சனி, 19 ஜூலை, 2025

129/133. ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை!- இலக்குவனார்திருவள்ளுவன்

      19 July 2025      கரமுதல



(128/133 அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – தொடர்ச்சி)

ஒப்பிலக்கியம் அல்லது ஒப்பியல் இலக்கியம் என்பது இலக்கிய ஆராய்ச்சிகளில் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

அமெரிக்க இந்தியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் எச்.எச்.இரீமாக்கு ((H.H.Remack), “ஒப்பிலக்கியம் என்பது ஒரு நாட்டின் இலக்கியத்தை இன்னொரு     நாட்டு இலக்கியத்தோடு     ஒப்பிடுவது; இலக்கியங்களுக் கிடையேயான உறவுகளை ஒரு பக்கமும், குமுகாயவியல் தத்துவம் போன்ற துறைகளை இன்னொரு பக்கமுமாக ஒப்பிட்டுக் கூறுவது ;  இலக்கியத்திற்கும், இசை, ஓவியம், கூத்து போன்ற கலை வடிவங்களுக்குமிடையேயான உறவுகளைக் கூறுவது”  என்கிறார்.

 பொதுவாக ஒரு நாட்டு அல்லது ஒரு மொழி இலக்கியத்துடன் அடுத்த நாட்டு அல்லது அடுத்த மொழி இலக்கியத்தை ஒப்பிடுவதைத்தான் ஒப்பிலக்கியம் வலியுறுத்துகிறது. ஆனால், பின்னர் ஒரே மொழியில உள்ள இலக்கியங்களை அதே மொழியிலுள்ள இலக்கியங்களுடன் ஒப்பிடுவதும் ஒப்பிலக்கியத்திற்குள் அடங்கலாயிற்று. ஒப்பீடு இரண்டுக்கு மேற்பட்ட இலக்கியங்களுடனும் அமையலாம்.

 தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் பக்கம் எண் 142-இல் மொழிகளின் தொன்மை வரலாற்றைக் குறித்து விளக்கப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சமசுகிருதம் கி.மு.2000 ஆண்டுகள் பழமையானது என்றும் தமிழ் கி.மு.300 ஆண்டுகள்தான் பழமையானது என்றும் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல உலக மொழிகள் அனைத்திலும் தொன்மையானது சமசுகிருதம் என்று வேண்டுமென்றே தவறாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்ததும் கல்வியாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் நடுநிலையாளர்களும் கொதித்து எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடன் பள்ளிக்கல்வி யமைச்சர் செங்கோட்டையன் தமிழ் மொழியின் தோற்றம் குறித்த தவறான பாடப்பகுதி நீக்கப்படும் என்றும் தவறான தகவலைச் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். உடன் நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.

 ஆனால் மதிப்பிற்குரிய மற்றோர் அமைச்சர் “பா...வின் தாள் பணிதலே முதன்மைதமிழைத் தாழ்த்தினால் நமக்கென்ன” என்று கருதுகிறாரோ என மக்கள் எண்ணும் வகையில் கருத்துகள் தெரிவித்துள்ளார்.  “தமிழ், சமற்கிருதம் இவற்றில் எது மூத்தது எது சிறந்தது என்ற  அருத்தமற்ற ஆய்வை விட்டுவிடுங்கள்” என அவர் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார்.  எல்லாக் கட்சிகளிலும் ஆதரவாளர்கள் உள்ளவர் என்றும் வினைத்திறம் மிக்கவர் என்றும் கருதப்படும் அவர், தெரிவித்த கருத்துகள் ஒப்பிலக்கியத்திற்கு முரணானவை.

 இலக்கியமோ மொழியோ எதுவாயினும் கால முதன்மை குறித்த ஆராய்ச்சி அவற்றை முழுமையாக ஆராய்வதற்கு அடிப்படையாக அமைகிறது. கால ஆராய்ச்சியைத் தவிர்க்கும் மொழி ஆராய்ச்சி முழுமை யற்றதாக மட்டுமல்ல தவறானதாகவும் இருக்கும். சான்றுக்கு நாம் இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம்.

