சனி, 30 ஜனவரி, 2010

தேர்வுகளை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள வேண்டும்



திருவண்ணாமலை, ​​ ஜன.​ 29:​ தேர்வுகளை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள வேண்டும் என மாணவ,​​ மாணவியருக்கு தமிழக அரசின் சுற்றுலாத் துறை செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.​ டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஏற்பாட்டில் ​10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஸ்ரீ ராஜீவ்காந்தி உயர்கல்வி வழிகாட்டி முகாம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்தது.விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ.​ வரவேற்றார்.​ ஆரணி மக்களவை உறுப்பினர் எம்.கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.​ முகாமில் பங்கேற்று இறையன்பு பேசியது:​ ஒவ்வொரு மாணவ,​​ மாணவியரும் குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.​ எந்தப் பணியைச் செய்தாலும் ஒரே நோக்கத்துடன் செய்தால் தான் அப்பணியை செம்மையாக செய்ய முடியும்.​ ஓரே பணியை பலராலும் செய்ய முடியாது.​ வளர்ச்சி பெற்ற நாடுகள் அனைத்திலும் பலதுறை பணியாளர்கள் இருந்ததால் தான் அவ்வளர்ச்சி சாத்தியமானது.​ நமது நாட்டிலும் வேலைவாய்ப்புக்கு பஞ்சமில்லை.​ வேலையில்லாத் திண்டாட்டம் எதுவும் கிடையாது.​ ஏராளமான வேலைகளுக்கு தகுதியான ஆள்கள் கிடைப்பதில்லை.​ ​இந்தியாவில் தற்போது மருத்துவ சுற்றுலா பெருகி வருகிறது.​ இதற்கு நமது நாட்டில் குறைந்த செலவில் கிடைக்கும் தரமான சிகிச்சை முறையே காரணமாகும்.​ இந்திய மருத்துவத் துறை பணியாளர்களுக்கு அயல்நாடுகளில் சிறந்த வரவேற்பு உள்ளது.​ ​​ திறமை,​​ உழைப்புக்கு எப்போதும் மதிப்புண்டு.​ இரு பண்புகளைக் கொண்டவர்கள் தான் மிகுந்த உயர்நிலையை அடைந்துள்ளனர்.​ நமது மாணவ,​​ மாணவியருக்கு வெளியுலகத் தொடர்புகள் மிகவும் தேவைப்படுகிறது.​ நகர்ப்புற மாணவர்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவர்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கின்றனர்.​ மாணவ,​​ மாணவியர் தங்கள் பெற்றோருக்காகவோ,​​ ஆசிரியருக்காகவோ படித்தல் கூடாது.​ தங்களுக்காக படிக்க வேண்டும்.​ தேர்வு அறையில் செய்ய வேண்டியவற்றை முன்கூட்டியே நாள்தோறும் இரவு நேரத்தில் திட்டமிடுதல் வேண்டும்.​ தேர்வுகளை மகிழ்ச்சியாக எதிர்நோக்கினால் வெற்றி நிச்சயம்.​ ஒவ்வொருவரும் தங்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணர முயல வேண்டும்.​ தங்களுக்கு பிடித்தமான துறைகளை தேர்வு செய்து செயல்பட்டால் முன்னேறலாம்.​ அதே போல் மாணவர்களுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம்.​ தகவல் தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.​ பாடப் புத்தகங்களை தவிர வேறு நல்ல பல நூல்களை வாசிக்க வேண்டும் என்றார் இறையன்பு.மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன்:​ திருவண்ணாமலை மாவட்டம் கல்வித் தரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது.​ கல்வித் தரத்தை உயர்த்த மாணவர்கள்,​​ ஆசிரியர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.​ கல்வியறிவு பெருகினால் தான் சமூகம் முன்னேறும்.எதைப் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை,​​ எப்படிப் படிக்கிறோம் என்பது முக்கியம் என்றார்.​ ​ முதன்மைக் கல்வி அலுவலர் வை.பாலமுருகன்,​​ மாவட்டக் கல்வி அலுவலர் புண்ணியகோட்டி,​​ முன்னாள் எம்.எல்.ஏ.​ வ.அன்பழகன்,​​ நகராட்சித் தலைவர் ஏ.எம்.சம்பத்,​​ துணைத் தலைவர் மோகனவேல் ஆகியோர் பேசினர்.அண்ணா பல்கலை நேனா தொழில்நுட்பத் துறை இயக்குநர் டாக்டர் ஜெயவேல்,​​ சென்னை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பி.முத்துசாமி,​​ அரசுத் தேர்வாணைய அதிகாரி கே.பாண்டியன்,​​ வேளாண்மை நிபுணர் ராதாகிருஷ்ணன்,​​ பல் மருத்துவர் பி.ஆர்.வாசு ​ ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.​ நகர திமுக செயலர் செல்வபாண்டி,​​ காங்கிரஸ் நிர்வாகிகள் கே.தாமோதரன்,​​ க.நடேசதேவர்,​​ கோபு,​​ காந்தி,​​ பெருமாள்,​​ கோபால் உள்படபலர் பங்கேற்றனர்.​ நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ,​​ மாணவியர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக