சனி, 4 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (5)

      04 November 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் : நந்திதா அக்குசரின் பொதுக் குடியியல் கட்டுரை – தொடர்ச்சி)

“பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (5)

இனிய அன்பர்களே!

பொதுக் குடியியல் சட்டம் பற்றிய நந்திதா அக்குசரின் கட்டுரை (தாழி மடல் 288) படித்தீர்கள் அல்லவா? மீண்டும் படியுங்கள். பொதுக் குடியியல் சட்டம் பற்றிய வினாவைப் பாசக எதிர்ப்பு என்ற ஒற்றைக் கோணத்தில் பார்த்தல் எப்படிப் பிழையானது என்பதை விளங்கிக் கொள்ள அது உதவும்.

இயங்கியல் அணுகுமுறையோடு இச்சிக்கலில் நாம் முகங்கொடுக்க வேண்டிய முரண்பாடுகளையும் நந்திதா வரிசைப்படுத்துகின்றார். முதனிலை, எதிர்நிலை, சேர்நிலை (thesis, antithesis, synthesis) எனும் எகலின் ஆய்வுமுறைக்கு இக்கட்டுரை விளக்கமாக அமைகிறது.

இயற்கையிலும் குமுகத்திலும் பல்திற முரண்பாடுகள் இயக்கத்தில் உள்ளன. நாம் அவற்றை ஆய்வுநோக்கில் பிரித்தறியும் தேவை உள்ளதே தவிர உண்மையில் அவை பின்னிப் பிணைந்து இயங்குகின்றன. ஒன்றை ஒன்று சார்ந்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் இயங்குகின்றன.

பொதுக் குடியியல் சட்டத்தை எடுத்துக் கொண்டால் நாம் முகங்கொடுக்க வேண்டிய உரிமை முரண்பாடுகள் இவை:

பெண்ணுரிமைகளும் பழங்குடி உரிமைகளும்; பெண்ணுரிமைகளும் சமயச் சிறுபான்மையினரின் உரிமைகளும்; பெண்ணுரிமைகளும் மனிதவுரிமைகளும்.

இந்த உரிமைகள் அனைத்தையும் வரலாற்றின் இந்தக் கட்டத்தில் – இந்தக் காலத்திலும் இந்தக் களத்திலும் – இணக்கப்படுத்தி ஈடேற்றம் பெறச் செய்யும் போராட்டத்தில் பாசிச எதிர்ப்புக்கும் தேசியத் தன்தீர்வுரிமைக்குமான பங்கு குறித்தெல்லாம் விரிவாக ஆய்வு செய்தாக வேண்டும். உரிமைக் கருத்தியலின் இன்றியமையாக் கூறுகளில் ஒன்றாக பெண்ணியத்தை ஏற்றுக் கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை. ஆனால் அது மட்டுமே தனித்தியங்கி வெற்றி பெற முடியும் என்று நான் கருதவில்லை. நந்திதா என்ன கருதுகிறார் என்று இந்தக் கட்டுரையிலிருந்து என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

அவருடைய ‘பெண்கள் சட்டம் குறித்த தெளிவரை‘ ஆங்கில நூலை(DEMYSTIFICATION OF LAW FOR WOMEN) தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன். படித்து விட்டுச் சொல்கிறேன்.

பொதுக் குடியியல் சட்டம் பற்றிய உரையாடலை அடுத்தடுத்துத் தொடர்வோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 289

வெள்ளி, 3 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : நந்திதா அக்குசரின் பொதுக் குடியியல் கட்டுரை.

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (4) – தொடர்ச்சி)

பொதுக் குடியியல் சட்டத்தைப் பெண்கள் வேண்டுவது ஏன்? ” -நந்திதா அக்குசர்

மதச் சுதந்திரம் பொதுக் குடியியல் சட்டத்தை மறுக்க முடியும் என்றால், எல்லா மதத்தினரும் பெண்களின் உரிமைகளையும் சுதந்திரமாக மீற முடியும் என்று அருத்தமா?

பொதுக் குடியியல் சட்டம் தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் நாட்டைப் பற்றிக் கொண்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பெண் வெறுப்பாளர்களால் தூண்டப்படுகின்றன.

சிறுபான்மை உரிமைகள் என்பதைப் பெண்களின் உரிமைகளுக்கு எதிராக நிறுத்துகின்றனர்; மனித உரிமைகள் பெண்களின் அடக்குமுறையை நியாயப்படுத்தவும், பழங்குடி மக்களின் உரிமைகள் பழங்குடிச் சமூகங்களுக்குள், தாய்வழிச் சமூகங்களுக்குள் நிலவும் சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆணாதிக்கச் சமூகங்களில் வாழும் பெண்களுக்கு எதிரான அநீதி மற்றும் ஒடுக்குமுறைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் பெண்களின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் இரண்டுமே அவர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றன. உலகில் ஆணாதிக்கம் இல்லாத சமூகங்கள் எதுவும் இல்லை – வேண்டுமானால் அதன் அளவு மட்டும் மாறுபடலாம்.
1986ஆம் ஆண்டில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதுக் குடியியல் சட்டத்தை வேண்டி, பெண்களுக்கான சட்டத்தின் மறைநீக்கம் (Demystification of Law for Women) என்ற புத்தகத்தை நான் எழுதினேன். அந்தப் புத்தகத்தில் உள்ள கருத்தில் நான் இன்றும் உறுதியாக உள்ளேன்.

உச்ச நீதிமன்றம் சா பானு வழக்கில் அவருக்குச் சீவனாம்சம் தீர்ப்பு வழங்கிய நேரத்தில் அந்தப் புத்தகம் வெளிவந்தது. “முசுலிம்கள்” என்னைத் தாக்குவார்கள் என்று பலர் என்னை எச்சரித்தனர். ஆனால் அந்தப் புத்தகத்திற்கு ஒரு சிறு எதிர்ப்பு கூட வரவில்லை . இத்தனைக்கும் பங்களாதேசில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் அந்த நூலை வங்காள மொழியில் வெளியிட்டது.
அந்தப் புத்தகத்தில், மதமும் – எல்லா மதங்களும் – குடும்பமும் இரட்டை மதிப்பீடுகள் கொண்டுள்ளன, ஆண்களுக்கு ஒன்றும், பெண்களுக்கு மற்றொன்றுமாக இரட்டை மதிப்பீடுகள் கொண்டுள்ளன, இந்த அடக்குமுறையை நியாயப்படுத்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்றேன்.

மேலும் ஆணாதிக்கச் சமூகத்தில் சட்டம், பன்னாட்டு மனித உரிமை மதிப்பீடுகள் தொடங்கி இந்திய அரசியலமைப்பு மற்றும் எல்லா உள்நாட்டுச் சட்டங்களும் ஆணாதிக்கக் கண்ணோட்டம் கொண்டவையே. இது பழங்குடி மரபுச் சட்டங்களுக்கும் பொருந்தும். வேண்டுமானால் அதன் அளவு கூடக் குறைவாக இருக்கலாம். ஆனால் அடிப்படைப் பண்பு ஒன்றுதான்.
.
மல்யுத்த விளையாட்டுக் குழுவில் பதவியில் இருந்து கொண்டு பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்த நாடாளுமன்ற உறுப்பினரை, வழக்கு தொடுத்த பின்னரும், அந்த நபரை அதே விளையாட்டுக் குழுப் பதவியிலும் மற்றும் கட்சி உறுப்பினராகவும் நீடிக்க அனுமதிப்பதை கெட்டிதட்டிப்போன ஆணாதிக்கச் சமூகம் மட்டுமே நியாயப்படுத்த முடியும்.