 இராமாயணக் காலம் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் – கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது என்பதே சரியான முடிவாகும். புத்தர், புத்த சமயத்தவர், புத்த பீடங்கள் முதலானவை பற்றிய குறிப்புகளின் அடிப்படையில் வரலாற்று நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாகும் இது.

 ஆனால், இராமாயணம் திரேதாயுகத்தில் நடந்ததாக ஆரியப்புனை கதை கூறுகிறது. இக்கற்பனையின்படி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன. கால ஆராய்ச்சியின் மூலம்தான் இது தவறு என்று மெய்ப்பிக்கப்படுகிறது.

இராமாயணம் ஓர் ஆய்வு’  நூலாசிரியர் கேமுத்தையா குறிப்பிடுவதுபோல் ஆராய்ச்சியாளர்கள் பலர், இராமாயணம் குறிப்பிடும் இலங்கா என்பது இலங்கை அல்ல என்றும் இராமன் முதலான எவரும் விந்திய மலைக்குத் தெற்கே வரவில்லை என்றும் கூறுகின்றனர்.

 கி.பி.1010-1050 ஆண்டுகளில்  உருவான சம்பூர்ண இராமாயணம் வரையிலும் இன்றைய இலங்கை பற்றிய எக்குறிப்பும் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

 அதுபோல் திரேதாயுத்தின் கடைசி ஆண்டில் பிறந்திருந்தாலும் இராமன் 8,69,110 ஆண்டுகளுக்கு முன்னர்ப் பிறந்தவன் ஆகிறான். ஆனால் அவன் பிறந்ததாகக் கூறப்படும் அயோத்தி கி.மு.700இல்தான் உருவானது. இதனை மத்திய அரசின் தொல்பொருள் துறை 1976-77 இல் ஆய்வு செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இக்குறிப்பை அம்சத்து வலைப்பூவில் (amjat.blogspot.com)காணலாம். தவறான இராமாயணக் கால அடிப்படையில் தமிழ் இலக்கியங்களின் காலங்களைத் தவறாக மதிப்பிடும் போக்கு வந்ததல்லவா? ஆகச் சரியான ஆய்விற்குச் சரியான கால ஆய்வும் தேவை அல்லவா?

பரிதிமாற்கலைஞர் வி.கோ.சூரியநாராயண(சாத்திரியா)ர்  ஆரியர் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் புகும் முன்னரே மேலை நாட்டு ஆரியர்களுடன் தமிழர் கடல்வழி வாணிகம் மேற்கொண்டு இருந்தனர் என்கிறார். இந்த முடிவிற்கு அவர் கால ஆராய்ச்சியையே அடிப்படையாகக் கொண்டார்.

இத்தகைய கருத்துகளைத் திருப்பூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாசக தகவல் தொழில்நுட்பம்-சமூக ஊடகப்பிரிவும் முகநூலில் குறிப்பிட்டுள்ளது (08.06.2018). எனவே, பா..என்பதால் வரலாற்றுத் திரிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றல்ல. நடுநிலை யாகவும் செயல்படலாம் என்பதற்கு இது சான்றாகும்.

பரிதிமாற் கலைஞர் ஆரியர்கள் தமிழ் இலக்கியங்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்து அவ்வோலைகளைப் பழமையானவைபோல் காட்டி அவ்றறிலிருந்து தமிழில் இலக்கியங்கள் எழுதப்பட்டன என்று தவறாக நிறுவுவதை மெய்ப்பித்துள்ளார். வேண்டுமென்றே தமிழ் இலக்கியக் காலங்களைப் பின்னுக்குத் தள்ளுவதையே ஆரியர்கள் கடமையாகக் கொண்டுள்ளதால், தமிழ்–சமற்கிருத ஒப்பாய்வில் கால ஒப்பீடு இன்றியமையாது வேண்டப் படுகிறது.

