புதன், 31 டிசம்பர், 2014

தமிழே இலக்குவனாரின் மூச்சு!


55puthiyapaarvai_ilakkuvanar

தமிழே இலக்குவனாரின் மூச்சு!


  “பேராசிரியர் இலக்குவனார் கூர்த்த அறிவு படைத்தவர்; முறையாக நூல்களைக் கற்றவர்; சிறந்த ஆராய்ச்சியாளர்; சிந்தனையாளர்; கருத்துக் களஞ்சியம் என்றால் மிகையாகாது.
தமிழுக்காக எத்தகைய தியாகமும் அவர் செய்யத் தயங்காதவர். சிறந்த தமிழ்க் காவலர்.
அவர் குறிக்கோள் கொள்கை எல்லாம் தமிழ் வளர்ச்சியே! தமிழே! ஆயுள் முழுவதுமே சிறப்பாகத் தொண்டாற்றியவர்.’’

_ அண்ணலார் பு.அ. சுப்பிரமணியன்

- புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம்44
தரவு : பாபு கண்ணன்


இலக்குவனார் குறள்நெறி நாளிதழ் தொடங்கியதன் காரணம்

இலக்குவனார் குறள்நெறி நாளிதழ் தொடங்கியதன் காரணம்

http://www.ilakkuvanar.com/images/Ithazhkal/KuralNeri01.jpg
 குறள்நெறி இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் திங்கள் இருமுறைதான் வந்தன. தமிழன்பர்கள் வார இதழாக மாற்றக் கூடாதா? பக்கங்களைக் கூட்டக்கூடாதா என்றெல்லாம் வேண்டினர். வாரஇதழாக மாற்றுவதைவிட நாளிதழாக மாற்றுவதே தக்க பணியாகும் எனப் பேராசிரியர் கருதினார். இதழ்கள் வாயிலாக மொழிக்கொலை நடைபெறுவதால் அதைத் தடுத்து நிறுத்தத் தாமே முன்முறையாக நன்முறையாக நற்றமிழில் நாளிதழ் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து குறள்நெறி நாளிதழும் தொடங்கினார். இதுகுறித்த நாளிதழ் ஆசிரிய உரை வருமாறு:
“நற்றமிழில் உரையாட வேண்டும், எழுத வேண்டும் என்று கருதுபவர்களால்கூட நற்றமிழைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகி விடுகின்றது.
 நமக்கோ நாளும் நாளும் செந்தமிழ் சாகடிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு பாழும் வயிற்றை வளர்த்துக் கொண்டிருக்க இயலவில்லை. ‘மெல்லத் தமிழ் இனிச்சாகும்’ எனும் பேதை மொழியை நாம் அணுவாகச் செத்தேனும் பொய்யாக்க வேண்டும் என்று உறுதிபூண்டு விட்டோம். உள்ளம் உடைமை உடைமை எனும் திருவள்ளுவரின் திருவாய் மொழிக்கேற்ப உள்ள நாம் செந்தமிழ் காக்கும் பணியில் இச்செய்தியிதழை ஆளாக்க முற்பட்டு விட்டோம்.
 நாட்டு மக்களின் நல்லெண்ணம் நம்பால் உள்ளது எனும் துணிவுடையோம். தமிழ்க்காப்பு என்பது கட்சிகளுக்குஅப்பாற்பட்டது. அனைத்துக் கட்சிகட்கும் உரியது. ஆயினும் இன்று ஆளுங்கட்சியாம் காங்கிரசு இந்தி மொழித் திணிப்புக்கு உடந்தையா இருப்பதனால் தமிழ் காப்புக்கு உரிமை கொண்டாட இயலாது. இந்தி முதன்மை நாளும் நாளும் சுமத்தப்பட்டு வருகின்றது. இதனை அகற்றலே தமிழ்க்காப்பின் முதற்பணியாகும். உண்மைத் தமிழ்ப்பற்றுடைய காங்கிரசுக் கட்சியினர் உள்ளத்தால் நம் பக்கமேஇருப்பர்.”
குறள்நெறி நாளிதழ்: ஐப்பசி 16,1997: செவ்வாய்: 1.11.1966
- புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம் 46
52puthiyaparvai_ilakkuvanar_chirappithazh01
தரவு : பாபு கண்ணன்