2017இல் நாகாலாந்தில் 12 நகரங்களில் நடந்த நகராட்சித் தேர்தல்களின் போது பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிராகக் கலவரம் வெடித்தது. திமாபூர் நகரில் மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர், மேலும் 12 பேர் காயமடைந்தனர். இந்தத் தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படுவதை நாகா குழுக்கள் எதிர்த்தன. இது நாகா மரபுச் சட்டங்களுக்கு எதிரானது என்ற அநீதியான கூற்றின் அடிப்படையில் அவர்களின் எதிர்ப்பு இருந்தது

மதங்களை நிறுவிய சான்றோர்கள் அவர்கள் காலத்தில் பெண்களின் உரிமைகளைப் பற்றிப் பேசினர். ஆனால் ஒவ்வொருவரும் அவர் வாழ்ந்த காலத்தின் கைதியாக இருநதனர். மேலும் அவர்கள் அனைவரும் ஆண்கள்.

புத்தர் பெண்களைத் துறவிகளாக இருக்க அனுமதித்தார் ஆனால் ஆண் துறவிகளுக்கு வழங்கிய மரியாதை பெண் துறவியர்களுக்கு இல்லை. உங்களில் யோக்கியமானவன் இந்த விபசாரியின் மீது கல்லெறிய முன்வாருங்கள் என இயேசு பேசிய போது, அது அவருடைய ஆழமான நீதி உணர்வைப் பிரதிபலித்தது, ஆனால் அவருடைய 12 சீடர்களில் யாரும் பெண் இல்லை.

முசம்மது நபி திருமணத்தை ஓர் ஒப்பந்தம் என்று அங்கீகரித்தார், எனவே விவாகரத்தை அனுமதித்தார்; திருமணங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தினார், ஆனால் சமகால மதிப்பீட்டின் படி, அவர் மனைவியின் உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. மேலும் குருநானக் பெண்களை சமமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார், மேலும் சீக்கிய நம்பிக்கையில் சபைகளை வழிநடத்தவும் ஆன்மீகத் தலைவர்களாகப் பணியாற்றவும் பெண்களை அனுமதித்தார். இருப்பினும், சீக்கியத் தலைவர்கள் கெட்டிதட்டிப்போன ஆணாதிக்கவாதிகள்.

ஒவ்வொரு மதச் சமூகமும் அதனுள் சொந்தச் சீர்திருத்தத்தைத் தொடங்குவதற்கும், பெண்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் பற்றிய சமகாலப் புரிதலின் வெளிச்சத்தில் அதன் புனித நூல்களை விளக்குவதற்கும் விரும்புகிறார்கள். அதன் சில பெண்கள் அமைப்புகள் இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்கின்றன. அவர்களின் முயற்சிகள் துணிச்சலானவை. ஆனால் அதனால் எந்தப் பலனுமில்லை.
இன்று, நம் நாட்டில் உள்ள மதத் தலைவர்களுக்கு அத்தகைய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான தார்மீக அடிப்படையோ அரசியல் விருப்பமோ இல்லை. அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், கத்தோலிக்க அல்லது புரட்டஸ்டன்ட் தேவாலயங்கள் மற்றும் இந்து மடங்கள், பார்ப்பனிய நிறுவனங்கள், இந்து மதத் தலைவர்கள் உட்பட, ஒழுங்கமைக்கப்பட்ட, நிறுவனமயப்பட்ட மதத்தின் எந்தவொரு மதத் தலைவர்களின் நிகழ்ச்சி நிரலிலும் பெண்கள் உரிமை என்பது இல்லை. எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் நல்ல நோக்கில் ஒரு அரசு பொதுச் சிவில் சட்டம் கொண்டு வந்தால் அதனை வரவேற்க வேண்டும்.

பெண்களின் உரிமைகள் – எதிர் – பழங்குடியினர் உரிமைகள்

பெண்களின் உரிமைகளுக்கும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கும் இடையிலான முரண்பாட்டை நான் முதன்முதலில் மது கிசுவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது உணர்ந்தேன்.

திசம்பர் 1980இல், மது கிசுவர், இன்றைய சார்கண்டில், அப்போது பிரிக்கப்படாத பீகாரின் சிங்குபூம் மாவட்டத்தில் உள்ள பழங்குடிப் பகுதிக்கு மக்கள் குடிமை(சிவில்) உரிமைக் கழகம் (PUCL) உண்மையறியும் குழுவில் சென்றிருந்தார். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை விசாரிக்க அக்குழு சென்றிருந்தது, அப்போது ஃகோ பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பழங்குடிப் பெண்களைக் கிசுவர் சந்தித்தார், அவர்கள் பழங்குடியினர் சட்டத்தின் கீழ்ப் பெண்களுக்கு நில உரிமை இல்லை என்று தெரிவித்தனர். அதனால், கணவர் இறந்த பிறகு, அவர்கள் மிகவும் சிரமப்படுவதாகக் கூறினர்.

இதனால் பழங்குடிப் பெண்களுக்கு நில உரிமை மறுக்கும் சோட்டா நாக்குபூர் குத்தகைச் சட்டம், 1876 என்ற சட்டத்தை எதிர்த்துக் கிசுவார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்தச் சட்டம் பழங்குடியினரின் நிலங்களைப் பழங்குடியினர் அல்லாதவர்கள் வாங்குவதிலிருந்து பாதுகாத்தது. [கிசுவர் இப்போது இந்துக்களையும் மற்றும் இந்து அடையாளத்தையும் பொதுக் குடியியல் சட்டம் பாதிக்கும் என்ற அடிப்படையில் அது கொண்டுவரப்படுவதை எதிர்க்கிறார்.]

உச்ச நீதிமன்றம் சோட்டா நாக்குபூர் குத்தகைச் சட்டத்தை நீக்கிப் பழங்குடியினரின் சொத்துக்கான ஃகோ பெண்களின் உரிமையை உறுதி செய்தால், மற்றொரு புறம் பழங்குடி நிலத்தைப் பிறர் வாங்கும் நிலை உருவாகி, அனைத்துப் பழங்குடியினரும் தங்கள் நிலத்தை சட்டபூர்வமாகப் பாதுகாக்கும் உரிமையை இழக்க நேரிடும் என இராஞ்சி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து 2011இல் மறைந்த முக்கிய அறிவாளர் இராம்தயாள் முண்டாவின் மனைவி ஃகேசல் (உ)லூட்சு எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் பிப்பிரவரி 1983இல் இராஞ்சியில் நடைபெற்ற ஆறாவது இந்திய நாட்டுப்புறக் காங்கிரசில் “பழங்குடியினப் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதற்கான இயக்கம் தொடர்பான கேள்விகள், நில உரிமைகள்” (“Questions Relating to the Movement to Grant Tribal Women’s ‘Equal Rights’ in Land”) கட்டுரை அளித்தார்.

அந்தக் கட்டுரை என்னை ஆழமாகப் பாதித்தது . தனிப்பட்ட பெண்களின் உரிமைகளுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்தின் உரிமைகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் போது எழும் சிக்கலான பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. “மனித உரிமைகள் வழக்காடல்: ஒரு பெண்ணியக் கண்ணோட்டம்” (“Human Rights Lawyering: A Feminist Perspective”) என்ற கட்டுரையில் இந்த சிக்கலைப் பற்றி 1999ஆம்ஆண்டு எழுதினேன்.

இந்திய அரசியலமைப்பு பழங்குடியினக் குழுக்களின் சமூக உரிமைகளை அங்கீகரிக்கிறது, அவர்களின் நிலம் மற்றும் இயற்கை வளங்களை மேம்பட்ட சமூகங்களிடமிருந்து பாதுகாக்க சட்டம் உள்ளது. மேலும் வளர்ச்சியின் பலன்கள் பழங்குடியின மக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யச் சிறப்பு நலத்திட்டங்கள் உள்ளன.
ஆனால் பழங்குடிச் சமூகங்களை வெளிப்புறச் சுரண்டலிலிருந்து பாதுகாக்கும் நிலையில், பழங்குடியினப் பெண்களை அவர்கள் வாழும் சமூகங்களுக்குள்ளான அடக்குமுறையிலிருந்து பாதுகாக்க அரசியலமைப்பு எதுவும் செய்யவில்லை.

