சனி, 2 ஜூன், 2018

ச.வே.சேகரைத் தீண்டாமைத் தடுப்புச்சட்டத்தில் கைது செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

ச.வே.சேகரைத் தீண்டாமைத் தடுப்புச்சட்டத்தில்  கைது செய்க!

  மதுரையில் நிருமலா தேவி என்னும் கல்லூரி ஆசிரியை, மாணாக்கியரை ஒழுக்கக் கேடான பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் கைது செய்யப்பட்டுச் சிறைக்காவலில் உள்ளார்.  இது  தொடர்பில் உயர் அலுவலர்களுக்கும் பங்கு உண்டு என்று அவர் மூலம் தெரிய வந்த பொழுது தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து மீதும்  குற்றச் சாட்டு புகைந்தது. தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என விளக்க ஆளுநர் செய்தியாளர் கூட்டம் நடத்தினார். தன் மீது களங்கம் இல்லை எனக் கூற வந்தவர்  கூட்டத்தில் பெண்களிடமிருந்து விலகி நடந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால்,  வழக்கம்போல் ஆளுநர் தாத்தா ‘வீக்கு’ என்னும் இதழின் மூத்த இதழாளர் இலட்சுமி சுப்பிரமணியம் கன்னத்தில் தட்டியுள்ளார்.
 இது குறித்து  இதழாளர் இலட்சுமி சுப்பிரமணியம், தன் முகத்தைப் பல முறை கழுவியதாகவும் இருப்பினும் அதிலிருந்து மீள முடியவில்லை என்றும் 17.04.2018 அன்று தன் பகிரியில் ( வாட்சுஅப் ) குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் உலகம், மகளிர் உலகம்,  பாசக தவிர்த்த பொதுமக்கள் ஆளுநரின் செயலுக்குக் கண்டனமும் வருத்தமும் தெரிவித்துள்ளனர்.
உயர்ந்த பொறுப்பில் உள்ளவரின் தாழ்ந்த செயலாக அனைவரும் கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துவந்தனர். ஆளுநர், நல்ல கேள்வி என்பதால் பாராட்டும் வகையில் கன்னத்தைத் தட்டியதாகக் கூறுவது  ஏற்கும்படியாக இல்லை, பாலியல் முறைகேடு குறித்த ஒழுக்கக்கேடுசார்ந்த கேள்வியை எப்படி நல்ல கேள்வி என்று சொல்ல முடியும்?  நல்ல கேள்வி என்றால் மறுமொழி கூறியிரு்கக வேண்டியதுதானே!  எனினும் ஆளுநர் மன்னிப்பு கேட்டுவிட்டார்.
ஆனால், பா.ச.க.வைச் சேர்ந்த  எசு.வி.சேகர் என அழைக்கப்பெறும் நடிகர் ச.வே.சேகர் என்பவர் பகிரியில்(WhatsApp) பகிர்வு முறையில் பண்பாடற்ற கருத்தினைப் பதிந்தார். இது குறித்துப் பெருத்த கண்டனம் வந்ததுடன் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தன. இதனால் அவர், தனக்கு வந்ததைப் படிக்காமல் பகிர்ந்ததாகவும் தன் கவனத்திற்குக் கொண்டு வந்ததும் அதை நீக்கிவிட்டதாகவும் தெரிவிததார். ச.வே.சேகர் வானொலி நாடக நிகழ்ச்சித்தயாரிப்பாளராக இருந்துள்ளார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார். எனவே இவரும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்தான். தன்னைப் போல் பிறரையும் நினைத்து இவ்வாறு இழிவாகக் குறிப்பிட்டுள்ளார் போலும், எவ்வாறிருப்பினும் இது தண்டனைக்குரிய செயலே
  யாராக இருந்தாலும் செய்தி அல்லது கட்டுரையின் இணைப்பு எனில் படிக்காமல் பகிர்வதுண்டு. ஆனால் 25 வரி செய்தி என்னும் பொழுது பகிரும் நேரத்திலும் பகிர்ந்த பின் அச்செய்தி தெரியும் பொழுதும் சில வரிகளாவது படித்துவிடுவோம். எனவே முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார். மூலச்செய்தி திருமலை என்பவர் பெயரில் உள்ளது. அவர் தளத்தில் இவரே பதிந்திருக்கவும் அல்லது அவரை இவ்வாறு பதியுமாறு இவர் சொல்லியிருக்கவும் வாய்ப்பு உண்டு.
  சேகர் மேல், நடவடிக்கை  வேண்டுபவர்கள் மூலப்பதிவாளர் திருமலையை வி்ட்டுவிட்டது ஏன் என்று தெரியவில்லை. பெண்களையும் செய்தியாளர்களையும் இழிவு படுத்திப் பதிந்த ச.திருமலையைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க  வேண்டும்.
மிக மிக மிக இழிவான தொடர்கள் கொண்ட இச்செய்தியை மீள்பதிவுசெய்ய விருப்பமின்றியே  இதுவரை வாளாவிருந்தோம். ஆனால் சொல்லியவர் கடுந்தண்டனைக்கு உரியவர் என்பதைப்புரிய  வேறுவழியின்றித தலைப்பாகத் தந்துள்ளோம்.
இதில் கையாளப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லுமே பெண்களையும் ஊடகத்தினரையும் மிக மிக இழிவு படுத்துவனவே  இதற்குக் கடுமையானநடவடிக்கை எடுத்திருந்திருக்க வேண்டும். பாசகவைச் சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை இதுவரையும் இல்லை.
  பாதிக்கப்பட்ட அம்மையார் காவல் துறையில் முறையீடு அளித்ததாகத்  தெரியவில்லை. தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கம்சார்பில் அதன் பொதுச்செயலர் அ.மிதார் மைதீன் காவல் ஆணையரிடம்  20.04.2018 அன்று முறையீடு அளித்துள்ளார். சேகரின் செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய செய்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் செல்லப்பிள்ளை சேகர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை; உயர்நீதி மன்றம் முன்பிணை மறுத்த பின்பும் நடவடிக்கை எடுக்கவில்லை;  உச்ச நீதிமன்றம் முன்பிணை மறுத்த பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவரோ மத்திய அமைச்சர் பொன்.இராதா கிருட்டிணன், தலைமையர் நரேந்திரமோடி ஆகியோரைச் சந்தித்து உற்சாகமாக இருக்கிறார்.
 இவருக்கு நெருங்கிய உறவினரான தலைமைச் செயலர் இவருக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றுவதாகவும் செய்திகள் வருகின்றன. இச்செய்தி உண்மை யலல என்றே எடுத்துக் கொள்வோம்.
  ஐயதிற்கு – சந்தேகத்திற்கு ஆளாக நேரிட்டதால் தன் கையையே வெட்டிக்கொண்ட பொற்கைப்பாண்டியன் ஆட்சி செய்த மதுரையின் ஆட்சியாளராக இருந்தவர் இப்போதைய தலைமைச் செயலர் திருவாட்டி கிரிசா வைத்தியநாதன் இ.ஆ.ப.. இவர்  தன்மீது இவ்வாறு களங்கம் சுமத்துப்படுவதை அறிவார். எனவே அதற்கு இடம் கொடுக்காமல் இருப்பதற்காகவாவது நடிகர் எசு.வி.சேகரை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் கமுக்கமாக வரச்செய்து பிணை வழங்கும் வகையில் ஆவன செய்யவோ, நல்லிணக்கம் பேசி வழக்கை இலலாமல் ஆக்கவோ முயலக்கூடாது.
  நடிகர் பாசக செல்லப்பிள்ளை சேகர் மீதும் ச.திருப்பதி மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் , பிற சட்டங்களுக்கிணங்க வழக்கு தொடுப்பதுடன்  தீண்டாமைத் தடுப்புச்சட்டத்தின் கீழும் தனியே வழக்கு பதிந்து தண்டனை வாங்கித் தர வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற இழிசெயல்கள் இனிமேல் நடக்காது.
கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர் (திருவள்ளுவர், திருக்குறள் 550)
–      இலக்குவனார் திருவள்ளுவன்

வெள்ளி, 1 ஜூன், 2018

பட்டியல் சாதியர் நலன்காக்கக் கைக்கட்டுடன் மடல் எழுதிய முதல்வர் பழனிச்சாமி

அகரமுதல

பட்டியல் சாதியர் நலன்காக்கக்

கைக்கட்டுடன் மடல் எழுதிய முதல்வர் பழனிச்சாமி

  மததிய பாசக அரசு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பட்டியல் சாதியர், பட்டியல் இனத்தவர், பிற்பட்டோர், சிறுபான்மையர் நலனுக்கு எதிராகவே நடந்து கொள்கிறது.  அவற்றில் ஒன்றுதான் கடந்த ஆண்டு தனியார் நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பட்டியல் சாதியர், பட்டியல் இனத்தவர், பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கல்வி  உதவித் தொகையை நிறுத்துவது. அவர்கள் செலுத்திய கல்விக்கட்டணத்தைத் திரும்பப்பெறும் வகையில் தரப்பட்ட இவ்வுதவித்தொகையை நரேந்திர(மோடி) அரசு  கடந்த ஆண்டு நிறுத்தி விட்டது.  எனினும் தமிழ்நாடுஅரசு நிறுத்தவில்லை. இவ்வாண்டு  கண்டிப்பாகக் கல்விக்கட்டணத்தைத் திரும்பத் தரக்கூடாது என நரேந்திர(மோடி) அரசு கூறிவிட்டது. அஃதாவது  கல்வி உதவித்தொகை தரபபடமாட்டாது என்று சொல்லிவிட்டது. இதுவரை தமிழ்நாடு அரசிற்கு இதற்காகத் திரும்பத் தர வேண்டிய ஆயிரத்து 803 கோடியே 50 இலட்சம்  தொகையையும் தரவில்லை.
  தனியார் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணத்துடன் படிக்கும் வசதி உள்ள இவர்களுக்கு எதற்கு உதவித்தொகை என்பதுதான் நரேந்திர(மோடி) அரசின் கேள்வி. பணக்கொழுப்பில் யாரும் தனியார் நிறுவனங்களில் கல்வி கற்க சேருவதில்லை. சிலர் புகழ்மிகு நிறுவனங்களில்  சேருவதைப் பெருமையாகக் கருதி சேரலாம். ஆனால், பலரும் அரசு கல்வி நிறுவனங்களில் சேர வாய்ப்பில்லாமலதான் தனியார் நிறுவனங்களை நாடுகின்றனர். அப்படியானால் போதிய கல்வி நிறுவனங்களை அமைக்காத அரசுகளே குற்றவாளிகள். மேலும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு கட்டண வரையறை செய்தும் பிற வகைகளில் உதவியும் வருவதால் இங்கே பயில்வோரை வேறுவகையாகக் கருதக் கூடாது. கட்டணமின்றிக் கல்வியை அரசுகள் தராக்காரணத்தால் கடன்வாங்கியோ  சொத்துகைள விற்றோ கூடுதல் கட்டணங்கள் செலுததிப் படிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.  அவ்வாறிருக்கும் பொழுது கூடுதல் கட்டணம் செலுத்திப் படிக்க வாய்ப்பு இருக்கும் பொழுது உதவித்தொகை தேவையில்லை என்பது சரியல்ல.
“எல்லாருடனும்  சேர்வோம்!  எல்லாருக்குமான மேம்பாடு!” என்பதே அரசின் கொள்கை எனக் கூறும் நரேந்திர(மோடி) குறிப்பிட்ட சமயத்தினர், குறிப்பிட்ட மொழியினர், குறிப்பிட்ட சாதியினர் நலனுக்காக மட்டுமே செயல்பாட்டால்  போதும என எண்ணுகிறது போலும்!
 “கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை” (வெறிபாடிய காமக்கண்ணியார், குறுந்தொகை 8) போல் பாசக அரசின் ஆட்டத்திற்கேற்பத்தான் தமிழ்நாடு அரசு ஆடுகிறது. இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கைகள் பாசகவால் கட்டப்பட்டுள்ளதை அனைவரும் அறிவர். பதவி நலன்களுக்காகத் தன்மானத்தை விட்டுக் கட்டுண்டு கிடந்தாலும் முதல்வர் பழனிச்சாமி துணிந்து இது குறிததுத் தலைமையர்  நரேந்திர(மோடி)க்கு மடல் எழுதியுள்ளார். தணிந்தசாதியினரின் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் எதிரான இத்திட்டத்தைக் கைவிட்டு உதவித் தொகையைத்  தொடர்ந்து தருமாறும் 60:40 விழுக்காட்டில் மத்திய அரசு உதவி வழங்குமாறும்  வேண்டியுள்ளார். கைகள் கட்டப்பட்டாலும் வாயிதழ்கள் ஒட்டப்பட்டாலும் துணிந்து எழுதிய முதல்வர் பழனிச்சாமிக்குப் பாராட்டுகள்! பிற மாநில முதல்வர்களுடன் இணைந்து  பாசக அரசைப் பணியச் செய்து தணிந்த சாதியினர் நலன் காக்க அவரை வேண்டுகிறோம்.
