சனி, 29 அக்டோபர், 2022

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23 (வெள்ளணி நாள் அறிவிப்பு)

 அகரமுதல





வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23

(வெள்ளணி நாள் அறிவிப்பு)

வீறுகவியரசர் முடியரசனாரின் பாடல்கள் பகரும் செய்தியை நெஞ்சில் இருத்தி, பல்வேறு தளங்களில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்பது இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

வீறுகவியரசர் முடியரசனாரின் 103ஆம் வெள்ளணி நாளான அக்டோபர் 7, 2022 அன்று mudiyarasan.org வலைத்தளம் தொடங்கி வைக்கப்பட்டு வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி:

தமிழின் பெருமையையும் முதன்மையையும் தன்னிகரில்லா வகையில் முன்னிறுத்திப் பாடிய முதுபெருங்கவி வீறுகவியரசர் முடியரசனார் ஆவார்.

தம்மொழியின் மாண்புணராத் தமிழர் நிலைகண்டு அவர் துன்புற்று வாடினார்; அந்நிலை மாற வேண்டிக் கவிவாளாம் படைக்கலன் ஏந்தி வீறுகொண்டு பாடினார். அவ்வகையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா உயர்தனிக் கவியாக வீறுகவியரசர் விளங்குகிறார்.

முத்தமிழின் மீட்சிக்காகவும் ஆட்சிக்காகவுமே முடியரச முழக்கம் எப்போதும் ஓங்கி ஒலித்தது; காற்றில் கலந்திருந்து அவ்வோசை இன்னமும் நம் நெஞ்சில் ஊற்றெடுத்துப் பெருகுகிறது.

தமிழின் சீர்மையைப் பாடியது மட்டுமன்று நம் பாவரசர் செய்த அரும்பணி. கற்பித்தலின் வழியாகத் தாய்மொழி அறிவையும் உணர்வையும் பரப்புவதைத் தன் வாணாள் தொண்டாகக் கொண்டிருந்தார் அவர்.

முடியரசரின் அடியொற்றித் தமிழ் பரப்புவதை எஞ்ஞான்றும் தன் தலைத்தொண்டாக் கொண்டுள்ள வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம், அந்நோக்கில் ‘வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில்’ என்னும் செயற்றிட்டத்தை இஞ்ஞான்று அறிவிக்கிறது. 

வீறுகவியரசர் முடியரசனாரின் பாடல்கள் சொல்லும் செய்தியை நெஞ்சில் இருத்தி, பல்வேறு தளங்களில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்பது இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

இமய முடியை அடைய முனையும் செலவுக்கு, இலக்கை நோக்கி ஒவ்வொருவரும் எடுத்து வைக்கும் சிற்றடிகளே இன்றியமையாதவை.

அவ்வகையில் முதற்கட்டமாக – அவ்விலக்கை நோக்கிய சிற்றடியாக – கீழ்க்காணும் பணிகளை முன்னெடுப்பதென்று அண்மையில் நடைபெற்ற வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள ஆட்சிக்குழுக் கூட்டத்தின்போது முடிவுசெய்யப்பட்டது:

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23

தனித்திறன் கொண்ட தமிழாளர்களை – குறிப்பாக இளையோரை – இனங்காண்பதும் ஊக்குவிப்பதும் இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும். இச்செயற்றிட்டத்தின் கீழ் பின்வரும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன:

