வியாழன், 19 ஜூன், 2025

தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை134 & 135; நூலரங்கம்



சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௨௰௨ – 422)

 தமிழே விழி!                                                             தமிழா விழி!

தமிழ்க் காப்புக் கழகம்

இணைய அரங்கம்: ஆளுமையர் உரை134 & 135; நூலரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :

https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

ஆனி 08, 2056  ஞாயிறு 22.06.2025  காலை 10.00 மணி

தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்

தமிழும் நானும்  – ஆளுமையர்கள்

ஆய்வாளர் மும்பை சாக்கிரட்டீசு கணேசன்

குறள் நெறியாளர் சதுரை ஆ.தி.பகலவன்

நூலாய்வு:

திருவாட்டி மும்பை பாரதி கணேசன்

சாக்கிரட்டீசு கணேசனின் நூல்

“வள்ளுவத்தில் நூலறிவும் பேரறிவும்”

நிறைவுரை: தோழர் தியாகு

நன்றியுரை : முனைவர் மா.போ.ஆனந்தி

83. சனாதன் என்றால் புனிதம் என்பது சரியா? 84.சனாதனத்திற்கு ஆதரவாகப் பலரும் எழுதுவது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 82 தொடர்ச்சி)

சனாதன் (சனாதனம்) என்ற சமற்கிருதச் சொல்லின் பொருள், மதத்தை விட்டுவிட்டுப் பொருள் தேடினால் புனிதமான, பழங்கால, மறையாத, நீண்டு நிலைக்கும், என்றைக்கும் பொருத்தமான என்ற துணைச்சொல் என்று விளக்கம் தருகிறார்களே!

சனாதனம் என்பது இந்து மதத்தில் மட்டும் இருக்கும் பொழுது சனாதன இசுலாம் என்றெல்லாம் சொல்வது பிற சமயத்தவரையும் இழிவு படுத்துவதாகும்.

அனைவரையும் பாகுபடுத்தாத இழிவுபடுத்தாத தூய உள்ளத்திற்கு எதிரான சனாதனத்தைத் தூய என்ற அடைமொழிப் பொருளாகக் கூறுவதும் கொடுமைதான்.

உண்மையான பொருளுக்கு அதன் தீமை உணர்ந்து எதிர்ப்பு வருகையில் இல்லாத நல்ல பொருள்கள் இருக்கின்றன எனக் கற்பிதம் செய்து மக்களை ஏமாற்றுவது ஆரியர் வழக்கம். அதற்கிணங்கவே இப்போதும் தூய்மையான என்பதுபோன்ற பொருள்களைத் தந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இத்தகைய பொய் விளக்கத்தில் அறிவுள்ள மக்கள் நம்ப மாட்டார்கள். சனாதனுக்கு எதிரான திருக்குறளையும் பிற சமயங்களையும் சனாதனமாகத் திரித்துக் கூறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள். எனவே, இத்தகைய விளக்கங்களை யெல்லாம் பொருட்படுத்தாமல் தூர எறிய வேண்டும்.

வானவில் க.இரவி, செயக்குமார், சீனிவாசன் பி.ஆர்.மகாதேவன், அரவிந்தன் நீலகண்டன், பிரம்மரிசியார், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், சோபனா இரவி, இளங்கோ பிச்சாண்டி, கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், எல்.முருகன், வ.மு.முரளி, காம்கேர் கே.புவனேசுவரி, தருமபூபதி ஆறுமுகம், இராமகிருட்டிணன், சிவசங்கரன், பத்துமன், கோதை சோதிலட்சுமி, செங்கோட்டை சிரீராம், பி.ஆர்.மகாதேவன், ஆர்.என்.இரவி, சத்துகுரு சக்கி வாசுதேவு, மரபின்மைந்தன் முத்தையா, கோவை இராதாகிருட்டிணன், கே.சி.சவர்லால், நந்தலாலா, பி.ஏ.கிருட்டிணன், சடாயு, பா.இந்துவன், திருநின்றவூர் இரவிகுமார், ச.சண்முகநாதன், கோ.ஆலாசியம், ப.கனகசபாபதி, வேதா சிரீதர், பால.கௌதமன், வித்தியா சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை பிரபாகர், இரா.சத்தியப்பிரியன், கிருட்டிண.முத்துசாமி, சி.எசு.பாலாசி, செ.செகன், எசு.எசு.மகாதேவன், அ.பொ.இருங்கோவேள், இராசசங்கர் விசுவநாதன், சுவாமி விமூர்த்தானந்தர், கோ.சேசா, என்.ஆர்.சத்தியமூர்த்தி, எசு.ஆர்.சேகர், நீதிபதி சேசசாயி, சந்தீபு ஆத்துவர்யூ, இராம் மாதவு, நிர்மலா சீதாராமன், வ.ச.சிரீகாந்து, குரு.சிவகுமார் ஆர்.இராசசேகரன், வைரவேல் சுப்பையா, மாதா அமிர்தானந்தமயி, தேவி, ஏகநாத்து இரானடே, டேவிட்டு ஃபிராலே சுவாமி சின்மயானந்தர்,சுவாமி அபேதானந்தர், இராமகிருட்டிணர்,  சாய்பாபா முதலிய பலரும் சனாதனத்திற்கு ஆதரவாக எழுதியுள்ளனர். அனைத்திலும் அடிப்படையாக உள்ளமை இங்கே நாம் பார்த்துள்ள தொன்மை, சமத்துவம் முதலியவற்றிற்கான விளக்கங்கள்தாம். அவற்றை மீண்டும் தெரிவிப்பின் கூறியது கூறலாகும் என்பதால் இங்கே எடுத்துரைக்கவில்லை. இவர்களுள் சிலர் மழுப்பலாக எழுதியுள்ளனர். இருப்பினும் சனாதனம் என்பது தீங்கானது என்பதும் அதற்கான விளக்கங்கள் தவறானவை என்பதுமே உண்மை.

