சனி, 7 செப்டம்பர், 2019

படைப்பிற்குப் பொருள் தரும் பாரதிபாலன் கதைகள் – சா.கந்தசாமி

அகரமுதல

சொல்லப்படும் வாழ்க்கையோடு இணைந்து போகும் மொழி

இலக்கியத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களை பத்துப்பத்து ஆண்டுகளாகப் பிரித்து, பகுத்துச் சொல்வது ஒரு மரபாக இருக்கிறது. அஃது இலக்கியத்தில் ஏற்பட்டு இருக்கிற மாறுதல், புதிய போக்கு, சிந்தனை என்பது சமூகத்தில் ஏற்பட்ட அளவிற்கு இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பது வேறு. சில நேரங்களில் இந்தக் கணிப்பு இலக்கியத்தரம் என்பதை விட்டு விட்டு சமூகக் காரணிகளை மட்டும் கணக்கெடுத்துச் சொல்வதாக அமைந்து விடுவதும் உண்டு. மேலும் சமூக மாறுதல், படைப்பு இலக்கியத்திற்குள் அதிகமாக வராமல் இருக்கிறது என்பதைச் சொல்வது மாதிரியும் இருப்பது தெரிகிறது. அதுவும் ஒரு சமூக விமர்சனந்தான். எது இலக்கியத்திற்கு ஆதாரச் சுருதி என்று படைப்பு எழுத்தாளரே தீர்மானம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனைத் தமிழ் இலக்கியம் நெடுகிலும் காண முடிகிறது என்பது சிறப்பான அம்சம். அதுதான் மனித சரித்திரம், குடும்ப சரித்திரம் என்பது. அது எதிலும் அதிகமாக அகப்பட்டுக் கொள்ளாமல், வாழ்க்கையை நடத்துவது; சிறப்பாக, சௌசன்னியமாக தன்ளைவில் உருவாக்கிக் கொண்ட மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்துவது.
               அது படிப்பின் வழியாக இல்லாமல் பாரம்பரியமாக, குடும்பத்தின் சொத்தாக தொடர்ந்து வருகிற போது, தன்னளவில் அதிகமாக மதிப்புப் பெறுகிறது. இப்படிப்பட்ட குடும்பத்தின் கதை, குடும்பத்தினர்களின் கதையைத் தனித் தன்மையோடு சொல்வது சமீப காலங்களில், தமிழ்ச் சிறுகதைகளில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனைச் சிறப்பு அம்சம் என்று கொண்டாட வேண்டும். அதனை புத்திபூர்வமாக அறிந்து எழுதினாலும் சரி; உணர்வுப்பூர்வமாகக் கொண்டு எழுதினாலும் சரி, எழுத்து என்பதற்கும் படைப்பு என்பதற்கும் சிறப்பான பொருள் கொடுக்கிறது. அதன் காரணமாகப் படைப்பின் வசீகரம் வளம் பெறுகிறது. இப்படி வசீகரம் பெற்று வந்துள்ள சிறுகதைத் தொகுதி பாரதிபாலனின் ‘உயிர்ச் சுழி’, சுமார் ஏழெட்டு ஆண்டு இடைவெளியில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. 
               இடைவெளி என்பது படைப்பில் காணவில்லை என்பதை ஒரு சிறப்பு அம்சமாகச் சொல்ல வேண்டும். அதாவது கருத்திலும் சரி, கதை சொல்லும் பாங்கிலும் சரி, திட்டமில்லாதது மாதிரியான ஒரு திட்டத்தில் வளமென்னும் மொழி வளத்தில், அலங்காரம் என்பதை அகற்றி, சொல்லப்படும் வாழ்க்கையோடு, இணைந்து போகும் மொழியோடு கதைகள் எழுதிஇருக்கிறார். இலக்கியம் என்பது மொழியால் எழுதப்பட்டு, மொழியால் படிக்கப்பட்டு உணரப்படுகிறது என்றாலும் – அது மொழிக்குள் இல்லை என்கிற போது – மொழியின் வெளிப்பாட்டுத் தன்மை இன்னும் கூடுதலாக அர்த்தம் பெறுகிறது. அதாவது சொல்லப் பட்டதின் வழியாக அறியப்படுவது இன்னும் கூடுதலாக இருக்கிறது என்பதுதான்.
              பாரதிபாலன் சிறுகதைகளில் சொல்லப்படுகிற கதையும் – பேசப்படுகின்ற பேச்சும் உணர்த்தும் பொருள் ஒன்றாக இல்லாமல் போய்விடுகிறது. தனிமனிதனின் பட்டறிவு என்கிற ஒற்றைப்பரிமாணத்தில் இருந்து, பொது அனுபவம் என்கிற ஒன்றோடு இணைந்து போகிறது. அது காரணமாகக் கதையென்பது பொதுத்தன்மை பெறுகிறது. பலரின் அனுபவமாக அறியப்படுகிறது. குறிப்பாக மாறுதடம் யாருடைய கதை அப்பச்சியின் கதையா? முத்துக்காளையின் கதையா?  போன கதையா?
                “குடியானவங்களுக்கு இருக்கிறது மாதிரி நமக்கும் ஒரு கழிவறை கட்டச் சொல்லணும், இராவுல பொம்பளைப் பிள்ளைங்க வெளியில் போறதுக்கு சிரமப்படுதுங்க” என்று சொல்லும் அப்பச்சியின் நம்பிக்கைச் சிதைவு என்பது சமூகத்தின் சிதைவா?
            சமூக மேம்பாடு என்பது தனிமனிதன் வளாச்சி, தன்னுடைய சுய அடையாளம் என்பதை அழித்து விட்டு, நகரத்தில் முகமில்லாமல் கூட்டத்தோடு கூட்டமாகப் போவதுதானா? அது சதாசிரியரின் சமூக விமரிசனமா? யார் மீது குற்றம்?
                இலக்கியம் குற்றம் சாட்டுவதில்லை. நிகழ்வுகளைச் சொல்லி யோசிக்க வைக்கிறது. இந்த மாறுதல்களுக்கு முத்துக்காணையை மட்டும் பொறுப்பாக்கி தப்பித்துக் கொள்ள முடியுமா?
        இப்படி ஒன்றோடு ஒன்றாக கேள்விகளைக் கேட்கவைக்கிறது. அதுதான் முக்கியம். கேள்விகளே முக்கியமாகிறபோது, சமூகத்தில் படைப்பு என்பதும் உயிர் வாழ்தலாக இருக்கிறது கதையின் வெற்றி கடைசியில், கதாபாத்திரத்தின் வெற்றியோ, தோல்வியோ இல்லை என்பது அதன் காரணமாக அர்த்தம் கொள்கிறது. அதோடு மொழியைக் கையாள்வதில் எளிமையும், வளமும் கூடுதலாக உள்ளது. எளிமையின் ஊடாக தென்படும் செழுமை கதைக்கு ஒரு பரிணாமம் கொடுக்கிறது.
  பாரதிபாலன் சிறுகதைகளில் சிற்றூர்த்தன்மை என்பது அதன் சொல்லப்படுகின்ற விதத்திலேயே பேச்சின் தொனியில், அதன் மூலமாக அவர்கள் வெளிப்படுத்துகின்ற நேசத்தில் அதிகமாக உணரப்படுகிறது. அதுதான் சிறப்பு அம்சம்!
        எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், வாழ்ந்தவன் நொடித்துப் போகிறான். இருப்பதையெல்லாம் இழந்து தெருவிற்கு வந்து விடுகிறான். ஆனாலும் அவன் மனிதநேயம் என்பது மாசு மருவற்று இருக்கிறது. அங்கு அது ஒருதடையாகவே இல்லை. நெகிழவைக்கிறது. படைப்பு என்பதற்கு ஒரு புதிய அர்த்தம் கொடுப்பது போலவும் – அன்பையும் பண்பையும் பிரசாரம் செய்வதையே குறியாக தனது கதைகளை எழுதியிருக்கிறார் என்று சொல்லமுடியும் என்றாலும், அஃது இலக்கியமாக வந்திருக்கிறது என்கிறபோது மற்றதெல்லாம் அடிபட்டுப் போய்விடுகிறது!
நன்றி – கணையாழி, மார்ச்சு 2002

