சனி, 28 ஏப்ரல், 2018

இணையவழித் திருத்தப் பயிற்சிக்கு அழைப்பு – சென்னை

அனைவருக்கும் வணக்கம்.
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN), தமிழ் விக்கிபீடியாவின் வேங்கைத் திட்டம் கட்டுரைப்போட்டி 2017 – 2018 இன் பகுதியாக, ஒரு நாள் தொகுதொடர் (Editathon) நிகழ்வு நடத்த தீர்மானித்துள்ளது.
 இதன் மூலமாகக் கல்லூரி மாணவர்கள், த,.தொ.(ஐ.டி) ஊழியர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ்த் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைத் தமிழில் உருவாக்கவும், மேம்படுத்தவும், அறிவுசார் படைப்புகள் தன் மொழியில் இருக்க வேண்டியதன் முதன்மைத்துவத்தையும் சார்ந்து விவாதங்கள், உரைகள் நிகழ்த்தவும் முயல்கிறது.
இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்துத், தங்கள் கருத்துகளை வழங்கி உதவ வேண்டுகிறோம். நிகழ்வு விவரங்கள்
பின்வருமாறு, அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம்.
இடம் :
        கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு,
        கடை எண் 5/350, பழைய மகாபலிபுரம் சாலை, நேரு நகர், துரைப்பாக்கம்,
        [துரைப்பாக்கம் சிடிஎசு(CTS) அருகில்,]
        சென்னை 600 097
நாள்\  சித்திரை 16, 2039 / 29.4.2018
நேரம் –  காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை
பதிவிற்கு- https://fsftn.typeform.com/to/E7sAyc
நன்றி

வியாழன், 26 ஏப்ரல், 2018

ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்! – குவியாடி


 அகரமுதல

பிற கருவூலம்

அனலும் புனலும் :

ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்!


