சனி, 16 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 212 : “ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும்”

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 211 : ஒட்டிய மண்ணும் ஒட்டாத மணலும் – தொடர்ச்சி)

“ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும்”

இடையன்குடியின் பழங்குடிகளான நாடார்கள், அவர்களின் பனையேறும் தொழில், அவர்கள் வாழ்ந்த குடிசைகள்… இவை எல்லாவற்றையும் பற்றி இரா.பி. சேதுப்பிள்ளை எழுதுவதைப் படித்த பின்… இன்றைக்குள்ள இடையன்குடியைப் பார்க்கும் போது வியப்பாக இருந்தது.

“இத்தகைய செம்மணற்பரப்பிற் சிறந்தோங்கி வளரும் பனைமரங்கள் கண்களைக் கவர்ந்து குளிர்விக்கும் செழுமை வாய்ந்தனவாம். பிளந்த கள்ளியும் விளிந்த முள்ளியும் நிறைந்த தேரியினில் கற்பகத்தருவெனத் தழைத்துச் செழித்து வளரும் பனைகளே அந்நிலத்தில் வாழும் மாந்தற்குப் பழுதற்ற செல்வமாகும். காலையும் மாலையும் பனையேறிப் பதநீர் வடித்துப் பண்புறக் காய்ச்சி, கட்டி செய்து விற்றுக் காலங்கழிக்கும் ஏழை மக்களே அவ்வூர்ப் பழங்குடிகளாவர். காலுடுவெல் ஐயர் அவ்வூரிற் போந்த பொழுது கூரை வேய்ந்த குடிசைகள் தாறுமாறாகக் கட்டப்பட்டிருந்தன. மனைகளைச் சூழ்ந்து முள்நிறைந்த கள்ளியே வேலியாக அமைந்தது. நேரிய தெருக்கள் எங்கும் காணப்படவில்லை. ஊர் நடுவேயமைந்த அகன்ற வெளியிடத்தில் ஓங்கி உயர்ந்த புளி மரங்கள் ஆங்காங்கு நின்று நிழல் விரித்தன. அவ்வெளியிடத்தில் ஒரு மூலையில் வழிபாட்டுக்குரிய கிருத்துவக் கோயிலும் வேதியர்க்குரிய சிறு வீடும் அமைந்திருந்தன.”

காலுடுவெல் அம்மனையைத் தம் இருப்பிடமாகக் கொண்டு கோயிலையும் குடியிருப்பையும் திருத்தி அமைத்தார். கள்ளியையும் முள்ளியையும் களைந்தெறிந்தார். தெருக்களைத் திருத்தமுற வகுத்து, கிணறுகளமைத்து மரங்கள் நட்டு சிறு வீடுகள் கட்டுவித்தார். முத்தாய்ப்பாக…

“எண்ணும் எழுத்தும் அறியாதிருந்த அவ்வூர்ச் சிறுவர் சிறுமியர்க்கு எழுதவும் படிக்கவும் கற்பிக்கக் கருதிப் பாடசாலைகள் நிறுவினார்.”

பெண்மக்கள் கல்வி கற்றல் பெருந்தவறு என்ற கருத்தை மாற்றியமைக்க காலுடுவெல் அரும்பாடுபட்டார். “விலங்கொடு மக்களனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்” என்பதன் கருத்தை விரித்துரைத்து ஆண் மக்களும் பெண் மக்களும் கல்விகற்று அறிவுடையர் ஆவதற்கு வழிகோலினார்.

காலுடுவெல் நிறுவிப் போற்றி வளர்த்த கல்விக் கூடங்கள் இன்றளவும் இடையன்குடியிலும் சுற்றுவட்டாரத்திலும் ஆயிரக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வி வழங்கி வருவதைக் காண முடிகிறது.

இடையன்குடியில் அழகுற அமைந்த வரிசையான வீடுகளில் இப்போது குயிருப்போரில் பலரும் ஆசிரியர்கள் என்ற செய்தியைக் காலுடுவெல் நினைவகப் பணியாளரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

கல்வியறிவு ஒரு சமுதாயத்தை எப்படி எல்லாம் மாற்றியமைக்க முடியும் என்பதற்குத் தமிழ்நாட்டில் நாடார் சமுதாயமே முதற்சான்று. நாடார் சமுதாயக் கல்விமரம் தழைப்பதற்கு வித்தூன்றியவர் வேறு யார்? காலுடுவெல் ஐயரேதாம்!

வீதிகளின் நேர்மையும் வீடுகளின் செம்மையும் ஆண்பெண் பிள்ளைகளின் கல்வி வளமையும் காலுடுவெல்லைக் களிப்புறச் செய்தன. வீதி திருத்தி வீடு திருத்திக் கல்வி திருத்திக் கடைசியாகத்தான் கோயில் திருத்த முனைந்தார் அப்பெருமகன். “ஊர் நடுவேயமைந்த வெளியிடத்தில் விழுமிய கோயில் எடுக்க விழைந்தார்” என்பார் சேதுப்பிள்ளை.

பிதா சுதன் ஆவி என்பது கிறித்துவ நம்பிக்கையில் திரித்துவம் எனப்படுகிறது. ஆங்கிலத்தில் TRINITY என்பதை நல்ல தமிழில் மும்மை எனலாம். காலுடுவெல் கட்டியது HOLY TRINITY CHURCH. தூய திரித்துவ தேவாலயம். நாம் தூய மும்மைக் கோயில் எனலாம்.

திரி என்பது ஆங்கிலத்திலும் இந்தி உள்ளிட்ட ஆரிய மொழிகளிலும் மூன்றைக் குறிக்கும். திரி பலநேரம் தமிழில் திருவுடன் குழம்பி விடுகிறது. காலுடுவெல் கட்டிய கோயிலைத் திருத்துவ ஆலயம் என்று சிலர் எழுதுகின்றனர். திரித்துவ ஆலயம் என்பதுதான் சரி என்று நினைக்கிறேன். ஈழத்திலும் ஆங்கிலத்தில் TRINCOMALEE என்று திரிந்து போன திருக்கோணமலையைத் திரிகோணமலை என்றும் எழுதுகின்றனர். திருக்கோணமலைதான் சரி என்று நினைக்கிறேன். அறிவார்ந்த அன்பர்கள் தெளிவாக்கினால் நன்றாக இருக்கும்.