(தொடரும்)

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -15: அன்றே சொன்னார்கள் 53-இலக்குவனார் திருவள்ளுவன்



(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ 14 தொடர்ச்சி)


பருஇரும்பு பிணித்துச், செவ்வரக்கு உரீஇத்
துணைமாண் கதவம் பொருத்திஇணைமாண்டு
நாளொடு பெயரிய கோள்அமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி கால்அமைத்து
தாழொடு குயின்ற போரமை புணர்ப்பில்
கைவல் கம்மியன் முடுக்கலில் புரைதீர்ந்து
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை (நெடுநல்வாடை 80-86)


உயரமும் அகலமும் உடைய வாயில்களுக்கு – ஒற்றைக் கதவுகளாக இல்லாமல் இருபுறமும் மூடும் வகையில் – இரட்டைக் கதவுகளே அமைக்கப்பட்டன. மிக அகலமான வாசல்களுக்கு  மடக்கி மூடும் கதவுகள் அமைக்கப்பட்டன (துணைமாண்கதவம்). அவ்வாறு அமைக்கும் பொழுது அவற்றைப் பிணிப்பதற்கு ஆணி முதலான இரும்புப் பொருள்கள் பயன்படுத்தப் பெற்றன. மரக் கதவுகளுக்கு நிறம் ஊட்டுவதற்குச் செவ்வரக்கு (சாதிலிங்கம்) பூசப்பட்டது,


அழகிய வேலைப்பாடு, உறுதி, தோற்றப் பொலிவு முதலியவற்றால் சிறப்பு பெற்றனவாய் அவை அமைந்தன. பல இணைப்புகளாகக் கதவுகள் உருவாக்கப்பட்டாலும் இணைக்கப்பட்டதற்கான அடையாளம் தெரியாதவகையில் மாட்சிமை மிக்கதாக (இணைமாண்டு) அக் கதவுகள் அமைந்தன. உத்தரம் என்பது ஒரு விண்மீனின் பெயர். கதவு நிலையில் மேல் இடப்படும் பாவுகல்லின் பெயர் உத்தரக்கற்கவி என்பதாகும். எனவே, உத்தரம் என்னும் விண்மீன் பெயர் உடைய உத்தரத்தில்(நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து) குவளைப் பூ வடிவிலான புதுமையான பிடியைப் பொருத்தினர் (போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்து); கதவின் பகுதியாகவே தாழ்ப்பாளைப் பொருத்தினர்; கைத்திறன் மிகுந்த கம்மியர்கள் நன்கு முடுக்கினர்; இடைவெளி தெரியாத அளவில் (புரை தீர்ந்து) ஒற்றைக் கதவுபோல் உருவாக்கினர்; வெண்சிறுகடுகினை (ஐயவி)யும் நெய்யையும் அதில் பூசினர். இவ்வாறு வாயிலுக்குரிய நெடிய நிலையினை அமைத்தனர்.
இவ்வாறு கதவுகளில் வெண்சிறுகடுகையும் நெய்யையும் கலந்து கதவுகளில் பூசும் வழக்கத்தை ஆசிரியர் மாங்குடி மருதனார்


தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மாடம் (மதுரைக்காஞ்சி : 253-255)


எனக் குறிப்பிட்டுள்ளார்.