குவியாடி
உரிமைக் குரல் கொடுத்துப் பெயர் பெறுவோர் உலகில் உண்டு. அடிமையாய் அடங்கிப் பெயர் பெறுவோர் தமிழ்நாட்டில் உள்ளனர். அடிமைத் தனத்தின் அடையாளம்தான் போலிப் பணிவு!
மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், இந்தப் போலி பணிவுக்கு உதாரணமாக பார்க்கப்படுகிறார். தன்னைத்தானே கீழிறக்கிக் கொள்வதை உணராமல் தற்காப்பு என எண்ணிச் சில முத்துகளை உதிர்த்து வருகிறார் அவர்!
30 ஆண்டுகளாகச் சசிகலா, செயலலிதாவை ஆட்டி வைத்ததாகக் கூறி வருகிறார் அவர். இதன் மூலம் ”சசிகலாவால் வரும் புகழைச் செயலலிதா பெறுகிறார் ; செயலலிதாவால் வரும் பழிகளைச் சசிகலா ஏற்கிறார் ” எனச் சசிகலா அன்பர்கள் கூறி வருவதை உண்மை என்கிறார்.
அப்படியானால் இதற்கு முன்பு, “கட்சித் தொடர்பில்லாத சசிகலா, எப்படிக் கட்சிப் பொறுப்பை ஏற்க முடியும்? செயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டவர் எவ்வாறு கட்சியை வழி நடத்தும் பொறுப்பை ஏற்க முடியும் ” என்றெல்லாம் தொடுத்த வினாக்கள் தவறுதானே?
செயலலிதாவையே அடக்கியவர் சசிகலா என்றால் அவரை எப்படிச் செயலலிதாவால் புறக்கணித்திருக்க முடியும்? செயலலிதாவை நிலை நிறுத்திய சசிகலாதான் கட்சிக்கும் ஆட்சிக்கும் பொருத்தமானவர் என்று மறைமுகமாகப் பன்னீர் கூறுகிறாரா?
தான் அதிமுகவில் இருந்த பொழுது தினகரன் மழலைப் பள்ளி மாணாக்கன் என்கிறார் பன்னீர். இராகுல் காந்தி பிறப்பதற்கு முன்பே காங்கிரசில் இருந்தவர்கள் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். மு.க.தாலின்(ஃச்டாலின்) பிறக்கும் முன்பே கட்சிக்காக உழைத்தவர்கள், அவரின் தலைமையில்தான் இயங்குகின்றனர். உலகெங்கும் இதுதான் நிலைமை!
தலைமைப் பதவிக்கு ஆண்டுகள் முதன்மை யல்ல! பணி முதிர்ச்சிதான் முதன்மை. பள்ளி ஆசிரியர் ஆசிரியராகவே இருக்கும் பொழுது அவரது மாணவர் அவருக்கும் மேல் தலைமை யாசிரியராகவோ இயக்குநராகவோ வருவதுதான் வாழ்க்கை. ஆசிரியர் கல்லூரி விரிவுரை யாளராகவே இருக்கும் பொழுது அவர் மாணவர் முதல்வராகவோ துணைவேந்தராகவோ அமர்வதுதான் காலச்சூழல் தரும் பரிசு. இதனை மக்கள் உணர்ந்துள்ளார்கள் .
தினகரனுக்கு முன்பே கட்சியில் இருந்தவர் தினகரனின் முதன்மைக்காக ஏன் உழைத்தார்? தினகரனின் ஆளுமையால் கட்சியிலும் ஆட்சியிலும் சிறப்பிடத்தைப் பெற்றார்?
சசிகலாவால் தற்கொலை உணர்ச்சிக்குத் தள்ளப்பட்டவர், செயலலிதா மரணப் படுக்கையில் இருந்து, தான் அரியாசனத்தில் இருந்த பொழுது, ஏன் சசிகலாவை ஓரங்கட்டவில்லை?
செயலலிதா மறைந்ததும் சசிகலாவிடம் அதிமுகவின் பொதுச் செயலாளராக வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடியது ஏன்? பாசக பக்கம் சாயாமல் இருந்திருந்தால் இன்றைக்கும் முதல்வராகத் தொடர்ந்து அவரின் காவல் தெய்வமாகச் சசிகலாதானே இருந்திருப்பார்.