இடையன்குடியில் காலுடுவெல் கட்டிய கோயிலைச் சுற்றிப்பார்த்து வியந்த படி அருள்திரு கிப்புசனிடம் என் கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருந்தேன். அவரும் சளைக்காமல் விடையிறுத்துக் கொண்டே இருந்தார்.
இரா.பி.சே. சொல்வது போல், “கிறித்துநாதர் பெருமைக்கேற்ற வகையில் புறக்கோயில் கட்டத் தொடங்கு முன்னமே ஐயர் தம் மனத்தில் அகக்கோயில் கட்டி முடித்தார். ஆலயம் அமைக்கும் முறைகளைச் செவ்வையாக அறிந்திருந்த ஆங்கில நாட்டு ‘ஆலய நிருமாணச் சங்க’த்தாரிடம் காலுடுவெல் ஐயர் தம் கருத்தைத் தெரிவித்தார்.”

அச்சங்கத்தார் வரைந்தனுப்பிய பெருங்கோயிலுக்குரிய வரைபடங்களைக் கண்ட காலுடுவெல் ஐயரின் உள்ளம் துள்ளியெழுந்ததாம்!

அப்பொழுது ஆங்கில நாட்டு நண்பர் ஒருவர்க்கு எழுதிய நிருபத்தில் (கடிதம்) “ஆலய நிருமாண சங்கத்தார் வரைந்துதவிய படங்களால் எனக்கு ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும் மிச்சம்” என்று குறிப்பிட்டாராம் கால்டுவெல் ஐயர்!

ஆங்கில நாட்டிலும் தமிழ்நாட்டிலும் பொருள் திரட்டிக் காலுடுவெல் தொடங்கிய திருப் பணி நிறைவுற 33 ஆண்டுகள் ஆயின. இந்தக் கோயிலின் ஒவ்வொரு கல்லிலும், குறிப்பாக ஒவ்வொரு சாளரத்திலும் கலை வண்ணம் மிளிரக் காணலாம்.

இடையன்குடி திரித்துவக் கோயிலின் இனிய கோயில் மணியோசை கேட்ட போது, அந்தக் கோயில் மணிகளை காலுடுவெல் இலண்டனிலிருந்து கப்பலில் வரவழைத்தார் என்ற செய்தி நினைவுக்கு வந்தது.

கோயில் மணி பார்க்கப் படியேறி மேலே செல்லப் புறப்பட்ட போது… அந்த ஏற்றம் ஒரு புறம் இவ்வளவு கடினமாகவும் மறு புறம் இவ்வளவு மனத்துக்கின்பமாகவும் இருக்கும் என்று நினைக்கவில்லை. ஏறுவோமா?

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 238

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

ஆளுமையர் உரை 64,65 & 66 : இணைய அரங்கம்: 17.09.2023

 


கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி (திருவள்ளுவர், திருக்குறள் 418)

தமிழே விழி!                                  தமிழா விழி!                                             

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 64,65 & 66  : இணைய அரங்கம்

ஆவணி 31, 2057 ஞாயிறு  17.09.2023 தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: உரைச்சுடர் செல்வி .காருண்யா

தமிழும் நானும் – உரையாளர்கள்

தொல்காப்பியப் புலவர் கு.வெற்றியழகன்

உலகக் கவிஞர் முனைவர் எழில்வேந்தன்

கவிஞர் தமிழ்க்காதலன்
தொகுப்புரை தமிழ்த்தேசியர் தோழர் தியாகு

நன்றியுரை : மாணவர் இரா.ஆகாசு





தோழர் தியாகு எழுதுகிறார் 211 : ஒட்டிய மண்ணும் ஒட்டாத மணலும்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 210 : நடந்தார் வாழி காலுடுவெல்! – தொடர்ச்சி)

ஒட்டிய மண்ணும் ஒட்டாத மணலும்


இனிய அன்பர்களே!
தேரிக்காடு என்று முதன்முதலாக எப்போது கேள்விப்பட்டேன், தெரியுமா? கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கரும்பொன்ம ஈரயிரகை (Titanium dioxide) ஆக்கம் செய்யும் தொழில் அமைக்க (இ)டாடா குழுமம் மாநில அரசோடு புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்தது.

தேரிக்காட்டில் கடலோரத்திலிருந்து தொடங்கி பலநூறு சதுரக்கல் பரவிக் கிடக்கும் தாது மணலைத் தோண்டியள்ளி வேதிச் செயல்வழிகளின் ஊடாகப் பிரித்தெடுத்தால் கரும்பொன்ம ஈரயிரகை (Titanium dioxide) கிடைக்குமாம். தாது மணல் பரவிக் கிடக்கும் ஏராளமான நிலங்கள் தனித்தனி உழவர்களுக்குச் சொந்தமாக இருந்த படியால் அவற்றை (இ)டாடா குழுமம் விலைக்கு வாங்க வேண்டியிருந்தது. உழவர்களோ நிலத்தை விற்க மறுத்தார்கள். சூழலியல் நோக்கிலும் தாது மணல் கொள்ளைக்கு எதிர்ப்பு கிளம்பிற்று.

முதலமைச்சர் உழவர்களிடம் நிலத்துக்குக் கூடுதல் விலை பெற்றுத் தருவதாக வாக்களித்தார். அதற்காக அமைச்சர் ஒருவரையே நேரில் அனுப்பியும் வைத்தார். ஆனால் உழவர்கள் நிலம் கொடுக்கவில்லை.

அந்த நேரத்தில் (இ)டாடாவின் கரும்பொன்மத் (Titanium) திட்டத்துக்கு எதிராக நெல்லை சவகர் திடலில் பெரும் பொதுக்கூட்டமாக நடைபெற்ற மாநாட்டில் நான் பேச அழைக்கபப்ட்டு நெல்லை போயிருந்தேன். போகும் போது சமரனையும் அழைத்துப் போயிருந்தேன். மேடையில் அவனோடு உட்கார்ந்திருந்தேன். “அதிக நேரம் பேசாதே பும்பா, பேசினால் பேச்சை நிறுத்து என்று குரல் கொடுப்பேன்” என்று என்னை எச்சரித்துக் கொண்டே இருந்தான். அவன் செய்யக் கூடியவன். முன்பு அப்படிச் செய்தவன். இவனைக் கீழே கொண்டுபோய் ஏதாவது வாங்கிக் கொடுத்து யாரிடமாவது விட்டு விட்டு மேடைக்குத் திரும்பலாம் என்று நினைத்துக் கீழிறங்கி ஒரு கடைவாசலில் நின்றேன். ஒருவர் என்னைத் தனியாக அழைத்துப் போய்க் கேட்டார்: “நீங்கள் எப்படி இந்த மாநாட்டுக்கு வந்தீர்கள்?”