  1. வீறுகவியரசர் கவிதைகளை முன்னிறுத்தி உலகளாவிய பேச்சுப்போட்டியொன்றை வலையொளி வழியாக நடத்துதல்; பத்து வெற்றியாளர்களைத் தெரிவு செய்து பரிசில் வழங்குதல். அவர்கள் அடங்கலாக, இதன்போது இனங்காணப்படும் திறனாளர்கள் அவைக்களத்தின் தொடர் செயற்பாடுகளில் பங்கேற்கும் வாய்ப்பினை நல்குதல்.
  2. வீறுகவியரசர் கவிதைகளை முன்னிறுத்தி உலகளாவிய கட்டுரைப் போட்டியொன்றை நடத்துதல். வெற்றியாளர்களைத் தெரிவு செய்து பரிசில் வழங்குதல். இனங்காணப்படும் இளந்திறனாளர்கள் தமிழ் ஆய்வு, இதழியல், நூற்பதிப்பு முதலான துறைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
  3. வீறுகவியரசர் முடியரசனார் நினவாகக் கவிதைப்போட்டியொன்றை நடத்துதல். ஆற்றல் கொண்ட கவிகளை இனங்காணல்.
  4. முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காகத் தமிழாய்வைத் தேரும் மாணவர்களில் தகையிற் சிறந்தோரைத் தெரிவு செய்து அவர்களுக்கான புலமைப் பரிசிலாக ஓராண்டு காலம் ஊக்கத்தொகை வழங்குதல்; வீறுகவியரசர் முடியரசனார் கவிதைகள் சார்ந்த ஆய்வுகளின்பால் அவர்களை ஆற்றுப்படுத்துதல்.
  5. வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளையும் கடந்து வந்த பாதையையும் எடுத்துச் சொல்லும் ஆவணப்படங்களை உருவாக்குதல். அதற்கான போட்டியொன்றை நடத்துதல்.

வீறுகவியரசர் முடியரசன் கவிதைகள் – பொருண்மை வகைத் தொகுப்பு

பெருநூல் வெளியீடு

வீறுகவியரசர் கவிதைகளைப் கருப்பொருள் சார்ந்து  பகுத்து, பதினொரு தலைப்புகளின் கீழ் தொகுத்துப் பெரு நூலாகக் கொண்டு வருவதற்கான பணி நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது.  

தமிழ் ஆய்வாளர்கட்கும், அறிஞர்கட்கும், ஆர்வலர்கட்கும் மிகுபயன் தரத்தக்க வகையில் இப்பொருண்மை வகைத்தொகுப்பு உருப்பெற்றுள்ளது.

பக்கங்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டி நீண்டுள்ளதன் காரணமாக அதன் அச்சாக்கம் பெரும் பொருட்செலவைக் கோரி நிற்கிறது. அச்சுமையைப் பொறுப்பேற்கத் தமிழ்ப்பற்று மிகுந்த புரவலர்கள் முன்வந்தால் நூல் அச்சேறி விடும்.

தமிழ்கூறு நல்லுலகுக்கான செய்தி

மேலுள்ளவை தனியொரு சிலரால் செய்து முடிக்க இயன்ற பணிகள் அல்ல என்பதை உணர்ந்திருப்பீர்கள். எண்ணம் பெரியது. காலத் தாழ்வில்லாமல் இவற்றை ஈடேற்றுவதற்கு உங்களில் ஒவ்வொருவரும் இயன்ற வழிகளில் கரங்கொடுக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும். இப்பணிகளுக்குத் தொண்டுளம் கொண்டு உதவ விரும்புவோர் எம்மைத் தொடர்பு கொள்க.

தொடர்பு:

+91 98425 89571 (முனைவர் தமிழ் முடியரசன், தமிழகம்)

+44 74286 31805 (கவி. மதுரன் தமிழவேள்)

வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி

 

அகரமுதல





வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி

உலக அளவில், வலையொளி வழியாக

தமிழ், தமிழர், தமிழ்நாடு, பொதுவுடைமை, சாதி-சமய மறுப்பு, சமூக – பொருளாதார விடுதலை, குமுகாய மறுமலர்ச்சி ஆகிய தளங்களில் தமிழ்க்குடி விழிக்கப் பாடிய வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகளை முன்னிறுத்தி இளையோருக்கான புலமைப்பரிசில் திட்டமொன்றை கவிஞரின் 103ஆம் வெள்ளணி நாளான 07.10.2022 அன்று வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் அறிவித்தது.

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் 2022 அறிவிப்பை இங்கே காணலாம்

இதனொரு பகுதியாக ‘முடியரச முழக்கம்’ எனும் தலைப்பில் வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி இங்கு அறிவிக்கப்படுகிறது. போட்டிக்கான உங்கள் உரையைக் காணொளியாக அலைபேசியில் பதிவு செய்து புலனத்தின் வழி (WhatsApp) எமக்கு அனுப்பி வைக்கலாம். விதிமுறைகளும் விண்ணப்பப் படிவமும் கீழே தரப்பட்டுள்ளன:

வீறுகவியரசர் முடியரசனார்

பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் / கருப்பொருள்:

  • வீறுகவியரசரின் கவிப்புரட்சி
  • வீறுகவியரசர் படைப்புகளில் தமிழியப்புரட்சி
  • வீறுகவியரசரின் புலமைத்திறம்
  • வீறுகவியரசரின் படைப்பாளுமை

போட்டிக்காக வீறுகவியரசரின் படைப்புகளைப் படிக்க விரும்புவோர் பொருண்மை அடிப்படையில் தொகுக்கப்பெற்றுள்ள வீறுகவியரசர் கவிதைகளை எமது வலைத்தளத்தின் ‘நூலகம்’ எனும் தலைப்பிலான பகுதியில் தரவிறக்கிக்கொள்ளலாம்.

நூல்களை அலைபேசியில் தரவிறக்க இயலாமல் போனால் கணினியில் இருந்து முயலுங்கள். அப்படியும் இயலாமல் போனால் இந்த மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் அனுப்பி வையுங்கள்.

பரிசுத்தொகை

மொத்தப் பரிசுத்தொகையான இந்திய ரூ.15,000/=  பின்வரும் முறையில் வெற்றியாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள மின்சான்றிதழ் வழங்கப்படும்:

  • முதற்பரிசு: 5000/=
  • இரண்டாம் பரிசு: 3000/=
  • மூன்றாம் பரிசு: 2000/=
  • மேலும் ஐவருக்கு 5 x 1000/= சிறப்புப் பரிசுகள்

பேச்சுப்போட்டிக்கான விண்ணப்பப் படிவம் இவ்வறிவிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது

விதிமுறைகள்:

  • உலகின் எப்பகுதியில் இருந்தும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்; வயது வரம்பு இல்லை.
  • போட்டியில் பங்கு பெற விரும்புவோர் முதலாவதாகக் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்புதல் வேண்டும்.  இதன்போது எமது புலன எண் (WhatsApp no.) உங்களிடம் வழங்கப்படும்.
  • தரப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதாவதொன்றைத் தெரிவு செய்து மூன்று மணித்துளிகளுக்கு (3 நிமிடங்களுக்கு) மிகாதவாறு போட்டியாளர் தனது உரையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
  •  போட்டியாளர் தனது உரையை அலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து (video recording), தரப்படும் புலன (WhatsApp) எண்ணுக்கு நவம்பர் 30, 2022 இந்திய நேரம் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும்.
  • கருப்பொருளை ஒட்டி அமையாத காணொளிகளும்  மூன்று மணித்துளிகளுக்கு அதிகமாக நீளும் காணொளிகளும் ஏற்கப்பட மாட்டா.

போட்டிக்கான காணொளியை உங்கள் அலைபேசியில் பதிவு செய்து அனுப்பலாம்

முதற்கட்டத் தேர்வில் தெரிவாகும் காணொளி உரைகள் வீறுகவியரசர் நினைவு நாளான டிசம்பர் 03, 2022 அன்று வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள வலையொளிப் பக்கத்தில் (YouTube channel) வெளியிடப்படும். போட்டி முடிவு அறிவிக்கப்படும் வரை போட்டியாளர் தனது உரை அடங்கிய காணொளியை வேறெங்கும் வெளியிடல் ஆகாது.

ஜனவரி 14, 2022 அன்று நடுவர் குழு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும். போட்டியாளரின் பேச்சுத்திறன், ஆளுமை, மொழியறிவு, சொற்செறிவு, ஒலிப்பு முறை (பலுக்கல்), வலையொளிப் பக்கத்தில் குறித்த காணொளிகள் பெற்றிருக்கும் வரவேற்பு (பார்வை எண்ணிக்கை, விருப்பக் குறியீட்டு எண்ணிக்கை, பார்வையாளர் கருத்து) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நடுவர் குழு வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும்.

தமிழர் திருநாளான ஜனவரி 15, 2023 (தைத்திரு நாள்) அன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.

நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

பேச்சுப்போட்டிக்கான விண்ணப்பப் படிவம் கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது

இங்கே சொடுக்குக (CLICK HERE)

முதற்கட்டத் தேர்வில் தெரிவாகும் காணொளி உரைகள் அவைக்கள வலையொளிப் பக்கத்தில் (YouTube channel) வெளியிடப்படும்எமது வலையொளிப் பக்கத்தோடு இணைவதற்கு இங்கே சொடுக்குக

உலகத்தமிழாராய்ச்சிமாநாடு, புதிய கால அட்டவணை

 அகரமுதல





செய்தி மடல் – Newsletter
 
  மதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு,

வணக்கம். சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கான புதிய கால அட்டவணையைத் தங்களுடன் பகிர்கின்றோம். இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் உள்ள அறிஞர்களின் ஆர்வத்தையும் வேண்டுகோளையும் கருத்தில் கொண்டு ஆய்வுப் பணிகளுக்கான கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கால அட்டவணை பின்வருமாறு

1. ஆய்வுச் சுருக்கம் வந்தடைய வேண்டிய தேதி: 15.நவம்பர்.2022.
2. ஆய்வுச் சுருக்கம் பற்றிய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி: 30.நவம்பர்.2022.
3. முழு ஆய்வுக் கட்டுரை வந்தடைய வேண்டிய தேதி: 15.பிப்ரவரி.2023.
4. மாநாட்டில் படைக்கப்படுகின்ற கட்டுரை முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி: 28.பிப்ரவரி.2023.

இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் ஆய்வுச் சுருக்கத்தை அனுப்பிய அறிஞர்களுக்கு நன்றி.

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினைப் பற்றிய செய்திகளை www.icsts11.org என்ற மாநாட்டின் இணையதளத்தில் காணவும். ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பான வினாக்கள் மற்றும் கருத்துக்களை contact@icsts11.org என்ற மின்வரிக்கு அனுப்பவும்.

நன்றி.
ஆய்வுக்குழு – பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர்


 ஆய்வுச் சுருக்கம் அனுப்ப வேண்டிய மின்வரி 
E-mail address for submission of abstracts
academic-committee@icsts11.org 
 

வெள்ளி, 28 அக்டோபர், 2022

திருக்குறளின் அறத்துப்பாலுக்குக் கதையெழுதிய மாணவர்கள்!

 அகரமுதல





திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்!

       மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பதின் மேனிலைப்பள்ளியில் 10, 11, 12-ஆம்
வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் திருக்குறளின் அறத்துப்பாலிலுள்ள
38 குறள்களுக்கு, 38 கதைகளை எழுதியுள்ளனர். இப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியர்
கோ.மாலினி, இக்கதைகளைத் தொகுத்து ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும்
நூலாக்கியுள்ளார். இந்நூலின் அட்டை ஓவியத்தையும் பள்ளி மாணவரே வரைந்துள்ளார்.

       இப்பள்ளியின் தமிழ்த்துறை சார்பில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதியன்று
பள்ளி வளாகத்திலுள்ள ஆற்றல் அவைக்களம் அரங்கில் இந்நூலின் வெளியீட்டு விழா
நடைபெற்றது.
       ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும் இந்நூலை பள்ளியின் தாளாளர் சக்தி சிரீதேவி வெளியிட, கவிஞர் மு.முருகேசு பெற்றுக்கொண்டார். விழாவில் கல்வி இயக்குநர் கு.உதயகுமாரி, பள்ளி முதல்வர் மு. செயக்குமார், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவியர்களும் கலந்து கொண்டனர்.

      “வகுப்பறையில் நடத்தப்படும் பள்ளிப் பாடப்புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது; அதையும் தாண்டிக் குழந்தைகளிடம் புத்தக வாசிப்புத் திறனை அதிகரிக்க வேண்டும், பள்ளிக் குழந்தைகளிடம்  இன்னமும் அறியப்படாமலிருக்கும் பல்துறை ஆற்றலை வெளிக்கொண்டுவருவதற்கான முன்னெடுப்புகளை இப்பள்ளி தொடர்ந்து செய்துவருவது பாராட்டுக்குரியது” என்று கவிஞர் மு.முருகேசு குறிப்பிட்டார்.

      “கதைகள் மட்டுமல்ல, ஓவியம், இசை, ஆரோக்கியம், சமூக அறம் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளிலும்மாணவர்கள் ஆர்வமுடன் செயல்பட, இப்பள்ளி அவர்களுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் என்றைக்கும் அளிக்கும்” என்றார் தாளாளர் சக்தி சிரீதேவி.