சசிகலாவால் தற்கொலை யுணர்விற்குத் தள்ளப்பட்டவர் அப்பொழுதே அல்லவா ‘தருமயுத்தம்’ தொடங்கியிருக்க வேண்டும்? சசிகலாவால் வரும் முதல்வர் பதவி வேண்டா என உதறித் தள்ளியிருக்க வேண்டும்?
அன்று தன் வாழ்வாதாரமானவர் காலைத் தொழுது நின்றார். இன்று உயர்விற்கு வேறு கால் கிடைத்ததும் இதனை உதறுகிறார். அப்படித்தானே!
செயலலிதாவின் மறைவுக்குப்பின் பன்னீராய் மணம் வீசியவர் இன்று மணமில்லா வெறும் தண்ணீராய்க் காட்சி யளிக்கிறார். அதிமுகவிலேயே இருக்க வேண்டும் என எண்ணுபவர்களையும் தினகரன் பக்கம் தள்ளிவிடுபவர் இவர்தான் எனக் கட்சியினர் கூறுகின்றனர்.
எம்சியாரால் ஓரங்கட்டப்பட்டவர் செயலலிதா எனக் கருதி மக்கள் அவரை ஓரங்கட்டவில்லை. மாறாக அதற்கு முன்பு அவரால் அணைக்கப்பட்டவர் எனச் செயலலிதாவை ஏற்றுக் கொண்டனர்.
செயலலிதாவால் சசிகலா ஓரங்கட்டப்பட்டார் என்று அவரைத் துரத்த கட்சியினர் விரும்பவில்லை. அதற்கு முன்பும் பின்பும் செயலலிதாவால் தாயாய், தோழியாய், எல்லாமுமாகப் போற்றப்பட்டவர் எனச் சசிகலாவை மக்கள் ஏற்கின்றனர்.
இந்த உண்மையைப் பன்னீர் புரிந்துகொள்ள வேண்டும்.
முதல்வர் பதவி பறிபோனபின் கிளர்ச்சிக்காரனாக மாறி அதைவிடக் குறைவான நிலையில் உள்ள துணைமுதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டவர், தனக்குப் பதவி ஆசை இல்லை என்று சொன்னால் மக்கள் நம்புவார்கள் என நம்புவது அறியாமை அல்லவா?
பதவியைக் காப்பதற்கென வாழும் அரசியல்வாதி பதவி இல்லாமல் வாழ முடியாது. பன்னீருக்கும் பொருந்தும்! பாசகவின் மடியில் தவழ்ந்ததால் மக்களால் தூக்கி எறியப்பட்டார். இதனால் பாசகவாலும் வீசி எறியப்படுவார். எனவே மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தினகரன் ஆட்சிக்கு வந்தால் அவருடன் சேர முந்துபவராக இருக்கப் போகும் பன்னீர் அதற்கு முன்னதாகவே கட்சியின் ஒற்றுமைக்குப் பாடுபடலாம். அந்த அணி இந்த அணி எனக் கட்சியினரைத் திரியவிட்டுக் கட்சியை உடைக்காமல், பாசக ஆட்டுவிக்கும் பொம்மையாக இராமல், கட்சியை ஒற்றுமைப்படுத்தும் ஆளுமையாளராக மாறலாம்.
அதிமுக ஆட்சி கலைக்கப்படுவதற்குக் காரணமாக இராமல், பாசகவால் தமிழ்நாடு சிக்கிச் சீரழிந்து போவதற்கு உந்துதலாக இராமல், தன்மானம் மிக்கத் தமிழ்நாட்டை உணர்த்தப் பாடுபடலாம்.
பன்னீர், அதிமுக என்னும் கப்பலை மூழ்காமல் காப்பாற்றும் மீகாமனாக – கப்பலோட்டியாக மாற வேண்டும். ஒற்றுமை என்னும் தேரைச் செலுத்தும் தேரோட்டியாக விளங்க வேண்டும். பன்னீர் தாழ்ந்தாலும் அதிமுக வாழும். அதிமுக வீழ்ந்தால் பன்னீரால் அரசியலில் நிலைக்க முடியுமா? எனவே அவர் பாசக.வுக்கு அடி பணியாமல் நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம் இது!