“அழைத்தார்கள், வந்தேன்.”

“அழைத்தது யார்?”

நான் அவர் பெயரைச் சொன்னேன்.

“இந்த மாநாட்டுக்கு எவ்வளவு செலவு தெரியுமா? யார் செய்யும் செலவு தெரியுமா?”

“தெரியாது.”

“தெரிந்து கொள்ளுங்கள். (இ)டாடாவை விடக் கூடாது என்ற நோக்கத்தில் விவி மினரல்சு வைகுண்டராசன் செய்யும் செலவு.”

அதற்கு மேல் பேச முடியவில்லை, வந்து விட்டேன்.

பிறகு நெல்லை நண்பர்கள் சிலரைக் கேட்ட போது அதுதான் உண்மை என்றனர். பல வழிகளிலும் வைகுண்டராசனின் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கூடங்குளம் போராட்டத்தைக் குழப்ப அவர் செய்த முயற்சிகளைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். யார் ஆட்சியில் இருந்தாலும் தேரிக்காட்டில் விவி மினரல்சின் தாது மணற் கொள்ளையை எதிர்த்துத் துரும்பும் அசைத்திடார். அதிகார வகுப்பிலும் அரசியல் கட்சிகளிலும் ஊடகங்களிலும் அவர் சிலரைக் கூலிகொடுத்து வைத்துள்ளார். அவர்கள் சொல்லிலும் செயலிலும் அவருக்கு விசுவாசமாக நடந்து கொள்வதையும் கண்ணுள்ள எவரும் காணலாம்.

அந்தத் தேரிக்காட்டின் ஓரத்தில்தான் இடையன்குடியும் அமைந்துள்ளது. ஆனால் காலுடுவெல் வந்த காலத்தில் வைகுண்டம் இருந்தது, சிறிவைகுண்டம் (திருவைகுண்டம்) என்று இருந்தது. ஆனால் மண்ணைச் சுரண்டி எடுத்துப் பொன் குவிக்கலாம் என்று தெரிந்து வைத்திருந்த வைகுண்டராசன் இல்லை.

மணல் = மண் + அல் என்று பிரித்துச் சொல்வார்கள் தமிழறிஞர்கள். ஒட்டுவது மண், ஒட்டாதது மணல் என்று விளக்கம் தருவார்கள். (இ)டாடாவுக்கு ஒட்டாத தாதுமணல் விவிக்கு மட்டும் அப்படியே ஒட்டிக் கொண்டது. ஒட்டும் போது உதறியதே ஒருசிலரை உயர்த்திக் கொண்டிருக்கிறதாம்! (இ)டாடா என்று சொல்லிப் பாருங்கள், உதடு ஒட்டாது! விவி என்றால் ஒட்டும்! என்று விளக்கந்தரக் கூலிக்காரர் யாருமில்லையா?

தேரிக்காட்டில் புதைந்தும் புதையாத இந்த செம்மணல் வளம் பற்றிக் காலுடுவெல்லுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் கண்ணில் பட்டதெல்லாம் மனிதவளமே. “கல்லைப் பிசைந்து கனியாக்கும் கருணை வாய்ந்த கால்டுவெல் ஐயர்” என்பார் இரா.பி.சே.

வெம்மை தகித்த இடையன்காட்டில் காலுடுவெல் வந்திறங்கிய கதையை அவர் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தோம். அவர் தொடரக் கேட்போம். –

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 238

வியாழன், 14 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 210 : நடந்தார் வாழி காலுடுவெல்!

     14 September 2023      அகரமுதல



(தோழர்தியாகு எழுதுகிறார் 209 : “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” – தொடர்ச்சி)

நடந்தார் வாழி காலுடுவெல்!

இரா.பி. சேதுப்பிள்ளை எழுதிச் செல்கிறார்:

 “இவ்வாறு கிறித்து சமயம் பரவி வரும் பொழுது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பருவந்தவறிப் பெய்த பெருமழையால் பொருனையாறு கரைபுரண்டு எழுந்து பல சிற்றூர்களைப் பாழாக்கியது. ஆற்றுவெள்ளம் அடங்கிய பின்பு கொள்ளைக் காய்ச்சலென்னும் கொடிய நோய் விரைந்து பரவியது. வெள்ளத்தால் வீடிழந்து உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி வருந்திய மக்கள் காய்ச்சலுக்கிரையாகிக் கழிந்தார்கள். இந்நோய் கிருத்தவ நாடார்கள் வசித்த ஊர்களில் நூற்றுக்கணக்கான மாந்தரைச் சூறையாடினமையால் மதம் மாறிய மக்கள் மனம் பதைத்தார்கள். முன்னோர் பொன்னே போற் போற்றிய தொன்னெறி துறந்து கிறித்து மதத்தை ஏற்றமையாற் கேடு வந்துற்றதென்று எண்ணினார். தள்ளருஞ் சீற்றமுற்ற பழைய தெய்வங்களின் ஏவலாற் கொள்ளைக் காய்ச்சல் வந்திறுத்ததென்று உள்ளங்கவன்றார். குற்றம் புரியும் மாந்தரை ஒறுக்கும் திறம் வாய்ந்த கொடிய தெய்வங்களைக் கொடையாற் சாந்தி செய்ய முற்பட்டார். இடையன் குடியிலும் அதைச் சார்ந்த இடங்களிலும், கொடைகளும் விழாக்களும் மலிந்தன. மதம் மாறிய மாந்தரிற் பலர் மீண்டும் தொன்னெறியைக் கடைப்பிடித்து வாழத் தொடங்கினர். ஆகவே சத்தியநாதர் முதலிய தொண்டர் ஆர்வத்தால் விரைந்து பரவிய கிறித்து மதம் வெள்ளத்தாலும் கொள்ளைக் காய்ச்சலாலும் துளங்கித் தளர்வுற்றது. பஞ்சமும் பிணியும் நீங்கிய பின்னரும் புதிய மதத்தினை நெஞ்சினால் நினைக்கவும் பலர் அஞ்சினர்; அம்மதத்தைப் புகழ்ந்து பேசிய வேதியரை மனமார  வெறுத்தார். ஒல்லும் வகையால் அன்னார்க்கு அல்லல் விளைத்து அவரை நாட்டை விட்டு ஓட்ட முயன்றார். ஆயிரத்து எண்ணூற்று முப்பதாம் ஆண்டில் இடையன் குடியிற் பணி செய்த கிருத்தவ வேதியர் மீது கொள்ளைக் குற்றஞ் சாற்றப்பட்டது. சருக்காருக்குரிய வரிப் பணத்தை வசூலித்துத் தலையாரி கொண்டுவரும் பொழுது வேதியரும் அவர் வகையினரும் வழிமறித்துப் பணத்தைத் தட்டிப்பறித்துக் கவர்ந்து கொண்டாரென்று வழக்குத் தொடரப்பட்டது. குற்றஞ் சாற்றப்பட்ட கிருத்தவர்கள் கையில் விலங்கு பூட்டி முப்பது கல் தூரத்திலமைந்த பாளையங்கோட்டைக்கு அவர்களை இட்டுச் சென்று சிறைக்கொட்டத்தில் அடைத்து வைத்தார்கள். குற்ற விசாரணை முடிவதற்குள் ஐந்து மாத காலம் கழிந்தது. இறுதியில் கிருத்தவர்கள் குற்றவாளிகள் அல்லர் என்று நீதிமன்றத்தார் தீர்ப்புரைத்தாரேனும் ஐந்து மாதங்களாக அவரடைந்த துன்பத்திற்கு ஓரளவில்லை. இத்தகைய இடுக்கண்ணுற்றவிடத்தும் கிருத்து மதத்தை விடாது பற்றி நின்றார் சிலர். அன்னார், மாசற்ற ஏசுநாதரின் பெருமையையும், சிறியோர் கையிற் சிக்குண்டு அவரடைந்த சிறுமையையும் நினைத்து நெஞ்சந்தேறி நெறிமுறை தவறாது வாழ்ந்து வந்தார். இங்ஙனம் அலக்கணுற்று நின்ற நாட்டில் காலுடுவெல் ஐயர் அறப்பணி செய்யப் போந்தார்.”        

