சனி, 23 செப்டம்பர், 2023

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி

 


தமிழ்ப் புத்தகத் திருவிழா, பெங்களூரு
சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி

1.11.2022 முதல் 31.10.2023 வரை வெளியிடப்பட்ட அனைத்து வகையான நூல்களும் விண்ணப்பிக்கத் தகுதிக்குரியன.
பின்வரும் பரிசுகள் வழங்கப் பெறும்.
முதல் பரிசு உரூ.5,000/-
இரண்டாம் பரிசு உரூ. 3,000/-
மூன்றாம் பரிசு உரூ. 2,000/-
3 ஊக்குவிப்புப் பரிசுகள் – ஒவ்வொன்றும் உரூ.1,000/-

தொடர்பிற்கு : 6363118988 ; tamilbookfestivalblr@gmail.com

விண்ணப்பிப்போர் 2 நூல்கள், நூலாசிரியர் ஒளிப்படம், நூலாசிரியர் குறிப்பு, பதிவுக்கட்டணம் நூலொன்றுக்கு உரூ.500இற்கான கேட்போலை அளிக்க வேண்டும்.
நூலோ பதிவுக்கட்டணமோ திருப்பியளிக்கப்படமாட்டா.
விண்ணப்பங்கள் முழு விவரங்களுடன் வர வேண்டிய இறுதி நாள் 15.11.2023

முத்துமணி நன்னன்
தலைவர்
கருநாடகத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம்
பெங்களூரு







தொல்காப்பிய மன்றம், கனடா, ஆண்டு விழா

 


புரட்டாசி 06, 2054 சனி 23.09.2023 மாலை 6.00

கனடா, தொல்காப்பிய மன்றத்தின் 8 ஆம் ஆண்டு நிறைவு விழா

தமிழிசைக் கலைமன்றம், இசுகார்பரோ

அழைப்பிதழ் காண்க.

முனைவர் செல்வநாயகி சிரீதாசு



தோழர் தியாகு எழுதுகிறார் 219 : உரிமைத் தொகை உண்டு! உரிமைக் கல்வி கிடையாதா?

 


தோழர் தியாகு எழுதுகிறார்
உரிமைத் தொகை உண்டு! உரிமைக் கல்வி கிடையாதா?

இனிய அன்பர்களே!

கல்வி பெறுவது மக்கள் உரிமை! கல்வி தருவது அரசின் கடமை! என்பது கல்வி உரிமையை வலியுறுத்துகிற நாம் தரும் முழக்கம். ஒரு சிலர் கேட்கின்றனர்: அரசினால் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி தர முடியுமா? இது கட்டுப்படியாகுமா? என்று சிலர் கேட்கின்றனர்: அரசின் நிதி நிலைக்கு இது சரிப்படுமா? வரவுக்கு மேல் எப்படிச் செலவு செய்ய முடியும்?

ஏழைபாழைகளுக்கு இலவயக் கல்வி (கட்டணமில்லாக் கல்வி) கேட்பதில் தவறில்லை. எல்லாருக்கும் கேட்டால் எப்படி? வசதியுள்ளவன் பணம் கட்டிப் படிக்கட்டுமே? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். சிலர் வாய்விட்டுக் கேட்கா விட்டாலும் மனத்திற்குள் இந்தக் கேள்விகளை வைத்துள்ளனர்.

இந்த வகைக் கேள்வி கேட்பவர்களின் பார்வையில் கல்வி என்பது ஓர் உடைமை, ஒரு வணிகப் பண்டம். கல்வி உடைமை என்றால் அஃது ஒருவரிடம் இருக்கும், ஒருவரிடம் இருக்காது, ஒருவரிடம் கூடுதலாக இருக்கும், ஒருவரிடம் குறைவாக இருக்கும். வணிகப் பண்டம் என்றால் விற்கலாம். விற்கப்பட்ட பின் அது அயன்மைப்பட்டு விடும். வாங்கியவர் அதனைக் கைவயமாக்கிக் கொள்ளலாம்.

உண்மையிலேயே கல்வி இப்படிப்பட்டதுதானா? ஒவ்வொரு மனிதர்க்கும் கல்வி இன்றியமையாதது என்கிறோம். கல்வி இல்லாத மாந்தர் மாந்தரே அல்லர். கல்விதான் தனிமனிதரைக் குமுக மனிதராக்கும். யார் குமுக மனிதர் இல்லையோ அவர் மனிதராக இருப்பது உயிரியல் நோக்கில் மட்டுந்தானே தவிர குமுகியல் நோக்கில் உண்மையில்லை. நல்ல தேசம் என்றால், நல்ல சமூகம் என்றால், அதில் உரிய அகவை அடைந்த ஒவ்வொருவரும் கல்வி கற்றவராக இருக்க வேண்டும். சமூகம் தனிமாந்தரைப் படைக்கிறது. தனிமாந்தர்கள் சேர்ந்து சமூகத்தைப் படைக்கிறார்கள். ஒவ்வொரு தனிமாந்தரும் ஒரு சமூக விளச்சல்தான்.