     இந்த நூல் வெளியீட்டு விழாவானது மாணவர்களிடையே படைப்பாற்றலுக்கான புதிய திறப்புகளை வழங்கும் விதமாகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.






திங்கள், 24 அக்டோபர், 2022

செய்தி அரசியல் – ஆணைய அறிக்கைகள் - தோழர் தியாகு

 

அகரமுதல


தமிழ்த்தேசம்

செய்தித் திறனாய்வு

ஆணைய அறிக்கைகள்

தோழர் தியாகு

நெறியாளர்- தோழர் மகிழன்



தமிழ் இலக்கணத் தந்தை கோடிமுனை காசுமான் காலமானார்

 அகரமுதல




தமிழ் இலக்கணத் தந்தை கோடிமுனை காசுமான் காலமானார்


தொல்காப்பியர், அகத்தியர் போன்ற தமிழ் இலக்கண ஆசான்களுக்கு நிகராகப் பேசப்படுகின்ற சமகாலப் படைப்பாளர்;
தமிழக அரசின் கபிலர் விருது பெற்ற தகைசால் பெரியவர்;
இலக்கணப் படைப்பாளர்களுக்கும் நெய்தல் படைப்பாளர்களுக்கும் ஒப்பற்ற ஆசான்; கோடிமுனை மி.காசுமான் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்தது.
கடந்த வாரம் அலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு “பெருலின் உன்னிடம் சில விசயங்கள் பேசவேண்டும்; நேரில்தான் பேசவேண்டும். வரமுடியுமா? கட்டாயம் வரவேண்டும்” என்று கட்டளையிடுவதுபோல் பேசினார். நானும் “நிச்சயம் வருகிறேன் ஐயா” என்றேன். ஆனால் என்னால் அவரைச் சந்திக்கமுடியவில்லை. ஐயா என்ன பேசவேண்டுமென்று நினைத்தாரோ? அவருடைய கடைசிக் கட்டளையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வால் குறுகிப்போய் நிற்கிறேன்.
ஐயா என்னை மன்னிப்பீர்களா?

குறும்பனை பெருலின்


புலவர் மி காசுமானார்
பிறப்பு:01.08.1936
இறப்பு:21.10.2022

பிறப்பிடம்:கோடிமுனை:நாகர்கோவில்

பெற்றோர்: தந்தை: மிகெயல் பிள்ளை; தாய்:ஞானப்பிறகாசி.
காலமான இடம்:தங்கையின் வீடு.மார்த்தாண்டம்,நாகர்கோவில்.

திருமணமாகவில்லை.தங்கையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். சமயச் சார்பற்றவர்; பொருளாசையற்றவர்; இலவசங்களை விரும்பாதவர்; தமிழ்த்தொண்டர்.

++++++

அன்புடையீர்,
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் தனக்கு இயற்கையன் (=அவர் கடவுளை இயற்கையன் என்றழைப்பதே வழக்கம்) பத்தாண்டுகள் தந்தால் நலமாகவிருக்கும் மனிதக் குலத்திற்கும் தமிழுக்கும் தாம் செய்ய வேண்டியது இன்னும் இருக்கிறதென்று அக் 16 2022-இல் என்னிடம் [13:46 (53 நிமையம்),14:41(19 நிமையம்),15:25 (24 நிமையம்)]
பேசினார். குறும்பனை பெருலினைப் பார்த்துப் பேச வேண்டுமென்றும் பெருலினின் அம்மா கோடிமுனையைச் சார்ந்தவரென்றும் கோடிமுனையின் பழைய பெயர் கோடிமை என்றும் அது மருவி கோடிமுனை ஆனதென்றுங் கூறினார்( அக்.16 2022-இல்).