இரா.பி.சே “நாடும் நடையும்” என்ற தலைப்பில் காலுடுவெல் சென்னை மாநகர் வந்தடைந்து அங்கிருந்து 400 கல் நடந்தே நெல்லைக்குப் புறப்பட்ட செய்தியை வண்ணிக்கிறார். காலுடுவெல் நடந்த வழிநடையும் அதைச் சொல்லும் இரா.பி சேதுப்பிள்ளையின் மொழிநடையும் கருதிச் சில சொல்லியங்களை மட்டும் எடுத்துக்காட்டுகிறேன்.

“நானூறு கல் தூரம் நடந்து செல்லுகையில் நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும், அவர் பேசும் மொழியையும் நன்கு அறிந்து பயனுறலாகுமென்பது அவர் கருத்தாகும்….”

“பொன்னி நாடென்று ஆன்றோராற் புகழப்பெற்ற சோழ நாட்டின் வளம்பெருக்கும் காவிரியின் செழும் புனலைக் கண்டுகளித்தார். அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலத்தின் பழமையையும் பெருமையையும் கண்கூடாகக் கண்டார்;…

“…கும்பகோணத்தின் வழியாகத் தஞ்சை மாநகரம் போந்து விண்ணளாவிய கண்ணுதற்பெருமான் கோயிலையும், சோழ மன்னர்கள் எடுத்த கோட்டையையும் கண்டு மகிழ்ந்தார்….”

“..சோழ நாட்டின் நிலவளமும், தரங்கம்பாடியின் கடல்வளமும், நீலகிரியின் மலைவளமும் அவருள்ளத்தில் நன்கு நிலைபெற்றன.”  .  

நீலகிரியிலிருந்து கோவை வழியாக மதுரை நோக்கிப் புறப்பட்ட காலுடுவெல்  வழிநெடுக அடைந்த அவதிகள் பல.

“வண்டியேறிச் செல்ல வகையற்ற வெள்ளையர் திண்டாடித் தெருவழியே செல்கின்றாரென்று அவரை இழித்துரைத்தார் பலர். தொல்லை வினையால் துயருழந்து செல்லும் பரங்கியைப் பார்மின் என்று வீட்டிலுள்ளாரைப் பரிந்தழைதார் பலர்.”

“பாண்டிய நாட்டின் தலைநகராய மதுரையை வந்தடைந்த பொழுது தாயைக்கண்ட சேய்போல் ஐயர் அகமலர்ந்து இன்புற்றார்; ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும் பெருமை வாய்ந்த வையையாற்றில் புது வெள்ளம் பெருகிவரக் கண்டு உள்ளங்குளிர்ந்தார். அப்பால் அங்கயற்கண்ணியோடு இறைவன் வீற்றிருந்தருளும் திருக்கோவிலின் அழகினைக் கண்டு ஆனந்தமுற்றார். திருமலை நாயக்கர் எடுத்த மாளிகை முற்றும் சுற்றிப் பார்த்து அதன் மாண்பினை மனமாரப் புகழ்ந்தார்.”

மதுரையிலிருந்து புறப்பட்டுத் திருமங்கலம் சென்று, சமயத்தொண்டு ஆற்றி வந்த தமிழறிஞர் திரேசியருடன் அளவளாவி விட்டு, சில நாட்களில் நெல்லை வந்தடைந்த காலுடுவெல் பொருனையாற்றைக் கடந்து பாளையங்கோட்டை சென்று, அங்கு வாழ்ந்த கிருத்தவர்களோடு அளவளாவி விட்டு, நலிந்த மக்கள் வாழும் நாசரேத்தை அடைந்து  அவர்கள் விரும்பியவாறு சமயச் சொற்பொழிவாற்றினார். அடுத்த ஞாயிற்றுக் கிழமை முதலூரில் விரிவுரை ஆற்றிய பின் இடையன்குடி நோக்கிப் புறப்பட்டார். காத வழி தூரத்தில் அமைந்திருந்த அவ்வூரை நோக்கிச் செல்லும் பொழுது வழிதவறி நெடுந்தொலைவு சுற்றி இராப்பொழுதில் அவ்வூரை அடைந்தாராம்.