ஒவ்வொரு குழந்தையையும் படிக்க வைப்பது பெற்றோரின் கடமை என்பதன் பொருள். பெற்றோர் வழியாகச் சமூகம் அந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதே. தாய்தந்தையைச் சமூகத்தை விட்டு விலக்கிப் பாருங்கள், அவர்களால் குழந்தையைப் படிக்க வைக்க முடியாது என்பது மட்டுமல்ல, உணவூட்டி வளர்க்கக் கூட முடியாது.

மாதா பிதா குரு தெய்வம் நான்கில் முதல் மூன்றும் எளிதில் விளங்கும். நான்காவதாக வரும் தெய்வம் என்பது விளங்காப் புதிராக உள்ளது. சமூகம் என்பதன் குறியீட்டுத் தொன்மம்தான் அது. தெய்வத்தை விடவும் சமூகம் பெரிய புதிர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
குழந்தை வளர்ப்பில், குறிப்பாகக் குழந்தைக் கல்வியில் சமூகத்திற்கு உள்ள இந்தக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்குள்ளது. மருத்துவத்தையும் கல்வியையும் கடைச் சரக்காக்கி விட்டு மக்கள்நல அரசு என்று சொல்லிக் கொள்வதில் பொருளில்லை.
அரசு உண்மையிலேயே மக்கள்நல அரசாக இருக்கிறதா? என்று கேட்கலாம். மக்கள்நல அரசாக இயங்கும் படிக் கோரும் கடமை நமக்குள்ளது. கல்வி தருவது அரசின் கடமை என்று நாம் முழங்குவதன் பொருள் இதுவே.
இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரை “உரிமை, நிகர்மை, தோழமை” (LIBERTY, EQUALITY AND FRATERNITY) என்று முழங்குகிறது. குமுக அறத்தை (சமூகநீதி) குறிக்கோளாக அறிவிக்கிறது. இந்த விழுமியங்களின் படிச் சமூகம் அமையக் கல்வி இல்லாமல் எப்படிக் கூடும்? அந்தக் கல்வி ஏதோ ஒரு கல்வியாக இல்லாமல் இந்த விழுமியங்களை உள்ளடக்கமாகக் கொண்ட கல்வியாக இருத்தல் வேண்டும் அல்லவா?
கல்வி என்ற அமுதம் பருக ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகளுக்கும் உரித்துள்ளது. அதற்குச் சமூகம் பொறுப்பேற்க வேண்டும். இந்தப் பொறுப்பேற்றலின் தனியொருவருக்குக் கல்வி இல்லையேல் இந்த செகத்தினை அழித்திடுவோம்! என்ற புது முழக்கம் ஓங்கட்டும்.

உணவும் உடையும் உறைவிடமும் போல் – இன்று குடிநீரும் நல்ல காற்றும் போல் – நல்ல கல்வியும் நலவாழ்வும் சமூகத்தின் சார்பில் அரசு நிறைவேற்றித்தர வேண்டிய அடிப்படைத் தேவைகள் என்ற தெளிவு நம் சமூகத்தில் படரச் செய்வோம். அரசுக்குள்ள இந்தப் பொறுப்பின் ஆவணமாக அதன் கல்விக் கொள்கை அமைதல் வேண்டும்.

குடிமக்கள் வறுமையில் உழன்று நெருக்கடியில் தவிக்கும் போது மக்கள்நல அரசு அவர்தம் துயர்தணிக்கத் தன்னாலியன்றதைச் செய்ய வேண்டியதுதான். இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் தமிழ்நாட்டரசின் திட்டத்தை இப்படித்தான் புரிந்து கொள்கிறோம். அதே போது இந்தத் தொகையில் ஒரு பெரும் பகுதி கல்வி வணிகர்களுக்கும் சாராய வணிகர்களுக்கும் போய் விடுமோ? என்ற அச்சம் நமக்குள்ளது. அரசுச் சாராய(டாசுமாக்) வணிகம் பெருகியுள்ளது என்று வேண்டுமானால் அரசு மகிழ்ந்து கொள்ளலாம்.

கல்வி உரிமை பெற்றோரின் பெருஞ்சுமையைக் குறைக்கப் பயன்படும், மக்களிடையே விழிப்பூட்டி போதைப் பழக்கத்தையும் குறையச் செய்யும். குடி குடியைக் கெடுக்கும், அரசையும் கெடுக்கும்! மிகையான குடிப் பழக்கத்தால் ஈரல் கெட்டு அரசு மருத்துவமனைகளின் நோய்ப் படுக்கைகளில் கிடப்பவர்களுக்கான மருத்துவச் செலவு குறைந்தால் அரசுக்கு நன்மைதானே?

இளைஞர் அரண் கேட்பது – தமிழ்நாட்டின் கல்வி உரிமை ஆர்வலர்கள் கேட்பது – கல்வி உரிமை! முழுமையான கல்வி உரிமை! இதை உறுதி செய்தால் – கல்விக்குக் கட்டணமில்லை என்ற நிலை ஏற்படச் செய்தால், உரிமைத் தொகைக்கான தேவை குறையும், முடிவில் அற்றும் போகும்.

உரிமைத் தொகை கூடாது என்று நாம் சொல்லவில்லை. உரிமைக் கல்வி வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

இன்றைய இந்திய அரசும் அரசமைப்பும் இருக்கும் நிலையில் தமிழக அரசினால் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை வகுக்க இயலுமா? வகுத்தாலும் அதனைச் செயலாக்க இயலுமா? என்று கேட்கின்றனர். இருக்கும் நிலையைச் சொல்வது அதனை மாற்றுவதற்காக இருக்க வேண்டுமே தவிர அத்தோடு ஓய்ந்து விடுவதற்காக இருக்கலாகாது.