குவியாடி

அகற்ற வேண்டியது அதிமுக அரசையா? எடப்பாடியார் ஆட்சியையா? – குவியாடி


அகரமுதல

பிற கருவூலம்


அனலும் புனலும் :

அகற்ற வேண்டியது அதிமுக அரசையா?

எடப்பாடியார் ஆட்சியையா?


குவியாடி
முந்தைய திமுக ஆட்சியின்பொழுது (2006-2011) அதனைச் சிறுபான்மைஅரசு என்றே எப்பொழுதும் செயலலிதா கூறிவந்தார். சட்டமன்றத் திமுக உறுப்பினர்கள் அடிப்படையில் அப்பொழுது திமுக அரசு பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில் – காங்கிரசு கூட்டணியால் – அது பெரும்பான்மை அரசாகத்தான் செயல்பட்டுவந்தது.
இப்பொழுதோ சட்டமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில் மட்டுமல்ல, சொந்தக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில்கூடப் பெரும்பான்மை இழந்து அல்லாடுகிறது அதிமுக!
நாணய உணர்வும் நாணமும் இருப்பின், அதிமுக பதவி விலகியிருக்க வேண்டும். எந்த அரசியல் தலைவர்களிடமும் இல்லாத உணர்வுகளை அதிமுகவிடம் மட்டும் எப்படி எதிர்பார்க்க முடியும்?
அதிமுகவிற்குப் பெரும்பான்மை வலிவு இல்லாமையால், அரசு வலிமை குறைந்து விளங்குகிறது. இதனால் சொந்தக் கட்சி உறுப்பினர்களின் பேரங்களுக்கே அடிபணிந்து நிற்க வேண்டியுள்ளது. மறுபுறம் ஆட்டிப்படைக்கும் மத்திய ஆளுங்கட்சியிடம் மண்டியிட்டு மன்றாட வேண்டியிருக்கிறது.
செயலலிதா வழி நடப்பதாகக் கூறிக்கொள்கிறது இந்த அரசு. செயலலிதா நிறைகளும் குறைகளும் கொண்டிருந்த தலைவர்தான். அடக்குமுறைக் கொடுமைகளைக்கூடத் துணிவு என்று தவறாகக் கருதிப் போற்றப்பட்டவர்தான். எனினும் உண்மையில் துணிவாகவும் செயல்பட்டு வந்தார். தன் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தும் ஒழுக்கக்கேடுகளிலும் கொலைகளிலும் ஈடுபட்டுவந்த மதத்தலைவரைத் துணிந்து சிறையிலடைத்தார்.
ஈழத்தமிழர்களை இலங்கைத் தமிழர்கள் என்றும் சிங்களத் தமிழர்கள் என்றும் கூறிவந்தவர்கள் இடையே தமிழ்ஈழத்திற்கு அங்கீகாரம் வேண்டியும் தமிழ்இனப் படுகொலையாளி இராசபக்சேவைத் தண்டிக்கவும் சட்டமன்றம் மூலம் குரல்கொடுத்த துணிவானவர்தான்.
செயலலிதா தனக்குக் கப்பம் கட்டுவதற்காகத் தவறு செய்பவர்களைக் கண்டு கொள்வதில்லை. ஆனால், தனக்குத் தெரியாமல் தன் கட்சிக்காரர் யாரும் தவறு செய்வதை அறிய நேர்ந்தால், அவர் எந்த உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் அவரைத் தூக்கி எறியத் தயங்காதவர். இதனாலேயே கட்டுப்பாட்டைக் காக்கும் தலைவியாக உருவகப்படுத்தப்பட்டார்.
மத்திய ஆளுங்கட்சியிடம் நெருக்கம் கொண்டிருந்தாலும் தன் அதிகார உரிமைக்குப் பாதிப்பு வருவதாக இருந்தால், துணிந்து எதிர்க்கத் தயங்காதவர்! இதனால் தமிழக உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன.
ஆனால், செயலலிதா வழியில் நடப்பதாகக் கூறிக்கொண்டே அவர் காத்த உரிமைகளைத் தாள்பணிந்து அடகுவைக்கிறது இன்றைய அதிமுக அரசு.
இதன் நோக்கம் ஆட்சியில் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதுதானேதவிரத், தமிழக நலன்களைக் காக்க வேண்டும் என்பதல்ல!