சிறுபான்மையினர் உரிமைகள் – எதிர் – பெண்களின் உரிமைகள்

சிறுபான்மையினருக்கும் (முசுலிம்) பெண்களின் உரிமைகளுக்கும் இடையிலான மோதல் சா பானு வழக்கிற்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்தது. வரலாறு இருக்கட்டும், பிரச்சினைகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125ஆவது பிரிவில் மையங்கொண்டிருந்தன. இது முசுலிம் தனிப்பட்ட சட்டம் பற்றியதாக இல்லை. சட்டத்தின் இதே போன்ற கேள்விகளை உள்ளடக்கிய பல முந்தைய தீர்ப்புகள் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளன. அந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குர்ஆனை விளக்க முயற்சிப்பதாகத் தேனியல் இலத்திஃபி என்பவர் தேவையற்ற குழப்பத்தை உருவாக்கினார்.

இந்திய முசுலீம்கள் உண்மையான மற்றும் நியாயமான சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. முன்னாள் போர்த்துகீசிய குடியேற்றமான கோவாவில் ஒரே மாதிரியான பொதுக் குடியியல் சட்டத்தை கொண்டுவந்த போது அவர்கள் எதிர்க்கவில்லை. மேலும் உலகெங்கிலும் உள்ள முசுலீம் பெரும்பான்மை உள்ள நாடுகள் திருமணம், விவாகரத்து போன்றவற்றில் பெரிய சீர்திருத்தங்களை
மேற்கொண்டுள்ளன.

தற்போது முன்மொழியப்பட உள்ள பொதுக் குடியியல் சட்டத்திற்கு இந்தியச் சட்ட ஆணையத்திற்கு சுமார் 40 இலட்சத்துக்கு மேற்பட்ட ஆட்சேபனைகள் வந்துள்ளன. அதற்கு இந்த ஆட்சியாளர்கள் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முசுலிம்கள், கிருத்துவர்களுக்கு செய்த அவமரியாதை மற்றும் அநீதியால் எழுந்துள்ளது. மேலும் வடகிழக்கு மாநிலங்களில் கிறித்தவ மதத்திற்கு மாறிய பழங்குடியினரின் சிறப்பு அந்தசுத்தைப் பறிப்பதற்கான ஒரு படியாகவும் இது இருக்கலாம்.

மனித உரிமைகள – எதிர் – பெண்கள் உரிமைகள்

மனித உரிமைகள் பெண்களின் உரிமைகளுடன் முரண்பட்டால் என்ன ஆகும்?

குரானை எட்டி உதைக்கவும், அதன் பக்கங்களைக் கிழிக்கவும் ஓர் ஈராக்கியரை சுவீடன் காவல்துறையினர் அனுமதித்த சம்பவத்தைக் குறிப்பிடுவதன் மூலம் மனித உரிமைகள் எந்த அளவுக்கு ஓர் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது என்பதைக் காணலாம். இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்குள் விவாதிக்கப்படுகிறது, மேலும் நேட்டோ அமைப்பு அத்தகைய நடத்தை விரும்பத்தக்கது அல்ல, ஆனால் இது கருத்து சுதந்திரம் என்று கூறுகிறது.

முசுலீமாக இருந்தாலும் இல்லா விட்டாலும், ஒரு மத உணர்வும் இல்லாத ஒவ்வொரு நபரும் கூட, இந்த வெறுப்பு மற்றும் கோபத்தை நிலைநிறுத்துவதற்குக் கெட்ட நோக்கத்திற்காக நிகழ்த்தப்படும் இந்த திட்டமிட்ட அழிவுச் செயலால் கடுமையாகப் புண்படுத்தப்படுவார்கள்.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி மேற்கத்திய நாடுகள் ஆப்கானித்தானை ஆக்கிரமித்து, அதனை எப்படி நியாயப்படுத்தியது என்பதை நினைவு கொள்வோம். மலாலா யூசுப்சாய் என்ற பெண்ணை அதன் அடையாளமாக மாற்றினார்கள். இப்படித்தான் பெண்களின் உரிமைகளையும் ஆயுதமாக்கினார்கள்.

பழங்காலத்தில் பெண்கள் நிலை சிறப்பாக இருந்தது என்று கூறி அவமானப்படுத்துகின்றனர். தினசரி வாழ்க்கையில் பெண்கள் படும் எல்லாத் துன்பங்களுக்கும் உடந்தையாக இருப்பது இந்தியாவில் உள்ள – மதம், சட்டம், குடும்பம், ஊடகங்கள், நீதிமன்றங்கள், சட்டமன்றங்கள், பாலிவுடு என நிறுவனங்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

தேர்தல் அரசியலின் நிர்ப்பந்தங்களை ஒதுக்கி வைத்தால், ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள பெண்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தும் ஒரேமாதிரியான பொதுக் குடியியல் சட்டத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இது பாபாசாகேபு அம்பேத்துகர் ஆதரித்த ஒரு சட்டமாகும். ஆனால் நாடு முழுவதும் உள்ள மதங்களில் உள்ள அனைத்து பிற்போக்கு மற்றும் ஆணாதிக்க சக்திகளின் ஆதரவுடன் நமது அரசியலமைப்பின் நேரான பார்வையை இந்து தேசியவாதிகள் கடத்திச் செல்வதை அனுமதிக்கக முடியாது.
பெண்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில், பாசிசமும் மத அடிப்படைவாதமும் ஆணாதிக்கத்தில் வேரூன்றியுள்ளன என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்று நம்புகிறேன். ஆணாதிக்கம் நம் அனைவரையும் மனித நேயமற்றவர்களாக மாற்றுகிறது. பெண்களின் மீதான அடக்குமுறை, சுரண்டல் மற்றும் சீரழிவுகளை உணர நீங்கள் பெண்ணியவாதியாக இருக்க வேண்டியதில்லை. ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டம் ,மனித விடுதலைக்கான போராட்டத்தின் ஒரு பகுதி என்பதால் நீங்கள் மனிதனாக இருந்தால் போதும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 288

வியாழன், 2 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (4)

 




(தோழர் தியாகு பேசுகிறார்: இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி? – தொடர்ச்சி)

“பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (4)

இனிய அன்பர்களே!

பொதுக் குடியியல் சட்டம் தொடர்பான உரையாடலை அது வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதமாகச் சுருக்கி விட முடியாது, ‘எடு அல்லது விடு’ என்று முடிவு காண முடியாது.

ஆர்எசுஎசு – பாசக கும்பல் பொதுக் குடியியல் சட்டம் என்று சொல்கிறதே தவிர, அதற்கு எவ்வித விளக்கமும் தரவில்லை. வரைவு ஏதும் வெளியிடவில்லை. அவர்களின் நோக்கமும் நமக்குத் தெரியாததில்லை. ஆனால் இதைச் சொல்வது மட்டுமே பொதுக் குடியியல் சட்டம் பற்றி நேர்மையாகப் பேசுவோருக்கெல்லாம் விடையாகி விடாது. பொதுக் குடியியல் சட்டம் என்ற உரையாடலை ஆர்எசுஎசு-பாசக அரசியல் சூழ்ச்சி என்ற வட்டத்துக்கு வெளியிலும் நடத்த வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் முத்தலாக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி கண்ட முசுலிம் பெண்கள் சிலரை வாழ்த்தி முகநூலில் நான் எழுதியிருந்தேன். அந்த நேரம் முசுலிம் அன்பர்கள் சிலர் என்னிடம் வருத்தப்பட்டுக் கொண்டார்கள். ஓரிருவர் அந்தப் பெண்களை ஆர்எசுஎசு கைக்கூலிகள் என்றெல்லாம் கடுமையாகச் சாடியிருந்தார்கள். அவர்கள் ஆர்எசுஎசு உறுப்பினர்கள் என்றே வைத்துக் கொள்வோம், அவர்களுக்கும் மனித உரிமைகள், பெண்ணுரிமைகள் உண்டுதானே? என்று வாதிட்டிருந்தேன்.