இலக்கியத் தேடல், பாரீசு

அகரமுதல

ஆவணி 29, 2050 / ஞாயிறு / 15.09.2019

மாலை 5.00

அண்ணாமலைப்பல்கலைக்கழகம்

70, பிலிப்பு தெ கிரார்டு தெரு,  75018 பாரீசு

[Annamalai University

70 Rue Phillipe de Girard, 75018 PARIS]

இலக்கியத் தேடலின் 13 ஆம் கூட்டம்

உரையாளர்:  வழ.அ.குணசேகரன்

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 38 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 38

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கல்லாமைகுறள் எண்: 404)
கல்லாதவரின் மதிநலம் மிகச் சிறப்பாக இருந்தாலும் கற்றவர் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்கிறார் திருவள்ளுவர்.
நாட்டை வழிநடத்துவதற்குப் படிக்காதவனின் பட்டறிவு பயனுள்ளதாக இருந்தாலும் கற்றவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்கின்றனர் அரசியலறிஞர்கள்.
சிலர் தமிழில் knowledge, wisdom என்னும் இரண்டிற்கும் அறிவு என்றே குறிப்பதாகத் தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர்நமக்குத்  தெரியவில்லை என்பதால் தமிழில்  சொற்கள் இல்லையென்று எண்ணக்கூடாதுதிருக்குறளில் இரண்டிற்கும் வேறுபட்ட சொற்கள் உள்ளமையைக் காணலாம்அறிவு – knowledge என்பது அறிவுடைமை என்னும்  அதிகாரத்தின் மூலமும் பிற குறள்கள் மூலமும் 45 இடங்களில் கையாளப்பட்டுள்ளதுஅறிவு தொடர்பான அறிவினான் முதலான சொற்களும் உள்ளனசங்க இலக்கியங்களில் அறிவு என்பது 43 இடங்களில் கையாளப்பட்டுள்ளதுஆனால் ஒட்பம் என்பதைத் திருவள்ளுவர் மட்டும் இரண்டு குறட்பாக்களில்(404, 425) கையாண்டுள்ளார். மேலும் துறை அறிவுக் கலைச்சொற்கள் நீங்கலாகப் பொதுவாகப், பேரறிவு, சிற்றறிவு, புலனறிவு, மெய்யறிவு, மதி, கூர்மதி, மதிநுட்பம், மதிநலம், பட்டறிவு, பணியறிவு, நூலறிவு, ஒட்பம், ஒண்மை, பொறி முதலான பல சொற்கள் அறிவைக் குறிப்பதற்கு உள்ளன.
கல்வியறிவு இல்லாதவரின் பிற அறிவைக் கற்றவர்கள் ஏற்பதில்லை. எனவே, உலகியறிவு முதலானவை இருப்பினும் படிப்பறிவு இல்லையேல் படித்தோர் பொருட்படுத்த மாட்டார்கள். தம் அறிவு உலகிற்குப் பயன்படவாவது அறிவாளர்கள் நூலறிவையும் பெற வேண்டும்.
படிப்பிலார் அறிவைப் படித்தோர் ஏற்கமாட்டார்!
லக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி, 07.09.2019

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் நிலம் பிறர் பிடியில்!