 இப்பொழுது கூறுங்கள். தமிழின் காலத்தை வேண்டுமன்றே ஒரு மொழியினர் பின்னுக்குத் தள்ளுவதையே வாணாள் கடமையாகக் கொண்டு வாழும் பொழுது மொழிகளின் காலங்களைச் சரியாகக் குறிப்பிட்டுத்தானே ஆக வேண்டும்! இலக்கியக் கருத்துகள் சொல்லப்பட்ட காலங்கள் அடிப்படையில் பெருமை உறுகின்றன என்னும் பொழுது கால ஆராய்ச்சியும் கால ஒப்பீடும்தேவைதானே! இலக்கிய ஆராய்ச்சியின் முழுமைக்குக் காலஆராய்ச்சி தேவை என்பது மறுக்க முடியாத உண்மைதானே!

ஒரு மொழி எழுத்திலக்கியம் பெற்றிருக்க வில்லை என்றால் முழுமையடைந்த மொழியாகாது. சமற்கிருத மொழியினர் இன்றைய இந்தியா என்று சொல்லப்படும் தமிழ்நிலத்திற்கு வந்த பின்னர்தான் தமிழ் எழுத்து வரிவடிவத்தைப் பார்த்துத் தங்கள் நெடுங்கணக்கு – எழுத்து – வடிவங்களை அமைத்துக் கொண்டனர். அவ்வாறு தமிழுக்குப் பிற்தைய சமற்கிருத மொழியைத் தமிழுக்கு முந்தையதாகத் தவறான காலக்குறிப்பை அளித்தால் அது தமிழுக்குச்செய்யும் கொடுமை அல்லவா?

எனவே இதுபோன்ற தவறுகளைத் தவறல்ல என்று சொல்லி ஊக்கப்படுத்தாமல் பள்ளிக் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுப்பதுபோல் எடுத்துக் குறைகளைக் களைய வேண்டும். மொழிகளின் உண்மையான காலத்தையும் தமிழின் தொன்மையையும் குறிப்பிடும் பாடங்கள் எல்லா  மொழிப் பாடங்களிலும் இடம் பெற வேண்டும்.

மொழியின் சிறப்புக்கும் சிறுமைக்கும் அவ்வம்மொழிகளின் இலக்கியப் படைப்புகளே உரைகல்லாக அமையும்.

 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல். (திருவள்ளுவர், திருக்குறள் 505)

  • அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல13.08.2019

  • (தொடரும்)

வெள்ளி, 18 ஜூலை, 2025

128/133 அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்



(127/133. எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்?  – தொடர்ச்சி)

காலங்கள் தோறும் மூடநம்பிக்கைகள் உருவாக்கப் படுவதும் பரப்பப்படுவதும் அவை வாழ்தலும் வீழ்தலும் மீண்டும் வேறுவடிவில் உருவாவதும் இருக்கத்தான் செய்கின்றன. உலகின் முதல் மொழியாகிய தமிழுக்கும் பாலி முதலிய வேறுசில மொழிகளுக்கும் மிகவும் பிற்பட்ட ஆரியத்தை உயர்த்திக் கூறும் மூடக் கருத்துகளும் அவ்வகையினவே.

ஆரியத்தின் சாதியக்கருத்தைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என ஞாலப் புலவர் திருவள்ளுவரும் அவர் வழியில் பொதுமை நலன் நாடுவோரும் மறுத்து வருகின்றனர்.

     “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

     உயிர் செகுத்து உண்ணாமை நன்று

என வாழ்வியலறிஞர் திருவள்ளுவர் வேள்விக்கு எதிரான குரலினைக் குறளிலே பதிவு செய்து விட்டார். இன்றைய காலத்திலும் அவர் வழியிலே தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் வீரமணியாரும் வரலாற்று அறிஞர்களும் பண்பாட்டு ஆய்வாளர்களும் இன உணர்வாளர்களும் தமிழறிஞர்களும் இறை நெறியாளர்களும் ஆரிய மாயையை  அகற்றக் குரல் கொடுப்பதை யாவரும் அறிவர்.

தேர்வுகளில் வெற்றி பெறவும் தேர்தல்களில் வெற்றி காணவும் மழை பெய்யவும் உலக நலனுக்காகவும் எனப் பொய் மூடிகளைத் தாங்கி இப்பொழுது முன்னிலும் முனைப்பாக இவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது மட்டும் அல்ல! வேள்விப் புகையானது காற்று மண்டிலத்தைத் தூய்மையாக்கும் என அறிவியல் சாயத்தைப் பூசி மக்களை ஏய்த்து வருகின்றனர்.

நாம் விழிப்படையாததால் தூங்குகிறவர்கள் தொடைகளில் கயிறு திரிக்கச் சிலர் புறப்பட்டு விட்டனர். அம்முயற்சிகளில் ஒன்றுதான் ‘இராமாயணம் – ஓர் உயிரியல் கண்ணோட்டம்’ என்னும் கட்டுக்கதை. தமிழ் நலன் நாடும் தமிழ் ஓசையில் இக்கதை இடம் பெற்றுள்ளதால் வரலாற்றை மறைக்கும் அறிவியல் போர்வையை விலக்க வேண்டியது நம் கடமையாகிறது.

இராமாயண நிகழ்வுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான கால அளவாக இதில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் தொல்காப்பியத்திற்கும் மிகவும் பிற்பட்டதே இராமாயணக் காலம். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” போன்ற பல ஆயிரம் சங்கப் பாடல்கள் தோன்றிய காலத்திற்கு மிகவும் பிற்பட்ட காலமே இராமனின் காலம். இதற்கான சான்றுக்கு வேறு எங்கும் போகவேண்டியதில்லை! வால்மீகி இராமாயணத்திலேயே உள்ளது. இராமன் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்காக அயோத்திக்குத் திரும்புகையில் பல கோயில்களுக்கும் செல்வது போல் புத்தபீடத்திற்கும் செல்வதாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.(“சக்கரவர்த்தித் திருமகன் …. பவுத்த நினைவிடங்களையும் … வலமாய் வந்தான்.”- வால்மீகி இராமாயணம்- தமிழில்: குருவிக்கரம்பை வேலு. பக்கம் 64). இராவணன் சீதையைப் புத்தத் துறவி வேடத்தில் காண வந்ததாய்த்தான் வால்மீகி இராமாயணம் கூறுகிறது. மேலும், இலங்கையில், அனுமான் மாநகரைத் தீக்கிரையாக்கிய பொழுது, புத்த பீடங்களையும் எரித்ததாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.

என்னால் வனம் அழிக்கப்பட்டதுபவுத்த விகாரம் இடிக்கப்படவில்லைஅதனையும் நான் இடித்துத் தள்ளுகிறேன்” என்று மனத்தினுள் முடிவெடுத்து மேருமலை போல் தோன்றும் அழகான பவுத்த விகாரத்தின் மேல் தாவினான்எவராலும் சிதைக்க முடியாததும் மிகச் சிறந்ததுமான பவுத்த விகாரத்தை அடியோடு இடித்துத் தள்ளினான் மாருதி. (அதே நூல்:பக்கம் 160)

இராவணன் தம் அமைச்சருடன் பேசுகையில், ஓர் அற்பக் குரங்கு … புத்தருடைய நினைவிடத்தையும் அழித்து விட்டது எனக் குறிப்பிட்டதாக வால்மீகி கூறுகிறார். (அதே நூல்: பக்கம் 176)

இராமன் அயோத்தி திரும்புவதைக் குகனிடம் தெரிவித்துத் திரும்பும் அனுமன் புத்தரின் நினைவிடத்தையும் பார்த்ததாக வால்மீகி குறிப்பிடுகிறார். (அதே நூல்: பக்கம் 216)

இராமன் திரும்புவதை அறிந்த பரதன் மகிழ்ந்து, பெரியவர்கள்தெய்வங்கள் வசிக்கும் இடங்களையும் நகரிலுள்ள பவுத்த மடங்களையும் நல்ல மலர்களால் இசைவாணர்களுடன் சென்று அருச்சனை செய்யட்டும் எனக் கட்டளையிடுகிறான். (அதே நூல்: பக்கம் 217)

புத்தரின் காலம் கி.மு. 560. எனவே புத்தரின் காலத்திற்கும் பிற்பட்டதே இராமனின் காலம். அவ்வாறிருக்க இதனைச் சிந்து வெளிநாகரிகத்திற்கும் முந்தையதாகக் குறிப்பிடுவது திட்டமிட்ட சதிச் செயலுக்கு இரையாகிய கட்டுரையாளர்களின் அறியாமையே என நன்கு புரிகிறது.

