(சனாதனம் – பொய்யும் மெய்யும் 80 தொடர்ச்சி)
- சனாதனம் – பொய்யும் மெய்யும் 81
- ? 81. “சனாதனத்தில் மட்டும்தான் மனிதன் கடவுள் ஆக முடியும். சிறந்த எடுத்துக்காட்டு ஐயா வைகுண்டர் அவர்கள். அவர் மனிதனாக பிறந்தார். ஆனால் கடவுளாக வணங்குகின்றோம்” என்று அண்ணாமலை கூறியுள்ளாரே!
- இஃது அவரின் அரை வேக்காட்டுத்தனத்தைக் காட்டுகிறது. ‘கீழ்ப்பாக்கத்தில்’ இருப்பவர்கள்கூட இப்படிப் பேச மாட்டார்கள்.
சனாதனம் இல்லாத பிற சமயங்களில் தத்தம் மத மூலவரை அவர்கள் சிறந்து வாழ்ந்ததன் அடிப்படையில் கடவுளர்களாக மக்கள் கருதுகிறார்களே!
சீர்திருத்தவாதியான ஐயா வைகுண்டரைச் சனாதனி என்பது வரலாற்றுத் திரிபு, கயமைத்தனம். ஒடுக்கப்பட்ட மக்களைச் சாதிக்கொடுமைகளிலிருந்து மீட்க ‘ஐயா வழி’ என்னும் தனிச் சமயத்தை தோற்றுவித்தார் ஐயா வைகுண்டர். அவர் சனாதன வாதியாக இருந்தால் சனாதனத்திற்கு எதிராக தனியொரு சமயத்தைத் தோற்றுவித்திருப்பாரா?
சனாதனத்தில் பிராமணர் அல்லாதார்க்கு கடவுளர் பெயரைச் சூட்டுவதற்குத் தடை உள்ளமையால், முடிசூடும் பெருமாள் எனப் பெயர் வைக்க விரும்பிய ஐயா வைகுண்டரின் பெற்றோர் முத்துக்குட்டி எனப் பெயர் சூட்டினர். பிறக்கும் பொழுதே சனாதனக் கொடுமைக்கு ஆளானவரைச் சனாதனவாதியாகச் சொல்வது கொடுமையல்லவா?
ஐயா வைகுண்டரின் பதிகளில் எப்போதும் சமபந்தியே நிகழும். (பதி என்பது அனைவரும் இணைந்து ஒன்றாய் வழிபடுவதற்குரிய வழிபாட்டிடம். ) சனாதனத்தில இதற்கு இடமில்லையே!
ஐயா வைகுண்டர் தமிழ் வழி வழிபாட்டைப் பின்பற்றிப் பரப்பியவர். சமற்கிருத வழிபாட்டை உயர்த்தும் சனாதனத்தில் இதற்கு இடமில்லையே! அறிந்தே பொய் சொன்னாலும் அறியாமல் உளறிக் கொட்டினாலும் இத்தகையோருக்குத் தண்டனை வழங்கினால்தான் நாடு நலம் பெறும். இதற்கான முயற்சிகளில் ஐயா வைகுண்டரின் அன்பர்கள் முயல வேண்டும்.
அவர்போல் வேறு சிலரும் ஐயா வைகுண்டரின் கொள்கைகள் சனாதனமே. அதனை எதிர்க்கலாமா என்கின்றனரே!
அவருக்கு மட்டுமல்ல! பிறருக்கும் சேர்த்துத்தான் கூறுகிறோம். இவர்களுக்குச் சனாதனம் பற்றியும் ஒன்றும் தெரியாது. ஐயா வைகுண்டரின் கொள்கையும் தெரியாது. சனாதனத்தை நன்கு அறிந்தவர்கள், அதற்கு நல்ல கொள்கை எதுவுமில்லாமல் மக்களை ஏமாற்றுவதற்காக நல்ல கொள்கைகைளயெல்லாம் சனாதனமாகக் கூறுவதைக் கேட்டு இவ்வாறு கூறுகிறார்கள். இல்லை இவர்கள் நன்கு அறிந்தவர்கள் என்றால் அறிந்தே மக்களை ஏமாற்றகிறார்கள் என்றுதான் பொருள்.