  •  முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 71 வீதமான நிலங்கள் இன்று படையினர், வனவளத் திணைக்களம் , வனஉயிரிகள் திணைக்களம் , தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் உள்ளன
யாழ்ப்பாணம் – செப்.03, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நிலங்கள் மாவட்ட நிருவாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தினாலேயே எந்தவொரு வளர்ச்சிப்பணியினையும் முன்கொண்டு செல்ல முடியவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறீகாந்தராயா தெரிவித்தார்.
“மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 71 வீதமான நிலங்கள் இன்று படையினர் வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் உள்ளன. எஞ்சிய 29 வீதமான நிலங்களே அரச மற்றும் தனியார் நிலங்களாகக் காணப்படுகின்றன. முல்லைத்தீவில் அரச காணியில் 3984.2 காணி படையினரிடம்  309 காணி கடற்படையினர் வசமும் உள்ளதோடு 1.5 காணி நிலம் விமானப்படை வசம் உள்ளது. அதேபோன்று தனியார் நிலத்தில் 155 காணி நிலம் படையினரிடமும் 408 காணி கடற்படையினர் வசமுள்ளதாகவும்  மாவட்டச் செயலகம் தரவு சொல்கின்றது.
“ஆனால் வட்டுவாகல் கடற்படைத் தளம் , அம்பகாம் விமாணப்படைத் தளம் , புலுமச்சிநாதகுளம் படை முகாம் முருகண்டிபடைமுகாம் ஒட்டுசுட்டான் படைமுகாம். புதுக்குடியிருப்பு படைமுகாம் நிலங்கள் தொடர்பில் தகவல்கள் மறைக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் மிக மோசமாக மக்களின் வாழ்வாதாரத்திற்கான நீர்ப்பாசணக் குளங்களில் 8 குளங்களும் , ஓர் சுடலையும் படையினரால் கையப்படுத்தப்பட்டுள்ளன.
“இதிலே அம்பகாமத்தில் எமது மக்களின் வயல் நிலங்கள் 3 ஆயிரம் காணி உள்ளது. அதேபோல் புலுமச்சிநாதகுளம் பகுதியில் 2 ஆயிரத்து 500 காணி வயல் நிலம் படைவசம் உள்ளதோடு இதில் சில வாழ்விடமும் உள்ளது. அதேபோன்று முருகண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்விடங்கள் வீடுகளுடன் படையினரால் பிடிக்கப்பட்டுள்ளதோடு வாழ்வாதாரக் குளம் இரண்டையும் படையினர் அபகரித்துள்ளனர்.
“இவ்வாறு மக்களின் வாழ்வாதார நிலத்தைப் படையினர் வகைதொகையின்றிக் கையப்படுத்தியுள்ள நிலையில் வனவளத் திணைக்களம் வனஉயிரிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றோடு மகாவலி அதிகார அவை இன்னுமோர் புறமாக உள்ளது. நாயாறு, வட்டுவாகல் போன்ற கடல் வளம் உள்ள பகுதியில் 6 ஆயிரம் காணிக்கும் சொந்தமான நிலத்தை வனஉயிரிகள் திணைக்களம் ஓர் அரச இதழ் மூலம் கவர(அபகரிக்க) 1990முதல் இடம்பெயர்ந்த மக்கள் 2010க்கும் பின்பும் தற்போது இந்தியாவில் இருந்தும் திரும்பும்போதும் அவர்களிடம் அனுமதிப்பத்திரம் உள்ள நிலத்தில் காடு வளர்ந்து விட்டதாம் என வனவளத் திணைக்களம் பிடித்து விட்டது.
“கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு எனப் பட்டியல் நீள்கின்றது. இதனைவிடக் கொடுமை முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் உள்ள பகுதிகூடத் தங்களுக்குச் சொந்தமானவை என அரச இதழ் வெளியிட்டுள்ளனர். ஆனால் இவை இந்த மாவட்டத்தின் மக்கள் சார்பாளர்களுக்கோ மாவட்ட நிருவாக அதிகாரிகளுக்கோ தெரியப்படுத்தப்படவில்லை. அவ்வாறு எமது ஒப்புதல் இன்றி அரச இதழ் வெளியிட்டமைக்கு என்ன நடவடிக்கை. இவற்றினை நாம் நீண்டகாலமாக கோரிவருகின்றபோதும் எந்தப் பயனும் இல்லை.
“இவற்றினைவிடத் தேராவில் பண்ணை, விசுவமடுப் பண்ணை இரண்டும் குடிமக்கள் பாதுகாப்புப் படைகள் வசம் உள்ளன. இந்த நிலையில் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 71 வீதமான நிலம் இன்று இவர்களின் பிடியிலேயே உள்ள நிலையில் இந்த மாவட்டம் எவ்வாறு முன்னேறுவது.. உழவர்களின் வேளாண்க் குளங்கள் இன்றும் வனவளத் திணைக்களத்தின் பிடியிலேயே உள்ளது. இவற்றினையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

புதிய கல்விக் கொள்கை – ஒரு பார்வை பக்தவத்சலம் நினைவுக் கருத்தரங்கம்

அகரமுதல

ஆவணி 28, 2050 சனி  14.09.2019

காலை 9.00 மணி முதல் நண்பகல் 1.00 மணிவரை


செஞ்சிலுவைச் சங்கம்

மாண்டியத்து சாலை, எழும்பூர், சென்னை 600 008

வழ.பி.வி.பக்தவத்சலம் 12 ஆம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்

குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு மந்திரமூர்த்தி அழகு

அகரமுதல

ஆவணி 22, 2050 ஞாயிறு 

08.09.2019 மாலை 5.00

6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,

 24, தணிகாசலம் சாலை,

 தியாகராயர்நகர், சென்னை

அளவளாவல் : திரு மந்திரமூர்த்தி அழகு

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! – இலக்குவனார் திருவள்ளுவன் : தினச்செய்தி




சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும்
நால் வேதங்களும் தமிழே!
1/3
தமிழில் தமிழர்களால் படைக்கப்பட்ட தமிழ் மறை நூல்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்டே இருந்துள்ளன. அதுபோல் தமிழர்களால் தமிழில் படைக்கப்பட்ட தமிழ் வேதங்களும் ஆரிய வேதங்களுக்கு முன்னரே தமிழில் இருந்துள்ளன. சங்க இலக்கியங்கள் இவற்றைக் குறிப்பிட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு வந்த ஆரியர் தமிழில் சிறப்பாக உள்ள மாந்தரையும் நூல்களையும் பிறவற்றையும் குறிக்கும் தமிழ்ச்சொற்களைத் தாங்கள் உள்வாங்கிக் கொண்டு தமதுபோல் பயன்படுத்தினர். தமிழின் முந்தைய வரலாற்று நூல்கள் கடல்கோள்பட்டும் பிற வகைகளிலும் அழிந்தமையால் தமிழ் மறைகளையும் தமிழ் வேதங்களையும் குறிப்பிடும் இடங்களை ஆரியமாக எண்ணித் தவறு செய்துவிட்டனர்.
சிலர். “அதங்கோட்டாசான் நான்கு வேதங்களும் நன்கு கற்ற பிராமணர், அவருக்குத் தமிழ் எழுத்துமுறை கற்பிக்கத் தொல்காப்பியர் நூல் வகுத்தார்” எனத் தவறாகக் கூறுகின்றனர். அவ்வாறெனில் “ஆரிய அரசன் பிரகதத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு”  என அந்நூலில் குறித்துள்ளதுபோன்று ஆரியப் புலவர் அதங்கோட்டாசானுக்குத் தமிழ் எழுத்துமுறை கற்பித்த தொல்காப்பியர் என்ற குறிப்பு இடம் பெற்றிருக்கும்.
நிலந்திரு பாண்டியன் அவையில் தமிழ்ப்புலவர்களுக்குத் தலைவராக அதங்கோட்டாசான் இருந்துள்ளார். அவர் தலைமையில் தொல்காப்பியரின் தொல்காப்பியம் அரங்கேறியுள்ளது. எனவே, தலைவரான அதங்கோட்டாசான் நூல்களில் அறிவினாவும் ஐய வினாவும் எழுப்பியுள்ளார். தொல்காப்பியர் தடை விடைகள் அளித்தபின் நூல் ஏற்கப்பட்டுள்ளது  என்றுதான் பொருள். இப்பொழுது அரங்கேற்றம் இல்லை. எனினும் முனைவர் பட்டம் முதலான ஆய்வுப்பட்டங்களுக்கு ஆய்வாசிரியர் தம் நூலை அறிமுகப்படுத்தி அவையில் தொடுக்கும் வினாக்களுக்கு விடையிறுக்கும் வாய்மொழித் தேர்வு முறை உள்ளது. இதனால் ஆய்வாளர்கள்  ஆய்வரங்கத் தலைவருக்கும் பிறருக்கும் அவர் ஆய்வுப் பொருண்மை குறித்துப் பாடம் கற்பித்தார் என்று பொருள் இல்லை அல்லவா? அதுபோல்தான் தொல்காப்பியர் அக்கால அரங்கேற்ற முறையில் நூலை அவை முன் வைத்து விளக்கியுள்ளார்.
அதங்கோடு என்பது குமரி மாவட்டத்திலுள்ள ஊர். இவ்வூர், விளவங்கோடு வட்டத்தில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது(வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்ட ஊர்தான் பின்னர் விளவங்கோடு என்றாயிற்று என்பர்). தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழரே அதங்கோட்டாசான்.
மேலும், வேதம் படிப்பவர் அருகில் உட்கார்பவரின் உட்காரும் பகுதியை அறுத்தல்,  வேதம் படிப்பதைக் கேட்பவர் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றல்  முதலான கொடுந்தண்டனைகள் வழங்கப்படும் எனக் கூறி வேதம் படிக்கத் தடை விதித்த பொழுது எங்ஙனம் ஆரியரல்லாத ஒருவர், ஆரிய வேதங்களை முழுமையாகக் கற்றிருக்க முடியும்?
“அதர்வணவேதம் ஒரு வேதமாக ஒப்புக் கொள்ளப்பட்டு நான்கு வேதங்கள் என்ற எண்ணிக்கை கொண்டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார்.” எனத் தொல்காப்பியப் பெரும் புலவர் பேரா.முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆராய்ச்சியில் கூறுகிறார்.( பக்கம் 161, இலக்குவம், காவியா பதிப்பக வெளியீடு)