இன்றைய நிலையில் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று தமிழக அரசு சொல்கிறதா? அது தமிழ்நாட்டுக்கு ஒரு கல்விக் கொள்கை வகுக்க முடியும் என்று நம்பித்தானே அதற்கான ஒரு குழுவையும் அமைத்தது? அந்தக் குழு ஒரு கொள்கையை வகுக்கட்டும், அதனைச் செயலாக்குவதில் என்ன தடை வரினும் எப்படிக் கடப்பது என்று பேசுவோம். குடியாட்சியத்தில் வெளிப்படைத் தன்மை இன்றியமையாத ஒன்று. எதுவானாலும் தமிழக மக்களுக்குத் தெரிய வேண்டும்.

ஒவ்வொரு தமிழரின் கல்வி உரிமையும் தமிழ்த் தேசத்தின் கல்வி இறைமையைச் சார்ந்துள்ளது என்பதை நன்கறிவோம். இந்த உரிமைக்கும் இறைமைக்கும் தடையாக நிற்பது இந்திய அரசுதான். எனவே நமது போராட்டம் இந்திய அரசுக்கு எதிராகத்தான். இந்தப் போராட்டத்தில் தமிழக அரசு இயல்பாகவே நம் பக்கம் நிற்க வேண்டும் என்று விரும்பி எதிர்பார்க்கிறோம். தமிழக அரசே இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குத் தலைமையேற்றால் மகிழ்வோம். ஆனால் தமிழக அரசு இந்தப் போராட்டத்தைத் தனக்கெதிரானதாக நினைத்துக் கொண்டு குறுக்கிட்டுத் தடுக்கவோ ஒடுக்கவோ முயலாதிருக்கட்டும்.

தூக்க வரும் பருந்திடமிருந்து குஞ்சுகளைக் காக்கும் கடமை தாய்க் கோழிக்குண்டு. பருந்தின் வலிமை கோழிக்கு இல்லை என்பதால் இந்தக் கடமையைப் புறக்கணிக்க இயலாது. குஞ்சுகளைத் தன் சிறகில் அரவணைத்துக் கொண்டு சிலிர்த்துச் சீறிப் பருந்தை விரட்டியடித்தால் அதுதான் தாய்க் கோழி. என்ன செய்யப் போகிறது தமிழ்நாட்டரசு?

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 248

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 218 : அறிவும் அறமும் மக்கள் பக்கம் நிற்பதற்கே!



(தோழர் தியாகு எழுதுகிறார் 217 : குடியாட்சியமும் கல்வியும் – தொடர்ச்சி)

அறிவும் அறமும் மக்கள் பக்கம் நிற்பதற்கே!

இனிய அன்பர்களே!

“மிகினும் குறையினும் நோய் செய்யும்” என்ற வள்ளுவர் வாக்கு மருந்து அதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பினும் பொதுவாக எல்லா நிலைமைகளுக்கும் பொருந்தும் படியானதே.!
அந்தத் திருக்குறள் முழுவதையும் பார்த்தோமானால் மேலும் சுவையான முடிவுகள் பெறப்படும்.
“மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று
.” திருக்குறள் 941.
மு. வரதராசனார் உரை: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். வளி என்பதை வாதம் என்று பொருள் கொள்கிறார் மு.வ.
இது அக்காலத்தியப் பட்டறிவு சார்ந்த மருத்துவ அறிவியல். இக்காலத்தில் அறிவியல் மருத்துவம் அப்படியே ஏற்றுக் கொள்ளுமா என்பது ஐயத்திற்குரியதே.

வாதம் அளவோடிருக்க வேண்டும், மிகையாகவோ குறையாகவோ இருக்கலாகாது என்பதை வேறொரு பொருளில் எடுத்துக் கொள்கிறேன். அரசியல் கருத்தியல் வாதங்களைச் சொல்கிறேன். வாதுரைப்பதும் எதிர்வாதுரைப்பதும் உண்மையைக் கண்டறியவோ நெருங்கிச் செல்லவோ உதவுவதாக இருக்க வேண்டும். வாதத்துக்ககவே வாதம் என்பது மிகைவாதமாகி விடும். வாதமே செய்யாமல் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வது குறைவாதமாகி விடும்.

கீல்வாதம், பக்கவாதம் எல்லாமே மிகைவாத, குறைவாத நோய்களே! வளி மிகுதல் அல்லது குறைதல் வலிமிகச் செய்யும்.

நான் சொல்லாடுவதாக உங்களுக்குத் தோன்றினால் அது மிகை இல்லை. குறையும் இல்லை. மிகைப்படுதலின் தீய விளைவுகளைப் பேசத்தான் நினைக்கிறேன். சிறைக்குள் நடந்த கருத்துப் போராட்டங்களில் தனிநலன், அமைப்பு நலன், அரசியல் நலன் இவற்றுக்கிடைப்பட்ட முரண்பாடுகளைக் கையாள்வதில் கண்ட இடர்ப்பாடு குறித்து சுவருக்குள் சித்திரங்களில் எழுதியிருந்தேன் (உழக்கில் ஒரு புயல்).