எப்படிப் பார்த்தாலும், தலாக் தலாக் தலாக் என்று கணவன் மூன்று முறை சொன்னால் போதும், உறவு முறிந்து விடும் என்று சொல்லும் முத்தலாக்கிற்கு இசுலாத்தில் இடமில்லை, அதற்குக் குரானில் அனுமதியில்லை என்னும் போது முத்தலாக்கை ஏன் இசுலாத்தின் பெயரில் நியாயப்படுத்த வேண்டும்?

நமது உரையாடலை ஆழ்விரிவாக்கும் நோக்கில் பொதுக்குடியியல் சட்டம் குறித்துப் பெண்களின் பார்வையை விளக்கி புகழ்பெற்ற வழக்கறிஞரும், எழுத்தாளரும், மாந்தவுரிமைச் செயற்பாட்டளருமான நந்தித்தா அக்குசர் எழுதி NEWCLICK இணையத்தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கத்தைப் பகிர்கிறேன். (அடுத்த பகுதியில் காணலாம்.)

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 288

புதன், 1 நவம்பர், 2023

தோழர் தியாகு பேசுகிறார்: இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி?

 




(தோழர் தியாகு எழுதுகிறார்- “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (3)-தொடர்ச்சி)

பொதுக் குடியியல் சட்டம்

இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி?

இந்தியாவில், முதலாண்மைப் பெருங்குழுமங்களுக்கும் இந்துக் கூட்டுக் குடும்பத்துக்குமான பிணைப்புச் சொத்தின் மீதும் மூலமுதலின் மீதும் குடும்பத்தின் கட்டுப்பாட்டைப் பேணுவதில் தனித்தன்மையதாக உள்ளது எனக் கண்டோம். ஒரு சட்டமுறை நிறுவனமாக இந்தச் சலுகை இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, இது இந்துத் தனியாள், குடும்பச் சட்ட நெறிகளில் வரை யறுக்கப்பட்டுப் புனிதமாக்கப்படுகிறது.

அரசமைப்பில் கூறியுள்ளபடி முசுலிம், கிறித்தவர், பார்சி அல்லது யூதர் அல்லாத ஒவ்வொருவரும் சட்டப்படி இந்து ஆவார். பௌத்தம், சமணம், சீக்கியம் போன்ற சமயங்களைச் சேர்ந்தவர்களும் இந்துக்களாகவே கருதப்படுவார்கள். மத ஒழுங்கமைப்புகளுக்கு வெளியே நிற்கும் ஆதிவாசிகள் அல்லது பழங்குடி மக்களும் இந்துக்களாகவே கருதப்படுவார்கள். கிறித்துவம், இசுலாம் அல்லது நிறுவனமயமான எந்த மதத்தையும் தழுவாத பழங்குடிகள் சட்டம் வலுக்கட்டாயமாகவே இந்து மதத்தில் சேர்த்து விடுகிறது. அஃதாவது முசுலிம், கிறித்தவர், பார்சி, யூதர் அல்லாத அனைவரும் சட்டத்தின் பார்வையில் இந்துக்களே . இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 25 இவ்வாறு விளக்கமளிக்கிறது. சீக்கியர்களும் புதுப் பௌத்தர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பயனில்லை .

[இந்து மதத்தை உதறி விட்டு இலட்சக்கணக்கானோருடன் பௌத்தம் தழுவிய அம்பேத்துகர் பௌத்தர்களையும் இந்துக்களே என்று வரை யறை செய்ய எவ்வாறு ஒப்புக் கொண்டார்? என்பது ஆய்வுக்குரியது.]

முதலாவதாக, இந்துக் கூட்டுக் குடும்பம் (HUF) சட்டப்படியே தொழில்வணிகக் குழுமத்தின் நிறுவன அடித்தளமாக்கப்பட்டது. இந்துச் சட்ட நெறி அரசின் சட்டநெறியாக்கபட்டது. இந்துக்கள் தமக்குள் கடைப்பிடிக்க வேண்டிய தனியாள் சட்டம் அரசுச் சட்டமாகவே மாற்றப்பட்டு விட்டது. இரண்டாவதாக, இந்துச் சட்ட நெறி தயாபாகா மற்றும் மிடாட்சரா சொத்துகள் வைத்திருப்பதற்கான அறிந்தேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. சொத்து மீதான பரம்பரை உரிமைகளை வரை யறுப்பதில் வழக்காறு சார்ந்த சட்டங்களை நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட மூல(அசல்) வரைவில் இவ்வாறு சமரசம் செய்யப்பட்டது. இரண்டு இந்துக்களுக்கு இடையிலான திருமணம் மட்டுமே சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது. ஆண் பிள்ளைகளே சொத்தின் இயல்பான வாரிசுகளாகும் உரிமை நிறுவனமயமாயிற்று. திருமணத்திற்கு வெளியே பிறந்த குழந்தைகளுக்குச் சொத்தின் மீதான எவ்வித உரிமையும் இல்லாமற் செய்யப்பட்டது. மூன்றாவதாக, திருமணமான இந்து ஆண் எவரும் ‘கூட்டுக் குடும்பத்திலிருந்து’ விலகி, ஒரு புதிய இந்துக் கூட்டுக் குடும்பத்தைத் தொடங்குவதற்கான சட்ட வெளியை அது உருவாக்கியது. ஒவ்வொரு தனிக் குடும்பமும் ஒரு புதிய இந்துக் கூட்டுக் குடும்பத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் என்பதால், இந்துக் கூட்டுக் குடும்பம் ஒரு சட்டமுறை நிறுவனமாக நிலைத்திருக்க முடிந்தது. இவ்வாறு, முசுலீம், கிறித்தவர், பார்சி, யூதர் அல்லாத அனைத்துக் குடிமக்களுக்கும், இந்துத் தனியாள் சட்டம் அரசுச் சட்டமாக மாறியது. இந்தியாவில் ஆணாதிக்க அடிப்படை யிலான சொத்துரிமைக் கட்டமைப்பு நிறுவனமயமாயிற்று.

மிடாட்சரா அல்லது தயாபாகா சட்டங்கள் எப்படி வந்தன? என்று பார்க்க வேண்டும். பண்டை க்கால இந்து (பிராமண) மத வேதங்கள் (சுமிருதிகள்) மணமாகாத பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கவில்லை . பெண்ணுக்கு மணமாகும் போது சீதனம் மட்டுமே தரப்படலாம். இஃது இன்றும் மகற்கொடை யாக நீடிக்கிறது.

சுமிருதிகளில் முதன்மை யானது மனுசுமிருதி. இதுவே ‘இந்து’ச் சட்டங்களுக்கெல்லாம் ஆதிமூலம். அடுத்த இடம் யக்குஞவல்கிய சுமிருதிக்குத் தரப்பட்டது. காலப்போக்கில் சுமிருதிகளுக்கு முனிவர்கள் விளக்கமளித்தனர். 9ஆம், 12ஆம் நூற்றாண்டுகளுக்கிடை யே யக்குஞவல்கிய சுமிருதிக்கு விளக்கமளித்தவர் விஞ்ஞானேசுவர முனிவர். இவரது விளக்கம் (‘பாசுயம்’) மிடாட்சரா மரபு என்று பெயர் பெற்றது. சிமூத்தவாகன முனிவர் தந்த விளக்கம் தயாபாகா மரபு என்று பெயர் பெற்றது. இந்தியாவின் வடக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் மிடாட்சரா மரபு கடைப்பிடிக்கப்பட, வங்காள வட்டாரத்தில் தயாபாகா மரபு செயலாயிற்று. இரண்டுக்குமான

வேறுபாடுகள் ஒருபுறமிருக்க இரண்டுமே இந்துக் கூட்டுக் குடும்பச் சொத்துடை மை ,

பரம்பரைச் சொத்துரிமை , பெண்களுக்குச் சொத்துரிமை மறுப்பு ஆகியவற்றில் ஒத்திருந்தன. கணவர் சொத்தில் கைம்பெண்ணுக்கும், தந்தை யின் சொத்தில் மணமாகாத மகளுக்கும் ஓரளவு சொத்துரிமை உண்டு என்பது தயாபாகா தந்த மாறுபட்ட விளக்கமாம்!