பேரவைத்தலைவரின் நடுநிலைமையற்ற செயலால், ஆட்சியைக் காத்துக் கொண்டுள்ளது அதிமுக என்பது உலகறிந்த செய்தி. அவர் அணி மாறினார் என்றால், ஆட்சிஅதிகாரமும் மாறிவிடும். நேர்மையற்ற முறையில் ஆட்சியில் இருப்பதால்தான் தன்னை விற்பதற்குத் தயங்குவதில்லை. ஆனால் விலையாக நம் உரிமைகள் பறிபோவதுதான் கொடுமை!
தமிழக மக்களின் உரிமைகளைக் காவுகொடுக்கும் இந்த அரசு இன்னும் நீடிக்க வேண்டுமா? என்பதுதான் மக்கள் முன்புள்ள வினா? அதேநேரம் வாணலியில் இருந்து தப்பி அடுப்புத் தீயில் விழுவதுபோல் கொடுந்துயரம் ஏற்படுமோ என்ற அச்சமும் மக்களிடையே உள்ளது.
அதிமுக அரசு அகன்றால் அந்த இடத்தில், அடுத்த இடத்தில் உள்ள திமுக, கூட்டணி சேர்த்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தால், மக்களாட்சி என மகிழலாம். ஆனால், மதவெறியும் மொழிவெறியும் மிக்க பாசக, குடியரசுத்தலைவர் ஆட்சியை அறிமுகப்படுத்தித் தன் முறைமுக ஆட்சியை அரங்கேற்றுமே! என்ற அச்சம்மக்களிடையே உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி பாசக ஆதரவால்தான் அதிகாரத்தில் உள்ளார் என்பது உண்மைதான். ஆனாலும் தன்னுடைய திறமையாலும் துணிவாலும்தான் தன் பதவியைக் காத்து வருகிறார்பன்னீர்செல்வம்போல் இரண்டகனாக – துரோகியாக – மாறமாட்டேன் எனச் சசிகலாவிடம் தாள்பணிந்து கூறியவர்தான் பழனிச்சாமி. என்ன செய்வது? உறுதிமொழியைக் காப்பதைவிட உயர்ந்தது பதவியைக் காப்பது என்பதுதானே கட்சி அரசியலின் இலக்கணமாய் மாறிவிட்டது!
ஆனால், பழனிச்சாமி அணியினரின் பதவிநலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத தமிழக மக்கள் காக்கப்படாமல் போகும் கொடுமை தொடரக் கூடாது அல்லவா?
போட்டி வேட்பாளராகக் களத்தில் தனியனாக நின்று சட்டமன்ற உறுப்பினரான தினகரனுக்குக் கட்சியில் மிகுதியும் செல்வாக்கு உள்ளது. அவரே உண்மையான அதிமுக என மக்கள் உணருவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையர் கருதுகிறார்கள்.
வாய்ப்பு வந்தால் பாசகவிற்குப் பாதப்பூசை செய்ய ஆயத்தமாக இருப்பவர்தான் அவரும்! எனினும் பிறரை அடிமைப்படுத்தி இன்பம் கண்டவர்கள், பிறருக்கு அடிமையாக விரும்பமாட்டார்கள். அந்த அளவில் மதவெறிக்கட்சிக்கு எதிராகச் செயல்படுவதாக உறுதி அளித்தால், அவர் அடையாளம் காட்டும் ஒருவர் தலைமையில் அதிமுக அரசை அமைக்கலாம்!
பதவி நீக்கப்பட்ட 18 உறுப்பினர்களின் பக்கம் தீர்ப்பு வந்தாலும் மேல்முறையீடு செய்து காலங்கடத்தித் தேர்தல் வரும் வரை ஆட்சியில் இருக்கலாம் என ஆள்வோர் எண்ணக்கூடாது.
அதிமுக அரசு கவிழக்கூடாது என்றால், எடப்பாடியார் அதிகாரத்தை வேறொருவருக்கு மாற்றுவதே ஏற்றது! இல்லையேல் இருப்பதையும் பறிகொடுத்து ஒன்றும்இல்லாமல் போகும்நிலை ஏற்படும்.
தேர்தல் மூலம் ஆட்சி அதிகார உரிமை முடிவாகும் வரையில் இடைக்கால ஏற்பாடாக அதிகாரப் பெயர்ச்சி ஏற்படட்டும்! சிந்திப்பார்களா உரியவர்கள்?
  • குவியாடி