‘சிந்துச் சமவெளி நாகரிகக் காலத்திற்கும் முற்பட்ட பாரதம்’ எனவும் உயிரியல் கண்ணோட்டக் கட்டுரையில் குறிப்பு இடம் பெற்றுள்ளது. வரலாற்று நோக்கில் மிக அண்மையில் உருவான பாரத அமைப்பை மிகவும் தொன்மை யானதாகக் குறிப்பிடுவதும் தவறாகும். உலகின் தோற்றக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடப்பதற்கு அல்லாத நீர்ப்பரப்பாக எண்ணி அதற்குக் கடல் என்று பெயரிட்டனர். நாளடைவில் நாட்டில் அமைந்த நீர்ப்பரப்பில் ஓடம், படகு, வள்ளம், தோணி, முதலியவற்றின் துணையுடன் கடக்க முடிந்ததைப் போல நெய்தல் நில மக்களாகிய பரதவர்கள், நாவாய்கள், மரக்கலன்கள், கப்பல்கள் எனப் பலவற்றின் மூலமும் கடலை எளிதில் கடக்க முயன்று வெற்றி கண்டனர். நாட்டு விளைபொருள்களை அயல்நாடுகளுக்கு எடுத்துச் சென்று செல்வங்களைக் குவித்து வந்தனர். திரைகடலோடிச் செல்வம் சேர்த்த சிறப்பின் காரணமாகப் பரதவர் நாடாகச் சிறப்பிக்கப் பெற்றது நம் தமிழ்க் கண்டம். இப்பரதவ நாட்டையே பின்னர் வந்தவர்கள் மிகவும் பிற்பட்ட பரதனின் நாடாக எளிதில் கற்பித்து விட்டனர். வரலாற்றுச் சிறப்பும் பெருமையும் பெற்ற சிந்துச் சமவெளி நாகரிகம் எனக் குறிப்பிட்டு விட்டு அப்பொழுது இல்லாத பரதநாட்டையும் பிற்பட்ட இராமாயணக் காலத்தையும் அதற்கும் முந்தையதாகக் கூறுவது, “மன்னா, நாடே உனக்கு அடிமை. நீயோ எனக்கு அடிமை” என மன்னனைப் புகழ்ந்து அவனையே தனக்கு அடிமையாகக் காட்டுவதைப் போலத், தமிழின் உயர்வுகளையெல்லாம் நடுவுநிலைமையோடு கூறுவது போல நடித்து விட்டு, அதற்கும் முந்தையதாக ஆரியத்தைச் சிறப்பிப்பதாகும்.

கட்டுரையில், “பேசும் மற்றும் புரிதல் திறன் கொண்ட குரங்கு, கரடி, கழுகு போன்ற விலங்குகள் இருந்ததை நாம் காண முடிகிறது” எனவும் குறிப்பிட்டுள்ளனர். “பாட்டி வடை சுடும் கதையில் காக்கா பாடுகிறது! நரி பேசுகிறது! எனவே, அக்காலத்திய உயிரியல் மாற்றத்தை ஆராய வேண்டும்” என இனிமேல் கூறினாலும் கூறுவார்கள் போலும். இத்தகைய புதுவகை ஆராய்ச்சியாளர்கள் உருவாகக் கூடாது என்றுதான் சீனாவில் விலங்கினங்கள் பேசுவதான கதைகளுக்குத் தடை விதித்துள்ளார்கள். மேலும் இராமாயணக் கதை, முந்தைத் தமிழர்களின் வழிமுறையினருக்கும் பிந்தை ஆரியர்களுக்கும் நடைபெற்ற போரின் அடிப்படையிலான கதை என்பாரும் முற்றிலும் கற்பனை என்பாரும் வரலாற்றுக் காப்பியம் என்பாரும் உள்ளனர்.