அவரெழுதிய நூற்கள் :
(1)குமரியர்- நாவலந்தீவின் உரிமை மாந்தர் வரலாறு.முதற் பதிப்பு. 2011.இரண்டாம் பதிப்பு.2013.மூன்றாம் பதிப்பு.2021.
2.திருக்குறள் அறத்துப்பால்-தெளிவுரை-பரிமேலழகர் உரையுடன்.முதற் பதிப்பு.2018.
3.தமிழ்க்காப்பு இயம்(எழுத்து-சொல்-சொற்புணர்ச்சி இலக்கணம்).முதற்பதிப்பு.2005,இரண்டாம் பதிப்பு.2006,மூன்றாம் பதிப்பு.2015.
4.முத்தாரம் (நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்திற்கிணையானத் தமிழ்ச் செய்யுள் காப்பியம்).முதற்பதிப்பு.1991.இரண்டாம் பதிப்பு.2008.மூன்றாம் பதிப்பு.2020.
5.கனவும் நினைவும்(அவ்வப்போது பாடப்பட்ட தனிப்பாக்கள். வடலூர் வள்ளலார், மூதறிஞர் இராசாசி, அறிஞர் அண்ணா, போன்றோரையும் கனவுச் சிங்காரச் சென்னை போன்ற பாடல்களையும் பதித்துள்ளார்).
6.பொருட்பாலுக்கு உரை எழுதி கொண்டிருந்தார்.அக் 16 2022-இல் திருக்குறள் 460 -ஆவது குறளில் வரும் ஊங்கு எனுஞ்சொல் மேலுலகம் என வருமாற்றை எடுத்துக்கூறினார். இதுவரை உரை எழுதியுள்ளதாக என்னிடங் கூறினார்.

அவருடைய தமிழ்க்காப்பு இயம் எனும் நூலுக்குச் சிறப்புப் பரிசளிக்க வேண்டுமாய் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க தாலின், நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யா மொழி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆகியோருக்கு வேண்டுகையும் அதற்குப் பரிந்துரைக்குமாறு முனைவர் அருள் நடராசனார் அவர்களுக்கு வேண்டுகையும் சூன் 02 2022-இல் அனுப்பினேன்.

பண்பு
1.யாரையும் மனம்நோகப் பேசாதவர்.
2.யாரையும் குறை பேசாதவர்.
3.உதவி கேட்கும் போது அவ்வுதவியைக் கேட்டவருக்குச் செய்யதயங்காதவர்.

வழக்கம்
1.காலை 09.00 மணிக்குத் துயிலெழுந்து பின்னிரவு 01.00 மணிக்குத் தூங்குகிறவர்.
2.பகல் தூக்கம் இல்லை.
3.எப்போதும் எழுத்தும் படிப்பும் மருத்துவஞ் செய்தலும் கணியங்கூறுதலுமே அவருடைய தொழில்.

உடல்நலம்
1.மார்த்தாண்டத்தில் எங்கு போனாலும் நடந்தே செல்வார்.
2.கண்ணாடி இல்லாமலே படிப்பார் எழுதுவார்.

பணி
1.தலையாயப் பணி-தமிழ்த்தொண்டு.எந்தப் பள்ளிக்கூடத்திலும் ஆசிரியராகவோ கல்லூரியில் பேராசிரியராகவோ இருந்ததில்லை.
2.சிறந்த சித்த மருத்துவர்.தமிழ் இலக்கணம் இலக்கியங் கற்ற சித்த மருத்துவர்.
3.நுட்பமான சோதிட வல்லுநர். நேரு, அண்ணா, பெரியார், இராசாசி ஆகியோருடைய இறப்பு நாளைக் கணித்துக் கூறியவர்.
4.தமிழ் மொழிக்கு நூலெழுதல்.

அவருக்கும் எனக்குமான நட்பு அவருடைய நூலான தமிழ்க்காப்பு இயம் மூலம் 2008-இல் தொடங்கியது. அவரை நேரில் நான் சந்தித்ததில்லை. .தொலைபேசித் தொடர்பு மட்டுமே.அவ்வப்போது கடிதம் எழுதிக்கொள்வோம்.

அவருடைய நூற்களை அவருடைய பரிசாக மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரைக் கல்லூரி, மதுரைத் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, மதுரை தோக்கு பெருமாட்டி கல்லூரி, மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் போன்றவற்றிற்கும் மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் தியாகராசனுக்கும் வழங்கியுள்ளார்.

யாரிடமும் எதற்காகவும் சென்று கைககட்டி நிற்கவில்லை. கையூட்டும் பெற்றதில்லை.
தானுண்டு, தன்னுழைப்புண்டு, தகுதியுண்டு என்று வாழ்ந்த தமிழ்ப் பெரியவர்.