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018, சிட்டினி



  சித்திரை 15, 2049  –  28.04.2018

மாலை 4,30 முதல் இரவு 9.30 வரை

அருள்மிகு துருக்கை அம்மன் கோயில் வளாகம்

பகரர் பூங்கா, சிட்டினி  (Regents Park, Sydney)

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018, சிட்டினி

சிட்டினித்  தமிழ் இலக்கியக் கலை மன்றம்

ஆத்திரேலியத் தமிழ்ச்சங்கம்

ஓபன் தமிழர் கழகம்


பெருமைக்குரிய சான்றோர்கள்
சி.வை.தாமோதரம்(பிள்ளை)
கவிஞர் கண்ணதாசன்

கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்


அகரமுதல

கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்


வணக்கம்.
 சித்திரை 14, 2049 வெள்ளிக்கிழமை  27.04.2018
மாலை 06.30 மணிக்கு
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் , 
இலக்கியவீதி  அமைப்பும்,
திரு கிருட்டிணா இனிப்பகமும் 
இணைந்து நடத்தும்
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வில்
கவிஞர்  பிரமிள்
பற்றிய  நிகழ்வுக்கு
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம் .

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
தலைமை : கவிஞர் அழகிய சிங்கர்
அன்னம்  விருது பெறுபவர் : கவிஞர்  சிரீநேசன்
கவிஞர் பிரமிள்பற்றிச்  சிறப்புரை  :  முனைவர்  கால சுப்பிரமணியம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்
தகுதியுரை : செல்வி ப. யாழினி
என்றென்றும் அன்புடன் 
இலக்கியவீதி இனியவன்
பாரதிய வித்தியா பவன்
திரு கிருட்டிணா இனிப்பகம்