மிடாட்சரா, தயாபாகா சொத்துரிமை , பிறப்புவழி வாரிசுரிமை முறை களை பிரித்தானிய ஆட்சியர்கள் ஏற்றுத் தமது சட்டக் கட்டமை ப்பில் சேர்த்துக் கொண்டது எப்படி? பிரித்தானியர் இந்தியாவைத் தங்கள் வன்குடியே ற்ற நாடாக்கிக் கொள்ளத் தொடங்கிய போது சொத்துரிமை , வாரிசுரிமை தொடர்பான தனியாள் சட்டங்களை இந்துக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டனர். அஃதாவது பிரித்தானியருக்கு மொழி பெ யர்ப்பாளர்களாகவும் அறிவுரை யாளர்களாகவும், பூசல் தீர்ப்போராகவும் வளர்ந்து வந்த பார்ப்பனர்கள் சொன்னதுதான் சட்டம் என்றாயிற்று. இப்படித்தான் பிராமண மதச் சட்டங்கள் இந்துச் சட்டங்களாக ஆட்சியேறின. குடியேற்றமும்(காலனியமும பார்ப்பனியமும் கை கோத்துக் கொண்டன.

முகலாயர் கால இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் வாரிசுரிமை யாகவோ, மெகர் அல்லது கொடைக்கு மாற்றாகவோ சொத்துரிமை அனுபவித்தார்கள். மெகர் என்பது மனம் போன போக்கிலான மண முறிவுக்கு எதிராகப் பெண்ணுக்கு வழங்கப்படும் காப்பு ஆகும், மத்திய கால இந்தியாவில் சீதனம் மெல்ல மெல்ல மறைந்து வரதட்சணை தலை தூக்கிய போது இசுலாத்திலும் அந்த கொடும்பழக்கம் தொற்றிக் கொண்டது.

இந்துச் சட்டத்தின் கீழ்ப் பெண்மக்களுக்கு அனைத்துச் சொத்துகளிலும் சம பங்கு மறுக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் பெண்மக்களுக்கு இணை மரபுரிமைகள் பெற்றுத் தந்த போதும் மணமான பெண்களுக்கும், கைம்பெண்களுக்கும், மணமுறிவு பெற்றவர்களுக்கும் இந்த உரிமைகள் பொருந்த மாட்டா. நிலம் துண்டாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக என்று கூறிப் பெண்களுக்கு நிலத்தில் எந்தவிதச் சொத்துரிமையும் மறுக்கப்பட்டது. வரம்புக்குட்பட்ட அளவில் பெண்களுக்கான சொத்துரிமை ஏட்டளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடங்களிலும் நடை முறையில் ஒரு விழுக்காட்டுக்கு மேல் மெய்ப்படவில்லை .

ஆக, இந்து மதம், இந்துக் கூட்டுக் குடும்பம் என்ற வரையறைகளின் அடிப்படை யில் மதமும் சாதியும் ஆணாதிக்கமும் சொத்துரிமைகளைத் தீர்மானிக்கும் நிறுவனஅடிப்படையாக நிறுவப்பட்டன.

இந்துக் கூட்டுக் குடும்பத்தைச் சட்டப்படியான அமைப்பாக்குவதன் மூலம் இந்து ஆண்களுக்குச் சாதகமாகச் சொத்துரிமையை அரசமைப்பால் உறுதி செய்யப்பட்ட சட்ட உரிமையாக மாற்றியமைத்தனர். இஃது இந்திய விடுமைக்குப் பிறகான முதல் பத்தாண்டுகளில் செய்யப்பட்ட மிக முக்கியத் தலை யீடாகும் என்கிறார் தாசுகுபுதா. .

இந்துக் கூட்டுக் குடும்பம் நடை முறைக்கு வந்த விதத்திலிருந்தும், இந்தியாவின் வருமான வரிச் சட்டங்களிலும் சொத்து வரிச் சட்டங்களிலும் இந்துக் கூட்டுக் குடும்பம் தனித்த அளவீடாக இடம்பெ றுவதிலிருந்தும் இந்தியாவின் குடியியல் சட்டங்களில் இந்து சமயநெ றிகளுக்குள்ள முதன்மையை அறிந்து கொள்ளலாம்.

சட்டத்தில் (அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்துச் சட்டநெறிமுறையின் அடிப்படை யில்), இந்துக் கூட்டுக் குடும்பம் (என்பது) பொதுவான மூதாதையரிடமிருந்து வந்த அனைத்து ஆட்களையும், அவர்தம் மனைவிமார்கள், திருமணமாகாத பெண்மக்களையும் உள்ளடக்கியதாகும். இது பிறப்பின் அடிப்படையில் சொத்துரிமை பெறுவதற்கான ஏற்பாடாகும்.

இந்துக் கூட்டுக் குடும்பம் என்பது சட்டப்படியான வரிசெலுத்தும் நிறுவனமாகவும், தனியாட்களிடமிருந்தும், பெருங்குழுமங்களிடமிருந்தும் வேறுபட்டுத் தனித் தன்மை கொண்டதாகவும் அறிந்தேற்கப்பட்டது.

பெருங்குழுமங்களுக்கும் தனியாட்களுக்குமான வருமான வரிச் சட்டங்களால் அறிந்தேற்கப்பட்ட அனைத்து நிறுவன அமைப்புகளும் குழுமச் சட்டத்தின் அடிப்படை யில் வரை யறுக்கப்பட்டுள்ள அதே போது, இந்துக் கூட்டுக் குடும்பம் மட்டும் சட்டபடியான நிறுவனமாக இந்துத் தனியாள் சட்டத்தின் அடிப்படை யிலேயே வரை யறுக்கப்படுகிறது. உலகியம் [அல்லது சமயச் சார்பின்மை (SECULARISM)] என்பது அரசியலில் மட்டுமல்ல, பொருளியலிலும் சமயங்கலவாமையை கடைப் பிடிக்க வேண்டும். இந்து சமயக் குடும்ப ஏற்பாடு ஒன்று அரசின் தகாப் பொருளியல் சலுகைக்கு வழி செய்யும் போது சமயச் சார்பின்மை என்பதே கேள்விக்குரியதாகிறது.

இந்துக் கூட்டுக் குடும்பத்தை (HUF) 1955-56ஆம் ஆண்டில் தனியாள் சட்ட நெறிகளினால் வரை யறுத்த பின்னர், 1957 சொத்து வரிச் சட்டம், 1961 வருவாய் வரிச் சட்டத்தின் பிரிவு 2 ஆகியவற்றின் மூலம் இந்த இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்பை நிலைத்திருக்க செய்ய அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம் குடும்ப வருமானம் மீதான வரியை ஏய்ப்பதற்கான வசதிகள் செய்து தரப்பட்டன. கூடுதலான வரிவிலக்குகளும் குறைந்த வரி விகிதங்களுமான பல சலுகைகள் வழங்கப்பெற்றன.

இந்தியாவில் குடும்பம் சார்ந்த 150 தொழில்வணிகக் குழுக்கள் பற்றிக் கணக்கெடுத்த போது, இந்து மரபில் வந்தவற்றில் இரண்டே இரண்டு தவிர, அனைத்து வணிகக் குழுக்களும் இந்துக் கூட்டுக் குடும்பத்தை (HUF ) சேர்ந்தவை என்று தெரிய வந்தது.