சிறந்த காதல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு


vandavasi-vizhaa01

ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வதே

   சிறந்த காதல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு

- காதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு -


       அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் நடைபெற்ற ‘காதல் கவிதை’ நூல் வெளியீட்டு விழாவில், வெறும் உடல் கவர்ச்சிக்கான ஈர்ப்பாக இல்லாமல், ஒருவரையொருவர் மனத்தாலும் புரிந்துகொண்டு வாழ்வதே முன்னெடுத்துக்காட்டான காதல் வாழ்க்கையாகும் என்று கவிஞர் மு.முருகேசு பேசினார்.
     இவ்விழாவிற்குத் தொழிலதிபர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மா.குமரன் அனைவரையும் வரவேற்றார்.
   கள்ளக்குறிச்சி கவிஞர் வீ.சிவசங்கர் எழுதிய ‘ சிவ சிவக்கும் பிரியங்கள் ‘ காதல் கவிதை நூலை வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் செ.வெங்கடெசன் வெளியிட, வந்தவாசி சுழற் சங்க முன்னாள் தலைவர் கவிஞர் அ.ச.இசாக்கு பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் படிகளை நல்நூலகர் கு.இரா.பழனி,இலயா அறக்கட்டளை செயலாளர் மா.யுவராசு, நல்வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் வெ.அரிகிருட்டிணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
     கவிதை நூலை அறிமுகம் செய்து கவிஞர் மு.முருகேசு பேசும்போது, இன்றைக்கு எல்லாம் வேகமாய் மாறிவருகிற சமூகத்தில் காதலும், காதலைப் பற்றிய புரிதலும்கூட மாறிப்போய் இருக்கிறது. பார்த்தவுடன் காதல், பள்ளிப்பருவக் காதல் எனக் காதலை மலினப்படுத்தியதில் திரைப்படங்களுக்கும் முதன்மைப் பங்கிருக்கிறது.
     சமுதாய ஏற்றத் தாழ்வுகள், சாதி, மத பிரிவினைகள் நீங்கிடக் ,காதல் திருமணங்கள் வழிவகுக்கும். ஆனால், காதல் என்ற பெயரில் வெறும் உடல் மீதான பாலியல் கவர்ச்சி மட்டுமே முதன்மையாக முன் நிற்கிறது. பதின்பருவ அகவையினைக் கடந்து, தனக்கென ஒரு வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும் என்கிற பொழுதில், தன் இல்வாழ்க்கைக்கான துணையாக ஒருவரை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்வதே உண்மையான காதலாகும். அத்தகைய காதலுக்குப் பெற்றோர்கள் தடையாக இருக்காமல் காதலர்களைச் சேர்த்துவைக்க வேண்டும். கவிஞர் வீ.சிவசங்கர் எழுதியுள்ள காதல் கவிதைகள் அத்தகைய உன்னதமான காதலுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கென அமைந்துள்ளன” என்று குறிப்பிட்டார்.
     நூலாசிரியர் கவிஞர் வீ.சிவசங்கர் ஏற்புரையாற்றினார்.
நிறைவாக, வி.பிரியா நன்றி கூறினார்.
[படக் குறிப்பு :       வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டில் அகநி வெளியீட்டகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி கவிஞர் வீ.சிவசங்கர் எழுதிய 'சிவ சிவக்கும் பிரியங்கள் ' காதல் கவிதை நூலை மருத்துவர் செ.வெங்கடெசன் வெளியிட, கவிஞர் அ.ஐ.இசாக்கு பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். அருகில், நூலாசிரியர் கவிஞர் வீ.சிவசங்கர், கவிஞர் மு.முருகேசு,தொழிலதிபர் இரா.சிவக்குமார் ஆகியோர் உள்ளனர்.]