காலங் காலமாகத் தமிழ்ப் பகைவர்கள் செய்து வருவது உண்மையுடன் பொய்யை இணைத்துப் பிணைத்து உலவ விடுவதாகும். எடுத்துக்காட்டாக, இப்பொழுது வரும் நாலெழுத்து இதழில் ஓரெழுத்து ஆசிரியரால் அவ்வப் பொழுது சில அரசியல் கதைத் தொடர்கள் வெளிவருவதைக் கூறலாம். இவற்றில், வாழும் அரசியல் தலைவர்களுடன் கற்பனைப் பாத்திரங்களையும் கலந்து அரசியல் நையாண்டி என்ற பெயரில் நச்சுக் கருத்துகள் பரப்பப்படுகின்றன. வருங்காலத்தில் தமிழ்ப் பகைவர்களின் வழிமுறையினர், இத்தலைவர்களின் நற்செயல்கள் பேசப்படும் பொழுது, கற்பனைப் பாத்திரங்களை முன்னிறுத்தி இவையும் கற்பனையே என்பர். மற்றொரு சாரார் தீயொழுக்கத்துடன் சித்தரிக்கப்படும் கற்பனைப் பாத்திரங்களையும் உண்மையாகக் காட்டி அவற்றின் அடிப்படையில் உண்மையில் வாழ்ந்த தலைவர்களுக்கு அவப் பெயர் ஏற்படுத்துவர். அறியா ஆய்வாளர்கள் இதனடிப்படையில் தவறான செய்திகளை வெளியிடுவர். இதே போல் முந்தையோர் செய்த கலப்பின் விளைவே இராமாயணம். நாம் இந்தி மொழித் திணிப்பை எதிர்ப்பதற்காக இந்தி அரக்கி என உருவகப்படுத்துகிறோம். இந்தி மொழியை வாழும் உயிருள்ள அரக்கியாக வரலாறு எழுதினால் எவ்வாறு தவறாகுமோ அவ்வாறுதான் இராமாயணப் பாத்திரங்கள் பலவற்றை எண்ணிக் கொள்ள வேண்டும்.

    இராமாயணக் கதைப் பாத்திரங்களுக்கும் தமிழ்நலனுக்கு எதிரான மாயைகளுக்கும் அறிவியல் சாயம் பூசுவதோ உயிரியல் முகமூடி போடுவதோ பகுத்தறிவை விதைத்தப் பகலவன் வாழ்ந்த மண்ணில், அறிவுப் பயிரை வளர்த்த அறிஞர் சிறந்த மண்ணில், தமிழ்நலனுக்கு வேலியிட்டுக் காக்கும் முத்தமிழறிஞர்கள் வாழும் மண்ணில் எதிர்ப்புகளை வென்றெடுக்கும் தமிழ்ப் போராளிகளும் உணர்வாளர்களும் உலவிடும் மண்ணில் எடுபடாது என நாம் எண்ணி அமைதி காக்கக் கூடாது. தமிழ் நலம் கெடுமிடமெல்லாம் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும்.

     “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

     மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்னும் தெய்வப்புலவர் காப்புரையை எண்ணித் தமிழ் அமுதில் அறியாமை நஞ்சு கலக்க இடம் தரக்கூடாது. புதிய புதிய கோப்பைகள் மூலம் மீண்டும் மீண்டும் எத்தனை முறை தரப்பட்டாலும் நஞ்சு நஞ்சுதான் என்னும் விழிப்புணர்வுடன்,

தமிழ் நலம் காப்போம்தமிழ் அறம் பேணுவோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன், தமிழோசை நாளிதழ், 06.09.2015

  • (தொடரும்)

000

பி.கு. இக்கட்டுரை வேறொரு நேர்வில் முன்னரே வெளியிடப்பட்டாலும் நூலின் தொடர்ச்சி கருதி மீள வெளியிடப்படுகிறது.