’ என்பதற்கு  “மறுமையின்பம்இறந்தபின் அடையும் வீட்டின்பம்” என்று பொருள் கூறியுள்ளனர் பழைய உரையாசிரியர்கள். அரசியலில் உள்ள இக்குறட்பாவிற்கு அங்ஙனம் பொருள் கூறுவது ஏற்புடைத்தாகத் தெரியவில்லை.
பேராசிரியர் சி.இலக்குவனார்:
இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 746
அட்டை,இலக்குவம், காவியா பதிப்பகம் - wrapper, kavyapathippagam, ilakkuvam

ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும் – சி.இலக்குவனார்




தலைப்பு-ஆட்சிமுறை,சி.இலக்குவனார் ;thalaippu_aatchimurai_ilakku
ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும்!
     உலகம் நல்லின்பம் பெற ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும். ஆட்சிமுறை செம்மையுற ஆளுவோர் உளம் நற்பண்பு அடைதல் வேண்டும். ஆட்சிமுறை எவ்வளவு சிறந்ததாய் இருப்பினும் ஆளுவோர் உளநிலை பண்பட்டிலதேல் பயனற்றுவிடும். ஆதலின் ஆட்சித்துறையில் அமர்வோர் உளம் செம்மையுற வேண்டும். அவர் மனநலத்தால் அவர் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்களே நன்மை பெறுவர். உலகில் உள்ள பல நாடுகளும் ஒன்றோடொன்று தொடர்புற்றுச் சார்ந்து வாழும் நிலையில் உள்ளன. ஒரு நாட்டின் இன்பதுன்பம் பிறநாடுகளையும் சார்கின்றன. செர்மானியில் போர் தோன்றினால் சப்பானில் அதன் பயனைக் காணலாம். பிரான்சில் உள்நாட்டுக்கலகம் தோன்றின் இங்கிலாந்தில் அதன் எதிர் விளைவை அறியலாம். ஆதலின், ஆட்சி புரிவோர் நற்பண்பு மிக்க உளம் உடையோராய் நாட்டை ஆண்டால் உலகத்திற்கே நன்மையென்றார்.
பேராசிரியர் சி.இலக்குவனார்:
இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 744
அட்டை,இலக்குவம், காவியா பதிப்பகம் - wrapper, kavyapathippagam, ilakkuvam