இடையன் குடியின் புவியியலை இரா.பி. சேதுப்பிள்ளை சுள்ளென வண்ணிக்கிறார்:

“திருநெல்வேலி நகருக்குத் தென்கிழக்கே நாற்பது கல் தூரத்தில் செக்கச் சிவந்த தேரியில் இடையன் குடி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. கதிரவன் வெம்மையை ஆண்டு முழுதும் பெற்று விளங்கும் அவ்வூரில் ஊற்று நீரல்லால் வேற்று நீரில்லை. காலையெழும் கதிரொளி மாலையில் மறையுமளவும் அதன் வெம்மையைத் தாங்கி நிற்கும் தேரியைக் காணும் கண்ணும் கருத்தும் மனமும் ஒருங்கே கருகுவனவாகும். வெய்யோன் ஒளி விரைந்து பரவிச் செந்நிலத்தை வெந்நிலமாக்கும் பொழுது ‘செந்நெருப்பினைத் தகடு செய்து பார் செய்ததொக்கும் அச்செந்தரை’ என்று பரணிக் கவிஞர் எழுதிய பாலையின் வடிவம் நம் கண்ணெதிரே பரந்து தோன்றுவதாகும்.”    

பனிபொழியும் குளிர்நிலத்தில் பிறந்து வளர்ந்த அந்த இளைஞர் வெம்மை வாட்டும் இந்தச் செம்மணல் காட்டில் எப்படி வாழத் துணிந்தாரோ? இத்தனை நீண்ட ஆண்டுகளுக்குப் பின் அதே இடையன்காட்டில் அவர் வாழ்ந்த இல்லத்தின் மரநிழலில் நின்ற பொழுது என் நெஞ்சை வாட்டிய நினைவு இதுவே! இடையன்காடு அக்காலத்தில் எப்படி இருந்தது? அங்கு வதிந்த மக்கள்? அவர்கள் வாழ்வில் கால்டுவெல் நிகழ்த்திய மாற்றம்? பார்ப்போம்

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 23
6

புதன், 13 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 209 : “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை”

 




(தோழர்தியாகு எழுதுகிறார் 208 : இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன் – தொடர்ச்சி)

“செந்தமிழுக்குச்  சேதுப்பிள்ளை”

இனிய அன்பர்களே!

இரா.பி. சேதுப்பிள்ளை பற்றி முதலில் எப்போது படித்தேன்?            

அறிஞர் அண்ணாவின் சொல்வன்மைக்குச் சான்றாக ஒரு நிகழ்வைச் சொல்வதுண்டு: ஒரு முறை அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொது மேடையில் இரா.பி. சேதுப்பிள்ளை அண்ணாவிடம், “எதிர்பாராமல் அளிக்கும் தலைப்பில் உடனே பேசுவீர்களா?” என்று கேட்டார்.. “பேசுவேன்” என்று அண்ணா கூறினார். உடனே சேதுப்பிள்ளை அதே மேடையில் “ஆற்றங்கரையினிலே” என்னும் ஒரு தலைப்பை வழங்கினார். ‘அண்ணா எப்படிப் பேசுவாரோ?’ என அவையினர் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

அண்ணா எழுந்தார், “சிந்து நதி என்னும் அந்த ஆற்றங்கரையோரத்தில்தான் ஆரியர்கள் முதன்முதலாக வந்து குடியேறினார்கள்” என்று கம்பீரமாகத் தொடங்கினார். கையொலியால் அவை அதிர்ந்தது. அந்த ஒலி அடங்க நெடுநேரமாயிற்று. தலைப்பையொட்டி ஏறத்தாழ ஒரு மணிநேரம் அண்ணா அழகிய உரை வழங்கினார். தம் கொளகைகளை அழுத்தமாக முழங்கினார். 

[அண்ணாவின் இந்த முழு உரையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இது வரை கிடைத்த பாடில்லை.]

யார் இந்த இரா.பி. சேதுப்பிள்ளை? என்று தெரிந்து கொள்ளும் ஆவல் இந்தச் செய்தியால் தூண்டப்பெற்றது. “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று பாராட்டியவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். சேதுப்பிள்ளையின் இந்த ஒரு மேற்கோள் என்னைப் பெரிதும் ஈர்த்தது:

“அருமையான தமிழ்ச் சொல் ஒன்று இருக்க ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பார் உண்டோ?”

இது கூர்மையான கருத்து என்பது மட்டுமன்று. சேதுப்பிள்ளையின் உரைநடையில் அடுக்குத் தொடர், எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகியன அமைந்திருக்கும் என்பதற்கும் இதுவே சான்று.

சேதுப் பிள்ளையிடம் நான் சுவைத்துப் படித்த சில மேற்கோள்கள்:

“வாழ்வும் தாழ்வும் நாடு நகரங்களுக்கும் உண்டு. சீரும் சிறப்பும் உற்று விளங்கிய சில நகரங்கள் இக்காலத்தில் புகைபடிந்த ஓவியம்போல் பொலிவிழந்திருக்கின்றன.”

“அறம் மணக்கும் திருநகரே! சில காலத்திற்கு முன்னே பாண்டி நாட்டில் பருவமழை பெய்யாது ஒழிந்தது; பஞ்சம் வந்தது; பசிநோயும் மிகுந்தது; நாளுக்குநாள் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்தது; நெல்லுடையார் நெஞ்சில் கல்லுடையார் ஆயினர். அப்போது அன்னக் கொடி கட்டினார் சீதக்காதி. ‘கார்தட்டினால் என்ன? கருப்பு முற்றினால் என்ன? என் களஞ்சிய நெல்லை – அல்லா தந்த நெல்லை – எல்லார்க்கும் தருவேன்’ என்று மார்தட்டினார் – இதுவன்றோ அறம்?”

 “தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை ” வாடை” என்றார்கள்; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் ” தென்றல்” என்றார்கள் . வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு. தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலில் மகிழ்ந்து திளைப்பர்.”

காலுடுவெல் வாழ்ந்த இடையன்குடி பற்றிய செய்திகளுக்காக இரா.பி. சேதுப்பிள்ளையின் ‘காலுடுவெல் ஐயர் சரிதம்’ நூலிலிருந்து சில பகுதிகளை எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தேன். தொடர்கிறேன். –

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 236

(பி.கு. ஆறறங்கரையினிலே நூலை https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh8lupy&tag=%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87#book1/  இணைப்பில்

அல்லது

https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87.pdf/3  இணைப்பில் படிக்கலாம்.)


செவ்வாய், 12 செப்டம்பர், 2023

தோழர்தியாகு எழுதுகிறார் 208 : இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன்

      12 September 2023      அகரமுதல



(தோழர்தியாகு எழுதுகிறார் 207 : தமிழ்மணக்கும் காலுடுவெல் இல்லம் – தொடர்ச்சி)

இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன்

இராபருட்டு காலுடுவெல் குறித்தும் அவரது மொழியியல் ஆய்வு, அதன் முடிவுகள் குறித்தும் அண்மைக் காலத்தில்தான் நிறைய படித்தேன். அரசியல் வகுப்புக்காகப் படித்தமையால் சற்று ஆழ்ந்தே படித்தேன் எனலாம்.

மொழிநூல் அறிஞர் காலுடுவெல் ‘திராவிடம்’ என்ற சொல்லை ஆண்டார் என்ற ஒரே காரணத்துக்காக  உடனடி அரசியல் தேவைகளுக்காக அவரைக் கொச்சைப்படுத்தும் போக்குகள் தலைதூக்கியிருக்கும் இத்தருணத்தில் காலுடுவெல்லை முறையாக அறிந்து கொள்வதும் அறியச் செய்வதும் தேவை எனக் கருதுகிறேன்.

அவர் தமிழியல் ஆய்வாளராக மட்டும் இருந்து விடாமல், தமிழ் மண்ணில் வாழ்ந்து, தமிழ் மக்களோடு அரை நூற்றாண்டுக்கு மேல் ஊடாடிப் பணி செய்தவர் என்ற உண்மை அவரை எல்லாக் கோணங்களிலிருந்தும் பயிலும் ஆவலைத் தூண்டியது. இது அறிவுசார் ஈடுபாட்டுடன் ஓர் உணர்வுசார் நேசமும் வளரக் காரணமாயிற்று.

இராபருட்டு காலுடுவெல் செய்த ஆய்வுகளும், வாழ்ந்த வாழ்க்கையும், ஆற்றிய பணிகளும் சில விடைகள் கண்ட போதே பல வினாக்களையும் விட்டுச் சென்றன. அவர் வாழ்ந்த இடையன்குடிக்குப் புறப்படும் போதே, அந்த ஊர் பற்றிய முரண்பட்ட செய்திகளை அறிந்துதான் வைத்திருந்தேன். இடையன்குடி என்ற ஊர்ப் பெயர் பற்றிப் பலரும் இப்படிப் பலவாறு எழுதியிருக்கின்றனர்:

1)      இடையன்குடி ஆதியில் இடையர்களின் குடியிருப்பாக இருந்தது. சமயப் பரப்புப் பணிக்காக அங்கு வந்து குடியேறிய இராபருட்டு காலுடுவெல் அங்குள்ள நாடார்களைக் கிறித்துவ சமயத்துக்கு மதமாற்றி, ஊரை முழுமையாகச் சீரமைத்தார். மற்ற கிறித்துவ மத போதகர்கள் தாங்கள் உருவாக்கும் குடியிருப்புகளுக்கு விவிலியப் பெயர்கள் சூட்டுவது வழக்கம். ஆனால் காலுடுவெல் அப்படிச் செய்யாமல் இடையன்குடி என்ற பழைய பெயரையே தக்கவைத்துக் கொண்டார்.

2)      அயர்லாந்தியராகப் பிறந்து சுகாட்டுலாந்தில் வளர்ந்த காலுடுவெல்லின் சொந்த ஊர் SHEPHERDYARD. இதைத் தமிழாக்கினால் இடையன்குடி என்று வரும். இடையன்குடியைக் கால்டுவெல் தேர்ந்தெடுக்க இது ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒரு கருத்து.

3)      முன்பு இடையன்குடி வேறு பெயரால் வழங்கியிருக்க,  காலுடுவெல்தான் சொந்த ஊர்ப் பாசத்தால் இடையன்குடி என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.

4)      இயேசு கிறித்துவை ஆயராகவும் மக்களை ஆட்டு மந்தையாகவும் கருதும் கிறித்துவ மரபையொட்டி இடையன்குடி என்ற பெயரே காலுடுவெல்லுக்குப் பொருத்தமான பெயராகத் தெரிந்திருக்கலாம்.

நான் இந்தச் செய்திமுரண்கள் பற்றி கிறித்துவ சமய போதகர்கள் சிலரிடம் வினவிய போது, அவர்களும் மாறுபட்ட கருத்துகளே சொன்னார்கள். காலுடுவெல் பற்றி எழுதப்பட்ட நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்த்தால் ஓரளவு தெளிவு பிறக்கலாம்.

இரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘காலுடுவெல் ஐயர் சரிதம்’ நம்பகமானது என்று அறிவுலகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அந்நூலை இப்போதுதான் தேடிப் பிடித்தேன். அழகான தமிழில் சுருக்கமாகவும் சுவைபடவும்  எழுதியுள்ளார். இடையன்குடிக்கு இராபருட்டு காலுடுவெல் வந்து சேர்ந்தது பற்றி சேதுப்பிள்ளை எழுதியிருப்பதைப் படிப்போம்.

“மேல்நாட்டு நாகரிகம் தமிழ்நாட்டிற் பரவத் தொடங்கிய காலந்தொட்டு அந்நாட்டுச் சமயங்களைத் தமிழகத்திற் பரப்பக் கருதிய ஐரோப்பிய ஆர்வலர் பலர் தமிழ்மொழி பயிலத் தலைப்பட்டார். தெள்ளிய தமிழ் நூல்களின் சுவை அறிந்து திளைத்தார் சிலர். தமிழிலமைந்த அற நூல்களின்  திறங்கண்டு வியந்து அவற்றை ஐரோப்பிய மொழிகளிற் பெயர்த்தமைத்தார் சிலர். மேலை நாட்டு மொழிநூல் முறைகளைத் துணைக்கொண்டு தமிழ் மொழியை ஆராய்ந்தார் சிலர். இம்முத்திறத்தாரும் தமிழ்மொழிக்குத் தகைசான்ற தொண்டு புரிந்துள்ளார்.”

“காலுடுவெல் ஐயர் தமிழகத்தையே தாயகமாய்க் கொண்டார்; தென்தமிழ் நாடாய பொருனை நாட்டில் ஐம்பதாண்டுகட்கு மேலாக வதிந்து அருந் தொண்டாற்றினார். ஏழை மாந்தர்க்கு எழுத்தறிவித்தார்; சமய ஒழுக்கத்தைப் பேணக் கருதித் திருச்சபைகள் நிறுவினார்; தூர்ந்து கிடந்த துறைகளைத் துருவினார்; திருநெல்வேலிச் சரித்திரத்தை வரன்முறையாக எழுதி உதவினார்.”

‘பொருனை நாடும் ஏசு மதமும்’ என்ற தலைப்பில், கிறித்துவம் நெல்லைச் சீமையில்  பரவிய கதையை இரா.பி. சேதுப்பிள்ளை எடுத்துரைக்கிறார். காலுடுவெல் வருகைக்கு முன்பே ஏசு மதம் பொருனையாற்றின் இரு கரையிலும் பரவி, மெல்ல அயலூர்களிலும்  நுழையத் தொடங்கியது.

“பாளையங்கோட்டைக்கும் திருச்செந்தூருக்கும் இடைப்பட்ட நெடுநிலத்தில் பெருந்தொகையினராய் வாழும் பழங்குடிகள் நாடார் என்று அழைக்கப்படுவர். இவ்வகுப்பார் வாழும் நாட்டில் கிறித்து மதம் பரவிய பான்மை அறியத்தக்கதாகும்…”

புதிய மதத்தார்க்குப், பழைய மதத்தாரால் தீங்கு விளையும் என்றஞ்சி, கிறித்துவத்துக்கு மாறியவர்கள் தனிக் குடியிருப்பு அமைத்துக் கொள்வது வழக்கமாயிற்று.

“அக்காலத்தில் நாடார்கள் சிறந்து வாழ்ந்த ஊர்களில் இடையன்குடியும் ஒன்றாகும். ஆதியில் முல்லைநில மக்களாய இடையர் மிகுதியாகக் குடியிருந்தமையால் இடையன்குடி என்று பெயர் பெற்ற அவ்வூரில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடார் வகுப்பினரே பெருந்தொகையினராய் வாழ்ந்து வந்தார்கள். வேத விளக்கச் சங்கத்தின் சிறந்த தொண்டராகிய கெற்றிக்கு என்பார் தென்னாட்டில் கிறித்து மதம் செவ்வையாகப் பரவக் கேட்டு மனமகிழ்ந்து நாடாருறையும் நாடுபோந்து ஆயிரத்து முந்நூறு மக்களை ஞான நீராட்டுவித்தார்….”  

ஆக, இரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய “காலுடுவெல் ஐயர் சரிதம்” இடையன்குடி பற்றிய சில உறுதியான செய்திகளைத் தருகிறது. அது ஆதியில் மெய்யாகவே இடையர் குடியிருப்பாக இருந்துதான் இடையன்குடி எனப் பெயர் பெற்றது. காலப்போக்கில் நாடார்கள் அந்த ஊரில் பெரும்பான்மை ஆகி விட்டனர். இது காலுடுவெல் தந்த பெயர் என்பது உண்மையன்று. அவர் விரும்பிய பெயராக இருந்திருக்கலாம். காலுடுவெல் வருகைக்கு முன்பே நாடார் சமுதாய மக்கள் கிறித்துவம் தழுவத் தொடங்கி விட்டனர்.

அப்படியானால் காலுடுவெல் வரும் போதே இருந்த இடையன்குடி எப்படி இருந்தது? இடையன்குடியில் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

இரா.பி. சேதுப்பிள்ளை வளமார் தமிழில் வாரி வழங்கும் செய்திகள் கருத்துக்குரியவை. பருகுவோம்.     (ஏற்றமா? மறக்கவில்லை அன்பரே! திரித்துவக் கோயில் பற்றிச் சொல்லும் போது சொல்கிறேன்.) 

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 235
 
 

திங்கள், 11 செப்டம்பர், 2023

தோழர்தியாகு எழுதுகிறார் 207 : தமிழ்மணக்கும் காலுடுவெல் இல்லம்

 




(தோழர்தியாகுஎழுதுகிறார் 206 : வேண்டும்சித்திரவதைத்தடுப்புச்சட்டம் 2/2-தொடர்ச்சி)

தமிழ் மணக்கும் காலுடுவெல் இல்லம்

 அயல்நாட்டுப் பயணங்களில் வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்க்கப் பெரிதும் விருப்பப்படுவேன். உள்நாட்டிலும் பார்க்க வேண்டியவை பலவும் இருப்பதைக் கால்ந்தாழ்ந்துதான் உணர்ந்தேன். ஆனால் அயல்நாடோ உள்நாடோ அதற்காக யாரையும் தொல்லைப்படுத்தக் கூடாது என்று கவனமாக இருப்பேன். நமக்குள்ள ஆர்வத்தில் கொஞ்சமாவது அவர்களுக்கும் இருக்க வேண்டும். இன்றேல் ஒன்றும் செய்ய முடியாது.

அமெரிக்கப் பயணத்தில் நான் சென்று பார்த்தவைபற்றி ஒரு நூலே எழுதலாம், அவ்வளவு செய்திகள் உண்டு. சிக்காகோவில் மே நாள் நினைவுச் சின்னத்தைத் தேடி அலைந்தது பற்றியும், இரண்டாவது முறை அங்கு சென்ற போது சின்னம் எழும்பியிருந்தது பற்றியும் முன்பே எழுதியுள்ளேன். அந்த எழுத்துகளைத் தேடியெடுத்து விரைவில் உங்களோடு பகிர்வேன்.

 ஐரோப்பியப் பயணத்தில் என்னோடு நாடு நாடாக அலைந்து என் ஆர்வத்தை முழுமையாகப் பகிர்ந்து கொண்டவர் “சர்வே அண்ணா”. (இப்படித்தான் மற்றவர்கள் அவரை அழைப்பார்கள். நான் அவருக்கு எப்போதும் “தியாகண்ணா”தான்.) நள்ளிரவில் சுழிகுறைவில்(minus)குளிரில் இடிபட்ட பெருலின் சுவர் பார்க்கச் சென்றது என்றும் நெஞ்சு விட்டகலாது.