தனிநலனா? அமைப்பு நலனா? என்ற கேள்வி எழும் போதெல்லாம் ஒரு பொதுமையர் – எந்தப் புரட்சியாளரும் – அமைப்பு நலன் என்றுதான் முடிவு செய்வார். இதில் பெரிய சிக்கல் இல்லை. தன்னலங்கருதாப் பொதுநோக்கு இருந்தால் போதும், இந்த முடிவுக்கு.

ஆனால் அமைப்பு நலனா? அரசியல் நலனா? என்ற வினாவிற்கு விடை காண்பது அவ்வளவு எளிதன்று. அமைப்பு சரியான அரசியலில் சென்று கொண்டிருக்கும் வரை இரண்டையும் வேறுபடுத்திக் காண வேண்டிய தேவையே எழாது. சிற்சில வேறுபாடுகள் எழும் போதும் அமைப்புக்குட்பட்டு அவற்றுக்குத் தீர்வு கண்டு தொடர்வதுதான் முதிர்ச்சியான அணுகுமுறை.

ஆனால் அமைப்பு தவறுக்கு மேல் தவறு செய்து, அவற்றைத் திருத்தும் வழிகளையும் அடைத்து விடும் போது அமைப்புக்கடங்கி நடப்பதற்காகச் சரியான அரசியலைக் கைவிடுவது, ஒருமுறை மட்டுமல்ல, தொடர்ந்து கைவிடுவது கொள்கைக்கு இரண்டகம் செய்வதாகும். கொள்கை சரியாக இருக்க வேண்டும் என்றால் என்ன பொருள்? தருக்க அடிப்படையில் சரியாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் மக்களின் அடிப்படை நலனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.


ஆக, சரியான அரசியல் கொள்கைக்கு இரண்டகம் என்பது அருவமான ஏதோ ஒன்றுக்குச் செய்யும் இரண்டகம் என்பதை விடவும் மக்கள் நலனுக்குச் செய்யும் இரண்டகம் ஆகும்.

பொதுமை அமைப்பாயினும், வேறு போராடுகிற அமைப்பாயினும் அமைப்பு நலனை மக்கள் நலனுக்கு மேலாக நிறுத்துவது அந்த அமைப்பை மதமாக்கி விடும், அதிலும் மூட மதமாக்கி விடும். அறிவியலும் அறவியலும் ஆளுக்கு மட்டுமல்ல, அமைப்புக்கும் வேண்டும். அறிவனைத்திலும் மேலானது, அறமனைத்திலும் உயர்வானது மக்கள் பக்கம் நிற்கச் செய்யும் அறிவும் அறமுமே ஆகும்.

நானா அமைப்பா? அமைப்பு என்பதே சரியான விடை. அமைப்பா மக்களா? மக்கள் என்பதே சரியான விடை. இது அடிப்படைப் பார்வை. இலையேல் அமைப்புப் பற்று என்பது குறுங்குழு வெறியாகச் சீரழியும்.

இப்போது ஏன் இந்த விளக்கம்? என்ற கேள்வி எழக் கூடும். ஏப்பிரல் 14 அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் குறித்துத் தோழர் மதியவன் இரும்பொறை எழுதியுள்ள பெரியகுளம் அறிக்கையின் வரிகளிலும் வரிகளுக்கிடையிலும் உய்த்துணரப்படும் சில செய்திகள் என்னை இந்த விளக்கம் எழுதத் தூண்டின. தொடர்ந்து பேசுவோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 245

வியாழன், 21 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 217 : குடியாட்சியமும் கல்வியும்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 216 : கலைமகள் எனும் தொன்மம்-தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்
குடியாட்சியமும் கல்வியும்

இனிய அன்பர்களே!

படிக்க வேண்டும்! ஏன் படிக்க வேண்டும்? நல்ல வேலைக்குப் போய்ப் பொருளீட்டுவதற்காகப் படிக்க வேண்டும். படிக்கா விட்டால் மற்றவர்களோடு போட்டியிட்டு முன்னேற முடியாதல்லவா? சுருங்கச் சொல்லின் வாழ்க்கைக்கு அணியமாக வேண்டும் என்பதற்காகவே கல்வி!

இதுதான் கல்வி பற்றிப் பரவலாக நிலவும் நம்பிக்கை. இதை மறுத்த கல்வியாளர் அமெரிக்காவைச் சேர்ந்த அறிஞர் சான் தெவி. இவர் அம்பேத்துகரின் ஆசிரியர். “கல்வி என்பது வாழ்க்கைக்கு அணியமாதல் அன்று. கல்வி என்பது வாழ்க்கையே ஆகும்.” [“Education is not preparation for life; education is life itself.”]

குடியாட்சியமும் கல்வியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றார் தெவி. இரண்டுமே தன்-தீர்வுக்கும் தன்-வளர்ச்சிக்கும், பொது நன்மையில் பங்கேற்பதற்கும் இன்றியமையாதவை. அறிவுக் கூர்மையுடனும் அறிவியல் உணர்வுடனும் பொது நன்மையில் பங்கேற்பதற்குக் கல்வி இல்லாமல் முடியாது.