புதன், 25 ஏப்ரல், 2018

வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையே! – குவியாடி


அகரமுதல

வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையே!
–      குவியாடி
ஒடுக்கப்பட்ட மக்களின் – பாரதியின் மொழியில் சொல்வதானால்  தணிந்த சாதியினரின் – நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதில்மாற்றுக்கருத்து இல்லை. அவர்களுக்கு எதிராக இன்றும் வன்கொடுமைகள் தொடர்வதும் உண்மைதான். எனவே, வன்கொடுமைத்தடுப்புச்சட்டத்தின் மூலமாகவாவது அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும்.
நடைமுறைக் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக இச்சட்டத்தில்    ஒடுக்கப்பட்டவர்கள் நலன்கருதிச் சில திருத்தங்கள் தேவை. அதே நேரம், பொய்க்குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் பிற வகுப்பினரின் நலன்களைக் காக்கவும் சட்டத்தில் திருத்தம் தேவை.
இதைக் காலங்கடந்தேனும் உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது. ஆனால் சட்டத்திருத்தத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், அப்பாவிகள் பழிவாங்கப்படுவதற்காகத் திருத்தம் தேவை என்றால், ஆழமாகச் சிந்திக்காமல் பெரும்பான்மையர் எதிர்க்கின்றனர்.               
அரசியல் யாப்பு , பிரிவு 17 இன்படி நம் நாட்டில்  தீண்டாமை ஒழிக்கப்பட்டது.ஆனால்,  நடைமுறையில் தீண்டாமைச் செயல்கள் இருந்தன; இருக்கின்றன, எனவே, தீண்டாமை ஒழிப்புச் சட்டம் 1955இல் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டம்(Protection of Civil  Rights) என 1976 இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  தாழ்த்தப்பட்டோருக்கான சட்டமாக இஃது இருந்ததே தவிரப் பழங்குடியினர் நலன் குறித்துப் பொருட்படுத்தவில்ல.,
  எனவே, 1989இல் தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும், 1995இல் அதற்கான விதிகளும் உருவாக்கப்பட்டன.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் இருப்பினும் நடைமுறைக் குறைபாடுகள் உள்ளன. குற்றங்களைப் பதிவு செய்யாமை, பதிந்தாலும் பிறழ்சான்றர்(hostile witness) மூலம் வழக்கை இலலாமல் ஆக்கல், கட்டைப்பஞ்சாயத்து, பாதிப்புற்றவர் மீதே எதிர் வழக்கு தொடுத்து வழக்கை   நீர்த்துப்போகச் செய்தல், பொய் வழக்குகள் மூலம் அச்சுறுத்தல், இச்சட்டத்தின் படிக் குற்றம் புரிந்தவர்களுக்குக்  குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 438வது பிரிவு பொருந்தாது எனச்சட்டம் இருப்பினும் இப்பிரிவில் பிணையில் விடுதல்.  ஆகியவற்றால் வன் கொடுமையாளர்கள் தப்பி விடுகின்றனர் என்கின்றனர். ஆனால், இத்தகைய செயல்பாடுகள் இவற்றிற்கு மட்டும் உரியன அல்ல. வரன் கொடை(வரதட்சணை) முதலான பல வழக்குகளிலும்இதுதான நிலை. காவல் துறையில் வழக்குஉசாவல் தொடர்பான உரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பொழுது இவையும் மாறும்.
அதே நேரம்,  வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கூறுவதற்கிணங்க மாநில அளவில்   தாழ்த்தப்பட்ட  பழங்குடி மக்கள் பாதுகாப்புக் குழு அமைக்கவும் மாவட்ட அளவில் கண்காணிப்பு  விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கவும் வேண்டும்.  இவற்றை முறையாக அமைத்து நடவடிக்கைகள்எடுத்திருந்தாலே பெருமளவு விழிப்புணர்வு ஏற்பட்டுக் குற்றங்களும் குறைந்திருக்கும்.
இச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பொய் வழக்குகள் போடப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதி 10இல்  தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினரைப் பொது இடத்தில் இழிவுபடுத்தும் கருத்துடன் வேண்டுமென்றே அவமானப் படுத்துவது அல்லது அச்சுறுத்துவது தண்டைனக்குரிய குற்றமாகக் கூறப்பட்டுள்ளது.  இதனைப் பலர் தவறாகப் பயன்படுத்திவருகின்றனர்.
இன்ன வகுப்பு என்று தெரியாமல் இடம் பெறும் வாதங்களையும் எதிர்ப்புக் குரல்களையும் சாதியைச் சொல்லித் திட்டி இழிவுபடுத்தியதாகக் கூறிப்பொய் வழக்கு தொடுத்து அலலலுக்கு உள்ளாக்கும்  போக்கு வளர்பிறையாக உள்ளது. இந்தப் போக்கிற்கான கண்டனமும் வளர்ந்து கொண்டேஉள்ளது.
பாபு செகசீவன்ராம் இந்தியத் துணத்தலைமையமைச்சராகவும் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்த பொழுது(1977–1979) இப்போக்கு வளர்ந்தது.  தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பிறரை அடித்து விட்டு உடனே செகசீவன்ராம் அலுவலகத்திற்குப் பிற வகுப்பாரால் அடிக்கப்பட்டதாகத் தொலைவரி கொடுத்துப் பிறரை இன்னலுக்கு உள்ளாக்கிய நிகழ்வுகள் உண்டு. இதன் தொடர்ச்சியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பொய்வழக்கு போடுவது மிகுதியானது.
