வியாழன், 22 ஆகஸ்ட், 2013

உத்தமத்திற்குப் பாராட்டும் பரிந்துரையும்



உத்தமத்திற்குப் பாராட்டும் பரிந்துரையும்


குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் (திருக்குறள் 504).

   
ங.) கருத்தரங்கத்தையோ  மாநாட்டையோ நடத்துவது என்பது எளிதான செயலன்று. அதுவும் பன்னாட்டளவில் நடத்துவது என்பது   இடர்ப்பாடுகளுடன் அருவினைகள் ஆற்றினால்தான் இயலும். அந்த வகையில் 12 ஆவது இணையத்தமிழ் மாநாட்டை மலேசியாவில் நடத்தி முடித்த உத்தமத்திற்குப் பாராட்டுகள்.

ஙா.) பொதுவாகவே தமிழ்க்கூட்டங்கள் என்றாலே முதியோர் கூட்டமாக மாறிப் பலகாலம் ஆகிவிட்டது. சில நேர்வுகளில்  பேச்சாளர்களைப் பொறுத்துச் சில இளைஞர்கள் வந்திருக்கலாம். என்றாலும் பெரும்பான்மை மூத்தோர் அவையாகத் திகழ்தலே வழக்கம். அதை முறியடிக்கும் வகையில் அறுநூறுக்கு மேற்பட்ட இருபால் மாணாக்கர்கள் பங்கு பெறும் வகையில் மாநாட்டை நடத்தியதற்கு உண்மையிலேயே விழாக்குழுவினரைப் பாராட்ட வேண்டும். இணையத் தமிழை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் சிறப்பான பணியை ஆற்றியமைக்காகத் தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டுகள். இப்பாராட்டினை நான், புதியதொலைமுறைத் தொலைக்காட்சியின் செய்திக்கான செவ்வியிலும் உத்தமம் முகநூலுக்கான செவ்வியிலும் தெரிவித்துள்ளேன். என்ற போதிலும் இளைய தலைமுறையினரை ஈர்த்துள்ள செயலை மீண்டும் மீண்டும் பாராட்டுவதில் தவறில்லை.

ஙி.) தமிழ்விழா அழைப்பிதழ்களிலும்  பதாகைகளிலும் 8ம் விழா, 6வது விழா என்பன போல் தவறாகவே இடம் பெறும். கடந்த முறையும் இது குறித்துக் கூறியிருந்தேன். ஆனால், இங்கே 12ஆம் எனச் சரியாக எழுதப்பட்டது மகிழ்ச்சியை அளித்தது. பாராட்டுகள். (திறப்பு விழா என இடம் பெற்றிருந்தது.  தொடக்க விழா என்பதே சரி. அடுத்த முறை சரி செய்யப்படும் என நம்புகின்றேன்.)

ஙீ.) கோலத்தில் ஆங்கில வரவேற்பு அளித்து அலங்கோலம்  ஆக்குவதே பல இடங்களில் நடைபெறுகிறது. ஆனால் அங்கும் தமிழில் வரவேற்பு அளிக்கும் அழகுக்கோலத்தைக் காண முடிந்தது. வாழ்த்துகள்.

ஙு.) நான் கட்டுரை அளித்த அமர்விற்குக் கணி.மணி.மணிவண்ணன்  தலைமை தாங்கிச் சிறப்பாக நடத்தினார். அவரது தமிழ் ஈடுபாடும் துறை அறிவும் ஒவ்வொரு தலைப்பு குறித்தும் சிறப்பான பகிர்வை அளிக்கச் செய்தன. இப்படிப்பட்ட  அமர்வுத் தலைவர்களை அமர்த்தியதற்கும் மகிழ்ச்சியும் பாராட்டுகளும்.

ஙூ.) மலேசிய அரசின் நன்மதிப்பைப் பெற்று 50,000 மலேசிய வெள்ளியை நன்கொடையாகப் பெற்றமைக்கும் பாராட்டுகள்.

  மாநாடுகள் நடத்தும் அமைப்பினர் மாநாடு முடிந்ததும் அதனை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள், சிக்கல்களைக் களைந்த முறைகள், களைய முடியாமல் போன நேர்வுகள், செய்து முடித்த சிறப்பான செயல்கள், செய்ய இயலாமல் போன சீர் செயல்கள் முதலியவை குறித்து எழுத்து மூலமான பதிவாகத் தர வேண்டும். இதனை, அடுத்துநடத்துவோர் கருத்தில் கொண்டு செயல்பட்டால் ஒரே வகையான தவறுகள் மீண்டும் மீண்டும்  ஏற்படுவதைத் தவிர்க்கலாம்; முன்னவர் பட்டறிவைப் பயன்படுத்துவதன் மூலம் இடர்ப்பாடுகளைக் குறைக்கலாம்; குறைந்த நேரத்தில் சிறப்பான செயல்களை ஆற்றலாம். அந்த வகையில் 12ஆவது இணையத் தமிழ்  மாநாட்டினரும் இயன்றதும் இயலாததும் என்னும் தலைப்பில் செய்தனவற்றையும் செய்யத் தவறியனவற்றையும் பதிவாக்க வேண்டும். அவ்வாறு பதிவாக்குவதில் என்ன குறைபாடுகளைச் சுட்டிக்காட்டத் தேவை உள்ளது எனத் தவறாக எண்ணக்கூடாது. சான்றுக்குச் சிலவற்றை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்.

1.) அண்ணாமலை நகரில் 11 ஆவது இணையத்தமிழ் மாநாடு நடைபெற்ற பொழுது என்னைப் போன்ற பலருக்கு நினைவளிப்புகள் (நினைவுப்பரிசுகள்) வழங்கப் பெறவில்லை.  அப்பொழுதே, நினைவளிப்புகளில் பாகுபாடு காட்டப்பட்டிருந்தால்  அறமின்மை; எண்ணிக்கையைக் கூடுதலாகக் காட்டிக் குறைத்து அளித்திருந்தால் ஊழல்; குறைந்த அளவே வாங்கியிருந்தால் செம்மையின்மை;   வாங்கியும் வழங்கப்பட வில்லை எனில் முறைகேடு என்றெல்லாம் சொல்லப்பட்டன. நானும் நினைவளிப்பைப் பெறாமையாலோ என்னவோ, இதைப் பெரிது படுத்தவேண்டா; தகவல் தொடர்பு இடை வெளியாக இருக்கும் எனக்  கூறி அமைதிப்படுத்தினேன். எனினும் இது குறித்து 31.06.2044 ***  15.07.2013 நாளிட்ட மடலில் முன்குறித்தே குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், மலேசிய மாநாட்டில்,  இரண்டாம் நாள் அமர்வுகளில் பெரும்பான்மையருக்கு நினைவளிப்பு வழங்காமல் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும்  வழங்கப்பெறும்  பங்கேற்புச் சான்றிதழ்களை நினைவளிப்பு போல்  வழங்கி ஏமாற்றமுறச் செய்தனர். இந்தமுறை முதல்நாளே பேசிய எனக்கு நினைவளிப்புக் கிடைத்தமையால், மறுநாள் வழங்கப் பெறாதவர்களுக்காகக் குரல் கொடுத்து, அரங்கப் பொறுப்பாளரிடம் உரியவர்களிடம் கூறி நினைவளிப்புகளை வழங்கச் செய்யுமாறு கூறினேன். இருந்தால் அல்லவா வழங்குவதற்கு என எண்ணும் வகையில் அவர்களுக்கு வழங்கப் பெறவில்லை. இந்நிலை தொடர இனி இடம் தரக்கூடாது. நினைவளிப்புகளைப் பெறா இம் மாநாட்டின் கட்டுரையாளர்களுக்கு  இனியேனும்  வழங்க எண்ணினால் வழங்க இயலும். என்ற போதும், இந்நிலை தொடர இனி இடம் தரக்கூடாது. கட்டுரையாளர்கள், அழைப்பாளர்கள்  நிகழ்ச்சியில் பல்வேறு வகையில் உதவுநர்கள் ஆகியோர் எண்ணிக்கைக்கேற்ப நினைவளிப்புகள் வாங்கப் பெற்று அவர்களுக்கும் வழங்க  வேண்டும். 

2.) முதல் நாள் அமர்வுகளில் அனைவர் உரைகளும் ஒளிப்பதிவு செய்யப் பெற்றன. அதே எண்ணிக்கையிலான அமர்வறைகள்தாம் மறுநாளும் இருந்தன. ஆனால், உரைகள் பதிவு செய்யப்  பெறவில்லை. (ஒரு வேளை உத்தமப் பொறுப்பாளர்கள் உரைகள் பதிவு  செய்யப் பெற்றிருக்கலாமோ!) இவை  எல்லாம் உத்தமத்திற்குப் பெருமை சேர்க்கக்கூடியவையா?

3.) அமர்வுஅறைகளில் பேசுநருக்கான இருக்கைகள் முறையாக ஒதுக்கப்படவில்லை. எல்லா அறைகளிலும் கட்டுரையாளர்கள் ஐவர் அமரும் வகையிலேயே  இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. எங்கள்அறையில் எண்மர் கட்டுரையாளர்கள். இருவர் கணிணிவழித் திரையீட்டாளர். எவ்வாறு இடம் போதும்? எனவே, கட்டுரையாளர்கள் எண்ணிக்கைக்கேற்ப இருக்கைகள் அமைக்கப் பெற்று  மாநாட்டின் முதுகெலும்பாக விளங்குவோர் மதிக்கப்பெற வேண்டும்.

4.) அழைப்பிதழ்களில்  தொடக்க நேரம் மட்டும் குறிப்பிடப்படாமல் ஒவ்வோர் உரையாளருக்கும்  பேச்சு நேரம் வகுக்கப் பெற்றுக் குறிக்கப் பெற்றிருந்தது. ஆனால், சிறிதும் பின்பற்றப்படவில்லை. அழைப்பிதழ் நேர அடிப்படையில் பணிகளைத் திட்டமிட்டவர்களுக்கு எல்லாம் அவையாவும் பாழாயின. சிறப்பு அழைப்பாளர்கள் நேரம் எடுத்துக் கொண்டால் தவிர்க்க இயலாது. ஆனால், உத்தமப் பொறுப்பாளர்களே இதற்கு முன்பு ஒலி வாங்கியைப் பார்த்திராததுபோல் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாமா? அனைவர் உரையும் அழகு தமிழில் சுவைபட அமைந்திருந்தாலும் நேரம் கூடும் பொழுது திகட்டும் என்பதை உணர வேண்டாவா? அப்படி அவர்களுக்குப் பேச வேண்டும் என்னும் ஆர்வம் இருப்பின் அமர்வுரைகளின்  தொடக்கத்தில் அனைவரையும் ஒருங்கே கூட்டிப் பேசலாமே! நள்ளிரவு வரை விழாவை நடத்தலாமா?  உரைகளை அச்சிட்டு அனைவருக்கும்  வழங்கியிருக்கலாமே! காலம் உயிர் போன்றது என்பதை உத்தமம் உணர வேண்டாவா?