மேலும் அவர், “ …. ஆதலின் நான் மறை என்பது தமிழ் நான் மறையாகத்தான்இருத்தல் கூடும் என்பதில் எட்டுணையும் ஐயமின்றுஆதலின் ஆரிய மறைகள்நான்காக வகுக்கப்பட்ட பின்னரே தொல்காப்பியர் வாழ்ந்திருத்தல் வேண்டும்எனக் கருதி அவர் கி.பிஇரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்று முடிவுகட்டுதல் தவறுடைத்தாகும்”. என்கிறார். இக்கருத்து, ஆரிய நான் மறை என்பது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என ஏற்றுக் கொண்டு ஆனால் அதற்குப் பின்னர்தான் தொல்காப்பியர் காலம் என்பாருக்கான மறுப்பு. தமிழ் நான்மறைகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே இருந்துள்ளன என்பதற்கான விளக்கமும் ஆகும்.
நான்மறை என்பது ஆரிய மறைகள் எனில் அவற்றைத் தமிழர் எங்ஙனம் முழுமையாகக் கற்றிருக்க முடியும். தமிழும் வேதங்களும்(Tamil and Vedas) என்னும் வலைப்பூ, “நான் மறை என்றால்- இந்த மந்திரங்களை மூன்று சாதியினர் மட்டுமே — அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூன்று சாதியினர் மட்டுமே – அறியலாம் பிறருக்கு அறிய முடியாதபடி– அதாவது மாக்சுமுல்லர், கால்டுவெல் போன்ற மிலேச்சர்களுக்குத் தெரிவிக்கக்கூடாததாக மறைத்து வைக்கப்பட்டது.”  என்கிறது. அண்மைக் காலத்தில் கூட அயலவருக்கு மறைக்கப்படும் ஆரிய மறைகளை ஆரியர் வருகைக் காலமான ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், முற்றுமாகத் தமிழர் ஒருவர் கற்றார் என்பது எங்ஙனம் பொருந்தும்? தொல்காப்பியர் காலத்தில் இல்லாத ஆரிய நான்மறையை இருந்ததாகக் கூறுவதும் அவற்றில் நிறை தேர்ச்சி பெற்றவராக அதங்கோட்டாசான் இருந்ததாகக் கூறுவதும் அவ்வாறு கற்றதாகத் தவறாகக் கூறி அவரைப் பிராமணர் என்பதும் மிகப் பெருந் தவறுகளாகும்.
“மறைமொழி தானே மந்திரம் என்ப” என்கிறார் தொல்காப்பியர். எனவே, தமிழ் மறை என்பது சொல்லின் ஆற்றலை மறைத்துச் சொல்வது. ஆரிய மறை என்பது பிறருக்கு மறைப்பது எனப் புரிந்து கொள்ளலாம். மேலும், தமிழில் மறை என்பது துறை நூலையும் களவொழுக்கத்தையும் குறிக்கும் பல் பொருள் தரும் சொல்லாகும்.
அரைகுறை அறிவினர் தப்பும் தவறுமான செய்திகளைப் பரப்புகின்றனர் என்பதற்கு ஒரு சான்று.
ஒருவர்,
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப
இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது.  வள்ளுவர் பல வடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே.” எனத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்தைத் திருக்குறள் எனத் தவறாகக் கூறும் இவரின் பிற கருத்துகளும் தவறே என்பதில் ஐயமிலலை.
கலித்தொகை கடவுள் வாழ்த்து உரையில் நச்சினார்க்கினியர், “மறையாவன : தைத்திரியமும், பெளடியமும், தலவகாரமும், சாமுவேதமுமாம். இனி, வேத வியாசர் வரையறைப்படுத்திய காலத்து ஓதுகின்ற நான்கு வேதமுமாம்” என்று விளக்குகிறார். எனவே, மறையும் வேதமும் வேறு வேறு எனலாம். மேலும்,  நான்மறை இருவகைகள் உள்ளன. முதலில் கூறப்பட்ட நால்வேதம் ஒரு வகைத்தொகுப்பு; வேத வியாசர் தொகுத்த வேதம் வேறுவகைத் தொகுப்பு என்று புரிகிறது.
வியாசர் என்ற செம்படவ முனிவர் வேதங்களை இரிக்கு, யசூர், சாமம் என்று முதன்முதலில் மூவகைகளாகப் பிரித்து வகுத்துள்ளார் என்கின்றனர். அதற்கு முன்னரே தமிழில் நால் வேதம்  இருந்தமையால் இவை ஆரிய வேதங்களைக் குறிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. புறநானூற்றில் மிகத் தொன்மைக் காலத்துப் பாடல்களும் உள்ளன. ஆதலின் வேத வியாசர் காலத்துக்கு முற்பட்ட பாடல்களும் உள்ளன.
புரையில்
நற்பனுவல் நால் வேதம்
என்கிறார் புறநானூற்றுப் புலவர் நெட்டிமையார்(பாடல் 15). குற்றமற்ற நல்லறநெறியாகிய நால் வேதம் என உரையாளர்கள் விளக்குகின்றனர்.

