சனி, 11 நவம்பர், 2023

உங்கள் குறள் நூலைத் திருக்குறள் மாநாட்டில் வெளியிட விரும்புகிறீர்களா?

 

உங்கள் குறள் நூலைத் திருக்குறள் மாநாட்டில் வெளியிட விரும்புகிறீர்களா?





அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு

வணக்கம்.

வருமாண்டு (பங்குனி 23-25, 2055 **** 5-7/04/2024) சிகாகோவில் நடைபெற உள்ள ஐந்தாவது திருக்குறள் மாநாட்டை முன்னிட்டுத் திருக்குறள் நூலரங்கு நிகழ உள்ளது. இனித் திருக்குறள் தொடர்பான நூல்கள் வெளியிடுநர் அவற்றின் வெளியீட்டிற்கு இம்மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்னர்த் திருக்குறள் தொடர்பான நூல்களை வெளியிட்டவர்கள் இம்மாநாட்டை அவரவர் நூல்களின் அறிமுக நிகழ்வாகக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருக்குறள் தொடர்பாக வெளியிட உள்ள புதிய நூல்கள் / அறிமுகத்திற்காக அனுப்பப்பெறும் முன் வெளியிடப்பட்ட நூல்கள் ஆகியவற்றின் ஆசிரியர் பெயர், நூலின் பெயர், ஆண்டு, பதிப்பகப் பெயர், முகவரி, மின்வரி, அலைபேசி எண், நிலைபேசி எண் முதலிய விவரங்களை thirunool50@gmail.com மின்வரிக்கு அனுப்ப வேண்டும்.

நூல்களின் ஐந்து படிகளைத் திருக்குறள் ஆய்வு நூல் வெளியீடு அல்லது திருக்குறள் ஆய்வு நூல் அறிமுகம் என நேர்விற்கேற்ப உரிய தலைப்பைக் குறிப்பிட்டுப் பின் வரும் முகவரியைக் குறிக்க வேண்டும். மே/பா இயக்குநர் ஆசியவியல் நிறுவனம் * INSTITUTE OF ASIAN STUDIES செம்மண்சேரி, சோழிங்க நல்லூர் சென்னை 600 119 தமிழ்நாடு. பேசி: 044-24501851, 24500831 பழைய நூல்களாயின் வரும் மாசி 29, 2055 / மார்ச்சு 12, 2024 ஆம் நாளுக்குள்ளும் புதிய நூல்களாயின் வரும் பங்குனி 13, 2055 / மார்ச்சு 26, 2024 ஆம் நாளுக்குள்ளும் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் நூலறிமுகத்திற்கும் வெளியீட்டிற்கும் அனுப்பும் நூல்களின் மின்வடிவுகளை உரைக்கோப்பு வடிவிலும் பொதிவுக்கோப்பு(பி.டி.எஃப்.) வடிவிலும் thirunool50@gmail.com மின்வரிக்கு அனுப்ப வேண்டும்.

வெளியிடப்படும் புதிய நூல்களின் அட்டைக்கு அடுத்துள்ள முதல் பக்கத்தில் இந்நூல், சிகாகோ நகரில், சிகாகோ தமிழ்ச்சங்கம், ஆசியவியல் நிறுவனம், உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா ஆகியன இணைந்து பங்குனி 23-25, 2055 /ஏப்பிரல் 5-7, 2024 ஆகிய நாள்களில் நடத்திய ஐந்தாவது உலகத் திருக்குறள் மாநாட்டின் போது வெளியிடப்பெற்றது/அறிமுகப்படுத்தப் பெற்றது என நேர்விற்கேற்பக் குறிக்கப்பெறுவது சிறப்பாகும்.

5 ஆவது உலகத் திருக்குறள் மாநாட்டில் இதற்கென ஓர் அமர்வு ஒதுக்கி வைக்கப்படும். மாநாட்டிற்கு வருபவர்கள் நுழைமம்(விசா) பெறுவதற்காகத் தங்கள் பெயர், முகவரி, அலைபேசி எண், நிலைபேசி எண், கடவுச்சீட்டு எண், கடவுச்சீட்டு முடியும் நாள் முதலிய விவரங்களை thirunool50@gmail.com மின்வரிக்கும் contact@thirukkuralconference.org மின்வரிக்கும் தெரிவிப்பின் விழாக் குழுவினர் அழைப்பு மடலை அனுப்பி வைப்பர். வெளியீட்டாளர் அல்லது பதிப்கத்தாரும் பங்கேற்கலாம். நேரில் வர இயலாதவர்களும் நூல்களை உரிய விவரங்களுடன் அனுப்பி வைக்கலாம். மாநாட்டின் பொழுது உணவு, உறையுள், உள்ளூர்ப் போக்குவத்து முதலிவயவற்றை விழாக் குழுவினர் ஏற்றுக் கொள்கின்றனர். தத்தம் இருப்பிடங்களில் இருந்து சிகாக்கோ சென்று வர ஆகும் பயணக் கட்டணங்களை அவரவர் நிறுவனச் செலவில் அல்லது சொந்தச் செலவில் அல்லது வேறு வகையில் ஏற்க வேண்டும். மாநாட்டுப் பேராளர்களுக்கு நூல்கள் அன்பளிப்பு வழங்க விரும்புவோர் முன்னதாகத் தெரிவித்து விட்டு, மாநாட்டு வருகையின்போது கொணர வேண்டும்.

நூல் வெளியீட்டு அல்லது நூல் அறிமுக நிகழ்வில் பங்கேற்க இருப்போர், நிகழ்நிரல் திட்டமிடுவதற்காக 30.11.23 ஆம் நாளுக்குள் தத்தம் பெயர், நூற்பெயர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மாநாட்டுச் செய்திகளுக்கான தளம் : https://thirukkuralconference.org

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பொறுப்பாளர் ,

நூலரங்கம்

ஐந்தாவது திருக்குறள் மாநாடு ‘

குறள்நெறி ஓங்கின் குடியரசு ஓங்கும்!

தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – அன்பர் சந்துரு 4/4

 


(தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு 3/4 – தொடர்ச்சி)

சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற

அன்பர் சந்துரு எழுதுகிறார்.
(தமிழாக்கம்: நலங்கிள்ளி)

கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – 4/4


“இந்தக் கால தாமதம் விசாரணை நீதிமன்றத்தில் புலனாய்வு ஆய்வாளரின் கவனத்துக்குக் குறிப்பாகக் கொண்டு வரப்படவில்லை என்பது உண்மையே. புலனாய்வு ஆய்வாளர் மேல்முறையீட்டில் வாதங்கள் நடைபெற்ற காலம் முழுதும் இந்த நீதிமன்றத்தில் இருந்த காரணத்தால், அவரிடம் மதிப்பிற்குரிய அரசு வழக்குரைஞர் கலந்தாலோசித்து, இந்த மிதமிஞ்சிய கால தாமதத்துக்கு அவருடைய பார்வையிலிருந்து காரணங்கள் என்னவென்று அறிந்து, எங்களிடம் தெரிவிக்கும்படி நாங்கள் கேட்டுக் கொண்டோம். புலனாய்வு அதிகாரியிடம் கலந்தாலோசித்த பிறகு மதிப்பிற்குரிய அரசு வழக்குரைஞர் கால தாமதத்துக்கு எங்களிடம் இரு விளக்கங்கள் கூறினார். முதல் சான்றாவனத்தை விரைவாக சார்-நடுவரிடம் கொடுக்க வேண்டுவது குறித்து விதிகள் திட்டவட்டமாக எதுவும் கூறவில்லை. என்பது முதல் விளக்கம். இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“முதல் சான்றாவணம் கிடைத்ததாகச் சொல்லப்படும் இரவு 11 மணிக்கே சிறப்புத் தூதரை அனுப்பியிருந்தால், அவரால் அதனை நாகப்பட்டினத்துக்குப் பேருந்திலோ நடந்தோ சென்று, 26.12.1968 அதிகாலையில் சார்-நடுவரிடம் சேர்த்திருக்க முடியும். பெரும்பாலான உயரதிகாரிகள் 26.12.1968 காலை 09.30 மணியளவில் கிராமத்துக்கு வந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்குப் பிறகாவது புலனாய்வு அதிகாரி ஊரின் சட்ட ஒழுங்குச் சுமையிலிருந்து ஆசுவாசமாகி, விரைவு அறிக்கையை சார்-நடுவரிடம் சேர்ப்பித்திருக்க வேண்டும்.”

இயல்பாகக், குற்றவியல் மேல்முறையீட்டை விசாரிக்கும் போது, புலனாய்வு அதிகாரியைச் சில கேள்விகளுடன் நீதிமன்றத்தில் இருக்கச் சொல்லி விட்டு, ஆணையில் அவரது மறுமொழிகளை நிராகரித்தது முறையன்று. இதேபோல், விசாரணை நீதிமன்றம் பெற்றுக் கொள்ளாத அந்த ஆவணத்தை எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் மேலமை நீதிமன்றம் பெற்றுக் கொள்வதும் பெரிதும் முறையற்றதே. இருநீதியராயம் 06.04.1973 அன்று பிறப்பித்த பொது ஆணையின் வழியாக கோபாலகிருட்டிண நாயுடுவும் மற்றவர்களும் செய்த மேல்முறையீட்டை ஏற்று, அரசு செய்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.

தொடக்கத்தில், தமிழ்நாடு அரசு அரசமைப்புச் சட்டம் உறுப்பு 132இன் பேரில் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்வதற்குச் சான்றிதழ் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது. அதனை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. பின்னர் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் சென்று, 1976இல்தான், அதாவது தீர்ப்புக்குக் கிட்டத்தட்ட மூன்றாண்டு கழித்துத்தான் மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்டது. சிறப்பு அனுமதி விண்ணப்பத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் பின்வருமாறு ஆணையிட்டது:

“நாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு தஞ்சாவூர்ப் பிரிவு அமர்வு நீதியர் உடனடியாகவே மேலே குறிப்பிட்ட எதிர்விண்ணப்பர்களைப் கைது செய்யப் பிணை கிடைக்காத பிடியாணை பிறப்பித்திடுக.”
இந்நிலையில் கைது செய்யபப்டுவோம் என்றஞ்சி கோபாலகிருட்டிண நாயுடுவும் மற்ற எண்மரும் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து, தண்டனையை இடைநிறுத்தி வைக்கும்படிக் கேட்டனர். ஆனால் உயர் நீதிமன்றம் 03.02.1976 நாளிட்ட ஆணையில் இத்தகைய தீர்வு வழங்கும் அதிகாரமேதும் உயர் நீதிமன்றத்துக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி அம்மனுவை நிராகரித்து விட்டது. (காண்க: 1977 Cri L J 50).

இதனிடையே, கோபாலகிருட்டிண நாயுடு 14.12.1980 அன்று இரிஞ்சூர் ஊரில் கொலை செய்யப்பட்டார். இட(து) தீவிரவாதக் கருத்துகளில் நாட்டம் கொண்ட சிலர் இதை செய்ததாகச் சொல்லப்பட்டது. இந்தச் செய்தி கோபாலகிருட்டிண நாயுடுவை முதல் எதிர்விண்ணப்பராகக் கொண்ட அரசின் மேல்முறையீடு நிலுவையிலிருந்த உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படவில்லை. கீழ்வெண்மணிக் கொலையை அனைவரும் மறந்து விட்டனர். எதிரிகள் விடுவிக்கப்பட்டார்கள்.

இறுதியாகத், தமிழ்நாடு அரசு செய்த மேல்முறையீடு (Crl.A.17/1976) நீதிமன்றம்-7 முன்பு பட்டியலிடப்பட்டது. அங்கு இந்த வழக்கை நீதியர் எசு. இரங்கநாதன், நீதியர் கே. இராமசாமி ஆகியோர் விசாரித்தனர். நீதியர் இரங்கநாதன் வாழ்நாள் முழுதும் வருமான வரிப் பொருண்மைகளையே புழங்கி வந்தவர். அவர் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திலிருந்து தில்லி உயர் நீதிமன்றத்துக்கு உயர்த்தப்பட்டவர். உயர் நீதிமன்றத்திலிருந்த இந்தப் பதவிக் காலத்திலுங்கூட பெரும்பாலும் வருமான வரி வழக்குகளை மட்டுமே பார்த்துக் கொண்டவர். சமூக நீதிப் பொருண்மைகளில் தீர்ப்பு வழங்கிப் பெயர்பெற்ற நீதியர் கே. இராமசாமி அப்போதுதான் உச்ச நீதிமன்றத்துக்கு உயர்த்தப்பட்டவர். அவர்தான் அந்த ஆயத்தில் இளையவராக இருந்தார்.
தமிழ்நாடு அரசு ஒரு மூத்த வழக்கறிஞரை அமர்த்தியிருந்த போதிலும், உள்ளபடியே தொடக்கத்தில் 31.10.1990 அன்று இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, (பதிவுருப் படி) மாநில அரசு வழக்கறிஞர் திரு எம்.வி. கிருட்டிணமூர்த்தி கிட்டத்தட்ட 45 நிமிடம் வாதிட்டார். அடுத்த நாள் (01.11.1990) திரு யு.ஆர். இலலித்து ஏறத்தாழ 15 நிமிடம் வாதிட்டார். இதன் தொடர்ச்சியாக, எதிரியின் வழக்கறிஞர் தமது வாதங்களை முன்வைத்து, பிற்பகல் 02.15 மணிக்கு முடித்தார். நீதிமன்றம் 01.11.1990 அன்று வெளியிட்ட நடவடிக்கைப் பதிவை எடுத்துக்காட்டுவது பயனுள்ளதாக இருக்கும்:-
“வழக்கறிஞர் வாதம் கேட்டு நீதிமன்றம் பிறப்பித்த ஆணை
வழக்கறிஞர் திரு வி. கிருட்டிணமூர்த்தி பிற்பகல் 03.15 மணிக்கு வாதிடத் தொடங்கி, நீதிமன்றம் வேலைநேரம் முடியும் 4 மணி வரை வாதத்தை முடிக்கவில்லை. பொருண்மை பகுதியளவு கேட்டதோடு நின்றது.
உருப்படி எண் 13 நீதிமன்ற எண் 6
31.10.1990 கோரம் மற்றும் முன்னிலை: விண்ணப்பருக்காக மூத்த வழக்குரைஞர்
திரு யுஆர். இலலித்து அவர்களின் வாதுரை
மதிப்பிற்குரிய வழக்குரைஞர் திரு யு.ஆர். இலலித்து தன் வாதுரையை நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி, 12.15 மணிக்கு முடித்தார். பிறகு வழக்குரைஞர் திரு கே.ஆர். சவுத்ரி வாதிடத் தொடங்கி பிற்பகல் 02.15 மணிக்கு முடித்தார். விசாரணை முடிவுற்றது. நீதிமன்றம் ஒப்பமிட்டுக் கோப்பிலிட்ட ஆணையின் அடிப்படையில் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.”

இவ்வகையில் இறுதியாகப் பன்னாட்டளவில் செய்தியாகி, ஒவ்வொருவரின் மனச்சான்றையும் உலுக்கிய வழக்கை இரண்டு மணி நேரத்தில் மூன்று பக்க ஆணை எழுதி உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. அரசின் வாதங்கள் 10 வரிகளில் விவரிக்கப்பட்டன. எதிர்த்தரப்பு வாதங்கள் 14 வரிகளில் சுருக்கித் தரப்பட்டன. பார்த்துப் பார்த்து அலுத்துப் போன உள்ளடக்கங்கள் கொண்ட ஒரு சாதாரணக் குற்றவியல் மேல்முறையீட்டைப் போல் இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்தச் சுருக்கமான ஆணையை எடுத்துக் காட்டத்தான் வேண்டும்: –

“நாங்கள் அமர்வு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் அளித்த விவரமான தீர்ப்புகள் நெடுகிலும் நடத்திச் செல்லப்பட்டுள்ளோம். நாங்கள் இரு வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்டோம். இந்த வழக்கு நடைபெற்ற சூழல்களுக்கு மதிப்பளித்து, அது பற்றி எங்களுக்குள்ள கருத்து என்னவென்றால், அரசமைப்புச் சட்டம் உறுப்பு 136இன் கீழ் இந்த முறையீட்டில் தலையிடுவதற்கு அடிப்படைகள் ஏதுமில்லை. எதிரிகளில் சிலருக்கு இதச 307, 326, 436 ஆகிய பிரிவுகளின் கீழ் அமர்வு நீதிமன்றம் குற்றத் தீர்ப்பு வழங்கியிருப்பது உண்மைதான் என்றாலும், நாம் ஏற்கெனவே சொல்லியிருப்பது போல், எதிரிகளை விடுவிப்பது தொடர்பாக இரு கீழமை நீதிமன்றங்களும் ஒரே மாதிரி முடிவுகளைக் கண்டடைந்துள்ள வழக்கு இது. திரு சவுத்திரி சரியாகக் குறிப்பிட்டது போல், அந்தக் கொடுநாளில் நடந்த சம்பவங்களை முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொண்டால், எதிரிகள் மேல் வைக்கப்பட்டிருக்கும் வழக்கில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிறுவப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் கருத்துக் கொண்டதில் தவறெதுவும் இருப்பதாகச் சொல்லி விட முடியாது. நாங்கள் சாட்சியங்களை விரிவாக அலசவில்லை. ஏனென்றால் தரவிலிருந்து இறுதியில் உண்மை என்ன என்று முடிவுக்கு வருவதுதான் இங்கு சிக்கலுக்குரியது. தரவுகளைக் கவனமாக ஆய்ந்து பார்த்த பிறகு, உயர் நீதிமன்றம் இட்ட விடுவிப்பு ஆணை பதிவேறிய தரவுகளால் உறுதி செய்யப்படவில்லை என நாங்கள் ஒப்புக் கொள்வது கடினம்.”

மேற்கண்டவாறு நீதிமன்றம் கண்டடைந்து சொன்னவற்றிலிருந்து, நிலக்கிழார்கள் 42 தணிந்த (தலித்து) மக்களைப் படுகொலை செய்த குற்றத்தை உயர் நீதிமன்றம் விசாரித்து அவர்களை விடுவித்துள்ளது என்றும், அந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 22 ஆண்டு கழித்து ஒரு பூடகமான ஆணை மூலம் உறுதி செய்துள்ளது என்றும் யாருக்காவது தெரிய வருமா?

வரலாற்றில் நடந்த பெரிய பெரிய தவறுகளுக்குச் சில அரசாங்கங்களே நீண்ட காலத் தாழ்வுக்குப் பிறகு மன்னிப்புக் கேட்டுள்ளன. சாலியான்வாலாபாக்கு படுகொலைக்காக அது நடந்து ஒரு நூற்றாண்டு கழித்து பிரித்தானிய அரசு வருத்தம் தெரிவித்தது. சபல்பூர் ஏடிஎம் வழக்கில் (1978) ஆட்சித் துறை அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்துள்ளது என்ற அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது என்றாலும், அவ்வழக்கிலும் கூட ஓர் உச்ச நீதிமன்ற நீதியர் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார். அடுத்து வந்த காலத்தில் 2018 ஆதார் அட்டை வழக்கில் அந்தத் தீர்ப்பே சட்டப்படி தவறு எனத் தீர்ப்பாயிற்று.

1968இல் கீழ்வெண்மணியைச் சேர்ந்த அப்பாவி தணிந்த(தலித்து) வேளாண் தொழிலாளர்களுக்குச் செய்யப்பட்ட அநீதி இன்றளவும் களையப்படவில்லை. நீதிமன்றங்கள் தமது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கையை மீட்டுக் கொள்ளவும் விரும்பினால், நிலக்கிழார்கள் தமது வருக்க வலிமையைக் கொண்டு தப்பித்து, நீதித்துறையை இருளில் தள்ளிய இவ்விரு மானக்கேடான தீர்ப்புகளுக்காகவும் வருத்தம் தெரிவித்து அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்.

தோழர் தியாகு
தாழி மடல் 293

வெள்ளி, 10 நவம்பர், 2023

தமிழ் இணையம் 2023, மதுரை, நிறைவு விழா

 


மதுரை காமராசர் பல்கலைக் கழகம்
மொழியியல் துறை
தமிழ் இணையக் கழகம்,இந்தியா
தமிழறித நுட்பியல் உலகாயம், இலங்கை
தமிழ் இதழ், கனடா
இணைந்து
தே.உ.க.[RUSA] திட்டம் 2 நிதி நல்கையுடன்
நடத்தும்
தமிழ் இணையம் 2023
இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்
நிறைவு விழா
கா்த்திகை 01, 2054 வெள்ளி 17.11.2023







தமிழ் இணையம் 2023, மதுரை, தொடக்க விழா

 


மதுரை காமராசர் பல்கலைக் கழகம்
மொழியியல் துறை
தமிழ் இணையக் கழகம், இந்தியா
தமிழறித நுட்பியல் உலகாயம், இலங்கை
தமிழ் இதழ், கனடா
இணைந்து
தேசிய உயர் கல்வி[(உ)ரூசா] திட்டம் 2 நிதி நல்கையுடன்
நடத்தும்
தமிழ் இணையம் 2023
இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்
தொடக்க விழா
ஐப்பசி 30, 2054 வியாழன் 16.11.2023








தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – அன்பர் சந்துரு 3/4

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு 2/4 – தொடர்ச்சி)

சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அன்பர் சந்துரு எழுதுகிறார்.
(தமிழாக்கம்: நலங்கிள்ளி)

கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – 3/4


இந்த வழக்கில் முதல் எதிரியான கோபாலகிருட்டிண நாயுடு கையெழுத்திட்டு நெல் உற்பத்தியாளர் சங்கம் அனுப்பியதாகக் கருதப்படும் கடிதத்தை ஓர் ஆவணமாக வழக்கு விசாரணையின் போது அமர்வு நீதியர் முன்பு அரசு வழக்குரைஞரோ எதிர்த்தரப்பு வழக்குரைஞரோ அளிக்கவில்லை. இயல்பாக, சான்றாவணம் விசாரணை நீதிமன்றம் முன்பு அனிக்கப்படாத போது, மேல்முறையீட்டு நீதிமன்றம் கூடுதல் சான்று எடுத்துக் கொள்ள விரும்புமானால், அதற்கு 1898 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஒரு நடைமுறை உள்ளது. (அந்த நேரத்தில் 1973ஆம் ஆண்டின் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் இல்லை.) குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 428 கூடுதல் சான்று பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையைக் குறித்துரைக்கிறது. இருநீதியர் ஆயம் இப்படி எந்த நடைமுறையையும் கடைப்பிடிக்க வில்லை.

மறுபுறம், மேற்சொன்ன கடிதம் எதிரி கோபாலகிருட்டிண நாயுடு சார்பாக உயர் நீதிமன்றம் முன்பு அளிக்கப்பட்ட தட்டச்சுத் தொகுதியில் சேர்க்கப்பட்டது. அக்கடிதம் எப்படி, ஏன் கோப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டது எனப் பதிவு கூட செய்யாமலே அக்கடிதத்தின் உள்ளடக்கத்தை நீதியர்கள் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

எதிரியால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட எதிர் வாதத்துக்கு அடிப்படையாக அக்கடிதம் அமைந்தது. அது முதல் தடவையாக எதிரிக்கு ஆதரவான உருப்படியான சான்றாக அமைந்தது. இந்தக் கடிதம் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் எடுத்துக்காட்டப்பட்டு, மார்க்குசியப் பொதுவுடைமைத் தலைமையிலான விவசாயத் தொழிலாளர் சங்கத்தைத் தாக்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இருநீதியராயம் பின்வருமாறு உரைத்தது:

“நாகப்பட்டினம் வட்ட நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான முதல் எதிரிக்கும் இட(து) பொதுவுடைமை உழவர்களுக்கும் இடையே கசப்புணர்வு இருந்ததை நாங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். முதல் எதிரி தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இட(து) பொதுவுடைமையினர் தன்னைக் குற்றத்தில் தவறாகச் சேர்ப்பதற்கு முயன்று கொண்டிருந்ததாகவும் கூறி அச்சம்பவத்துக்கு சில நாள் முன்பு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பிய மனுக்களையும் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். ஒருவருக்கு ஒருவர் இடையில் சந்தேகமும் பகைமையும் நிறைந்த இந்த மனநிலையில் இவ்வழக்கில் முதல் எதிரியை உட்படுத்தி, 42 அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மீதான மோசமான கொலைக் குற்றத்தையும், துப்பாக்கி, அருவாள், சுலுக்கி அல்லது கம்புகள் கொண்டு பலருக்கும் காயம் ஏற்படுத்திய குற்றத்தையும் அவர் மேல் சுமத்தலாம் என்ற ஆசை உழவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். ஒரு பொதுவுடைமையரின் மரணம் தொடர்பாகப் பக்கத்து ஊருக்குப் பல முக்கிய பொதுவுடைமைத் தலைவர்கள் வந்திருந்தனர். அவர்கள் கீழ்வெண்மணியில் நடைபெற்ற துயரம் தொடர்பாகப் பெரிதும் உணர்ச்சிவசப்பட்டிருப்பார்கள். அந்தத் தலைவர்கள் காயமுற்றவர்களைச் சந்திக்கச் சென்றதை மெய்ப்பிக்கச் சான்று உள்ளது. இந்தச் சூழ்நிலையில், கிசான் இயக்கத்தின் முதல் பகைவரைக் குற்றத்தில் உட்படுத்துவதற்கு அரசுத் தரப்பு 5ஆம் சாட்சியால் முடியாமற் போனதால் கிசான் தலைவர்களுக்கு ஏமாற்றமும் மன உளைச்சலும் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்தச் சூழலில்தான் எல்லாக் கேடுகளுக்கும் முதல்வனாக முதல் எதிரி கோபாலகிருட்டிண நாயுடுவைக் குறிப்பிட்டு, அவரைத் தொடர்ந்து 30 – 40 பேரைப் பெயரின்றி விட்டுவிட்டு அநேகமாக 26.12.1968 மாலையில் முதல் சான்றாவணத்தைத் தயாரித்திருக்க வேண்டும்.”

நீதியர்கள் சொல்லும் ஏரணத்தின் படி, நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராகச் சில குற்றச்சாட்டுகள் கூறி முதலமைச்சருக்கு அனுப்பிய மனு வேதவாக்காக இருக்கும் போதே, துயரப்பட்டவர்கள் செய்த முறைப்பாடு துன்ப நிகழ்வுக்குப் பின் உடனே தொழிலாளர்களைப் பார்க்கச் சென்ற மார்க்குசியத் தலைவர்களால் உள்நோக்கங்களுடன் திருத்தப்பட்டதாக இருக்க வேண்டுமாம். ஒருபுறம் முதல் எதிரி கோபாலகிருட்டிண நாயுடு, மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் மறுபுறம் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் பகைமை இருந்தது என்ற முடிவுக்கு நீதியரால் வர முடிந்தது என்னும் போதே, அவர்கள் குடிசைகளுக்குத் தீயிட்டதையும் தொழிலாளர்களைத் துப்பாக்கியால் சுட்டதையும் நேரில் கண்ட சாட்சிகள் இருந்த போதிலும் அவர்களின் சாட்சியத்தைப் புறந்தள்ளிய நீதியர் குற்றம் புரிதலில் நில உடைமையாளர்களுக்கு இருந்த கூட்டுக்குற்ற வகிபாகத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக ஒரு புதுக் கோட்பாட்டை வழங்கி, இவ்வாறு எழுதினர்:
“மேலும், இந்த வழக்கில் உட்படுத்தப்பட்டுள்ள 23 எதிரிகளுமே மிராசுதார்களாகவே இருப்பது வியப்பாக இருக்கிறது. அவர்களில் பெரும்பாலார் விரிந்துபரந்த நிலபுலன்களுக்குச் சொந்தக்கரர்களான செல்வந்தர்கள். முதல் எதிரிக்குச் சொந்த வண்டி(கார்) இருப்பதற்குச் சான்று உள்ளது. ஆனால் இட(து) பொதுவுடைமை உழவர்களைப் பழிவாங்கும் ஆசை மிராசுதார்களுக்கு எவ்வளவுதான் இருந்தாலும், அவர்களாகவே நிகழ்விடத்துக்கு நேராக நடந்து சென்று எந்த வேலைக்காரர்கள் உதவியுமின்றி வீடுகளுக்குத் தீ வைத்தார்கள் என நம்புவது கடினமாக உள்ளது. பெரும் சொந்த நலன்கள் கொண்ட செல்வந்தர்கள் விரக்தியிலும் பசியிலும் உள்ள தொழிலாளர்களை விடப் பாதுகாப்பாகச் செயல்படவே விரும்புவார்கள். மிராசுதார்கள் பின்னணியில் ஒளிந்து கொண்டு, கூலிப் படையைப் பல குற்றங்கள் புரிவதற்கு ஏவி விட்டதாகத்தான் எவரும் எதிர்பார்க்க முடியும். ஆனால் இந்தக் குற்றங்களை மிராசுதாரர்களே நிகழ்விடத்துக்கு நேரடியாக வந்து செய்தததாக அரசுத் தரப்பு கூறுகிறது.” (அழுத்தம் சேர்க்கப்பட்டது.)

சென்னை உயர் நீதிமன்ற நீதியர்கள் கோபாலகிருட்டிண நாயுடு குடிசைகளுக்குத் தீ வைக்கவோ, துப்பாக்கியால் சுடவோ இல்லை என்று மட்டும் கூறவில்லை, அவர் சம்பவ இடத்தில் இல்லை என்பதற்களித்த வேற்றிடச் சான்றையும் ஏற்றுக் கொண்டனர். கோபாலகிருட்டிண நாயுடுவை வழக்கில் சேர்ப்பதற்கு மார்க்குசியத் தலைவர்கள் சான்றர்களைத் தூண்டி விட்டதாகவும் நீதியர்கள் கூறினர். ஆனால் இதற்கு நேர்மாறான ஒன்றே அப்போது நடந்தது. அனைத்து உள்ளூர்த் தலைவர்களும் கொச்சியில் 1968 திசம்பர் முடிவில் நடைபெற்ற அனைத்திந்திய மாநாட்டில் பேராளர்களாகக் கலந்து கொள்ளச் சென்றிருந்தனர். சான்றர்களின் கூற்றையும் அவர்களிடம் நடத்திய குறுக்கு விசாரணையையும் பதிவு செய்த அமர்வு நீதியர் முதல் எதிரி (A1) நாயுடு முன்வைத்த வேற்றிடச் சான்று என்னும் வாதத்தை நிராகரித்து, ஒவ்வொரு நிகழ்விலும் அவர் இருந்தார் என்றும், அதற்கு ஆதரவான சாட்சியத்தையும் மேற்கோளிட்டுக் காட்டினார். அவர் அனைத்து நில உடைமையாளர்களுக்கும் பத்தாண்டுக் கடுங்காவல் தண்டனையும் வழங்கினார். அவர் அதற்கான காரணங்களையும் கூறினார்:-

“எதிரிகள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் வீடுகளுக்குத் தீ வைக்கத் திட்டமிட்டுள்ளனர். தீ வைத்து மூன்று தெருக்களை அழித்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டு, இட(து) பொதுவுடைமைக்

கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் கொல்வதற்கும் முயன்றுள்ளனர். அவர்களுக்கு ஏராளமான காயங்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஐயுறுவதற்குக் காரணம் ஏதுமில்லை. எதிரிகள் தீ வைத்ததன் காரணமாக, 42 அப்பாவி மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.”


42 வேளாண் தொழிலாளர்கள் மாண்ட அந்தத் தீவைப்பு தவிர, பல முன்னணித் தொண்டர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்தச் சம்பவத்துக்கு ஒரு மாதம் முன்பே சிறப்பு ஆயுதக் காவல் படையினர் அந்த ஊரைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர். இரு நாள் முன்பே கிசான் சபா தலைவர்கள் 500 கிமீ தள்ளியிருந்த கொச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்தனர். சம்பவம் நடந்த உடனேயே காவல்துறைத் தலைமை ஆய்வாளர் (IG), காவல்துறைத் துணை ஆய்வாளர், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் அவ்விடத்தில் முகாமிட்டு, எவரையும் அந்த ஊருக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் குற்ற வழக்கில் கோபாலகிருட்டிண நாயுடுவைச் சேர்க்கும் நோக்கில் பொய் வாக்குமூலம் தரும்படித் தூண்டி விட்டிருப்பார்கள், அந்த வாக்குமூலத்தைக் காவல் துறையினர் தாமதமாகப் பதிவு செய்திருப்பார்கள் என்னும் இந்த இரு கண்டெடுப்புகளையும் எந்த அடிப்படையும் இல்லாமல் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேல்முறையீடுகள் குறித்த விசாரணையின் போது, இவ்வழக்கைப் புலனாய்வு செய்த காவல்துறை ஆய்வாளர் அரசுத் தரப்பு வழக்குரைஞருக்குத் துணைசெய்ய உயர் நீதிமன்றத்தில் இருந்தார். நீதியர்கள் அவரையும் விட்டுவைக்கவில்லை. மேல்முறையீட்டு விசாரணையின் போது அவரை அழைத்து அவரிடம் வினாத் தொடுத்தார்கள். அவரளித்த பதில்கள் நிறைவாக இல்லை எனக் கூறி, அதனைக் கீழ்க்காணும் ஆணையில் பதிவிட்டார்கள்:

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 293

வியாழன், 9 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு 2/4

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு ஈ – தொடர்ச்சி)

சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அன்பர் சந்துரு எழுதுகிறார்…
(தமிழாக்கம்: நலங்கிள்ளி)


கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! 2/4

அதே நாளில், 44 பேர் இறப்பு தொடர்பான வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டது (30.11.1970). தீர்ப்பு வழங்கப்பட்ட போது, 23 எதிரிகளும் இருந்தனர். கீழ்வெண்மணியில் கோபாலகிருட்டிண நாயுடுவுக்கும் மற்ற 8 பேருக்கும் 10 ஆண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சட்ட விரோதக் கூடல், குற்றச் செயலில் ஈடுபடல், தீவைப்பு ஆகியவற்றுக்காகத் தண்டனை வழங்கப்பட்டது. கொலைமுயற்சிக் குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, 7 பேருக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுஆனால் அவர்கள் அனைவரும் கொலைக் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இவ்விரு அமர்வு வழக்குகளிலும் விசாரணை நடத்தியது ஒரே அமர்வு நீதியர்தான் என்றாலும், அவை இருவேறு வழக்குகளாக விசாரிக்கப்பட்டன. முதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் இரண்டாம் வழக்கில் சாட்சிகளாயினர். இதேபோல், இரண்டாம் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் முதல் வழக்கில் சாட்சிகளாயினர். குறிப்பாகக், கீழ்வெண்மணி வழக்கில் முதல் குற்றவாளியான கோபாலகிருட்டிண நாயுடு பக்கிரிசாமி கொலை வழக்கில் முதல் சாட்சியாக இருந்தார்.

அமர்வு நீதிமன்றத்தால் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கோபால், 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இராமையா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் (Crl.A.No.23/1971). கீழ்வெண்மணி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் அவர்களின் குற்ற நிரூபணத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர் (Crl.A.No.1208/1970). உள்ளபடியே, அவர்களின் மேல்முறையீடு கோபால் வழக்குக்கு முன்பே செய்யப்பட்டது. இதேபோல், கீழ்வெண்மணி வழக்கில் விடுவிக்கப்பட்டோருக்கு எதிராக அரசின் மேல்முறையீடும் கீழ்வெண்மணி வழக்கில் செய்யப்பட்ட மேல்முறையீட்டுக்கு முன்பே செய்யப்பட்டது. விளக்கவியலாக் காரணங்களால் முந்தைய மேல்முறையீடு பட்டியலிடப்படவில்லை. மறுபுறம், பக்கிரிசாமி கொலைக் குற்ற வழக்கு மேல்முறையீடு (Crl.A.No.23/1971) கே. என். முதலியார், இராகவன் ஆகியோர் அடங்கிய இரட்டை நீதியர் ஆயத்தின் முன்பு முதலில் பட்டியலிடப்பட்டது. குற்றவியல் வழக்குகளில் மிகவும் கண்டிப்பானவர் எனப் பெயர் பெற்றவர் நீதியர் கே.என். முதலியார். இந்தக் காரணங்களால்தான் கீழ்வெண்மணி மேல்முறையீடுகள் விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லையோ, என்னவோ?

அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை இரட்டை நீதியர் ஆயம் உறுதி செய்தது. கோபாலுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் இராமையாவுக்கு 5 ஆண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்தது. அஃது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குச் சென்றது. அவர்களுக்காக இடதுசாரி வழக்குரைஞர் ஆர்.கே. கார்க்கு வாதாடினார். உச்ச நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டை 13 ஆண்டுக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தள்ளுபடி செய்தது.

மேல்முறையீட்டை விசாரித்த நீதியர்கள் அதனைச் சாதாரணக் குற்றவியல் மேல்முறையீடு போல் விசாரித்தனர். உயர் நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள ஓட்டைகளை விளக்கி, உயர் நீதிமன்ற முடிவுகளில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தனர். உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கல் தொடர்பான பிரச்சினையிலாவது ஈடுபாடு காட்டி, ஏற்கெனவே கழிந்த தண்டனைக் காலத்தை ஒரே தண்டனையாகக் கருதி, அவர்களை விடுவித்திருக்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்ட போது, உச்ச நீதிமன்றம் அப்படிச் செய்ய மறுத்து, பின்வருமாறு கருத்துக் கூறியது: –
“திரு கார்க்கு எம்முன் கடைசியாக முன்வைத்த வாதுரை என்னவென்றால், ஏ-1, ஏ-2 ஆகியோர் ஏற்கெனவே அனுபவித்து விட்ட தண்டனையைக் கருத்தில் கொண்டு, இந்த நீதிமன்றம் அவர்களின் மீதத் தண்டனைக் காலத்தை நீக்கி விட வேண்டும் என்பதே. திரு கார்க்கு முன்வைத்த இந்த வாதுரையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக, மகாராட்டிரா அரசு-எதிர்-மேயர் ஃகேன்சு சியார்சு, ஏஐஆர் (1965) எசு.சி 722 வழக்கில் தெரிவிக்கப்பட்ட பார்வைகளை இங்கே குறிப்பிடலாம்:
”உச்ச நீதிமன்றத்தின் நிலைபெற்ற விதியின்படி, கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனையில் ஏதும் சட்டவிரோதத் தன்மையோ, ஏதும் கொள்கைச் சிக்கலோ இருந்தாலோ ஒழிய, அதில் இந்நீதிமன்றம் குறுக்கிடாது.”
“இங்கு நாம் ஏற்கெனவே கூறியது போல், எதிரிகள் 1, 2 ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அறிவுக்குகந்த எவ்வித ஐயத்துக்குமிடமின்றி நேரில் கண்கண்ட சாட்சிகள் மூலம் மெய்ப்பிக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் அவர்கள் மீதான தண்டனையைக் கீழமை நீதிமன்றங்கள் உறுதிசெய்தன. இந்தியத் தண்டனைச் சட்டம் 302, 364 பிரிவுகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளவாறு, அவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கும் பொருண்மையில் சட்டவிரோதத் தன்மையோ கொள்கைச் சிக்கலோ எதுவும் இல்லை. எனவே கீழமை நீதிமன்றங்கள் விதித்த தண்டனையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.”
(1986 (2)) SCC 93)

ஆனால் கீழ்வெண்மணிக் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடைப்பிடித்த அணுகுமுறை எவரையும் கொதிப்படையச் செய்யும். புலனாய்வு செய்தது சென்னை மத்தியக் குற்றவியல் பிரிவு என்றாலும், நீதியர்கள் புலனாய்வில் குறை கண்டு, அமர்வு நீதிமன்றத் தீர்ப்பையும் குற்றாய்வு செய்தனர்.

கீழ்வெண்மணிக் கொலை மேல்முறையீடு வேறு இரு நீதியர் ஆயத்துக்குச் சென்றதைத் தெரிந்து கொண்ட உயர் நீதிமன்ற அரசு வழக்குரைஞர் ஆயத்துக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். பக்கிரி கொலை, 44 பேர் கொல்லப்பட்ட கீழ்வெண்மணிக் கொலை ஆகியவற்றை ஒரே அமர்வு நீதியர் விசாரித்து, தண்டனை உறுதி ஆணையிட்டதாக அவர் கூறினார். இரு வழக்குகளிலும் பல சாட்சியங்களும் எதிரிகளும் பொதுவாக உள்ளதாகக் கூறினார். எனவே பக்கிரிசாமி கொலை வழக்கு மேல்முறையீட்டை விசாரித்த அதே இரு நீதியர் ஆயம் கீழ்வெண்மணி கொலை வழக்கு மேல்முறையீட்டையும் விசாரிக்க வேண்டும் என்றார். ஆனால் நீதியர்கள் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்து, அதற்கு விசித்திரமான காரணம் கூறினர்:

“குற்ற எண் 327/1968 தொடர்பான குற்றங்களைப் பொறுத்த வரை, அமர்வு நீதிமன்ற வழக்கு எண்கள் 80/1969, 26/1970 ஆகியவற்றில் எதிரிகளாகச் சேர்க்கப்பட்ட இருபத்துமூன்று மிராசுதாரர்கள் பற்றி மட்டுமே நாங்கள் கவனம் கொள்கிறோம். இதனுடன் இணைந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்ட்ட பெரும்பாலான உழவர்கள் குற்றஞ்சாட்டப்பட்ட மிராசுதாரருக்கு எதிரான இந்த வழக்குகளில் அரசுத் தரப்பு சாட்சியங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

“இரு வழக்குத் தொகுப்புகளையும் தனித் தனியாக விசாரித்து, இரு வழக்குகளிலும் ஒரே நாளில் தீர்ப்பளிக்கும் நல்வாய்ப்பு ஒரே அமர்வு நீதியருக்கு இருந்துள்ளது. இரு வழக்குத் தொகுப்புகளிலும் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதிரான குற்றவியல் மேல்முறையீடுகளை ஒரே ஆயம் விசாரித்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். வெவ்வேறான நிகழ்ச்சிகள் நடந்த வரிசையை இன்னுமெளிய கோணத்தில் பார்க்கும் வாய்ப்பு நீதிமன்றத்துக்குக் கிடைத்திருக்கும். எவ்வாறாயினும். நிகழ்ச்சிகளைக் காண்பதற்கான சரியான பார்வைக் கோணத்தையும், அவை எந்தக் காலவரிசையில் நடந்திருக்க வேண்டும் எனபதையும் நீதிமன்றத்துக்கு வழங்கப் பெருமுயற்சி எடுத்துக் கொண்ட மதிப்புமிகு அரசு வழக்குரைஞருக்கும் எதிர்தரப்பு வழக்குரைஞருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.”
மாநில முதலமைச்சருக்கு 11.04.1968 அன்று நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பாக முதல் எதிரி கோபாலகிருட்டிண நாயுடு எழுதிய கடிதத்தைத் தீர்ப்புரை விரிவாக மேற்கோளிட்டுக் காட்டுகிறது. தட்டச்சிட்ட 95 பக்கத் தீர்ப்பில் முதல் எதிரியின் கடிதம் 3 பக்கங்களில் இடம்பெற்றது. அக்கடிதத்திலிருந்து நீதியர்கள் மேற்கோள் காட்டிய பகுதி பின்வருமாறு:

“மிராசுதாரர்களின் முறைப்பாடு என்னவென்றால், இவ்வாறான ஒவ்வொரு சந்திப்பிலும் தொழிலாளர்களுக்குக் கொஞ்சம் சலுகை வழங்க வேண்டும், இது தொழிலாளர் தலைவர்களின் மாண்பு உயரச் செய்யும். இந்தத் தலைவர்களின் நோக்கம் பஞ்சத்தை, அதாவது “மாவோயிசத்தின் நாற்றங்காலை”த் தோற்றுவிப்பதாகும் என்கிறார். உண்மையில் சென்னை மாநில முதலமைச்சருக்கு முதல் எதிரி 11.04.1968 அன்று எழுதிய கடிதத்தில் (தட்டச்சுத் தொகுதி 2, பக்கம் 64), இந்த முறைப்பாடு இடம்பெற்றுள்ளது…”

முதல் எதிரியின் மேல்முறையீட்டையும் நீதியர்கள் பின்வருமாறு குறிப்பிட்டனர்:

“மேல்முறையீட்டு விண்ணப்பர் தன சொந்தப் பாதுகாப்பு குறித்தும் தன் குடும்பத்தார் பாதுகாப்பு குறித்தும் அஞ்சுகிறார். அவர் இப்போதெல்லாம் வலி சுமந்து வாழ்வது போன்ற நிலைதான். தனக்கு எதிராகத் திட்டமிட்ட வன்முறையலை உயர்ந்து வருவதை சட்டம-ஒழுங்குப் பாதுகாப்புப் படை எதிர்த்துத் தடுக்கவில்லை என்றால் தன் உயிர் பறிபோகும் என்று அவர் அச்சப்படுகிறார். எனவே அவர் மாண்புமிகு முதலமைச்சரின் மதிப்பும் சிறப்புமான தலையீடு வேண்டி தாழ்மையுடன் முறையீடு செய்கிறார்.”

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 293

புதன், 8 நவம்பர், 2023

குறள் நூல் வெளியீடும் அறிமுகமும், ஐந்தாவது திருக்குறள் மாநாடு, சிகாகோ

 




குறள் நூல் வெளியீடும் அறிமுகமும்

ஐந்தாவது திருக்குறள் மாநாடு

பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024

சிகாகோ

அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு

வணக்கம்.

வருமாண்டு (பங்குனி 23-25, 2055 **** 5-7/04/2024)  சிகாகோவில் நடைபெற உள்ள ஐந்தாவது திருக்குறள் மாநாட்டை முன்னிட்டுத் திருக்குறள் நூலரங்கு நிகழ உள்ளது.

இனித் திருக்குறள் தொடர்பான நூல்கள் வெளியிடுநர் அவற்றின் வெளியீட்டிற்கு இம்மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கு முன்னர்த் திருக்குறள் தொடர்பான நூல்களை வெளியிட்டவர்கள் இம்மாநாட்டை அவரவர் நூல்களின் அறிமுக நிகழ்வாகக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

திருக்குறள் தொடர்பாக வெளியிட உள்ள புதிய நூல்கள் / அறிமுகத்திற்காக அனுப்பப்பெறும் முன் வெளியிடப்பட்ட நூல்கள்  ஆகியவற்றின் ஆசிரியர் பெயர், நூலின் பெயர், ஆண்டு, பதிப்பகப் பெயர்,  முகவரி, மின்வரி, அலைபேசி எண், நிலைபேசி எண் முதலிய விவரங்களை thirunool50@gmail.com மின்வரிக்கு அனுப்ப வேண்டும்.

நூல்களின் ஐந்து படிகளைத்

திருக்குறள் ஆய்வு நூல் வெளியீடு அல்லது  திருக்குறள் ஆய்வு நூல் அறிமுகம் என நேர்விற்கேற்ப உரிய தலைப்பைக் குறிப்பிட்டுப் பின் வரும் முகவரியைக் குறிக்க வேண்டும்.

மே/பா இயக்குநர்

ஆசியவியல் நிறுவனம் * INSTITUTE OF ASIAN STUDIES

செம்மண்சேரி, சோழிங்க நல்லூர்  சென்னை 600 119

தமிழ்நாடு. பேசி: 044-24501851, 24500831

பழைய நூல்களாயின் வரும்    மாசி 29, 2055 / மார்ச்சு 12, 2024 ஆம் நாளுக்குள்ளும்

புதிய நூல்களாயின்  வரும் பங்குனி 13, 2055 / மார்ச்சு 26, 2024  ஆம் நாளுக்குள்ளும்   கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்

நூலறிமுகத்திற்கும் வெளியீட்டிற்கும் அனுப்பும் நூல்களின் மின்வடிவுகளை உரைக்கோப்பு வடிவிலும் பொதிவுக்கோப்பு(பி.டி.எஃப்.) வடிவிலும்  thirunool50@gmail.com  மின்வரிக்கு அனுப்ப வேண்டும்.

வெளியிடப்படும் புதிய நூல்களின் அட்டைக்கு அடுத்துள்ள முதல் பக்கத்தில்

இந்நூல், சிகாகோ நகரில், சிகாகோ தமிழ்ச்சங்கம், ஆசியவியல் நிறுவனம், உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா ஆகியன இணைந்து பங்குனி 23-25, 2055 /ஏப்பிரல் 5-7, 2024 ஆகிய நாள்களில் நடத்திய ஐந்தாவது உலகத் திருக்குறள் மாநாட்டின் போது வெளியிடப்பெற்றது/அறிமுகப்படுத்தப் பெற்றது

என நேர்விற்கேற்பக் குறிக்கப்பெறுவது சிறப்பாகும்.

5 ஆவது உலகத் திருக்குறள் மாநாட்டில் இதற்கென ஓர் அமர்வு ஒதுக்கி வைக்கப்படும். மாநாட்டிற்கு வருபவர்கள் நுழைமம்(விசா) பெறுவதற்காகத் தங்கள் பெயர், முகவரி, அலைபேசி எண், நிலைபேசி எண், கடவுச்சீட்டு எண், கடவுச்சீட்டு முடியும் நாள்  முதலிய விவரங்களை  thirunool50@gmail.com  மின்வரிக்கும்  contact@thirukkuralconference.org  மின்வரிக்கும் தெரிவிப்பின் விழாக் குழுவினர் அழைப்பு மடலை அனுப்பி வைப்பர்வெளியீட்டாளர் அல்லது பதிப்கத்தாரும் பங்கேற்கலாம்நேரில் வர இயலாதவர்களும் நூல்களை உரிய விவரங்களுடன் அனுப்பி வைக்கலாம்.

மாநாட்டின் பொழுது உணவு, உறையுள், உள்ளூர்ப் போக்குவத்து முதலிவயவற்றை விழாக் குழுவினர் ஏற்றுக் கொள்கின்றனர். தத்தம் இருப்பிடங்களில் இருந்து சிகாக்கோ சென்று வர ஆகும் பயணக் கட்டணங்களை  அவரவர் நிறுவனச் செலவில் அல்லது சொந்தச் செலவில்  அல்லது வேறு வகையில் ஏற்க வேண்டும்.

மாநாட்டுப் பேராளர்களுக்கு நூல்கள் அன்பளிப்பு வழங்க விரும்புவோர்  முன்னதாகத் தெரிவித்து விட்டு, மாநாட்டு வருகையின்போது கொணர வேண்டும்.

நூல் வெளியீட்டு அல்லது நூல் அறிமுக நிகழ்வில் பங்கேற்க இருப்போர்,  நிகழ்நிரல் திட்டமிடுவதற்காக  30.11.23 ஆம் நாளுக்குள் தத்தம் பெயர், நூற்பெயர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

மாநாட்டுச் செய்திகளுக்கான தளம் : https://thirukkuralconference.org

அன்புடன்

இலக்குவனார் திருவள்ளுவன்

பொறுப்பாளர் , நூலரங்கம்

ஐந்தாவது திருக்குறள் மாநாடு

‘குறள்நெறி ஓங்கின் குடியரசு ஓங்கும்!]