இத்தகைய பொய்வழக்குகளால் பாதிப்பறுவோர் வளர்ந்ததால் மதுரையில் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கும் வளர்ந்து வருகிறது. தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கூட்டமைப்புகூட உருவாக்கப்பட்டது.  பாட்டாளி மக்கள் கட்சியினரும்  தொடர்ந்து  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமையும் உள்ளது. அதற்குச் சான்றுதான் மகாராட்டிரத்தில் இத்தகைய பொய்வழக்குகளுக்கு எதிராக நடைபெற்ற பேரணிகளில் இரு கோடி மக்களுக்கும் மேலாகக் கலந்து  கொண்டமை.
இந்திய அரசியல் யாப்புச் சட்டத்தின் பிரிவு 338இன் படி 1952இல் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் சார்பு அமைப்புகளாக  நாடு முழுவதும் 12 மாநில (மண்டல) ஆணையங்கள் உள்ளன.  தமிழ்நாடு, புதுச்சேரிக்கென்று சென்னையில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  உள்ளது. 89-ஆவது இந்திய அரசியல்யாப்புத் திருத்தச் சட்டம், 2003-இன் படி முன்பிருந்த பட்டியல் சாதிகள் மற்றும்பட்டியல் பழங்குடி மக்களுக்கான ஆணையத்தை (1) பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையம் (2) பட்டியல் பழங்குடி மக்களுக்கான தேசியஆணையம் என இரண்டு ஆணையங்களாக அரசு அமைத்தது.
சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்பு காலங்கடந்து அமைப்புகளை உருவாக்கல், அமைப்புகள் உருவாக்கினாலும் காலந்தவறிச் செயல்படல் போன்றவற்றால் எதிர்பார்த்த பயன்கள் விளையவில்லை, 3 ஆ்ண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாணையங்கள் கூடுவதாலும் போலோ பாசுவான்சாத்திரி, விசய்சங்கர் சாத்திரி போன்ற முற்பட்ட வகுப்பினர் இவற்றின் தலைவர்களாக இருந்துள்ளமையாலும் இவற்றால் போதிய பயனிருந்திருக்காது என்பதைப் புரிந்திருக்கலாம்.
நீதிபதிகள்  இலலித்து, கோயல் ஆகியோர் கொண்ட  உச்சநீதி மன்ற அமர்வில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் குற்றச்சாட்டின் மெய்த்தன்மையை ஆராய்ந்த பின்னரே வழக்கு பதிய வேண்டும் என்று மார்ச்சு 20இல் சொல்லியுள்ளார்கள். இதற்கு முன்பு பிணை வழங்க இயலாக் கைதுகளை மேற்கொண்டு வந்தனர். பொய்வழக்குகள் பெருகுவதால், முறையீடு வந்த 7 நாளுக்குள் மெய்த்தன்மையை ஆராய்ந்த பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிததுள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள், மேல் அலுவலர்களின்  எழுத்து மூலமான இசைவு  பெற்றபின்னரே கைது செய்யப்பட வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவிற்கு அவர்கள் வந்தது திடீரென்று நடந்ததல்ல. நாடெங்கும் உள்ள நீதி மன்றங்களில் முன்னரே பல தீர்ப்புகளில் பொய் வழக்குகளுக்குஎதிரான கண்டனங்கள் வந்த பின்னரும்   பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கான ஆணையர்கள் இது குறித்து எச்சரித்த பின்னருமேதெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கூறுவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து விடும் என்றே இதன் ஆதரவாளர்கள் போராடுகின்றனர். நீதிபதிகள் கைது செய்யத் தடைவிதிக்கவில்லை. மெய்த்தன்மையைக் கண்டறிந்த பின்னரே நடவடிக்கை எடுக்கச் சொல்லியுள்ளனர். சட்டத்தால் பாதிப்பு உறுபவர்களுக்காகவும் நீதிமன்றம் பேசுவதுதானே முறை .அந்தக் கடமையைத்தானே நீதிபதிகள் ஆற்றி உள்ளனர்.
வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் படியான நடவடிக்கைகளை விரைவு படுத்தவும் விழிப்புணர்வுக் குழுக்களைச் செயல்படச் செய்யவும் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறவர்களுக்கு விரைவில் தீர்ப்பும் இழப்பீடும் கிடைக்கவும் போராட வேண்டும். மாறாகச் சட்டத்தால் பாதிப்படை வோர்களுக்கு எதிராகப் போராடுவது முறையல்ல.
இந்திய அரசும் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறவர்கள் தீர்வு பெறுவதற்குரிய உரிய திருத்தங்களை உடனே மேற்கொள்ள வேண்டும். அவற்றுடன் சேர்த்துப் பொய் வழக்குகளைத் தடுக்கவும் அவற்றால் பாதிப்புறுவோர்க்குத் தீர்வு கிடைக்கவும் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் பொழுது இத்தகைய எதிர்ப்புகள்அடங்கும்.
”பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற நெறி பிறந்த நாட்டில் தீண்டாமைக் கொடுமை இருப்பது கொடுமையல்லவா? உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனைக் களைய  அரசுமுற்பட வேண்டும்.  பொய்வழக்குகளுக்கு எதிராகத் தீர்ப்பு கூறியதற்கு எதிராகப் போராடுவதைப் போராட்டக்காரர்களும் கைவிட வேண்டும்!
– குவியாடி