புலவர் உறையூர் கதுவாய்ச் சாத்தனார்


நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள்காழ்
விளங்கு நகர் விளங்க (உறையூர் கதுவாய்ச் சாத்தனார் : 370.3-4) என்கிறார்.


நெய் என்பதைப் பாலில் இருந்து பெறும் நெய்என்றே அனைவரும் பொருள் கொண்டுள்ளனர். அவ்வாறு பொருள் கொண்டதால் தெய்வ வணக்கத்திற்காக நெய் பூசியதாகத் தவறாகக் கருதி உள்ளனர். எள்ளில் இருந்து பெறப்படுவதை எள் நெய் என்பது போல் நெய் என்பது பொதுச்சொல். கதவுகளுக்கு மெருகேற்றப் பயன்படுத்திய நெய்யை – மெருகெண்ணெய்யை – நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம்.
கதவுகளை அமைக்கும் பொழுதே சீரும் சிறப்புமாகவும் உலுத்துப் போகாமலும் அரிக்கப்படாமலும் நிலைத்து நிற்கும் வகையில் சிறந்த மரத்தால் (விழுமரத்து) அமைத்ததுடன் மெருகுநெய்யும் பூசிப் பாதுகாத்து உள்ளனர் என்பதே சரியானதாகும்.
இவற்றின் தொடர்ச்சியான சிறப்பை அடுத்தும் காண்போம்.

புதன், 18 ஜூன், 2025

82. சனாதனம், வருணாசிரமம் என்பனவெல்லாம் இப்பொழுது எங்கே உள்ளது எனக் கேட்பது சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 81 தொடர்ச்சி)

  • இதற்குப் பேரறிஞர் அண்ணாவின் உரைகளைக் காண்போம். (மே பதினேழு இயக்கம், வினவு,18.09.2023)

“ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன் ஒன்றாகக் கலந்து விட்டன. இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று என ஒரு சாரார் கூறிக் கொண்டே இருக்கின்றனர். எவ்வளவு விளக்கினாலும் அவர்கள் மரமண்டையில் உண்மை குடி போவதே இல்லை, ஆயினும் அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் எனக் கருதி, சென்னை நீதிமன்ற நீதிபதிகள் 1941-இல் கொடுத்த தீர்ப்பை எடுத்துக் காட்டுகிறோம்” – எனப் பேரறிஞர் அண்ணா மனுதருமப் பிரிவுகளையும், அதன்படி அமைந்த தீர்ப்பையும் விளக்குகிறார்.

“பிராமணனால் சூத்திரப் பெண்ணுக்குப் பிள்ளை பிறந்தால் அவனுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையில்லை என்கிறது மனுதருமம்”. பிராமணர் உருவாக்கிய சாத்திரத்தின் மேல் இந்துச் சட்டம் கட்டப்பட்டிருந்தது என்பதற்கு  1941-இல் நடந்த வழக்கை எடுத்துக் கையாள்கிறார் பேரறிஞர் அண்ணா.

 வழக்குரைஞராக இருந்த சானகி இராமமூர்த்தி என்னும் பார்ப்பனருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பிராமணப் பெண். இரண்டாம் மனைவி சூத்திரப் பெண். அவர் இறந்து விடுகிறார். அதனால் இரண்டாவது மனைவி, தன் இரண்டு குழந்தைகளுக்கும், தனக்கும் லாழ்க்கைப்படி(சீவனாம்சம்) கொடுக்குமாறு முதல் மனைவி மீது வழக்குத் தொடர்ந்தார். மாவட்ட நீதிபதி சூத்திர மனைவிக்கு உரூ 20 வாழ்க்கைப்படி கொடுக்கவும் தீர்ப்பளிக்கிறார். முதல் மனைவி அத்தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். பிராமண நீதிபதிகள் விசாரித்து இந்தத் திருமணம் செல்லாது என மனுதருமப்படி தீர்ப்பு கூறுகின்றனர்.

 “பிராமணனால் சூத்திரப் பெண்ணிடத்தில் பிள்ளை பிறந்தால், அவனுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையில்லை” என்பது மனுதரும சாத்திரம். இந்த மனுசாத்திரத்தின் மேல் கட்டப்பட்டதே அப்போதைய நீதியாக இருந்தது என்பதைச்  சுட்டிக் காட்டுகின்றார்.

பிராமணனுக்குச் சூத்திர மனைவியிடத்தில் பிறந்துள்ள புத்திரன் செய்யும் சிரார்த்தமானது பரலோக உபயோகம் ஆகாததால், அந்தப் பிள்ளை உயிரோடிந்தாலும் பிணத்திற்கு ஒப்பாவான்” இதனால் தந்தையின் கருமத்தில் சூத்திர மகனால் பங்கு பெற இயலாது. அதனால் அவனால் சொத்து பெற இயலாது. நான்கு பிரிவுகளிலே பெண்களையும் சேர்க்காததால் பெண்களினமும் சொத்து பெற முடியாத நிலையை விளக்கிக் கூறுகிறார் அண்ணா. நம் பெண் சமூகம் சொத்துரிமையின்றி அடிமைப்பட்டுக் கிடந்ததற்குக் காரணம் ஆரியக் கொடுமையே என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் பேரறிஞர் அண்ணா.

மனுதருமம் நிகழ்த்திய அநீதியை இன்னொரு வழக்கின் மூலமாகவும் சுட்டிக் காட்டுகிறார். ஒரு சூத்திர ஆணை ஒரு சூத்திரப் பெண் மூன்று மாதக் கருவை சுமக்கும் போதே ஏமாற்றி மணந்து கொள்கிறார். பிறகு உண்மை தெரிந்ததும் திருமண விடுதலைக்கு அந்த ஆண் வழக்கு தொடுக்கிறார். ஆனால் நீதிபதி, ஒரு சூத்திரர் பரத்தமை(விபச்சார)க் குற்றம் கற்பித்து மனைவியை விலக்க உரிமை இல்லை என்று தீர்ப்பளித்து விடுகிறார். இவ்வாறு சூத்திரனுக்கு ஒரு நீதி, பிராமணனுக்கு ஒரு நீதி என்பதையே மனுதருமம் நிலைநாட்டி வைத்திருந்ததை, அண்ணா இரண்டு வழக்குகளின் ஊடாகவும் மெய்ப்பிக்கிறார்.

இதுவே வினாவிற்கான விடையாகும்.

எனினும் இக்காலத்திற்கேற்ற மற்றொன்றையும் பார்க்கலாம்.

பசுக்கொலை புரிவோருக்கு மரணத்தண்டனை விதிக்கப்படும் என வெள்ளை யசுர்வேதம் கூறுகிறது. ஆனால், திருமண விருந்துகளில் பசுக்கள் கொல்லப்பட்டு உணவாகப் படைக்கப்பட்டதாக இரிக்கு வேதம் கூறுகிறது. இந்திரனுக்குக் காளைகள் படைக்கப்பட்டுக் கொல்லப்பட்டு உணவாக அளிக்கப்பட்டதாகவும் வேதங்கள் கூறுகின்றன. அப்படியானால் மரணத்தண்டனை என்பது பிராமணர் அல்லாதாருக்கு மட்டுமே என்பதைப் பேரா.ப.மருதநாயகம் விளக்குகிறார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேய்ச்சலுக்காகவும் விற்பனைக்காகவும் கொண்டு செல்லும் பசுமாடுகளை வதை செய்வதாகக் கூறி அப்பாவி மக்களைக் குறிப்பாக இசுலாமியர்களைத் துன்புறுத்தவும் கொல்லவும் செய்கின்றனர் இந்துப் பயங்கரக் கட்சியினர். அதே சமயம் அவர்களின் இந்திய அரசு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகிலேயே  முதலிடத்தில் உள்ளது. அஃதாவது பிற வருணத்தார் பசுவை என்ன செய்தாலும் தண்டனை. அதே நேரம் பாசக அரசு மாட்டிறைச்சியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் போற்றுதற்குரியது. மாடுகளைக் கொல்லாமலா இறைச்சி கிடைக்கிறது?. காலங்கள் மாறினாலும் சனாதனம் மாறவில்லை என்பதற்கு இதுவே சான்று. எனவே, அப்பொழுது அப்படி இருந்தது. இப்பொழுது அப்படி இல்லை என்றெல்லாம் சொல்வதில் பயனில்லை. தங்களுக்கொரு நீதி. பிற வருணத்தாருக்கொரு நீதி என்னும் அநீதிதான் வருணாசிரமம்.

சனாதனம் இப்போதும் உள்ளது என்பதற்கான உண்மை நிகழ்வு ஒன்றைப் பார்ப்போம்.

குசராத்து மாநிலத்தின் தகோத்து (Dahod or Dohad) வட்டத்தைச் சேர்ந்தவர் பில்கிசு பானு(Bilkis Bano) இப்பெண்மணி தன் 3 அகவைக் குழந்தையுடனும் குடும்பத்தினருமாக 16 பேர், சபர்வாத்து என்ற இடத்தில் இருந்து பானிவேலா என்ற இடத்தை நோக்கி, 03.03.2002 அன்று பயணம் மேற்கொண்டார். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய கும்பல், பில்கிசு பானுவின் 3 வயது குழந்தை சலீகா முதலான  14 பேரை அந்த இடத்திலேயே படுகொலை செய்தது. பால்மணம் மாறா 3 அகவைக் குழந்தை சலீகாவின் தலை கல்லில் அடித்துச் சிதைக்கப்பட்டது. அத்துடன், 6 மாதக் கருவைச் சுமந்திருந்த பில்கிசு பானுவை, 12 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியது .

இது தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்திருந்த 11 பேர், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு குசராத்தில் உள்ள கோத்துரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சனாதன அரசால் சனாதன வாதிகள் விடுதலை செய்யப்பட்ட பொழுது பாசக சனாதன வாதிகள் அவர்களுக்கு  மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் கூட்டமாகச் சென்று வரவேற்றனர். அவர்களில் பெண்களும் இருந்தனர். கூடவே “அவர்கள் பிராமணர்கள் என்பதால், குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை” என்று பாசக ச.ம.உ. ஒருவர் அறிக்கை வெளியிட்டார்.

இவையாவும் சனாதனம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதற்கு அடையாளங்களே.

  • (தொடரும்)

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -14 : அன்றே சொன்னார்கள் 52 – இலக்குவனார் திருவள்ளுவன்



(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 13 தொடர்ச்சி)


பழந்தமிழ் நாட்டில் இன்றைய கட்டடங்களைப் போலவும் சில நேர்வுகளில் அவற்றை விடச் சிறப்பாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டமையைத் தொடர்ந்து பார்த்தோம். ஊர்களும் நகர்களும் நகரமைப்பு இலக்கணத்திற்கு இணங்க அமைக்கப்பட்டிருந்தமையும் கட்டட அமைப்பின் சிறப்புகளை உணர்த்துவதாகக் கருதலாம். இன்றைய மாதிரி நகர் அமைப்புபோல் அன்றைய ஊர்கள் அமைந்திருந்தன. பரிபாடல் இணைப்பு (8:1-6) நமக்கு ஊர் அமைப்பையும் அதன் மூலம் கட்டட அமைப்பையும் விளக்குகின்றது. புலவர் பின்வருமாறு அவற்றை விளக்குகிறார்  : –


தாமரைப் பூவைப் போன்றது சீர் மிகுந்த ஊர்; தாமரைப் பூவின் இதழ்களைப் போல் தெருக்கள் அமைந்துள்ளன. பூவின் நடுவே உள்ள மொட்டைப் போன்றது அரண்மனை; அம் மொட்டில் உள்ள தாதுக்களைப் போன்றவர்கள் தமிழ்க்குடி மக்கள்; அத்தாதினை உண்ண வரும் பறவைகளைப் போன்றவர்கள்  பரிசுகள் பெற வருவோர்.


மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீர்ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்;
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்;
தாதுண் பறவை அனையர் பரிசில் வினைஞர்


எனவே, நகரம் தாமரைப்பூவின் இதழ்களின் அமைப்பைப் போன்று  சீரிய நிலையில் சிறப்பாக இருந்துள்ளமை நன்கு புலனாகும்.
பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மரபுக் கட்டடக்கலையில் பட்டம் பெற்றவர்களும் கட்டடக்கலையில் பட்டம் பெற்றவர்களும்  இன்றைக்குக் கட்டடப்பணிகளை மேற்கொள்கின்றனர். அதற்கான துறை நூல்களும் உள்ளன. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டடஅறிவியல், வானறிவியல் நூல்களைப் படித்தவர்கள்தாம் கட்டடப் பணிகளில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். அத்தகைய நூல்கள்  இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்தாலும் அவ்வாறான நூல்கள்  இருந்தமைக்கான குறிப்புகள் உள்ளன.

அரண்மனை அமைப்பு குறித்து ஆசிரியர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார், நெடுநல்வாடையில் தெரிவித்துள்ளமை இன்றைக்கும் என்றைக்கும் சிறப்பான கட்டட  அமைப்பிற்கு எடுத்துக்காட்டாகும்.