5.) அனைவரும் இரு மொழிகளிலும் உரையாற்றினர். ஆனால் நன்றி நவின்றவர் தலைவர், ஆங்கிலத்தில் கூறச் சொன்னதாகத் தெரிவித்து ஆங்கிலத்தில் நவின்றார். அன்னைத் தமிழின் வளர்ச்சிக்கான மாநாட்டில், அதுவும் தமிழர் வாழும் நாட்டில், உரைகள் தமிழில் இடம் பெறுவதுதானே சிறப்பு. இடையில் வேற்று மொழியாளருக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய சூழலில் இரு மொழிகளில் தெரிவித்தால் போதுமே!

6.) அழைப்பிதழ் தமிழில் அல்லது தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். அழைப்பைக்கூடத் தமிழில் தெரிவிக்க இயலாதவர்களால் தொழில்நுட்பக் கருத்துகளை எவ்வாறு தமிழில் தெரிவிக்க இயலும் என எண்ணுவதற்கு இடம் தரக்கூடாது.

7.) அழைப்பிதழில் எதற்கு வாழ்த்துச் செய்திகள்? வாழ்த்து மலர் எனத் தனியாக   வெளியிடலாமே!  அல்லது கருத்தரங்கக் கட்டுரை மலரில் இணைத்தாலும் போதுமே! அழைப்பிதழ் வாழ்த்துச் செய்திகளுடன் வண்ண அட்டையில் மலர்போல் அடிக்கப்பட்டதால் செலவைத் தவிர்க்க எண்ணிப் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வழங்கவில்லை போலும். நிகழ்ச்சி விவரங்களை முன்னரே தெரிவித்து இருப்பின் எந்த எந்த அமர்வுகளில் பங்கேற்கலாம் என முடிவெடுக்க இயலுமே எனக் கேட்புப் பங்கேற்பாளர்கள் வருத்தப்பட்டனர்.  இது  போன்ற சூழலில் அழைப்பிதழ்ப் பகுதியை மட்டும் தாளில் அச்சிட்டுப் பிற அனைவருக்கும் வழங்க வேண்டும்.

8.) அழைப்பிதழ், பதாகைகள், அடையாள அட்டைகள் என எங்கெல்லாம் நாள் இடம் பெறுகிறதோ அங்கெல்லாம் திருவள்ளுவர் ஆண்டும்  இனிமேலாவது, இடம் பெற  வேண்டு்ம்.

9.) கருத்தரங்க அமர்வுகள் காலந்தாழ்த்தி தொடங்கப்பட்டதால் காலங்கடந்தே முடிக்கப்பட்டன. உரிய காலத்தில் தொடங்க முடியாமல் போனாலும் உரிய காலத்தல் முடிக்கவாவது செய்ய வேண்டும்.

10.)   தேநீர் வழங்கிடம் அமர்வறையில் இருந்து தொலைவில் இருந்தது.  காலக்கடப்பைத் தவிர்ப்பதற்காக அமர்வறைகளிலேயே தேநீர் வழங்குமாறு தெரிவித்தேன். ஆனால், உணவறை தவிர வேறு  அறைகளில் தேநீர் வழங்கக்கூடாது எனப் பல்கலைக்கழகத்தில் தெரிவித்ததாகக் கூறினர். ஆனால், உத்தம அலுவலக அறையிலும், உத்தமப் பொதுக் குழுக் கூட்டஅறையிலும் தேநீர் வழங்கப்பட்டன.  இவ்வாறு விதிமுறையை மீறியவர்கள், அமர்வறைகளிலும் தேநீர் வழங்கியிருக்கலாம் அல்லவா? விதியாயினும் விதிவிலக்காயினும் ஒத்த நிலையே பின்பற்றப்படவேண்டும் என்பதில் உத்தமம் கருத்து செலுத்த வேண்டும்.

11.)   விருது அறிவிப்பின் பொழுது நடுநிலையுடன் முடிவெடுத்ததாக அறிவிப்பாளர் கூறினார். ஆனால், அவர் தலைமை தாங்கிய அமர்வில் எந்த ஒரு கட்டுரைக்கு எதிராக அவரும் அவையினரும் எதிர்ப்பு தெரிவித்தனரோ, அக்கட்டுரையை அளித்தவருக்கும்  விருது வழங்கப்பட்டிருந்தது. இவர் குறுக்கீடு இல்லை என்ற  வகையில் நடுவுநிலைமை என்று வேண்டுமானால் கூறலாம். வேண்டியவர்க்கு விதிமுறை  பிறழ்ந்து உதவுநரும் வேண்டார்க்கு விதிமுறையை ஒதுக்கி  அல்லன ஆற்றுநரும்  நடுவுநிலைமை  என்று சொல்லித்தான் தீயன ஆற்றுகின்றனர். எனவே, நடுவுநிலைமை என்று அறிவித்தால் மட்டுமே நடுவுநிலைமை ஆகாது. இக்கட்டுரையாளர் புகழ்மிகு கவிஞரின் மகன் நடத்தும் நிறுவனம் சார்பில் வந்தவர் என்பதற்காக விருது வழங்கப்பட்டதாக அவையில் சல சலப்பு ஏற்பட்டது. (தன் தகுதியை அறிந்ததாலோ என்னவோ அவர் விருது பெற வரவில்லை.)  அதுபோல், மற்றொருவர் அளித்த கட்டுரை குறித்துத் தலைவரும்  அவையினரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவருக்கும் விருது வழங்கப்பட்டதாகவும் கூறினர். பிற இருவர் அளித்த கட்டுரை அமர்வில் பங்கேற்றவர்களைக் கேட்டால்தான்  அவர்களும் தகுதியானவர்களா இல்லையா எனத் தெரியும்.  அனைத்துக் கட்டுரைகளையும் படித்துப் பார்த்துத்  தேர்ந் தெடுத்திருப்பார்கள் என்பதில்  ஐயப்பாடே மேலோங்குகிறது. இதனைத் தவிர்க்க அமர்வுத் தலைவர்களிடம் கட்டுரைகள் குறித்த மதிப்புரைகளைப் பெற்றுப் பின்னர் அனைவரிடமும் பெயர்கள் அறிவிக்கப்பட்ட தெரிவுக்குழு தேர்ந்தெடுக்கும் வகையில் விருதுகள் வழங்கப் பெற வேண்டும்.

12.)   விருதுகள் எல்லாம் பெரிதும் ஆங்கிலத்திற்கே அளிக்கப்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே, தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் எனத் தனித்தனியே விருதுகள் அல்லது பரிசுகள் வழங்கும் வகையில் திட்டமிட வேண்டும்.

13.)   சிலரையே வெவ்வேறு குழுக்களில் உறுப்பினராகப் போட்டது குறித்தும் மனக்குறைபாட்டுடனான பேச்சு வந்திருந்தோரிடையே எழுந்தது. கூட்டப்பங்கேற்பு அல்லது மாநாட்டிற்கு வருதல் போன்ற நேர்வுகளிலான போக்குவரத்துச் சிக்கனத்திற்காக அவ்வாறு பின்பற்றியிருக்கலாம் என  அப்பொழுது கூறினேன். எனினும் ஒருவர் ஒரு குழுவில் மட்டுமே உறுப்பினராக இருக்கும் வகையிலும் பிற குழுக்களில் அவர் பங்கேற்பு வேண்டப்படும் நேர்வுகளில் சிறப்பு அழைப்பாளர் என்ற முறையில்  பங்கேற்கச் செய்யும் வகையிலும் குழுக்களை அமைத்து அனைத்து நிலைச்சார்பான பங்கேற்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

14.)   உத்தமத்தில் ஒரே  நேரம் நானும் பொறி.பாலாசி வாசுதேவனும்  உறுப்புக்கட்டணம் செலுத்தி இருந்தோம்.முழுமை உறுப்புக் கட்டணம் செலுத்திய அவரது பெயரை இணைவு  உறுப்பினர் எனத் தவறாகப் பதிந்திருந்தனர். என் பெயர் உறுப்பினர் பட்டியலில் இல்லை.  சிலர் காசோலை அனுப்பியதாகக் கூறியும் அவர்கள் பெயரும் உறுப்பினர் பட்டியலில் இல்லை என்பதையும் அறிந்தேன். என் பெயர் உறுப்பினர் பட்டியலில் இல்லாத பொழுது நான் எவ்வாறு உத்தமத்தின் பொதுக்குழுவில் பங்கேற்க முடியும் என்பதைப் பதிவுப் பொறுப்பாளரிடம்  தெரிவித்து உத்தமம் பொறுப்பாளர்களிடமும் தெரிவிக்க வேண்டி, அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், உத்தமம் பொறுப்பாளர்கள் இது குறித்து ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. முன்பு நான் உறுப்பினர் கட்டணம் செலுத்திய பொழுதும்  பட்டியலில் இடம் பெறாமல் போராடி உறுப்புத் தகுதியைப் பெற்றேன். இருப்பினும் உத்தமம் மின்னஞ்சல் எதுவும் அனுப்பப்படுவதில்லை. எனவேதான் உறுப்பினர் நிலையைப் புதுப்பிக்கவில்லை. மீண்டும் இதே நிலை என்றால்  எவ்வாறு உத்தமத்தில் ஆர்வம் காட்ட இயலும்? இனிமேலாவது இது போன்ற குறைகளைக் களைய வேண்டுகின்றேன்.

15.)   கட்டுரையாளர்களை வரவேற்கும் பொழுதும் வழியனுப்பும் பொழுதும் உரிய போக்குவரத்து  அளிப்பதில கருத்து செலுத்த  வேண்டும். 25.08.13 ஞாயிறு நண்பகல் வானூர்தி நிலையத்திற்கு ஊர்தி ஏற்பாடு வேண்டியபொழுது  இருவருக்கு மட்டும் ஏற்பாடு செய்ய இயலாது என்றும் தனி வண்டிக்கு வாடகை 100 வெள்ளி ஆகும் என்றும்  தெரிவித்தனர்.  கட்டுரையாளர் திரு சக்கரபாணி அவருக்கும் நண்பருக்கும் கேட்ட பொழுது அதே போல் இருவருக்கு வண்டி தர இயலாது என்றனர். மொத்தம்  நால்வராக இருக்கும் பொழுது வண்டி தந்திருக்கலாமே! ஒவ்வொருவரிடமும் ஒரேமாதிரி சொல்லித் தட்டிக்கழித்ததைத்  தவிர்த்திருக்கலாமே!  அல்லது நால்வருக்கும் வண்டி ஏற்பாடு செய்து பகிர்ந்து கொள்ளச் செய்திருக்கலாமே! எனவே, இக்குறைபாட்டை இனியேனும் தவிர்க்க வேண்டுகின்றேன்.

16.)   மாநாட்டின் நிறைவு விழாவின் பொழுது மாநாட்டின் தோராய வரவு செலவு விவரங்களை  அனைவர் முன்னிலையிலும் அளித்தலும் பின்னர் தணிக்கையிடப்பட்ட வரவு செலவு அறிக்கையைப் பொதுவில் வெளியிடலும் வீண் செலவுகளைத் தவிர்க்கவும் முறைகேடுகளைக் குறைக்கவும்  வீண் பரப்புரை மேற்கோள்வோருக்கு வாய்ப்பூட்டு போடவும் உதவும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

17.)   உத்தமத்தில் தொழில்நுட்பம் சார்ந்துள்ளவர்களுக்கு முதன்மை அளிப்பதும் தமிழ்நுட்பம் சார்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதும் அனைவரும் அறிந்ததே! உத்தமப் பொறுப்பாளர்கள் எண்ணத்திலும் செயலிலும்  மறைவான உரைகளிலும் இருந்த இப்போக்கு உத்தமப் பொறுப்பாளர் ஒருவரால் அகமொழியாளர் அண்ணா கண்ணனிடம்  வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டது. இக்கருத்து தவறானது என்பதை அவர் விளக்கியும் பொறுப்பாளர் ஏற்க வில்லை. தமிழ் என்னும் சொல் இடம் பெற்றதால்தான் மாநாடு, உலகத்தமிழர்களிடம் ஈடுபாட்டை ஏற்படுத்தி உள்ளது.  இல்லையேல் ஏதோ துறை வல்லுநர்கள் கூட்டம் போல்தான் அமைந்திருக்கும். மாநாட்டுப் பொருண்மையில் தமிழ் இடம் பெற்றதால்தான் மலேசிய அரசு 50,000 வெள்ளி நன்கொடை அளித்துள்ளது. இவைபோல  மாநாட்டின் வெற்றிக்கும் அனைத்துத் தரப்பாரின் பங்களிப்பிற்கும் தமிழே காரணம் என்பதைத் தொழில்  நுட்பத்தினர் உணரவேண்டும். எனவே, தமிழ்நுட்ப அணி, தொழில்நுட்ப அணி  என இரண்டு பிரிவுகளை அமைத்து இரண்டையும் இணையாகக் கருதிப் பணிகளைத் தொடர வேண்டும். தொழில் நுட்பத்தினர் தங்கள் வணிக நோக்கிற்காகத்தான்  உத்தமத்தை நடத்துகின்றனர் என்னும் பழிச்சொல்லைப் போக்க வேண்டும்.

18.)   சில கருத்துகளை உத்தமத்திற்கு முன்னரே தெரிவித்துள்ளேன். மேலும் சிலவும் உள்ளன. பிறருக்கும் இவை போல்  நலம்நாடும் கருத்துகள் இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்துகளைக் குற்றம் சுமத்துவதாகக் கருதாமல், செம்மைகாண்பதற்கான அன்புரைகளாகக் கருதினால் உத்தமம் மேலும் ஓங்கும். மாநாட்டின் பொழுதே பங்கேற்போர் கருத்துகளைக் கேட்கும் வகையில் நிறை-குறை பதிவேட்டைப் பேணி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். அனைவரின் பட்டறிவும் பெறப்படுகையில் அமைப்பு மெருகேறும் வாய்ப்பு கூடும் அல்லவா?

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்(திருக்குறள் 505).
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளுரை  தனியருக்கு மட்டுமல்ல! அமைப்புகளுக்கும் பொருந்துமன்றோ!

உத்தமம் உயர்ந்தோங்கித் திகழ அன்புடன் வாழ்த்தும்
இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


06.08. 2044 / 22.08. 2013
 

பொதுநல மாநாட்டைப் புறக்கணிக்க பாசக ஆர்ப்பாட்டம்

நாடகமாயினும் பாராட்டுவோம்! கொலையாளிகள் நாட்டில் கொலையாளி தலைமையில் நடைபெறும் கூட்டாளி ஒத்துழைப்பிலான மாநாடு நிறுத்தப்படுவது நன்மை பயக்கும். ஆதலின், நாடகமாயினும் பாராட்டுவோம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

பொதுநல மாநாட்டை ப் புறக்கணிக்க வலியறுத்தி 24-இல் பாசக ஆர்ப்பாட்டம்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் நவம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்குமாறு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான அந்நாட்டு அதிபர் ராஜபட்சவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது. அதோடு காமன்வெல்த் அமைப்புக்கு இலங்கை அதிபர் தலைமை வகிக்கும் வரை அதிலிருந்து இந்தியா விலகி இருக்க வேண்டும்.இதனையும் மீறி மாநாட்டில் பங்கேற்றால், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை இந்தியா அங்கீகரித்ததாகிவிடும். எனவே, மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி  ஆகஸ்ட் 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
"மெட்ராஸ் கபே' படத்தை திரையிடக் கூடாது:இலங்கைத் தமிழர்களின் துயரங்களை அறியாமல், அவர்களை தீவிரவாதிகளைப்போல சித்தரித்து மெட்ராஸ் கபே என்ற பெயரில் திரைப்படம் எடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. இப்படத்தை தமிழகம் மட்டுமல்ல, நாட்டில் எங்கும் திரையிட அனுமதிக்கக் கூடாது  என பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிரியாவில் வேதியல் குண்டு வீச்சு : கிளர்ச்சியாளர்கள் 650 பேர் பலி?


http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_786092.jpg
சிரியாவில்  வேதியல்  குண்டு வீச்சு : கிளர்ச்சியாளர்கள் 650 பேர் பலி?

தமாசுகசு : சிரியா நாட்டில், கிளர்ச்சியாளர்கள் மீது, ராணுவம், ரசாயன குண்டுகளை வீசி தாக்கியதில், 650 பேர் பலியாகியுள்ளனர்.
சிரியா நாட்டில், அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும் படி, எதிர்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும் படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத சப்ளை செய்து வருகின்றன. இதனால், சிரியாவில், ஓயாத சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த சண்டையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏழு லட்சம் பேர், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். சிரியா நாட்டுக்கு, ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
சிரிய ராணுவத்துக்கு, ரஷ்யா, நவீன ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது. இதனால், சிரியாவுக்கு எதிராக, ஐ.நா., பாதுகாப்பு சபையில் ஒரு மனதாக தீர்மானம் கொண்டு வர இயலவில்லை. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரிய ராணுவம் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக புகார் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தலைநகர் டமாஸ்கசின், புறநகரான கவுட்டா என்ற இடத்தில், சிரிய ராணுவம், நேற்று, ரசாயன குண்டுகளை வீசியதில், 650 பேர் பலியானதாக, கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த தகவலை சிரிய அரசு மறுத்துள்ளது. ""ரசாயன குண்டுகளை வீசி, அப்பாவிகளை கொல்லும் சிரியா அரசின் நடவடிக்கைகள் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு சபையை உடனடியாக கூட்டி விவாதிக்க வேண்டும்,'' என, சிரிய எதிர்கட்சி தலைவர் அகமது அல்-ஜார்பா கோரியுள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்ற, பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹக் குறிப்பிடுகையில், ""சிரிய எதிர்கட்சிகளின் கருத்தை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவிப்போம்,'' என்றார்.

கொள்ளிடம் ஆற்றைக் கைவிட்ட தமிழக அரசு


 http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_785934.jpg

கொள்ளிடம் ஆற்றை க் கைவிட்ட தமிழக அரசு: மணலுக்காக க் கிடப்பில் போடப்பட்ட அரிய திட்டம்

கர்நாடகாவிடம் போராடி, பெறும் காவிரி நீர், கொள்ளிடம் வழியாக, கடலில் சென்று கலப்பதை தடுக்கும் திட்டங்களை மேற்கொள்ள, பொதுப்பணித் துறை அதிகாரிகளும், சில அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

"கொள்ளிடம் ஆற்றில், தடுப்பணை மற்றும் கதவணைகளை கட்டுவதால், எந்த பலனும் இல்லை; பல நூறு கோடி ரூபாய் தான் வீணாகும்' என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனால், "மணல் குவாரிகளுக்காக, நீர் சேமிப்பு திட்டம் புறக்கணிக்கப் படுகிறது' என, டெல்டா விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.வெள்ள வடிகால்:காவிரியின் வெள்ள வடிகாலாக, கொள்ளிடம் ஆறு உள்ளது. வெள்ளப் பெருக்கு காலங்களில், முக்கொம்பில் இருந்து நேரடியாகவும், கல்லணையில் இருந்து, உள்ளாறு வழியாகவும், கொள்ளிடத்திற்கு நீர் அனுப்பப்படுகிறது.இவ்வாறு திறக்கப்படும் நீரில், சிறு பங்கு, கொள்ளிடத்தில் உள்ள கீழணையைத் தாண்டி, வீராணம் ஏரி உட்பட, சில ஏரிகளுக்கு செல்கிறது. பெரும்பாலான நீர், வங்கக் கடலில் கலந்து வீணாகிறது. இந்த வீணடிப்பைத் தடுக்க, கொள்ளிடம் ஆற்றில், மேலணையில் இருந்து கீழணை வரை, 109 கி.மீ., இடைவெளியில், ஏழு கதவணைகள் கட்ட, பல ஆண்டுகளுக்கு முன், பொதுப்பணித் துறை ஆலோசித்தது.
பலன்கள்:

அந்த திட்டத்தின் பலன்களாக - * ஏழு கதவணைகள் மூலம், 44 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்க முடியும். * நீர் வரத்து அதிகம் இருக்கும் ஜூன் முதல், ஜனவரி வரை, ஒவ்வொரு கதவணையிலும், 8 மெகா வாட் வீதம், 56 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
* கொள்ளிடத்தின் கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். கடைமடை வரை பாசன வசதி மேம்படும்.
* கீழணை, வீராணம், சேத்தியாதோப்பு அணைகளுக்கு, தொடர்ந்து நீர் வந்த வண்ணம் இருக்கும். இதனால், 2.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
கதவணை கட்ட, நொச்சியம், கூகூர், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, காமராசவல்லி, கோடாலி கருப்பூர், அணைக்கரை ஆகிய, ஏழு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
ஆனால், பொதுப்பணித் துறையில் ஒரு தரப்பினரின் எதிர்ப்பால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
எதிர்ப்புகள்:


அவர்கள் எழுப்பிய பிரச்னைகள்:
* தமிழகத்தில், காவிரி ஆறு பாயும் பகுதிகளில், மேட்டூர் மட்டுமே மேடான பகுதி. எனவே, அங்கு அணை கட்டப்பட்டு உள்ளது. மற்ற எந்த இடத்திலும், அணையோ, நீர் தேக்கமோ கட்ட முடியாது.
* அணைகள் கட்டுவதற்கு, 171 கி.மீ., தூரத்திற்கு, கொள்ளிடம் ஆற்றின் கரைகளை உயர்த்த வேண்டும். இதற்கே, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.
* கரைகளை உயர்த்தினாலும், நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீரை, கொள்ளிடத்திற்கு கொண்டு வர முடியாது. இதனால், வெள்ளக் காலங்களில், ஆற்றில் இருந்து நீர்பிடிப்பு பகுதிக்கு நீர் செல்லவே வாய்ப்பு இருக்கும். இது, பல பகுதிகளை மூழ்கடித்து விடும்.
* கொள்ளிடம் ஆறு அகன்று விரிந்து இருந்தாலும், கடல் மட்டத்திற்கு கீழே உள்ளது. அதனால், அணைகள் கட்டினாலும் அதிக நீரைச் சேமிக்க முடியாது.
* நிச்சயம் கட்டியே ஆக வேண்டும் என்றால், 70 தடுப்பணைகளை அருகருகே கட்ட வேண்டும். ஒரு கதவணை அல்லது தடுப்பணை கட்ட, 150 கோடி ரூபாய் வரை செலவாகும். 70 தடுப்பணை கட்ட, 10,500 கோடி ரூபாய் தேவை.
"நிச்சயம் சாத்தியம்':

காவிரி பாசனப் பகுதிகளில், 20 ஆண்டுகளாக பணிபுரிந்த பொதுப்பணித் துறை முன்னாள் மேற்பார்வை பொறியாளர், ஸ்ரீரங்கம் நடராஜன் கூறியதாவது: மேட்டூரில் இருந்து காவிரி ஆறுடன், கொல்லிமலையில் இருந்து வரும் ஐயாறு கலந்த பின், முக்கொம்பில் இரண்டாகப் பிரிகிறது. இதில் ஒன்று காவிரி; மற்றொன்று கொள்ளிடம்.எவ்வளவு தண்ணீர் வந்தாலும், அதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இருப்பதால் தான், கொள்ளும் இடம் என பொருள் கொள்ளும் வகையில், "கொள்ளிடம்' என, அழைக்கப்படுகிறது. கடலை பொறுத்தவரை, 13 மணி, 26 நிமிடத்திற்கு ஒரு முறை நீர்மட்டம் உயரும்; குறையும். இதற்கு இடைப்பட்ட சராசரி அளவை வைத்தே, கடல் மட்ட அளவு கணிக்கப்படுகிறது. அந்த வகையில், முக்கொம்பில் இருந்து பிரியும் கொள்ளிடம் ஆற்றின் மேலணை, கடல் மட்டத்தில் இருந்து, 234 அடி உயரத்தில் உள்ளது; கீழணை, 34 அடி உயரத்தில் உள்ளது. இதற்கு இடையில் தான், கதவணைகள் கட்ட வேண்டும்.கீழணைக்கு பிறகு பாசனம் இல்லாததால், அந்த தண்ணீர் கடலில் சென்று கலந்தாலும், கவலை இல்லை. கடல் அலை, 34 அடி உயரத்திற்கு எழுப்பினால் தான், கீழணை பாதிக்கும்; கடல் அலை, 234 அடி உயரத்துக்கு எழும்பினால் தான், மேலணை பாதிக்கும்.இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகே, கதவணை கட்ட முடியும் என்று உறுதியாகச் சொல்கிறேன். ஆனால், எதுவுமே தெரியாமல், "கொள்ளிடத்தில் கதவணை கட்ட முடியாது' என, அதிகாரிகள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை, எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்கத் தயார். இவ்வாறு, அவர் கூறினார்.
மணல் களஞ்சியம்:

நிலை இப்படி இருக்க, அணைகள் கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்புவது மணல் குவாரிகளால் தான் என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:கொள்ளிடம் ஆற்றில், எட்டுக்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் உள்ளன. இவற்றில், வரைமுறை இன்றி மணல் அள்ளப்படுகிறது. அதை ஒட்டிய பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.கொள்ளிடம் ஆறு, கடலில் கலக்கும் பழையாற்றில் இருந்து, 20 கி.மீ., தூரத்திற்கு, மணல் குவாரிகளால் கடல் நீர் உட்புகுந்து உள்ளது. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.எந்த ஒரு பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கும். அதுபோல, கொள்ளிடம் ஆற்றில், கதவணை கட்டும் திட்டத்திற்கும் நிச்சயம் ஒரு தீர்வு இருக்கும். பணம் அதிகம் செலவாகும் எனக் கூறி, திட்டத்தை கிடப்பில் போடக் கூடாது.ஒரு முறை முதலீடு செய்தால், பல தலைமுறைகள் இதன் மூலம் பலன் அடையும். கதவணை அல்லது தடுப்பணை கட்டும் மாற்று திட்டம் குறித்து, அரசு விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
கொள்ளிடம் ஆறு :

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே, மேலணை எனப்படும் முக்கொம்பில் துவங்கி, தஞ்சை, கடலூர் மாவட்டம் வழியாக, நாகை மாவட்டம் பழையாறு என்ற இடத்தில், வங்கக் கடலில் கலப்பதே கொள்ளிடம் ஆறு.முக்கொம்பில் இருந்து கல்லணை வரை, 27 கி.மீட்டர்; கல்லணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கீழணை வரை, 82 கி.மீட்டர்; கீழணையில் இருந்து வங்கக் கடலில் கலக்கும் பழையாறு வரை, 62 கி.மீட்டர் என, மொத்தம் 171 கி.மீ., தூரம் கொள்ளிடம் ஆறு பயணிக்கிறது.

-தினமலர்  செய்தியாளர் -

முன்மாதிரியான மிதியூர்தி ஓட்டுநர்!

முன்மாதிரியான  மிதியூர்தி ஓட்டுநர்!

பொதுமக்களை அச்சுறுத்தும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மத்தியில், சற்று வித்தியாசமாக செயல்படும், அண்ணாதுரை: நான், தஞ்சாவூர், பேராவூரணியை சேர்ந்தவன். தற்போது, சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில், குடும்பத்தோடு வசிக்கிறேன். கடந்த, நான்கு ஆண்டுகளாக, திருவான்மியூர் முதல், நாவலூர் வரை, ஆட் டோ ஓட்டுகிறேன். பொதுமக்களை அச்சுறுத்துபவர்களில், ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது என, பொதுமக்கள் கருதுவதாக, அவ்வப்போது கருத்து கணிப்புகள் வெளியாகின்றன. ஆனால், எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் அப்படியில்லை என்றும், மனிதநேயமும், சமூக சிந்தனையும் உள்ள பலர் இருப்பதாக, மக்களுக்கு எடுத்துக்காட்ட முயற்சித்தேன். நான், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுகிறேன். இதனால், "மொபைல் மற்றும் லேப்-டாப்' எடுத்து வரும் பயணிகளின், இலவச இணைய வசதிக்காக, "வை-பை' தொழில்நுட்ப கருவியை, ஆட்டோவில் பொருத்தி உள்ளேன். மற்ற பயணிகளுக்காக, ஒரு பொது லேப்-டாப்பும் உள்ளது. இதில், சந்தா முறையிலான, "டிவி சேனல்கள், வீடியோ கேம்கள், மொபைல்' மற்றும் டி.டி.எச்.,சிற்கு, ரீசார்ஜ் செய்வதற்காக, "மல்டி ரீசார்ஜ்' வசதிகள் உள்ளன. பயணிகளுக்கு பயன்படும் தமிழ், ஆங்கில நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்கள் என, அனைத்து வகை பத்திரிகையையும் வாங்குகிறேன். ஆட்டோவில், "டிவி' வைத்து, அதன் மூலமும் நடப்பு செய்தி மற்றும் நிகழ்ச்சிகளை காட்டுகிறேன். "ரெகுலர்' பயணிகளுக்கு, சலுகை டோக்கன் வழங்குகிறேன். மாதம், 25 ஆயிரம் வருமானத்தில், பயணிகளின் தேவைக்காக மட்டுமே, 10 ஆயிரம் செலவிடுகிறேன். ஆண்டிற்கு, 12 ஆயிரம் செலவில், ஒரு ஏழை குழந்தையை படிக்க வைக்கிறேன். இதை பார்த்த என் ஆட்டோ பயணிகளான, மூன்று இளைஞர்கள், மூன்று ஏழை குழந்தைகளுக்கான மொத்த கல்வி செலவையும் ஏற்றனர். என் செயல்கள், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதுடன், அவர்களையும் அதுபோல் செய்ய தூண்டுவது, சந்தோஷமாக உள்ளது.

பேராசிரியர் சி.இலக்குவனார் - ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்