 செர்மன் நாட்டின் (இ)ரைன்லாந்தில் திரையர் என்ற ஊரில் காரல் மார்க்குசு பிறந்தார் என்று படித்திருப்போம். மார்க்குசு பிறந்த இல்லத்தைப் பார்க்க சர்வே என்னை அழைத்துப் போய் “ஆசை தீரப் பார்த்துப் பேசி விட்டு வாருங்கள்” என்று அனுப்பிய போதும் –

இலண்டனில் மார்க்குசு சிந்திப்பதை நிறுத்தி விட்டு நிரந்தரமாக உறங்கும் ஐகேட்டு கல்லறைக்கு யமுனா இராசேந்திரன் என்னை அழைத்துப் போய், “தோழர், இதோ மார்க்குசு, போய் கொஞ்சி விட்டு வாருங்கள்” என்று அனுப்பி விட்டுப் படங்களாகச் சுட்டுத் தள்ளிய போதும் –

ஏற்பட்ட அதே ஆவல் கலந்த துடிப்போடு இராபருட்டு காலுடுவெல் வாழ்ந்த ஊரையும் இல்லத்தையும் காண அருள்திரு கிப்புசனோடு விரைந்து கொண்டிருந்தேன். திசையன்விளை ஊருக்குள் போவோமா? புறவழிச் சாலையில் போவோமா? காலுடுவெல் இடையன்குடியில் வாழ்ந்த போது அவ்வப்போது போய் வந்த ஊர்கள் திசையன்விளையும் உவரியும் என்று படித்துள்ளேன். ஆனால் இப்போது திசையன்விளைக்குள் போனால் நேரமாகி விடும் என்பதால் வண்டியைப் புறவழிச் சாலையில் விடச் சொன்னோம். இடையன்குடி பார்த்து விட்டு உவரிக்குப் போகலாம் என்றார் கிப்புசன்.

 இடையன்குடி என்ற பெயர்ப் பலகை வந்து விட்டது. நெருங்கி விட்டோம். ஒரு பெரிய வரவேற்பு வளைவு –

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த

தமிழறிஞர் காலுடுவெல் வாழ்ந்த இல்லம்”

என்று அறிவிக்கிறது.

 அதைக் கடந்து போனால் காலுடுவெல் வாழ்ந்த இல்லம். நடுக் கூடத்தில் அழகான காலுடுவெல் சிலை.  அருள்திரு கிப்புசன், நெல்லை பீட்டர் ஆகியோருடன் சிலை அருகில் நின்று படம் எடுத்துக் கொண்டேன்.

 அண்ணா முதல்வராக இருந்த போது 1968 உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டிகங காலுடுவெல்லுக்குச் சென்னை கடற்கரையில் சிலை வைக்கப்பட்டது. பிறகு கலைஞர் முதல்வராக இருந்த போது 2011இல்தான் காலுடுவெல் இல்லம் நினைவுச் சின்னம் ஆக்கப்பட்டுள்ளது.

 கலைஞர் எப்போதுமே வரலாற்று நினைவுச் சின்னங்களில் ஆர்வம் உள்ளவர். குமரிக் கடலில் வள்ளுவருக்கு வானுயரச் சிலை அமைத்த போது அதை வரவேற்றுத் தமிழ்த் தேசம் இதழில் பேராசிரியர் மருதமுத்து எழுதிய கட்டுரையை வெளியிட்டோம். பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக் கூடம், சென்னையில் வள்ளுவர் கோட்டம் முதலான  நினைவுச் சின்னங்கள் வெறும் நினைவூட்டும் சின்னங்கள் மட்டுமல்ல. அவை தமிழர்களுக்கு வரலாற்று உணர்வும் வரலாற்று அறிவும் ஊட்ட வல்லவை. கலைஞர் என்ற அடைமொழிக்குப் பொருத்தமான பணிகள் இவை. காலுடுவெல் நினைவில்லம் அமைத்தமைக்காகவும் தமிழ் மாணவர்களின், வரலாற்று மாணவர்களின் நன்றிக்கு உரியவர் ஆகிறார் கலைஞர். கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த நேரத்தில் கலைஞர் அமைத்த நினைவுச் சின்னங்களையும் அவை காட்டும் வரலாற்றையும் இலக்கியத்தையும் தொகுத்து எழுதினால் நன்றாக இருக்கும். யார்?

     சிலை அமைந்துள்ள கூடத்தில் பார்க்கவும் படிக்கவும் கண்ணாடியிட்ட பல அருஞ்செய்திகள் – ஒவ்வொன்றாக நின்று படித்தேன். காலுடுவெல் குடும்ப (FAMILY TREE) வரைபடம் குறிப்பிடத்தக்கது.  எலிசா பற்றிய செய்திகள் அவர் காலுடுவெல் பணிகளுக்குத் துணை நின்றது தவிர தாமாகவே செய்த பணிகளையும் காட்டுகிறது.

 ‘காலுடுவெல் ஐயர்’ உடுத்திய கருப்பு அங்கியை ஒரு கண்ணாடிப் பேழைக்குள் பாதுகாத்துத் தொங்க விட்டுள்ளனர். உயரமான காலுடுவெல் அந்த அங்கி உடுத்தி எவ்வளவு கம்பீரமாகக் காட்சியளித்திருப்பார் என்று மனக் கண்ணால் காணலாம்.

 காலுடுவெல்லின் புத்தக அறை, அவர் அமர்ந்து படித்த நாற்காலி ஒவ்வொன்றையும் எனக்குக் காட்டி விளக்கமும் தந்தார் அருள்திரு கிப்புசன். அங்கிருந்த நினைவகப் பணியாளரும் எல்லா வகையிலும் எங்களுக்கு உதவினார்.

 இல்லத்தைப் பார்த்து முடித்த பின் காலுடுவெல் கட்டிய அந்தத் தூயத் திரித்துவ தேவாலயத்துக்குச்(Holy Trinity Church)  சென்றோம். அது பற்றி நான் முன்பே நிறைய படித்துள்ளேன், படமாகவும் பார்த்துள்ளேன். இப்போது நேரில் பார்க்கும் வாய்ப்பு. தேவாலயத்க்தின் பலிபீடத்தில்தான் காலுடுவெல் இறந்த பின் புதைக்கப்பட்டார். அருகிலேயே எலிசாவும் புதைக்கப்பட்டுள்ளார்.

சுற்றிப் பார்த்து முடித்து இளைப்பாறித் தேநீர் அருந்திய பின் “இன்னும் ஏதும் பார்க்க வேண்டுமா?” என்று கேட்டேன். “இருக்கிறது, உங்களால் ஏற முடியுமா?” என்று கிப்புசன் கேட்க, “ஏறலாமே?” என்று விடையிறுத்தேன்.

 ஏற்றம் என்றாலும் செங்குத்தான ஏற்றம்! என் அகவைக்குக் கடினம்தான்! எப்படியோ ஏறி விட்டேன். யார் இடையன்குடி சென்றாலும் இந்த ஏற்றம் இல்லையேல் பயணம் முழுமை பெறாது. நாளை சொல்கிறேன்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 234