சராசரியாக, ஒவ்வொரு குழுவும் 47 நிறுவனங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தின. ஒவ்வொரு வணிகக் குழுவும் சராசரியாக மூன்று முதல் நான்கு சார்புக் குழுமங்களையும் ஒன்று முதல் மூன்று முதன்மைக் குழுமங்களையும் கொண்டிருந்தன.

இந்தக் குழுமங்களில் குடும்பத்தின் தலைவரும், மற்ற உறுப்பினர்களும் தனியாட்களாகப் பங்குகள் வைத்திருந்தனர். இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்புகள் இந்தக் குழுமங்களில் அடுத்த மிகப் பெரிய ஒற்றைப் பங்குதாரராக இருந்தன. குறைந்தது இரண்டு குடும்ப உறுப்பினர்கள் இந்தக் குழுமங்களின் இயக்குநர்களாக இருந்தனர். இந்தக் குழுமங்கள் பிற வரையறுக்கப்பட்ட பொது, தனியார் மற்றும் கூட்டுக் குழுமங்களின் பங்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

அத்தகைய குழுமங்களில், குடும்ப உறுப்பினர்களும், பிற வணிகக் குடும்பங்களின் நெருங்கிய கூட்டாளிகளும் இயக்குநர்களாகச் செயல்பட்டனர். இவ்வாறு தொழில்வணிகக் குடும்பங்கள் மூலமுதல் திரட்டல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதற்கான உடைமை யுரிமை க்கும் ஆளுகைக்கும் முறையான கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

இந்துக் கூட்டுக் குடும்பம் என்ற இந்துச் சட்ட ஏற்பாடு இந்தியப் பெருங்குழுமங்களின் கட்டமைப்பிலும் வளர்ச்சியிலும் இன்றளவும் வகித்து வரும் பங்கு குறித்து இன்னும் நிறைய எழுதலாம். இப்போது நம் கேள்வி இதுதான்: இந்துக் கூட்டுக் குடும்பம் துய்த்து

வரும் தனிச் சலுகைகள் ஆர்எசுஎசு-பாசக முன்மொழியும் “பொதுக் குடியியல் சட்டத்துக்கு” ஏற்புடை யவையா? நீங்கள் உண்மையான பொதுக் குடியியல் சட்டத்துக்கு மாறும் போது இந்தத் தனிச் சலுகைகள் கை விடப்படுமா?

தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 286

செவ்வாய், 31 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார்- “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (3)

 



(தோழர் தியாகு எழுதுகிறார் : அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா? – தொடர்ச்சி)

பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (3)

காவிக் கூட்டத்தின் பொதுக் குடியியல் சட்டமும்

இசுலாமியப் பெண்ணுரிமையும்

பொதுக் குடியியல் சட்டம் பற்றிய தொடர் மடலுக்குச் செல்லுமுன்…

ஒருசில செய்திகளைப் பகிர வேண்டும்.

1) இந்த உரை யாடலில் சொத்துரிமை , வாரிசுரிமை போன்றவற்றுக்கான சட்டங்கள் பற்றிப் பேச வேண்டும் என்று விரும்பிய போது, தோழர் சமந்தா நக்குவெய்ன் மார்க்குசியப் பள்ளிக்குச் சென்று வந்த பின் அங்கு கற்றவற்றையும் பெற்றவற்றை யும் உரிமைத் தமிழ்த்தேசம் திங்களேட்டில் தொடராக எழுதினார்.

அந்தத் தொடரில் எழுதப்பட்ட 19ஆம் கட்டுரை “இந்திய முதலாளித்துவ வருக்கத்தின் சமூக-சட்ட அமைப்பு” பற்றியது. சிரசிரீ தாசுகுபுதா எடுத்த வகுப்பினை அடியொற்றி இக்கட்டுரையை சமந்தா எழுதியிருந்தார். நான் தாழி மடலில் இப்போதைய இந்தியக் குடியியல் சட்டத்தில் காணப்படும் இந்துச்சாய்வு பற்றி எழுதுவதற்கு முதன்மையாக அக்கட்டுரையில் கிடை க்கும் குறிப்புகளையே வழிகாட்டியாகக் கொள்கிறேன்.

2) உரிமை யியல் சட்டம் படித்த அன்பர்கள் நான் தந்துள்ள செய்திகளுக்குச் செறிவும் வலுவும் ஊட்டினால் நன்று. பிழைகள் இருந்து சுட்டிக் காட்டினாலும் மகிழ்வுடன் திருத்திக் கொள்வேன்.

3) முசுலிம் பெண்களில் ஒரு பிரிவினர் பொதுக் குடியியல் சட்டத்தை ஆதரிக்கிறார்களே? என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. எதிர்ப்பது போலவே ஆதரிப்பதும் அவரவர் உரிமை . ஆனால் ஆதரிப்பதானாலும் எதிர்ப்பதானாலும் பொதுக் குடியியல் சட்டம் என்பதில் ஆர்எசுஎசு – பாசக சொல்ல வருவது என்ன? என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ளட்டும். ஏனென்றால் ஆர்எசுஎசு – பாசக, தாங்கள் முன்மொழியும் பொதுக் குடியியல் சட்டத்தின் வரைவு ஏதும் வெளியிட வில்லை . அது குறித்து முன்பின் முரணின்றிப் பேசவும் இல்லை . பொதுக் குடியியல் சட்டம் பற்றி வேண்டுமென்றே தெளிவின்றிப் பேசுகின்றார்கள் என்றுதான் கருத வேண்டியுள்ளது.

பொதுக் குடியியல் சட்டம் என்ற பெயரை மீண்டும் மீண்டும் உச்சரிப்பது மட்டுமே அது குறித்து ஒரு தெளிவான பார்வையை வெளிப்படுத்தி விடாது. இந்தப் பெயர் உச்சாடனத்தில் மயங்கிப் போன சிலரில் இசுலாமியப் பெண்களும் இருக்கட்டும். இசுலாமியத் தனியாள் சட்டம் குறையே இல்லாதது என்று நாம் கருதவில்லை . அந்தச் சட்டத்தில் என்ன திருத்தங்கள் வேண்டும் என்று இசுலாமியப் பெண்கள் உள்ளிட்ட முசுலிம் குடியாட்சிய ஆற்றல்கள் குரல் கொடுக்க வேண்டுமே தவிர தலையும் வாலும் தெரியாத ஆர்எசுஎசு-பாசக பொதுக் குடியியல் சட்டத்தை ஆதரிக்கத் தேவை இல்லை . இசுலாமியரல்லாத பொதுவான குடியாட்சிய ஆற்றல்களும் இசுலாமியத் தனியாள் சட்டத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை முன்மொழியலாம். ஆர்எசுஎசு – பாசகவின் பொதுக்குடியியல் சட்டப் பேச்சை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எவ்வகை யிலும் இசுலாமிய அடிப்படை யியலை நியாயப்படுத்த வேண்டும் என்ற தேவையில்லை . நாம் பொதுவாக இசுலாத்துக்குள்ளிருந்து எழும் சீர்த்திருத்தக் குரலை ஆதரிக்கவே செய்கிறோம். அதே போது பாசிச ஆர்எசுஎசு – பாசக சூழ்ச்சிக்கு இரையாகி விடாதீர்கள் என்று எச்சரிக்கவும் செய்கிறோம். பொதுக் குடியியல் சட்டத்துக்கு எதிராக மட்டுமல்ல, ஆதரவாகவும் யார் எழுதியனுப்பினாலும் தாழி மடலில் வெளியிட்டு உரையாடலை ஆழ்விரிவாக்கவே விரும்புகிறேன்.

சரி, நேற்று விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்.

தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 286

திங்கள், 30 அக்டோபர், 2023

ஆளுமையர் உரை 73,74 & 75 : இணைய அரங்கம்: 5.11.2023

 




செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை. ((திருவள்ளுவர், திருக்குறள் 411)

தமிழே விழி!                                                      தமிழா விழி!                                          

தமிழ்க்காப்புக்கழகம்

73,74 & 75 : இணைய அரங்கம்: 5.11.2023

ஐப்பசி 19, 2054 ஞாயிறு  5.11.2023 தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

ஆளுமையர் உரை

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

“தமிழும் நானும்” – உரையாளர்கள்

பொறி.   நம்பிராசன்   வைத்திலிங்கம்

தலைவர், சிக்காகோ தமிழ்ச்சங்கம்

இதழாளர் சதாசிவம், பதிப்பாளர், செந்தமிழ்

வலைப்பதிவர் கரந்தை செயக்குமார்

தொகுப்புரைஞர்:   குமுகாயப் போராளி தோழர் தியாகு

நன்றியுரை : உரைச்சுடர் செல்வி ந.காருண்யா



தோழர் தியாகு எழுதுகிறார் : அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா?

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (2) – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

அமித்துசா வாயால்

இனவழிப்பு பேசப்பட்டதா?

வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு ஒரு துரும்பு கிடைத்தால் கூட தெப்பமாகத் தெரியும். அந்தத் துரும்பைப் பிடித்துக் கொண்டு கரையேறி விட முடியாதா என்றுதான் நினைப்பான்.

இனவழிப்பு முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டு ஆண்டுகள் பதினான்கு ஆன பிறகும் நீதியின் ஒளிக்கதிர் கண்ணுக்கு எட்டாத அவலநிலையில் இருக்கும் தமிழீழ மக்களுக்கு யாராவது தமிழினவழிப்பு என்று பேசி விட்டாலே மனம் நிறைந்து விடுகிறது.

அதிலும் இந்தியப் பேரரசின் உள்துறை அமைச்சர் என்ன காரணத்துக்காக அப்படிப் பேசியிருந்தாலும் இந்தியாவின் பார்வையில் ஒரு மாற்றம் வந்து விட்டதோ என்ற எண்ணம் அலைமோதத் தொடங்கி விடுகிறது. அண்மையில் இராமேசுவரத்தில் பாசக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பேச்சு தாயகம் உட்பட உலகெங்கிலும் பாரிய பேசுபொருள் ஆகி விட்டது.

தமிழ்நாட்டில்தான் இது பற்றி யாரும் அவ்வளவாக விவாதிக்கவில்லை. இங்கு யாரும் அமித்துசாவின் பேச்சைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை போலும். ஆனால் புலம்பெயர் தமிழர் சிலர் “அமித்துசா இப்படிப் பேசி விட்டாரே? அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?” என்று என்னைக் கேட்டு வருகின்றனர்.

ஐரோப்பியாவிலிருந்து அன்பர் ஒருவர் அமித்துசாவின் பேச்சு குறித்தும், அதையொட்டி வேறு சில செய்திகள் குறித்தும் எனக்கு அனுப்பிய வினாக்களையும் அவற்றுக்கு நான் தந்த விடைகளையும் (சில கூடுதல் விளக்கங்களோடு) ஈண்டு பகிர்கிறேன் –

வினா:

மக்களையும் மக்களையும் இணைத்தல் என்ற திட்டம் சிங்களச் சந்தையைப் பலப்படுத்திச் சிறிலங்காவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க உதவுமே தவிர ஈழத் தமிழர் தேசியச் சிக்கலுக்கு எப்படி உதவும்?

விடை:

இந்தத் திட்டத்தின் உட்பொருள் இந்தியப் பெருங்குழுமங்களான அம்பானிகள் – அதானிகளுக்கு இலங்கைத் தீவை அங்காடி (சந்தை) ஆக்குதல், முதலீட்டுக் களமாக்குதல் என்பதே தவிர எந்த மக்களை எந்த மக்களோடு இணைக்கப் போகிறார்கள்?

சிறிலங்காவைப் பொருளியல் நெருக்கடியிலிருந்து மீட்பது என்றால் இனவழிப்புக் குற்றம் புரிந்த சிங்களப் பேரினவாத அரசை நிலைப்படுத்தி வலுப்படுத்தல் என்று பொருள். இந்தப் பொருளியல் நெருக்கடிக்கே சிறிலங்கா அரசு நடத்திய போருக்கான படைச் செலவு முதன்மைக் காரணமாக இருக்கும் போது, இனவழிப்புப் பொறிக்கு இந்தியா சாணை பிடித்துக் கொடுப்பதாகப் பொருள்.

இந்தியா இலங்கைக்குத் பொருளியல் வகையில் முட்டுக் கொடுப்பது ஈழத் தமிழர் தேசியச் சிக்கலுக்குத் தீர்வு காண உதவாது என்பது மட்டுமல்ல, அப்படி ஒரு சிக்கல் இருப்பதையே அறிந்தேற்க மறுப்பதும் ஆகும். எல்லாவற்றையும் மறந்து விடச் சொல்கிறார்கள். நம்மவர்கள் சிலரும் மறந்து விட அணியமாய் இருக்கின்றார்கள். எப்படியும் இந்தியாவின் குற்ற வகிபாகத்தையாவது மறந்து விடுவதுதான் நல்லது என்கின்றார்கள். மறப்பதற்கு விலையாக சில சொற்களை உச்சரித்து உங்களை ஆற்றுப்படுத்துவார்கள்.

தேசிய இனச் சிக்கல் என்ற ஒன்று இருப்பதையே அறிந்தேற்காமல் அதற்குத் தீர்வு காண்பது எப்படி? இனவழிப்பையே அறிந்தேற்காமல் அதற்கு நீதிபெற்றுத் தருவது எப்படி? இனவழிப்பை அறிந்தேற்றல் என்றால் போகிற போக்கில் ஒரு சொல் வீசி விட்டுப் போவதன்று. பேசும் வார்த்தைக்கும் அதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

1983 சூலைப் படுகொலையின் போதே அன்றைய தலைமை அமைச்சர் இந்திரா காந்தி இந்திய நாடாளுமன்றத்திலேயே இலங்கையில் நடக்கும் இனக்கொலை பற்றிப் பேசினார். ஆனால் இனக் கொலைக்கு ஆளாகும் தேசத்தின் இறைமை குறித்தும் விடுதலை குறித்தும் பேசினாரில்லை. இது வரை இந்திய அரசு எந்தக் கட்டத்திலும் தமிழீழத்தின் தன்-தீர்வுரிமையை (சுய நிர்ணய உரிமையை) அறிந்தேற்றதில்லை.

இப்போது அமித்துசா மெய்யாகவே தமிழர் இனவழிப்பு பற்றிப் பேசுவாராயின் அவர் முகன்மை உறுப்பு வகிக்கும் அரசானது இனவழிப்புக்கு ஈடுசெய்நீதி பெறுவதற்கேனும் தமிழீழத்துக்கு உரித்தான தன்-தீர்வுரிமையை அறிந்தேற்கட்டும். மற்ற உலக நாடுகளும் இனவழிப்பு நடந்ததென்னும் உண்மையை அறிந்தேற்கும் படி கோரட்டும். ஒன்றுபட்ட இலங்கை என்னும் பெயருக்குள் மறைந்திருக்கும் ஒற்றையாட்சி இலங்கையே நேற்றைய நேர் இனக்கொலைக்கும் இன்றைய கட்டமைப்பியல் இனவழிப்புக்கும் வழிசெய்திருப்பதைப் புரிந்து கொண்டு, ஐநா உள்ளிட்ட பன்னாட்டு அரங்குகளில் தமிழ் மக்களின் பொதுவாக்கெடுப்புக் கோரிக்கைக்கு ஆதரவு நல்கட்டும்.

வினா:
தமிழ்நாட்டுக்கு மின்சாரத் தட்டுப்பாடு உள்ள நிலையில் இலங்கைக்குத் தமிழ்நாட்டு மின்சாரத்தை வழங்குவது முறையா?