2

குற்றமற்ற அறவழிப்பட்டட வேதம் எனக் கூறுவது ஏன்? ஆரிய வேதம் அறிமுகமான காலக்கட்டம் அது. தமிழ் வேதங்கள் அறநெறிகளை மட்டுமே உணர்த்துவன. ஆரிய வேதங்கள் அவ்வாறல்ல. சான்றாக அதர்வண வேதம் நல்ல மந்திரங்களை உடையதாக இல்லை என்று கருதுவதைக் குறிக்கலாம்.  “அதர்வம், வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின்” என நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை யியல், நூற்பா 20, உரை) கூறியுள்ளமை இதனை உறுதி செய்கிறது. ஆரிய வேதங்கள் குற்றமுடையன. அவ்வாறு தமிழ் மறைகளை எண்ணக்கூடாது என்பதற்காகத்தான் ‘புரைதீர் நற்பனுவல்’ என்கிறார் புலவர்.
இயற்கை நெறிப்பட்ட ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே நிகழும் உறவைமட்டுமே தமிழர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் குதிரையுடன் உடலுறவு கொள்வதும் அவ்வாறு அரசிகள் உறவு கொண்டு பிள்ளைகள் பெற்றதுமான செய்திகளை ஆரிய வேதங்கள் கூறுகின்றன. இராமன் முதலானோரும் இவ்வாறு பிறந்ததாகத்தான் வால்மீகி இராமாயணம் கூறுகிறது. ஆடுகளுடனும் காளைமாடுகளுடனும் உடல் உறவு கொள்வதை இரிக்கு வேதம் கூறுகிறது.
உடன் பிறந்தவர்களுக்குள் – அண்ணன் தங்கை அல்லது அக்கா தம்பியர்களுக்குள் – உடல் உறவு கொள்ளும் ஒழுக்கக்கேட்டை இரிக்கு வேதம் பரிந்துரைக்கிறது. தந்தை தன் மகளுடன் உறவு கொண்டதை அதர்வ வேதம் கூறுகிறது.
கிருட்டிணன் அர்ச்சுனனின் மனைவியாகிய தன் தங்கை சுபத்திராவுடன் உறவு கொண்டதையும் அவளின் மருமகள் – அபிமன்யுவின் மனைவி – இராதையுடன் குடும்பம் நடத்தியதையும் ஆரியப்புராணங்கள் கூறுகின்றன. மற்றோர் கதைப்படி கருணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதன் மனைவியே இராதா. கிருட்டிணனுக்கு அத்தை முறை. இப்படிப் பார்த்தாலும் கிருட்டிணன், தன் அத்தை இராதாவுடன் உடலுறவு கொண்டு வாழ்ந்துள்ளான். எனவே, இத்தகைய தகாத உறவு முறைகளை ஏற்கும் ஆரிய வேதமாகத் தமிழ் மறைகளை எண்ணக் கூடாது என்பதற்காகத்தான் புலவர் நெட்டிமையார் “புரையில் நற்பனுவல நால் வேதம்” என்கிறார்.
 ஆரியர்களின் பழக்க வழக்கம், பண்பாட்டு முறைகளை அவர்கள்  அயலவர்கள் என்பதால் தமிழ்ப்புலவர்கள் குறை கூறவோ கண்டிக்கவோ இல்லை. ஆனால், அவைபோல் தமிழ்ப்பண்பாட்டை நினைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். எனவேதான் தமிழ் நால் வேதத்தைக் குற்றமற்ற நற்பனுவல் எனச் சிறப்பிக்கின்றனர்.
தமிழர் வேள்வி நடத்தியுள்ளனர். ஆனால், தமிழர் வேள்வி பூப்பலி. ஆரிய வேள்வி உயிர்ப்பலியை அடிப்படையாகக் கொண்டவை.
நெட்டிமையார் பாடலில்
யூபம் நட்ட   வியன்களம்  பலகொல்
என்னும் ஓர் அடி வருகிறது. பலரும் குறிப்பதுபோல் இது வேள்வித்தூண்களைக் குறிக்க வில்லை.
யூபம் அல்லது ஊபம் என்றால் படையணி என்றும் பொருள் உண்டு. நட்ட என்னும் சொல் நிலை நிறுத்திய என்னும் பொருளில் வரும். எனவே, படைணிகளை நிறுத்திய போரக்களங்கள் பல என்னும் குறிப்பை இவ்வடி உணர்த்துகிறது. இவற்றை ஆரிய வேள்வித் தூண்களாகத் தவறாகக் கருதிப் பொருள் விளக்குகின்றனர் சிலர்.
உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர், நான் மறை என்பதற்கு “இருக்கும் யசுரும் சமமும் அதர்வணமும் என்பாருமுளர்,  இது – பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேத வியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாகச் செய்தார் ஆகலின்” என்று எழுதும் உரை மிகவும் தெளிவாகத் தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடும் நான் மறை என்பது   ஆரிய மறைகள் அல்ல என உறுதிசெய்கிறது.
 “ ‘நான்மறை முனிவர்’, ‘நால்வேத நெறி’ என வரும் சொற்றொடர்கள், பழங்காலத்திய தமிழில் தமிழ் மறைக ளிருந்தன என்பதை அறிவிப்பன. … நமது திருமுறைகளில் மறை யென்று கூறப்படுவன தமிழ் மறைகளேயாம். இது “பண்பொலி நான்மறை” என்றும் “முத்தமிழ் நான்மறை” என்றும் வரும் தமிழ் வழக்கினை ஒட்டிக் குறிப்பிடும் வகையால் அறியக் கிடக்கிறது. மாதவச் சிவஞான முனிவரும் “கொழிதமிழ் மறைப்பாடல்” என்று தமிழ் மறை உண்மையை எடுத்துக் காட்டுகின்றார். இந்தத் தமிழ் மறைகள் ஆலமர் செல்வனால் அருளிச்செய்யப் பெற்றவை என்றுதான் திருமுறைகள் பேசுகின்றன. இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் முதலிய வேதங்கள் இறைவனால் அருளிச்செய்யப் பெற்றன அல்ல. பல்வேறு முனிவர்களால் பல்வேறு காலங்களில் அருளிச் செய்யப் பெற்றவை.” எனக் குன்றக்குடி அடிகளார் விளக்கியுள்ளார்.
12 ஆம் நூற்றாண்டு ஔவையார்,
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். (நல்வழி 40)
எனத் தமிழ் நூல்களுடன் இணைத்துக் குறிப்பிடுவதால் புலவர்கள் போற்றுவன தமிழ் நான்மறைகளையே எனலாம்.
திருஞானசம்பந்தருக்குப் பூணூல் சடங்கு செய்த பொழுது பிராமணர்கள் நான்மறை ஓதியதாகவும் அதற்கு எதிராக சம்பந்தர் எண்ணிறந்த புனித வேதம் ஓதியதாகவும் சேக்கிழார் கூறுகிறார்(பெரியபுராணம் பாடல் 2167) .
    “வருதிறத்தன் மறைநான்கும் தந்தோம் என்று
      மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
      பொரு இறப்ப ஓதினார் புகலிவந்த
      புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்
என்பதுதான் அப்பாடல்.
ஆரிய நான்மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். எனவே, ஆரிய மறைகளுக்கு எதிராகத் தமிழ் வேதங்களை ஓதினார் என்று கருதலாம்.
“வைதீகப் பிராமணர்கள் நால் வேதத்திற்கு எதிரானவர்கள். எனவேதான், யசூர் வேதிகள் ஆவணி அவிட்டத்திலும், இருக்கு வேதிகள் ஆவணி அவிட்டத்திற்கு முந்தைய நாளிலும், சாம வேதிகள் விநாயகர் சதுர்த்தி நாளிலும் பூணூல் அணிகின்றனர். ஆயிரத்தில் ஒருவரே அதர்வண வேதத்தைப் பின்பற்றிப் பூணூல் அணிகின்றனர்.” என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
‘தமிழ் மாமலை’ என்னும் தலைப்பில் மறைமலையடிகள் குறித்து உரையாற்றிய கோவை இளஞ்சேரனார், “நான்மறை என்பது தமிழில் உருவான மறைகள் நான்குதான்; வேதம் எனப்பெறும் வடமொழிநூல்கள் அன்று என்பதே அடிகளாரின் ஆழ்ந்த கருத்து. . இதற்குக் காட்டிய காரணங்கள் “வடமொழி வேதங்கள் நான்கும் வேறுபட்ட சில இடங்களில் மாறுபட்ட கருத்துகளைத் தருபவை; அவை தமிழினத்திற்கு ஒவ்வாதவை; தமிழினத்தைத் தாழ்த்துபவை என்பனவற்றைத் தம் நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.” என விளக்கியுள்ளார். மேலும், இருக்குமறை தோன்றுவதற்கு முன்னரே தமிழில் நான்கு மறைகள் இருந்தன என்றும், அவற்றையே சங்க இலக்கியங்களும், தேவார திருவாசகங்களும் நான்மறை, நால்வேதம் என்றெல்லாம் குறித்தன என்றும், பின்னரே இந்நான்கைப் போன்று வடவேதமொழியில் வேதங்கள் பலரால் கூறப்பட்டுப் பின்னர் வேதவியாசரால் நான்காகப் பகுக்கப்பட்டன என்பதே அடிகளாரின் முடிந்த முடிபு  என்றும் சொல்லியுள்ளார்.