 தலைமையர் நரேந்திர( மோடிக்கு), முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய  மடலில் கூறப்பட்டு இருப்பதாவது:–
  கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் நிருவாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை ஏப்பிரல் மாதத்தில் இருந்து திரும்பப்  பெற முடியாது என்று கல்வி உதவித்தொகை திட்ட வழிகாட்டி விதியில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் அதிக அளவில் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஏழ்மை நிலையில் உள்ளனர். இவர்களால் ‘தகுதி’ மூலம் அரசு இடஒதுக்கீட்டை ப் பெற முடியாது.  தன் நிதிக் கல்லூரிகளில் நிருவாக ஒதுக்கீட்டின் கீழ் இவர்கள் படித்து, கல்வி உதவித்தொகை மூலம் பயனடைந்து வருகின்றனர்.
 இந்தத் திட்டம் ஏராளமான மாணவர்கள் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் சேர வழிவகை செய்கிறது. ஒட்டுமொத்த கல்விச்  சேர்க்கை விகிதம், 45  விழுக்காட்டைத் தாண்ட இந்தத் திட்டம் மிக பயனுள்ளதாக உள்ளது.
எனவே, புதிய விதிகளை வகுத்து, நிருவாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாது என்று கூறுவதால், அவர்களுக்கு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி மறுக்கப்படுவதோடு, ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கும் இலக்கை அடைவதில் பின்னடைவு ஏற்பட்டுவிடும். மேலும் இது  பட்டியல் சாதியினர், பட்டியல்  இனத்தவர் மத்தியில்  மன நிறைவின்மையை  உருவாக்கும்.
 சமூக நீதி, பட்டியல் சாதியினர், பட்டியல்  இனத்தவர் மேம்பாடு போன்றவற்றுக்கான திட்டங்களை வலுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளை, திருத்தப்பட்ட வழிகாட்டி நீர்த்துப்போகச் செய்து விடும். மத்திய  நிதிநிலை ஒதுக்கீட்டில்  இதற்கான நிதி ஒதுக்கீடு பல ஆண்டுகளாகத்  தேக்க நிலையில் உள்ளது. அந்த வகையில் மார்ச்சு மாதம் வரை தமிழக அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத்தொகை ஆயிரத்து 803 கோடியே 50 இலட்சம் ஆகும்.
 ஏற்கெனவே இருக்கும் பயன்களைக் குறைப்பதற்காக விதிகளில் மாற்றங்களைக்  கொண்டு வருவதற்கு  மாற்றாக, நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வேண்டும். மற்ற மத்திய அரசுத்  திட்டங்களில் உள்ளது போல, கல்வி உதவித்தொகை திட்டத்திலும் மத்திய  மாநில அரசுகளின் பங்களிப்பு முறையே 60:40  விகிதம் என்றளவில் இருக்க வேண்டும்.
  எனவே இதில் நீங்கள் தலையிட்டுப், பட்டியல் சாதியினர், பட்டியல்  இனத்தவர் மாணவர்களைப் பாதிக்கும் விதிகளை திரும்பப் பெற நடவடிக்கை வேண்டும். கல்லூரி நிருவாக ஒதுக்கீட்டில் பயிலும் பட்டியல் சாதியினர், பட்டியல்  இனத்தவர் மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது. மேலும் இந்தத்  திட்டத்தின் கீழ் மாநில அரசுக்குத்  தர வேண்டிய நிலுவைத்தொகையை விரைவாக மத்திய அரசு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 511)
நிதி இழப்பு என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் மக்கள் மேம்பாடு என்னும் நன்மை கருதி தவறாகத் திருத்தப்பட்ட விதிகளை நீக்கி வழங்கி வந்த உதவித்தொகையைத் தொடர்ந்து வழஙகுக!
  உதவித்தொகைக்கான தேவையின்றி அனைவருக்கும் கட்டணமில்லாக் கல்வி கிடைக்கச் செய்க!
– இலக்குவனார் திருவள்ளுவ

வியாழன், 31 மே, 2018

மொழிபெயர்ப்பு அறிஞர் பாவலர் தங்கப்பா மறைவு



ம.இலெ.தங்கப்பா
ம.இலெ.தங்கப்பா

மொழிபெயர்ப்பு அறிஞர் பாவலர் தங்கப்பா மறைவு

[மாசி 25, 1965 / 08.03.1934  – மாசி 17, 2049 / 31.05.2018]
மொழி பெயர்ப்பிலும்  மொழி ஆக்கத்திலும் வல்லவரான தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா இன்று (மே 31,2018)வைகறைக்கு முன்னரே –  நேற்று  இரவு 01.30 மணிக்கு – இயற்கை எய்தினார். நலக்குறைவால் சில நாள் முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று  முதல் நாள் வீடு திரும்பினார்.  ஆனால்,  மூச்சுத் திணறலால்  காலமானார்.
  ‘வானகம்,  எண் 7, 11 ஆவது குறுக்குத் தெரு,  ஒளவை நகர், புதுச்சேரி- 8′  இல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கண்தானமும் உடற்கொடையும் அளித்துள்ளமையால் அவரது உடல் இன்றுமாலை 4.00 மணிக்குச்   சமேமஆநி (சவகர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி-ஆராய்ச்சி நிறுவனத்திற்கு – JIPMER -) க்கு அளிக்கப்படுகிறது.

[மொழிபெயர்ப்பறிஞர் ம.இலெ.தங்கப்பா – தேவமைந்தன்] 

திங்கள், 28 மே, 2018

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-4


புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-4

புதுவை-தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
அதன் நான்காவது சொற்பொழிவில் இராவண காவியத்தின் காட்சிப்படலம், கைகோட்படலம், திருமணப்படலம் ஆகிய படலங்களின் பொருள் பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்.பகுத்தறிவாளர் கழகச்செயலர்  நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார்.திக.வின் தோழர்களும் தமிழ் அன்பர்களும் திரளாக அதில் கலந்து கொண்டனர்.
நான்காம் சொற்பொழிவை நிகழ்த்திய முனைவர் க.தமிழமல்லன் அவர்களைப் பாராட்டி  நெ.நடராசன் நன்றிகூறினார்