ஐயா வைகுண்டர் (05.10.1823–30.01.1874) பிராமணீயத்திற்கு எதிரான கொள்கைளையே பரப்பி வந்தார். தான் பிறந்த குமரி மாவட்டத்திலும் அண்டை மாவட்டமான திருநெல்வேலியிலும் அப்போது குமரி மாவட்டம் கேரள ஆளுகைக்குட்பட்டு இருந்தமையால் கேரளாவிலும் செல்வாக்கு மிக்கவராக இருந்தார்.
‘தாழக் கிடப்பாரை தற்காப்பதே தருமம்” என்றார் ஐயா வைகுண்டர் என்னும் குமுகாயப் போராளி.
‘காணிக்கையிடாதீங்கோ,
காவடிதூக்காதீங்கோ,
வீணுக்கு தேடுமுதல் விறுதாவில் போடாதீங்கோ‘
என்று ‘அகிலத்திரட்டு’ நூலில் இருக்கிறது.
பேய், பிசாசு, மாந்திரீகம் ஆகிய மூடப் பழக்கங்களை கடுமையாகச் சாடினார் ஐயா வைகுண்டர்.
“பொய்யில்லை பிசாசுயில்லை
பில்லியின் வினைகளில்லை
நொய்யில்லை நோவுமில்லை
நொன்பலத் துன்பமுமில்லை” என்கிறார் ஐயா வைகுண்டர்.
சாதியை உருவாக்கியவர்களைக் ‘கலிநீசன்’ என கடுமையாகச் சாடுகிறார் ஐயா வைகுண்டர்.
“அறிந்து பலசாதி முதல் அன்பொன்றுக்குக் குள்ளானால்
பிரிந்து மிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார்“
சனாதனத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து அதனை எதிர்த்து வந்தவர் ஐயா வைகுண்டர். இவரின் அகிலத்திரட்டு என்னும் நூலில் சனானத்திற்கு எதிரான முத்திரைகளைப் பதித்துள்ளார்.
“தான மானங்களும் அதைப் பெற்றவர்க்குக்
கிட்டிக் கொள்ளும் பேதமில்லை மகனே“
“அவனவன் தேடுமுதல் அவனவன் வைத்து ஆண்டிடுங்கோ,
எவனுக்கும் பதறி இனி மலைய வேண்டாம்“
“ஏடுதந்தேன் உன்கையில் எழுத்தாணியும் கூடத் தந்தேன்
பட்டங்களும் பட்டயமும் தந்து பகை தீர்ந்தேன் என் மகனே“
வருணாசிரமம் ஏழைச்சாதியருக்குக் கல்வி தேவையில்லை என்கிறது. வருணாசிரமத்தை எதிர்க்கும் வகையில் அனைத்துச் சாதியினரும் அறிவைப் பெறும் வகையில் கல்வியும் பட்டங்களும் விருதுகளும் தந்து சனாதனத்தின் மீதான பகையைத் தீர்ப்பதாகக் கூறுகிறவரைச் சனாதனவாதி என்று சொல்வது மிகப்பெரும் மோசடியல்லவா?
ஐயா வைகுண்டரின் ‘அகிலத்திரட்டு’ நூலில் முழுக்க ஆதிக்க எதிர்ப்பு ஓங்கி இருக்கிறது. சனாதனம் எந்த இடத்திலும் இவ்வாறு கூறவில்லையே?
குருநாதன் சிவராமன் என்பார் பின்வருமாறு கூறுவதைக் காணுங்கள். “மக்களை, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வகையாகக் கூறுபோடும் வருணாசிரமக் கட்டமைப்பை ஐயா வழியோடு ஒப்பிடுவதே தவறு.
சனாதனத்திற்கு எதிராகக் கலகம் செய்த புத்தர், நாராயண குரு, வள்ளலார், ஐயா வைகுண்டர் என எல்லாருக்கும் காவிச் சாயம் கொடுக்கப் பார்க்கிறது பாசக. உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கே மதச் சாயம் பூசும் கும்பல் ஆச்சே இது!” இதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாகும்.
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 109-112