அரண்மனையை எழுப்ப வேண்டும் எனில் அதற்கு அடிக்கல் நாட்டுவதற்குரிய நாளைத் தேர்ந்தெடுத்தே அப்பணியைத் தொடங்குவர். நல்ல நாள் என்பது மூட நம்பிக்கையின்படி இல்லாமல், மழை போன்ற தொந்தரவு இல்லாக் காலத்தில் தொடங்க வேண்டும் என்பதற்காகச் சித்திரைத் திங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
கட்டட நூலில் நன்கு புலமை பெற்றவர்கள், சித்திரைத் திங்களில் 10 ஆம் நாளில் இருந்து 25 ஆம் நாள் வரை உள்ள ஏதேனும் ஒரு நாள் நண்பகல் பொழுதில் இருகோல்நட்டு அந்தக்கோலின் நிழல் வடக்கிலோ தெற்கிலோ சாயாமல் இருந்தால் அந்த நாளில் அரண்மனைக்குத் திருமுளைச் சாத்துச் செய்வர் (அடிக்கல் நாட்டுவர்). இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்த காரணம், அப்பொழுதுதான் சூரியன் பூமியின் நடுவாக இயங்கும்.

புலவர் நக்கீரனார் பின்வருமாறு இதனைத் தெரிவிக்கிறார் :

மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு
ஒருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து
நூலறி புலவர் நுண்ணிதில் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பின் (நெடுநல்வாடை : 72-79)

மாதிரம் என்றால் திசை என்றும் வானம் என்றும் பொருளுண்டு. விரிகதிர் என்பது விரிந்து செல்லும் சூரியனின் கதிரைக் குறிக்கின்றது. வியல்வாய் மண்டிலம் என்பது அகன்ற பரப்பினை உடைய கதிரவனின் மண்டிலத்தைக் குறிக்கிறது. நிலத்தில் இரண்டு இடங்களில் கோலை நடுவதாலும் அவற்றால் நிழல்கள் விழுகின்றனவா என்பதன் அடிப்படையில் சூரியனின் இயக்கத்தைக் குறித்து அறிவதாலும் இருகோல் குறிநிலை என்கிறார். வழுக்காது என்பது கீழே சாயாத நிழலைக் குறிக்கின்றது. ஒரு திறம் சாரா என்பது வடக்கிலோ தெற்கிலோ நிழல் சாயாமல் இருப்பதைக் குறிக்கின்றது. அரைநாள் அமயம் என்பது பகலில் பாதியாகிய உச்சிப் பொழுதினைக் குறிக்கின்றது. புலவர் என்போர் இலக்கியப் புலவர் மட்டுமல்லர்; ஏதேனும் ஒரு துறையறிவில் புலமை உடையவர் யாவரும் புலவரே. அந்த வகையில் கட்டட அறிவியலில் புலமை பெற்றவர்களைக் குறிக்கின்றது. கட்டடம் கட்டுபவர்கள் கட்டுமானத்திலும் சிற்பத்திலும் வல்லவராக இருத்தல் வேண்டும். வானறிவியலும் அறிந்தால்தான்   கட்டுமானப்பணியைத் தொடங்குவதற்குரிய காலத்தைத் தேர்ந்தெடுக்க இயலும். இன்றைக்கும் கொத்தனார்கள் நூலிட்டுக் கட்டுமானப் பணியை ஆற்றுவதை நாம் காணலாம். அதுபோல் கணக்கிடுதலில் எவ்வகைத் தவறும் நேராமல் மனைக்கு நூலிட வேண்டி உள்ளதால், நுண்ணிதின் கயிறிட்டு எனக் குறித்துள்ளார். தேஎங்கொண்டு  தெய்வம் நோக்கி என்றால் எந்த எந்தத் திசைகளில் எவை எவை அமைய வேண்டும் எனக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை வணங்கி என்றும் அரண்மனையில் எந்தத் திசையில் தெய்வ உருவங்களை அமைக்கலாம் எனக் குறித்துக் கொண்டு என்றும் பொருள் கொள்வர். பெரும்பெயர் மன்னன் என்பது அரசர்க்கு அரசரான வேந்தரைக் குறிக்கிறது. (இந்த இடத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிக்கின்றது.) வேந்தருக்கேற்றவாறான அரண்மனையை வாழ்விடமனை, அந்தப்புரம், மன்றம், நாள்ஓலக்க மண்டபம், படை வீடு, கருவூலம், ஓவியக்கூடம், பூங்கா, வாயில்கள், கோபுரங்கள், அகழி, மதில், கோட்டை என்பன போல் பலவாறாக வகுத்துத் திட்டமிட்டு உரியவாறான வரைபடங்களை இட்டு, அதற்கிணங்கப் பணிகளைத் தொடங்குதலாகும். ஒருங்குடன் வளை, ஓங்குநிலை வரைப்பில் என்பது இவை யெல்லாம் ஒருங்கே அமைந்த உயர்வான மதிலை உடைய வளாகத்தைக் குறிக்கிறது.

இவ்வாறு அரண்மனை அமைப்பதன் தொடக்கப்பணி நக்கீரரால் குறிக்கப்படுகின்றது. எனவே, மிகச்சிறந்த கட்டட வல்லுநர்கள் அக்காலத்தில் இருந்துள்ளனர் என்பதை நாம் உணரலாம். இதற்கடுத்து அவர்கள் மேற்கொள்ளும் பணிகளைத் தொடர்ந்து  காணலாம்.

செவ்வாய், 17 ஜூன், 2025

81. சனாதனத்தில் மட்டும்தான் மனிதன் கடவுள் ஆக முடியும். எடுத்துக்காட்டு ஐயா வைகுண்டர்- அண்ணாமலை: இந்தப் புளுகிற்கு என்ன விடை?

 




(சனாதனம் – பொய்யும் மெய்யும் 80 தொடர்ச்சி)

  • இஃது அவரின்  அரை வேக்காட்டுத்தனத்தைக் காட்டுகிறது. ‘கீழ்ப்பாக்கத்தில்’ இருப்பவர்கள்கூட இப்படிப் பேச மாட்டார்கள்.

சனாதனம் இல்லாத பிற சமயங்களில் தத்தம் மத மூலவரை அவர்கள் சிறந்து வாழ்ந்ததன் அடிப்படையில் கடவுளர்களாக மக்கள் கருதுகிறார்களே!

சீர்திருத்தவாதியான ஐயா வைகுண்டரைச்  சனாதனி என்பது வரலாற்றுத் திரிபு, கயமைத்தனம். ஒடுக்கப்பட்ட மக்களைச் சாதிக்கொடுமைகளிலிருந்து மீட்க ‘ஐயா வழி’ என்னும் தனிச் சமயத்தை தோற்றுவித்தார் ஐயா வைகுண்டர். அவர் சனாதன வாதியாக இருந்தால் சனாதனத்திற்கு எதிராக தனியொரு சமயத்தைத் தோற்றுவித்திருப்பாரா?

சனாதனத்தில் பிராமணர் அல்லாதார்க்கு கடவுளர் பெயரைச் சூட்டுவதற்குத் தடை உள்ளமையால், முடிசூடும் பெருமாள் எனப் பெயர் வைக்க விரும்பிய ஐயா வைகுண்டரின் பெற்றோர் முத்துக்குட்டி எனப் பெயர் சூட்டினர். பிறக்கும் பொழுதே சனாதனக் கொடுமைக்கு ஆளானவரைச் சனாதனவாதியாகச் சொல்வது கொடுமையல்லவா?

ஐயா வைகுண்டரின் பதிகளில் எப்போதும் சமபந்தியே நிகழும். (பதி என்பது அனைவரும் இணைந்து ஒன்றாய் வழிபடுவதற்குரிய வழிபாட்டிடம். ) சனாதனத்தில இதற்கு இடமில்லையே!

ஐயா வைகுண்டர் தமிழ் வழி வழிபாட்டைப் பின்பற்றிப் பரப்பியவர். சமற்கிருத வழிபாட்டை உயர்த்தும் சனாதனத்தில் இதற்கு இடமில்லையே! அறிந்தே பொய் சொன்னாலும் அறியாமல் உளறிக் கொட்டினாலும் இத்தகையோருக்குத் தண்டனை வழங்கினால்தான் நாடு நலம் பெறும். இதற்கான முயற்சிகளில் ஐயா வைகுண்டரின் அன்பர்கள் முயல வேண்டும்.

அவர்போல் வேறு சிலரும் ஐயா வைகுண்டரின் கொள்கைகள் சனாதனமே. அதனை எதிர்க்கலாமா என்கின்றனரே!