இறுதிஆசை
1.திருக்குறளுக்கு முழுவதுமாக உரை எழுத வேண்டும்.
2.தமிழ்க்காப்பு இயம் என்னும் இலக்கண நூலைத் தமிழ் இலக்கிய மாணவர்களுக்குப் பாட நூலாக்க வேண்டும்.
3.குறும்பனை பெருலினைச் சட்டமன்ற உறுப்பினராக்க வேண்டும்.

மதுரை செ பன்னீர் செல்வம், அக் 22 2022 , 0010.

++++++

எனக்கும் ஒரு பெரு வருத்தம்

காசுமான் ஐயா, மூன்று திங்களுக்கு முன் என்னிடம் பேசி அவர் நூல்களை அனுப்ப என் முகவரி கேட்டார். தமிழ்க்காப்பியம் முதலான அவர் நூற் பெயர்களை அறிந்து, ஐயா, நூற்களை வைப்பதற்கு வீட்டில் இடமி்லை. எனக்குப் படிப்பதற்கும் நேரமில்லை. ஒரு நாள் 16 மணி நேரத்திற்கும் குறைவில்லாமல் கணிணியில் வேலை பார்க்கின்றேன். எனவே, நூலின் அணிந்துரை, மதிப்புரை முதலானவற்றை எனக்கு மின்னஞ்சல் வழி அனுப்பினால் அகரமுதல மின்னிதழில் வெளியிடுகிறேன். அட்டைப் படத்தையும் மின்னஞ்சல் வழி அனுப்பி வையுங்கள் என்றேன். ஆனால், அவர் புத்தகங்களை அனுப்பிவைத்தார். அறிஞர்கள் பாராட்டுரைகள் நூற்களில் இடம் பெற்றிருந்தன. அவற்றை யெல்லாம் படித்து மகிழ்ந்தேன். நூற்களில் சிற்சில பக்கங்களைப் படித்தேன். அவரிடம் தொலைபேசி வழியில் பாராட்டிப் பேசினேன். கணியச்சர்கள் மாறி விட்டன்ர் என்றும் இருந்தாலும் இரண்டாம் முறை கணியச்சிட்டுப் பணத்தை வீணாக்குவதற்கு மாற்றாகப் புத்தகம் கணியச்சிட்டவரிடம் சொல்லி மின்னஞ்சல் வழி அவற்றை அனுப்பி வைக்க வேண்டினேன். முழுப்புத்தகத்தையும் அனுப்பினால் அவற்றைத் தொடராக வெளியிடுகிறேன் என்றும் அப்பொழுது படித்து முடித்து விடுவேன் என்றும் கூறினேன். அவர் கையெழுத்துப்படியை அனுப்பி, நூலின் அட்டைகளைக் கிழித்து அனுப்பி யிருந்தார்.

மீண்டும் நான் கூறியது அவருக்குப் புரியவில்லை. செவிப்புலன் மங்கியிருந்தது ஒரு காரணம். படிக்க எண்ணி, எண்ணி நேரம் ஒதுக்க முடியாமையால் கடந்தவாரம்தான் எழுத்தாளர் இ.பு.ஞானப்பிராகசத்திற்கு அனுப்பி மதிப்புரை வழங்க வேண்டியிருந்தேன்.

உரிய நூலாய்வுகள் வெளியிடும் முன்னரே அவர் மறைந்தது பெரிதும் வருத்தமாக உள்ளது. இதை அவர் எதிர்பார்க்கவில்லை. புத்தகங்களை நான் படித்துக் கருத்து சொல்ல வேண்டும் என்றுதான் அவர் எதிர்பார்த்தார். நான், நான் மட்டும் படிப்பதை விடப் பிறரும் படிக்க வேண்டும் என்பதற்காக வழக்கம்போல் கணியச்சுப்படிகளைக் கேட்டேன். இருப்பினும் அவ்வாறு வராமையால் அவர் இருக்கும் பொழுதே அவரது நூல் மதிப்புரைகளை வெளியிட முடியாமல் போனது பெரு வருத்தமாக உள்ளது.

அன்னாருக்கு ‘அகரமுதல’ மின்னிதழ் அஞ்சலியைச் செலுத்துகிறது.

அவர் புகழ் ஓங்குக. வணக்கத்துடன்

இலக்குவனார் திருவள்ளுவன்