தமிழ்நாட்டுக்கு மின்சாரத் தட்டுப்பாடு இல்லை என்றுதான் அரசு சொல்கிறது. இது மின்மிகை மாநிலம் என்றும் சொல்லிக் கொள்கின்றனர். தோற்றத்துக்கு இது சரியாகவும் இருக்கலாம். ஆனால் இன்னும்கூட மின்சாரம் பார்க்காத குக்கிராமங்கள், மலைக் கிராமங்கள் இருக்கவே செய்கின்றன. காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட ஆற்றுநீர் உரிமைகளை இழந்து நிற்கும் நிலையில் மின் இறைவைப் பொறிகளை நம்பியே உழவுத் தொழில் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது. பயிர்த் தொழிலுக்கு இலவய மின்சாரம் என்று சொல்லப்பட்டாலும் அது தேவையான நேரங்களில் தேவையான அளவுக்குக் கிடைபப்தில்லை. சிறு குறு நடுத் தொழில்கள் ஏராளமாக மூடிக் கிடக்கின்றன. இவற்றில் சில சொந்தமாக மின்னியற்றிகளை வைத்து இயங்க வேண்டிய நிலை. இதை எல்லாம் சரி செய்து, வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவையான மின்சாரம் அனைத்தும் பொதுத் தொகுப்பிலிருந்து வழங்குவதனால், தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாடு அப்போதுதான் வெளிப்படையாகத் தெரிய வரும்.

மின் தட்டுப்பாடே இல்லை என்று வைத்துக் கொண்டாலும் தமிழ்நாட்டு மின்சாரத்தை இலங்கைக்கு ஏன் தர வேண்டும்? இப்படித் தருவதற்கு இந்தியா தமிழ்நாட்டிடம் அனுமதி கேட்டதா? கேட்காது, ஏனென்றால் தமிழ்நாட்டுக்குத் தன் இயற்கை வளங்கள் மீது – அந்த வளங்களைக் கொண்டு ஆக்கப்பெறும் மின்சார ஆற்றலின் மீது – இறைமை ஏதும் இல்லை. தமிழ்நாட்டின் அனல் மின்சாரம் (நெய்வேலி), அணுமின்சாரம் (கல்பாக்கம், கூடங்குளம்) எதிலும் தமிழ்நாட்டுக்கு உரிமை வழிப்பட்ட பங்கு ஏதுமில்லை. இந்த மின்சாரத்தை வெளி மாநிலத்துக்கோ வெளிநாட்டுக்கோ அனுப்புவதா, எவ்வளவு அனுப்புவது என்பதெல்லாம் தமிழ்நாட்டின் முடிவுக்கு உட்பட்டதன்று.

இந்தியாவை ஐரோப்பாவின் அணுவுலைகளுக்கு அங்காடியாக்குவது போலவே தெற்காசியாவை இந்தியாவின் மின் அங்காடியாக மாற்றுவதும் இந்திய ஆளும் வகுப்பின் நெடுங்காலத் திட்டம். இலத்தீன் அமெரிக்க நாடுகளை வட அமெரிக்க வல்லரசியம் பார்த்தது போலவேதான் இலங்கையையும் இந்திய வல்லரசியம் பார்க்கிறது என்பதற்கே இது மீண்டும் சான்றாகிறது.

இந்திய அரசு சிங்களப் பேரினவாத அரசின் நேர் இனக்கொலைக்கு உதவியது போலவே தொடரும் கட்டமைப்பியல் இனவழிப்புக்கும் உதவி வருகிறது. இந்தியா இலங்கைக்கு வழங்கும் மின்சாரமும் இவ்வகையான உதவி என்றுதான் பார்க்க வேண்டும். இலங்கை இயல்பு நிலையில் இல்லை என்பது பொருளியலின் பாற்பட்ட உண்மை மட்டுமல்ல. அது அந்நாட்டில் நிலவும் இனப்பூசலின் பாற்பட்டதுமாகும். இனவழிப்பு வரை போய் விட்ட இனப் பூசலுக்குத் தீர்வு இல்லாமல் எல்லாம் இயல்புநிலையில் இருப்பது போல் இந்தியா நடந்து கொள்வது தமிழ்மக்களுக்கு நீதி செய்வதாகாது என்பது மட்டுமல்ல, தொலைநோக்குப் பார்வையில் சிங்கள மக்களின் குடியாட்சிய நலன்களுக்கும் உதவாது.

கேள்வி:
‘நரமனுச சங்கார’ என்னும் அமித்சாவின் உச்சரிப்பை இனவழிப்பு
என எப்படித் தமிழ்ப்படுத்தலாம்?

“இதே UPA கூட்டணிதான் இலங்கையில் தமிழர்கள் ஒழிக்கப்படக் காரணமாக இருந்தார்கள்” என்று இராமேசுவரத்தில் அமித்துசா பேசியதாகத் தமிழ்நாட்டுத் தமிழ் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. “Genocide of Tamils in Sri Lanka” என்று அவர் பேசியதாக ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன. எனவே அவர் இனவழிப்பு என்று சொன்னதாகவே நாம் பொருள் கொள்ளலாம். இந்தியாவை ஆளும் பாரதிய சனதா கட்சியின் அனைத்திந்தியத் தலைவர், நாட்டின் உள்துறை அமைச்சர் இப்படிப் பேசியிருப்பது முக்கியமானது.

நமது கவலையெல்லாம் இது தமிழர்களை ஏமாற்றும் வெற்றுப் பேச்சாகவே இருந்து விடக் கூடாது என்பதுதான். நடந்தது இனவழிப்புதான் என்றால் இனவழிப்பு ஆளான தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய அமித்துசாவும் இந்திய அரசும் செய்யப் போவதென்ன? இனவழிப்புக்கு நீதி பெறத் தமிழர்கள் எழுப்பும் கோரிக்கைகளை இனியாவது இந்திய அரசு ஆதரிக்குமா? ஆதரிக்க வேண்டும் என நாம் கோரத் தயங்கக் கூடாது.

கேள்வி:

திமுகவின் ஈழத்தமிழர் குறித்த அக்கறையின்மை அண்ணாமலையின்
கச்சத்தீவு மீட்பு கோசத்திற்கு வழிவகுத்து தமிழரிடை இந்துத்துவ விரிவாக்கத்திற்கு உதவுகிறது எனலாமா? திமுகவினரிடை ஈழத்தமிழர் தேசியம் குறித்துப் பேச உட்கட்சித் தடை விதிக்கப்பட்டுள்ளதா?

திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் இப்படித்தான் நடந்து கொள்ளும். இந்தச் சிக்கலில் மட்டுமல்ல, தமிழர் நலவுரிமை சார்ந்த எல்லாச் சிக்கலிலும் இப்படித்தான் நடந்து கொள்ளும். பதவி அரசியலுக்குப் போராட்ட அரசியலைப் பலிகொடுப்பதன் விளைவு இது. அதே போது திமுக அணிகளும் திமுக பக்கமிருக்கும் வெகுமக்களும் நமக்குத் தேவை என்பதை மறந்து விடக் கூடாது. அதே போல் திமுக அரசை நமக்கு ஆதரவாக நிலை எடுக்க வைப்பதும் தமிழ்நாட்டளவிலும் இந்திய அளவிலும் பன்னாட்டளவிலும் முகன்மையானது. இதை அலட்சியம் செய்து விட வேண்டா.

கச்சத்தீவு மீட்பு முழக்கமெல்லாம் வெறும் கேலிக் கூத்து. வாக்கு வேட்டை அரசியலுக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். இந்திய விரிவாதிக்க அரசு என்றாவது இலங்கையை வன்பறிப்பு செய்து தன்னோடு இணைத்துக் கொள்ளத் தீர்மானித்தால் அப்போது வேண்டுமானால் கச்சத் தீவு முழக்கம் மெய்ப்படக் கூடும். இதனை உடனடி வாய்ப்பாக நான் பார்க்கவில்லை.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 287