சான் தெவியின் முற்போக்குக் கல்விச் சிந்தனைகளுக்கு நேர் எதிரானதுதான் இந்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை. அது மாணவர்களைச் செயற்கை அறிவு எந்திரங்களாகப் பயிற்றுவிக்க விரும்புகிறது. தனியொரு மாணவர் ஆனாலும், அந்த மாணவரை உறுப்பினராகக் கொண்ட தமிழ்க் குமுகமானாலும் தன்-தீர்வோ தன்-வளர்ச்சியோ பொது நன்மையில் அறிவார்ந்த பங்கோ பெற அது உதவாது. பார்க்கப் போனால் இதற்கு நேரெதிரான விளைவையே அது ஏற்படுத்தும்.

இந்திய அரசின் பிற்போக்கான புதிய தேசியக் கல்விக் கொள்கையை அடியோடு எதிர்ப்பது தவிர தமிழ்மக்களுக்கு வேறு வழியே இல்லை. தமிழகத் திமுக அரசு இந்தக் கொள்கையை எதிர்ப்பது சரியானது. ஆனால் அடியோடு எதிர்க்க வேண்டும், முழுமையாக எதிர்க்க வேண்டும். கொஞ்சம் இப்படி கொஞ்சம் அப்படி என்ற அணுகுமுறை உதவாது. கொஞ்சம் உணவு கொஞ்சம் நஞ்சு என்பது உயிர்க்கிறுதியாகி விடும்.

பிற்போக்கை எதிர்க்க வெறுங்கையால் முடியாது. முற்போக்கை முன்னிறுத்தித்தான் பிற்போக்கை முறியடிக்க முடியும். இந்தியாவுக்கு ஒரு கல்விக் கொள்கை என்பது தன்னளவிலேயே தமிழ்நாட்டின் தன்னாட்சிக்கு எதிரானது. இதற்கு மாற்றாகத் தமிழ்நாட்டுக்கான தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை என்பது தமிழ் மாணாக்கருக்கும் தமிழ்நாட்டுக்கும் தன்னாட்சி முன்னேற்றத்தைக் குறிக்கும்.

தமிழக அரசு தமிழ்நாட்டு மக்களுக்குத் தனித்துவமான கல்விக் கொள்கை வகுப்பதில் உறுதியாக இல்லை என்றால், அது உறுதி மீறுகிறது என்று பொருள்.

அரசைச் செய்தவர்கள் மக்களே என்பது உண்மையானால் அரசு செய்யாததைச் செய்ய வைக்கும் பொறுப்பு மக்களுக்குள்ளது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றும் ஒரு தொடக்க முயற்சிதான் இளைஞர் அரண் நடத்திய கல்வி உரிமை மாநாடு. இப்படிப் பல முயற்சிகள் தேவை என்பதை உணர்ந்திருக்கிறோம். ஒரு விளக்கை ஏற்றினோம்! அதைக் கொண்டு பல விளக்குகள் ஏற்றலாம்!

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 244

புதன், 20 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 216 : கலைமகள் எனும் தொன்மம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 215 : காலுடுவெல் கலைவண்ணம்-தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்
கலைமகள் எனும் தொன்மம்

இனிய அன்பர்களே!

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் கொள்கை அறிக்கையில் தமிழ்த் தேசியத்துக்கும் சமூக நீதிக்குமான இடையுறவை விளக்கப்படுத்தப் பாவலர் பாரதிதாசனிடமிருந்து நான் எடுத்துக்காட்டிய கவிதை வரிகள் –
“சாதி ஒழித்தல் ஒன்று – நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் – மற்றப்
பாதி துலங்குவதில்லை.”

பாரதிதாசனின் இந்த வரிகள் “பாரதி உள்ளம்” என்ற கவிதையில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க செய்தி.


இந்த வரிகளின் அடிப்படையில் பாரதியைச் சாதி ஒழிப்புக் கொள்கை கொண்டவர் என்று நான் கருதியதுண்டு. ஆனால் சாதிமறுப்பும் சாதிஒழிப்பும் ஒன்றல்ல என்ற புரிதல் ஏற்பட்ட பின் பாரதியைப் பற்றிய மதிப்பில் ஒரு மாற்றுக் குறைந்துதான் போயிற்று. பாரதியை அவரது பார்ப்பனப் பிறப்பின் அடிப்படையில் தூற்றுவதை நான் ஏற்பதில்லை. ஆனால் புறஞ்சார்ந்த ஆய்வு நோக்கில் பாரதியிடம் குறைகாண்பதில் எவ்விதப் பிழையும் இல்லை. இந்தியத் தேசியத்தின் இந்துத்துவ உள்ளடக்கம் பாரதியிடமும் தாக்கம் செலுத்திற்று என்பதில் ஐயமில்லை.

உணர்வுகளை வெளிப்படுத்த பாரதி துணைக்கழைத்த தொன்மங்களில் இந்துத் தெய்வங்களே ஆட்சி செலுத்தின. உருசியப் புரட்சியை மாகாளியின் கடைக்கண் பார்வையாகக் காட்டிய பாரதி பாரதத் தாயை தேவியாகவே வழிபட்டார்.
“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று பெருமிதம் கொண்ட பாரதி… கல்வியைக் கலைமகள் அல்லது சரசுவதியாகவே உருவகித்தார். சரசுவதியை அவர் கல்விக் கடவுளாகக் கண்டதிலும் காட்டியதிலும் வியப்பில்லை. அதுதான் தொன்றுதொட்டு வரும் மரபு. ஆனால் அந்தத் தொன்மத்தை முன்னிறுத்தி பாரதி வெளிப்படுத்திய கல்விச் சிந்தனைகள் செறிவானவை, குமுக அறம் (சமூக நீதி) என்பதன் பாற்பட்டவை.