3

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும்
நால் வேதங்களும் தமிழே!
3/3
மேலும் அவர், மறைமலையடிகள் தமிழ் நான்மறை குறித்து விளக்கியதை, “வேதம் என்னும் சொல்லும் தமிழ்ச்சொல்லே. இதற்கு ‘வே’ என்பது முதனிலை. ‘வேய்தல்’ என்னும் சொல்போல பல சொற்கள் இம்முதனிலையில் பல்கின. ‘வேய்தல்’ என்றால் மூடிமறைத்தல் என்ற கருத்து. இது போன்றே வே+அம் இடையில் த் எழுத்துப்பேறு கொண்டு ‘வேதம்’ என்று ஆகி மறைபொருளைக் கொண்டது’ என்னும் பொருளைத் தந்தது. நன்னெறிகளை அறிவுறுத்தியதால் அஃதொரு அறிவு நூல். இருக்கு வேதத்தில் ஒரிடத்தில் மட்டும் வரும் ‘வேதம்’ என்னும் சொல்லுக்கு அறிவுநூல் என்னும் பொருளில்லை. ‘புல் கட்டு’ என்னும் பொருளிலேயே உள்ளது. பாரதத்திற்கு முற்பட்ட பாடலாகிய முரஞ்சியூர் முடிநாகராயர் பாடலில் வரும் “நால் வேதநெறி திரியினும்” என்பதில் தமிழ் நான்மறைகளே குறிக்கப்படுகின்றன. இதற்குப் பின்னரே பாரதம் பாடிய வியாசரால் நான்காக வடமொழி வேதம் வகுக்கப்பெற்றது.”   என உரைக்கிறார்.
பாவேந்தர் பாரதிதாசன் மறைமலையடிகளாரின் தமிழ் நான்மறை கருத்தை ஏற்று,
மறையெனப் படுவது தமிழ்நான் மறைநூல்
மற்ற மறைநூல் பின்வந்த குறைநூல்
முறையாய் இவைகட்குச் சான்றுகாட்டி
முழக்கஞ்செய்த முத்தமிழ் அறிஞனை
வாழ்த்தாத நாளில்லை வையகம்…..
என வாழ்த்திப் பாடுகிறார்.
அறிஞர் கா.சு.பிள்ளை எனப் பெறும் கா.சுப்பிரமணிய(பிள்ளை) ,  “ஆரியர்கள் தமது வேதம் மூன்று என்ற கருத்தில் ‘வேதத்திரயி’ என்று வழங்குதல் காணப்படுகிறது” (திருநான்மறை விளக்கம் – ப. எண்: 42)  என்கிறார்.
இரிக்கு முதலில் உருவானது. அடுத்து யசூர், இவற்றிற்குப் பிற்பட்ட காலத்தில் சாமம், மிகவும் பிற்பட்டகாலத்தில் அதர்வணம் உருவாகியுள்ளது. இவையே வரலாற்றாசிரியர்களும் உரையாசிரியர்களும் தரும் காலவரிசைப்பட்ட நூல் முறை. எனவே, வியாசர் தொகுத்த பொழுது நான்காகத் தொகுக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தொல்காப்பியப் பெரும்புலவர் இலக்குவனார் தொல்காப்பியர் குறிப்பிடும் மறை என்பது தமிழ் மறையே எனப் பின்வருமாறு விளக்குகிறார்:
“ ‘அந்தணர்’ என்பது வட மொழியாளர்களையும் ‘மறை’ என்பது வடமொழி வேதத்தையும்தான் குறிக்கும் என்று உரையாசிரியர்களில் சிலர் கருதியது இமயம் போன்ற பெருந்தவறாகும். தமிழ்மொழிபற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டோருள் சிலரைத் தவறான முறையில் திருப்பி விட்டதும் இத்தவறான உரையேயாம். தமிழ் நூல்களின் கால வரையறையைப் பிறழ உணரச் செய்ததும் இத் தவறேயாம். ‘அந்தணர்’ என்போர் தமிழரே! ‘மறை’ என்பது தமிழ் மறையே! பின்னர் ஆரியர்கள் இந்நாட்டிற்கு வந்த பின்னர், அவருள் சிறந்தோரையும் அவர் உயர்வெனக் கருதிய நூலையும் ‘அந்தணர்’ என்றும் ‘மறை’ என்றும் அழைத்துக் கொண்டனர். மேலைநாட்டுக் கிறித்துவர்கள் ‘ஐயர்’ என்றும் ‘சாசுதிரி’ என்றும் அழைத்துக் கொண்டனர் அன்றோ? ஆகவே, தொல்காப்பியத்தில் கூறப்படும் ‘அந்தணர்’ தமிழர்க்குரியவர் ‘மறை’ தமிழர்க்குரியது எனத் தெளிதல் வேண்டும்.” (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக்கம்  190,காவியாவின் இலக்குவம் நூல்).
ஆய்வாளர் உ.சுப்பிரமணியம்,  ‘நான்மறை எனப்படுவது தமிழ்மறைதான்’ என்று  எழுதிய நூலுக்குத்  தமிழ்ப்பல்கலைக்கழகம் பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது.
“வேதியர் சொல் மெய்யென்று மேவாதே” என உமாபதி சிவாச்சாரியார் சொல்வதன் மூலம் வேதியர் கூறும் ஆரிய வேதங்களுக்கு எதிர்ப்பு இருந்ததையும் புரிந்து கொள்ளலாம்.
செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ‘தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது?’, ‘அறத்தமிழ் வேதம்’ ஆகிய இரு நூல்களில் தமிழ் மறைகளையும் ஆரிய வேதங்களையும் வேறுபடுத்தி எழுதியுள்ளார். மேலும் அவர், “நாடோடிகளான ஆரியர்க்கு வழிபாடு செய்வது எப்படி என்று தெரியாது. ஆனால் அவன் சிந்துவெளியில் சந்தித்த தமிழனோ வேள்வி செய்திருக்கிறான். இதைச் சிந்துவெளி அகழ்வாய்வில் வெளியான ஒரு முத்திரை காட்டுகிறது.” என்கிறார்.
ஆரிய வேதங்கள் பிற்காலத்தில்தான் தொகுக்கப்பட்டன என்று பேராசிரியர் நெடுஞ்செழியன் கூறுகிறார். அவர், பொதுவுடைமைச் சிந்தனையாளரும் சிறந்த வரலாற்றறிஞருமாகிய டி.டி.கோசாம்பி தந்துள்ள ஆராய்ச்சி உரையின்படி கி.மு.14ஆம் நூற்றாண்டில் தென்னாட்டில்தான் வேதப் பாசுரங்கள் முதல் முதலாகத் தொகுக்கப்பட்டு எழுத்து வடிவிலும்; அவற்றைக் கொண்டுவந்து, குறிப்புரைகளும் எழுதியுள்ளனர்   என்று விளக்குகிறார்.  சாயனர்(சாயனாச்சாரி) என்பவர்தான் அவ்வாறு எழுத்து வடிவில் இரிக்கு வேதத்தை எழுதி விளக்கமும் எழுதினார். கி.பி.14, 15 ஆம் நூற்றாண்டுகளில் விசயநகரப் பேரரசு காலத்தில்,  மாதவ வித்தியாரண்யர் எழுதிய ‘சருவதர்சன சங்கிரகம்’ என்னும் நூலில் உலகாய்தனின் கூற்றாக  வேதங்கள் மூன்று எனக் குறிக்கிறார்.
எனவே, 14 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் நால்வேதங்களாகக் குறிக்கப்பட்டவற்றை எங்ஙனம் அதற்கு 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்கள் கூறியிருக்கும்?
தமிழ்நாட்டிற்குத் தொடக்கத்தில் வந்த ஆரியப் புலவர்கள் தமிழை மதித்தனர் தமிழ்ப்புலவர்களைப் போற்றினர். தமிழ் நூல்களைக் கற்றுச் சிறந்தனர்.  ஆனால், பின்னர் வந்தவர்கள்  தங்கள் மொழியைத் தேவ மொழி என்றும் தமிழை இழிவு(நீச)மொழி என்றும் சொல்லினர். தமிழ் நூல்கள் ஆரிய நூல்களைப் பார்த்து எழுதியதாகவும் ஆரியநூல்களே தொன்மையானவை என்றும் பொய்யுரை பரப்பினர். தமிழில் உயர்வானவர்களைக் குறிக்கும் ஐயர்(தலைவர்), அந்தணர்(அறவோர்), பார்ப்பார்(ஆராய்ச்சியாளர்) முதலான சொற்களில் தங்களை அழைத்துக் கொண்டனர். அதுபோல் தமிழ் நூல்களைப் பார்த்துத் தங்கள் நூல்களையும் மறை என்றும் வேதம் என்றும் அழைத்தனர். ஆனால் நாளடைவில், தமிழில் பெயர்க்குழப்பம் ஏற்பட்டது. தமிழின் நிறைவுகள் ஆரியத்திற்கும் ஆரியத்தின் குறைகள் தமிழுக்கும் மாற்றப்பட்டன. தமிழ் நூல்கள் இயற்கையால் அழிந்தனபோக மடத்தனத்தினாலும் வஞ்சகத்தினாலும் அழிக்கப்பட்டமையால், வடக்கிருந்து வந்தவர்கள்(பிராமணர்) பயன்படுத்திய சொல்லாட்சிகள் அவர்களுக்கே உரியனபோல் கருதப்பட்டன.
மறை, வேதம் முதலியவற்றை ஆரியர்கள் தம் நூல்களையும் குறிக்கப் பயன்படுத்தினர். எனவே, தமிழில் இருவகையாகவும் இச்சொற்கள் உள்ளன. இவற்றின் உண்மையைப் புரிந்து கொள்ள இயலாமல் படிப்போர் குழம்பி,  இவை வரும் இடங்களில் எல்லாம் ஆரிய நூல்களைக் குறிப்பதாக எடுத்துக் கொண்டனர். அதனால்தான் திருக்குறள் நூலை உலகப்பொதுமறை, தமிழ் மறை, தமிழ் வேதம் என்றெல்லாம் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
சொற் பயன்பாட்டுக் கால அடிப்படையில்  நான்மறைகளும் நால் வேதங்களும் தமிழ்நூல்களே என உறுதியாகக் கூறலாம். இவற்றை ஆரியமாக எண்ணி மறுக்கவும் வேண்டா. இவற்றை நம்புவதால் ஆரியத்தை ஏற்கவும் வேண்டா.
 – இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 04/09 - 06.09.2019