அவருக்கு மட்டுமல்ல! பிறருக்கும் சேர்த்துத்தான் கூறுகிறோம். இவர்களுக்குச் சனாதனம் பற்றியும் ஒன்றும் தெரியாது. ஐயா வைகுண்டரின் கொள்கையும் தெரியாது. சனாதனத்தை நன்கு அறிந்தவர்கள், அதற்கு நல்ல கொள்கை எதுவுமில்லாமல் மக்களை ஏமாற்றுவதற்காக நல்ல கொள்கைகைளயெல்லாம் சனாதனமாகக் கூறுவதைக் கேட்டு இவ்வாறு கூறுகிறார்கள். இல்லை இவர்கள் நன்கு அறிந்தவர்கள் என்றால் அறிந்தே மக்களை ஏமாற்றகிறார்கள் என்றுதான்  பொருள்.

ஐயா வைகுண்டர் (05.10.1823–30.01.1874) பிராமணீயத்திற்கு எதிரான கொள்கைளையே பரப்பி வந்தார். தான் பிறந்த குமரி மாவட்டத்திலும் அண்டை மாவட்டமான திருநெல்வேலியிலும் அப்போது குமரி மாவட்டம் கேரள ஆளுகைக்குட்பட்டு இருந்தமையால் கேரளாவிலும் செல்வாக்கு மிக்கவராக இருந்தார்.

‘தாழக் கிடப்பாரை தற்காப்பதே தருமம்” என்றார் ஐயா வைகுண்டர் என்னும் குமுகாயப் போராளி.

‘காணிக்கையிடாதீங்கோ,

காவடிதூக்காதீங்கோ,

வீணுக்கு தேடுமுதல் விறுதாவில் போடாதீங்கோ‘

என்று ‘அகிலத்திரட்டு’ நூலில் இருக்கிறது.

பேய், பிசாசு, மாந்திரீகம் ஆகிய மூடப் பழக்கங்களை கடுமையாகச் சாடினார் ஐயா வைகுண்டர்.

“பொய்யில்லை பிசாசுயில்லை

பில்லியின் வினைகளில்லை

நொய்யில்லை நோவுமில்லை

நொன்பலத் துன்பமுமில்லை” என்கிறார் ஐயா வைகுண்டர்.

 சாதியை உருவாக்கியவர்களைக் ‘கலிநீசன்’ என கடுமையாகச் சாடுகிறார் ஐயா வைகுண்டர்.

  “அறிந்து பலசாதி முதல் அன்பொன்றுக்குக் குள்ளானால்

பிரிந்து மிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார்

சனாதனத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து அதனை எதிர்த்து வந்தவர் ஐயா வைகுண்டர். இவரின் அகிலத்திரட்டு என்னும் நூலில் சனானத்திற்கு எதிரான முத்திரைகளைப் பதித்துள்ளார்.

தான மானங்களும் அதைப் பெற்றவர்க்குக்

கிட்டிக் கொள்ளும் பேதமில்லை மகனே

அவனவன் தேடுமுதல் அவனவன் வைத்து ஆண்டிடுங்கோ,

எவனுக்கும் பதறி இனி மலைய வேண்டாம்

ஏடுதந்தேன் உன்கையில் எழுத்தாணியும் கூடத் தந்தேன்

பட்டங்களும் பட்டயமும் தந்து பகை தீர்ந்தேன் என் மகனே

வருணாசிரமம் ஏழைச்சாதியருக்குக் கல்வி தேவையில்லை என்கிறது. வருணாசிரமத்தை எதிர்க்கும் வகையில்  அனைத்துச் சாதியினரும் அறிவைப் பெறும் வகையில் கல்வியும் பட்டங்களும் விருதுகளும் தந்து சனாதனத்தின் மீதான பகையைத் தீர்ப்பதாகக் கூறுகிறவரைச் சனாதனவாதி என்று சொல்வது மிகப்பெரும் மோசடியல்லவா?

ஐயா வைகுண்டரின் ‘அகிலத்திரட்டு’ நூலில் முழுக்க ஆதிக்க எதிர்ப்பு ஓங்கி இருக்கிறது. சனாதனம் எந்த இடத்திலும் இவ்வாறு கூறவில்லையே?

குருநாதன் சிவராமன் என்பார் பின்வருமாறு கூறுவதைக் காணுங்கள். “மக்களை, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வகையாகக் கூறுபோடும் வருணாசிரமக் கட்டமைப்பை ஐயா வழியோடு ஒப்பிடுவதே தவறு.

சனாதனத்திற்கு எதிராகக் கலகம் செய்த புத்தர், நாராயண குரு, வள்ளலார், ஐயா வைகுண்டர் என எல்லாருக்கும் காவிச் சாயம் கொடுக்கப் பார்க்கிறது பாசக. உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கே மதச் சாயம் பூசும் கும்பல் ஆச்சே இது!” இதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாகும்.

  • (தொடரும்)