அனைவர்க்கும் கல்வி என்பதுதான் பாரதியின் கொள்கை. இதற்கு மாறானது வருண தருமம், மனு நீதி. பாரதி எந்தப் பக்கம்?

“வஞ்ச மற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குல தெய்வ மாவாள்,
வெஞ்சமர்க்குயிராகிய கொலலர்,
வித்தையோர்ந்திடு சிற்பியர், தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ்செய்வோர்
வீரமன்னர் வேதியர் யாரும்
தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறிவாகிய தெய்வம்.”

சரசுவதி – கலைமகள் – கல்வியின் தெய்வம். அவளே உழைக்கும் மக்களின் குலதெய்வம், அவர்கள் அனைவர்க்கும் கல்வி உரிமை உண்டு என்று பொருள். அனைவர்க்கும் கல்வி என்ற உரிமையை மறுக்கும் மனுதருமத்தை மறுத்துக் கொல்லர், தச்சர், வாணியர், சத்திரியர், வேதியர் என்று கீழிருந்து மேலாக இந்துச் சமூகத் தட்டுகளை வரிசையாகச் சொல்லி அனைவருக்குமான கல்வியை வலியுறுத்துகின்றார் முண்டாசுப் பாவலர். .

சரசுவதி துதி, கலைமகள் வழிபாடு என்றால் என்னவாம்?

“மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதன் மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனையன்றாம்.”

வேறென்ன செய்வதாம்?

வீடு தோறும் கலையின் விளக்கம்,

வீதிதோறும் இரண்டொரு பள்ளி,

நாடு முற்றிலும் உள்ளனவூர்கள்,

நகர்கெளுங்கும் பலபல பள்ளி,

தேடு கல்வியிலாத தொரூரைத்

தீயினுக் கிரையாக மடுத்தல்

கேடுதீர்க்கும் அமுதமென் அன்னை

கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.”

கல்வியைக் “கேடில் விழுச்செல்வம்” என்றார் திருவள்ளுவர்.
“கேடுதீர்க்கும் அமுதம்” என்கிறார் பாரதியார்.
திருக்குறளைப் படித்தாரோ இல்லையோ, தெரியாது, கல்வியைக் குறளின்
குரலாகவே போற்றுகின்றார். கல்விக்காகப் பணி செய்ய மறந்த அரசினரைச்
சாடுகின்றார்:
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?”

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்”

என்ற குறள்தான் நினைவுக்கு வரும். மானமிழந்து விலங்குகள் போல் வாழ்வதும் ஒரு வாழ்வாமோ? எப்படி ஆற்றித் தேற்றுகிறார் பாருங்கள்:

“போன தற்கு வருந்துதல் வேண்டா,
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!”

செய்ய வேண்டியது என்னவாம்?

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்.”

ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றால் ஏழைத் தமிழ்நாட்டின் கல்வியுரிமை காத்தல் என்று பொருள் கொள்வோம்
.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 24
3

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

தொல்லியல் கருத்தரங்கம், தஞ்சாவூர்

 ஃஃஃ        19 September 2023      அகரமுதல

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு

மாநிலக் கருத்தரங்கம்

அண்மைக்கால ஆய்வுகள் காட்டும்

தமிழ்நாட்டு  வரலாறு

நாள் :  சித்திரை 04 & 05, 2054 ++++++ 21& 22.09.2023

இடம் : தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

பத்து அமர்வுகள் – விவரம் அழைப்பிதழில்

முதல் அமர்வில்  மூன்றாவது கட்டுரையாளர்

இலக்குவனார் திருவள்ளுவன் – இலக்குவனார் குறிப்பிடும் மாமூலனார் புலப்படுத்தும்வரலாற்றுச் செய்திகள்




தோழர் தியாகு எழுதுகிறார் 215 : காலுடுவெல் கலைவண்ணம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 214 : வான்தொடு உயரங்கள் தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்
காலுடுவெல் கலைவண்ணம்


அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இராபருட்டு காலுடுவெல் முதலில் திருத்தொண்டராக 1838இல் சென்னைக்கு அனுப்பப்பட்டு, 1841இல் இடையன்குடி வருவதற்கு முன்பே அப்பகுதியில் கெரிக்கு, சத்தியநாதன் ஆகியவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். கிறித்துவத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு சிறு கூட்டமும் உருவாகியிருந்தது. இவர்கள் வழிபாடு செய்வதற்காக ஒரு சிறிய ஆலயமும் கட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கிறித்தவர்களை முறையாக வழிநடத்த முழுநேரத் திருத்தொண்டர்கள் இல்லை. எனவே அவர்கள் முழுமையாகக் கிறித்துவத்தில் ஊன்றி நிற்கவில்லை. காலுடுவெல் பணி தொடங்கும் பொழுது இடையன்குடியைச் சுற்றி வறுமையில் வாடிய இருபது குக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கிறித்துவத்தில் இருந்தனர். அங்கிருந்த சிறிய ஆலயம் புயலால் சிதைந்து சேதமுற்றுக் கிடந்தது.

இடையன்குடி இடையர்கள் வதியும் குடியிருப்பாக இருந்து, வறட்சியாலும் பஞ்சத்தாலும் அவர்கள் குடிபெயர்ந்து சென்ற பின் பெயர் மாறாமலே நாடார்குடி ஆயிற்று. இடையன்குடி என்ற பெயர் முன்பே இருப்பினும் அந்த ஊரைத் திட்டமிட்டு ஒழுங்குற அமைத்தவர் காலுடுவெல்தாம். அவர் விரும்பியிருந்தால் அதன் பெயரை மாற்றியிருக்கலாம்.

மற்றவர்களால் தொல்லைக்கு ஆளான கிறித்தவ மக்களைத் தண்பொருநை (தாமிரவருணி) ஆற்றின் வடபுறத்தில் 150 காணி(ஏக்கர்) நிலம் வாங்கி அமைதியான இடத்தில் குடியமரச் செய்து, அந்த ஊருக்கு சாயர்புரம் என்று பெயரிட்டனர். இப்படி அமைக்கப்பட்டதுதான் சமாதானபுரமும்.

நெல்லை மாவட்டத்தில் பணியாற்றிய ஐரோப்பியக் கிறித்துவத் திருத்தொண்டர்கள் இரேணியசு, சி.யு. போப்பு, மாகாசியசு போன்றவர்கள் சாயர்புரம், சமாதானபுரம், ஞானஒளிபுரம், மெய்ஞ்ஞானபுரம், நாசரேத்து, அடைக்கலப்பட்டணம் என்றெல்லாம் விவிலியப் பெயர் சூட்டியிருந்த போதிலும், காலுடுவெல் அவ்வழியைக் கடைப்பிடிக்கவில்லை. இடையன்குடி அவரது சொந்த ஊரான Shepherdyard-ஐ நினைவூட்டியதுதான் காரணமா? உறுதியாகத் தெரியவில்லை.

இப்படியும் இருக்கலாமோ? என்று நான் ஒரு காரணம் சொன்னேன்: இடையர் என்ற பெயர் ஆயர் அல்லது மேய்ப்பரைக் குறிப்பதால், ஆண்டவரை மேய்ப்பராகவும் மக்களை ஆட்டுமந்தையாகவும் உருவகப்படுத்தும் கிறித்துவப் படிமவியலுக்கு இந்தப் பெயர் பொருத்தம் என்று காலுடுவெல் கருதியிருக்கக் கூடும். இஃது ஓர் ஊகம்தான்.

காலுடுவெல் தபுளினில் ஓவியம் படித்தவர்; அழகுணர்ச்சி மிக்கவர். இடையன்குடி ஊரையும் திரித்துவ ஆலயத்தையும் அவர் அமைத்த விதத்தில் இந்த அழகுணர்ச்சிக்கு முகன்மைப் பங்கிருந்தது. காலுடுவெல்லின் மனிதநேயத்துக்குச் சான்றாகக் கடும் பஞ்சத்தின் போது கோயில் கட்டுவதற்கான பணத்தை எடுத்து அவர் பஞ்சத்தில் தத்தளித்த மக்களுக்கு உதவிகள் வழங்கியதை அருள்திரு கிப்புசன் சுட்டிக்காட்டினார்.

திரித்துவ ஆலயக் கட்டுமானத்தில் காலுடுவெல்லின் கைவண்ணம் குறித்து அறிய இரா.பி. சேதுப்பிள்ளையிடமே திரும்பிச் செல்லலாம்:

“அக்கோவிலின் ஒவ்வோரங்கமும் கண்ணைக் கவரும் அழகு வாய்ந்து விளங்குகின்றது. ஆயினும் சாலச்சிறந்த அக்கோவில் சாளரங்களைக் கண்டோர் அவற்றின் அழகையும் அமைப்பையும் எந்நாளும் மறவார் என்பது திண்ணம். காலுடுவெல் ஐயர் களியினால் சாளரங்கள் செய்து அவற்றில் கோலமார் கோடுகள் வரைந்து காட்டினார் என்றும் அவற்றை மாதிரியாகக் கொண்டு தச்சரும் கொல்லரும் சாளர வேலை செய்து முடித்தார் என்றும் அவ்வூர் முதியோர் கூறுகின்றார்கள்….”

இடையன்குடி ஆலயம் கோதிக்கு கட்டடக் கலை மரபு (GOTHIC ARCHIECHTURE) சார்ந்து கட்டப்பட்டது. ஜெர்மனியில் கிபி 11ஆம் நூற்றாண்டில் தோன்றி 13ஆம் நூற்றாண்டில் நன்கு வளர்ச்சி பெற்ற இக்கலைமரபில் தேவாலயங்களும், அரண்மனைகளும், மாளிகைகளும் கட்டப்பட்டன. கூர்மையான வளைவு, மெல்லிய உயரமான தூண்கள், அவற்றின் புடைப்புக் கோடுகள், தூண்கள் மேல் நாற்புறம் அமைந்த வளைவுகளின் மீதான கூரை, சித்திர வேலைப்பாடு கொண்ட சாளரங்கள்… இவையெல்லாம் இக்கலைமரபின் அடையாளங்கள்.

கட்டடக்கலை பற்றி அரிச்சுவடி கூட அறியாதவன் என்றாலும் இடையன்குடி திரித்துவ ஆலயத்தின் அழகை உணர முடிகிறது. நுழைவாயிலை நடுவில் அமைக்காமல் ஓரத்தில் அமைத்தது புதுமை எனப்படுகிறது. ஆலயத்தின் சுவரும் தரையும் கருங்கற்களால் ஆனது. வெளிப்புறக் கட்டட அமைப்பு பிரெஞ்சுக் கட்டடக் கலை சார்ந்ததாம். பலிபீடத்தின் மேற்கூரையும் சாளரங்களும் கோதிக் கலை மரபை ஒட்டியதாம். சாளரச் சித்திரங்கள் காலுடுவெல்லின் கைவண்ணமாம். கண்ணாடிகளில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் ரோமானிய, அராபியக் கலை மரபுகளின் கலவையாம்.

கோயிலின் உட்புறத்தில் கூர்மையான ஐந்து வளைவுகள் மீது மரத்தால் கூரை வேயப்பட்டுள்ளது. இது பனிப் பகுதிகளுக்குரிய அமைப்பு ஆகும். கூரை குத்துச் சாய்வாய் உள்ளது.
.
1847ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய போதிலும், பசி பஞ்சம் குறுக்கிட்டதாலும், காலுடுவெல்லின் தமிழாராய்ச்சி காரணமாகவும் 33 ஆண்டு நீண்ட காலத்தாழ்வு ஏற்பட்டு 1880ஆம் ஆண்டுதான் காலுடுவெல் நெல்லை உதவி ஆயராகப் பொறுப்பேற்ற பின் தூய திரித்துவ ஆலயம் கட்டிமுடிக்கப்பெற்று திருநிலைப்படுத்தப்பட்டது.

காலுடுவெல் கல்விப்பணி ஆற்றிய காலத்தில்தான் குடியேற்ற ஆட்சியில் அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான கல்வி நிலையங்கள் என்ற கருத்தாக்கம் வலுப்பெற்றது. குடியேற்ற அரசும் பொதுக் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. காலுடுவெல் இடையன்குடியிலும் சுற்றுப்பட்ட ஊர்களிலும் ஒன்பது பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு இந்தச் சூழல் ஏற்றதாக இருந்தது. பள்ளி மாணவர்களுக்குப் பகலுணவுத் திட்டத்தையும் அவர் அறிமுகம் செய்தார். பகலுணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தது யார்? என்ற போட்டியில் இனி நீங்கள் காலுடுவெல்லையும் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

காலுடுவெல்லின் துணைவியார் எலிசாவும் கல்விப் பணியில் துணைநின்றார். இடையன்குடியில் தையல் பள்ளி தொடங்கினார். பெண்களுக்கான உறைவிடப் பள்ளியும் அமைத்தார்.

காலுடுவெல் குறித்து அவரது ஒப்பாய்வு மொழியியலுக்கு அப்பாலும் சொல்ல வேண்டியவை எவ்வளவோ இருப்பினும், முடிவில் நான் பதிவு செய்ய விரும்புவது அவரது சுற்றுச் சூழல் உணர்வையே. இதற்கு இடையன்குடியில் அவர் நட்ட மரங்களே உயிர்ச் சான்று. நெல்லை மாவட்டத்தின் வறட்சிக்கும் தேரிக்காட்டின் வெப்பத்துக்கும் அவ்வப்போது வாட்டிய பஞ்சத்துக்கும் காலுடுவெல் கண்ட விடை மழைவளம் பெற மரம் வளர்க்க வேண்டும் என்பதே.

“இன்னும் சில இடம் பார்க்க வேண்டும்” என்று அருள்திரு கிப்புசன் நினைவூட்ட இறங்கு பயணம் தொடங்கிற்று. ஏறுவதை விட இறங்குவது எளிது என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்தக் கோபுரத்தின் படிக்கட்டுகளில் மாறிமாறி முன்னோக்கியும் பின்னோக்கியும் அமர்ந்தும் எழுந்தும் திரும்பியும் ஒரு வழியாகக் கீழே வந்து சேர்ந்த போது ‘அப்பாடா’ என்று இருந்தது, எனக்குத்தான்!

திட்டமிட்ட படி உவரி சென்று கடற்கரையில் உட்கார்ந்து வெளியிலிருந்தே அந்தோணியார் கோயில் பார்த்து, வழியில் கப்பல் மாதா கோயில் பார்த்து விட்டு, நெல்லை புறப்பட்டோம்.

இந்த அருமையான இடையன்குடிப் பயணத்தை எளிதும் இனிதும் ஆக்கித்தந்த அருள்திரு கிப்புசன், உடன் வந்த பீட்டர், ஓட்டுநர் பாலு அனைவருக்கும் நன்றியறிகிறேன்! நெல்லையில் இது என் விருப்பம் என்று சொன்னவுடனே பார்த்துப் பார்த்து நிறைவேற்றிய பிரிட்டோவை மட்டும் மறந்து விட்டேன், பாருங்கள்!


(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 241