செவ்வாய், 26 ஜனவரி, 2010

தலையங்கம்:மேன்மையுறக் குடிமை நீதி!



இந்தியா தனக்கென ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றிக் கொண்டு தன்னை ஒரு சுதந்திரக் குடியரசாக அறிவித்து 60 ஆண்டுகளாகிவிட்டன. இந்தியக் குடியரசுக்கு இது வைரவிழா ஆண்டு. சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதுபோல நாம் ஏனோ குடியரசு தினத்தைக் கொண்டாடுவது இல்லை. சுதந்திர தினத்தைவிட பெருமைக்குரியதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் குடியரசு தினம்தான் என்பதுகூட நமக்கு ஏனோ புரியவில்லை.அன்னிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து சுதந்திரம் பெறுவது என்பது வெறும் சம்பிரதாயமான தொடக்கம்தான். மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்வது என்பதுதான் சுதந்திரத்தின் இன்றியமையாத அடுத்த கட்டம். "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு, மேன்மையுறக் குடிமை நீதி' என்று மகாகவி பாரதி கண்ட கனவு நனவானது, இந்தியா குடியரசாகத் தன்னை அறிவித்துக்கொண்டபோதுதான்.இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு காலனி ஆதிக்கங்களிலிருந்து விடுதலை பெற்று தங்களை ஒரு சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 182. இதில் தன்னை ஒரு சுதந்திரக் குடியரசாக அறிவித்து, ஓர் அரசியல் சட்டத்தை இயற்றி பாராளுமன்ற ஜனநாயக முறையில் அப்படியே தொடரும் ஒரே ஒரு நாடு இந்தியா மட்டுமே. ஏனைய நாடுகள் பாராளுமன்ற ஜனநாயகம், அதிபர் ஆட்சி, சர்வாதிகாரம், ராணுவ ஆட்சி என்று சுதந்திரத்தின் குறிக்கோளை அடையும் வழி தெரியாமல் திசைமாறி அங்குமிங்கும் பயணித்தபடி இருக்கின்றன.பாராளுமன்ற ஜனநாயக முறையில் நாம் என்ன சிறப்பைக் கண்டோம் என்று கேட்கும் எதிர்மறை சிந்தனாவாதிகளும், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கண்டு உலக அரங்கில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதைப் பொறுக்காதவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று இருக்கிறது. எத்தனையோ பிரச்னைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடையில் இந்தியா ஓர் ஒன்றுபட்ட நாடாகத் தொடர்கிறது என்பதையும், தொடரும் என்பதையும்தான். "பெரும்பான்மையான இந்தியக் குடிமக்கள் படிப்பறிவில்லாதவர்களாகவும், அரசியல் தெரியாதவர்களாகவும் இருந்தும் அரசியல் சட்டம் துணிந்து அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்க முன்வந்திருப்பதன் காரணம் என்ன தெரியுமா? மேல்நாட்டுப் படிப்பில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது என்கிற பேதைமையை சராசரி இந்தியன் தகர்த்தெறிந்து, அவனது தேசபக்தியும், சுதந்திர உணர்வும் தனக்கும் நாட்டுக்கும் சரியான தலைமையைத் தேர்ந்தெடுக்கும் புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும் என்பதால்தான். வாக்குரிமை அவனிடம் இருந்தால் மட்டுமே அமையப்போகும் அரசு சராசரி ஏழை இந்தியனுக்காகவும் அவன் நல்வாழ்வுக்காகவும் செயல்படும் என்கிற நோக்கத்தில்தான் அனைவருக்கும் வாக்குரிமை என்கிற முடிவை இந்த அரசியல் நிர்ணய சபை எடுத்திருக்கிறது'. -23 நவம்பர், 1949 அன்று அரசியல் நிர்ணய சபையில் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் பேசியதன் சாராம்சம்தான் இது. கள்ளவாக்குகள் போடப்பட்டிருக்கலாம். ஊழல் பேர்வழிகளும், சமூக விரோதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். வாக்குகள் விலைபேசப்படும் சம்பவங்கள் இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்திய மக்களின் தீர்ப்பு முறையான தீர்ப்பாகத்தான் இதுவரை தொடர்கிறது. அனைவருக்கும் வாக்குரிமை என்கிற நமது முன்னோடித் தலைவர்களின் எதிர்பார்ப்பு முழுமையாகப் பொய்த்துவிடவில்லை.அரசியல் நிர்ணய சபையில் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் பேசும்போது குறிப்பிட்டபடி ஒரு தேசத்தின் நல்வாழ்வு என்பது அந்த நாட்டை நிர்வகிக்கும் ஆட்சியாளர்களின் நேர்மையையும், திறமையையும் பொறுத்துத்தான் அமையும். "அரசியல் சட்டம் என்பது ஓர் உயிரற்ற இயந்திரம்தான். அதை இயக்குபவர்களின் திறமையைப் பொறுத்துத்தான் விளைவுகளை எதிர்பார்க்க முடியும். இந்தியாவின் இன்றியமையாத தேவை ஒழுக்கமும், நேர்மையும், மக்கள் நல்வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் தன்னலமற்ற தலைமையும்தான்' என்று அவர் கூறியதை நாம் குடியரசு தினத்தில் மக்கள் விழிப்புணர்வு தினமாகக் கருதி மூலைமுடுக்கெல்லாம் பிரசாரம் செய்ய வேண்டாமா? சீன ஆக்கிரமிப்பு, பாகிஸ்தான் படையெடுப்பு, பயங்கரவாதத் தாக்குதல்கள் என்று வரும்போது இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து இந்தியா ஒன்றுபடுவதைப் பார்க்கிறோம். இந்தத் தேசிய உணர்வை ஒருங்கிணைத்து, மேன்மையுறும் குடிமை நீதியை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. இந்திய சுதந்திரத்தின் பயனை ஒருசிலர் மட்டும் அனுபவிக்காமல் ஆட்சியில் இருப்பவர்களின் ஏகபோக உரிமையாகத் தொடர விடாமல் "எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்பதை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது."ஒரு மிகச்சிறந்த அரசியல் சாசனத்தை நாங்கள் இந்திய மக்களுக்குத் தருகிறோம். இந்த அரசியல் சட்டம் மக்களைச் சரியாக வழிநடத்தாமல் போனால் அல்லது தோல்வி அடைந்தால் அதற்குக் காரணம் நாங்களல்ல. இதை நடைமுறைப்படுத்திய அயோக்கியர்களாகத்தான் இருக்கும்' என்கிற பாபா சாகிப் அம்பேத்கரின் எச்சரிக்கை இன்றளவும் பொருந்தும்.வாக்குகள் விலைபேசப்படுகின்றன. ஜாதிய மற்றும் மதஉணர்வுகள் அரசியலை நிர்ணயிக்கின்றன. அறிவுப்பூர்வமான அரசியலைவிட உணர்வுப்பூர்வமான அரசியல் முன்னிலைப்படுத்தப்படுகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் குடியரசு என்றால் என்ன என்பதை சராசரி இந்தியனுக்குப் புரிய வைக்க வேண்டும்.தேர்தல்கள் திருவிழாக்களல்ல என்பதை உணரச் செய்ய வேண்டும்.
கருத்துக்கள்

இந்தியக் கண்டத்திலுள்ள மொழிவழி நாடுகள் சம உரிமையுடன் இணைந்து வலிவும் பொலிவும் மிக்க நல்லரசாகத் திகழும் வகையில் இந்தியக் கூட்டரசு திகழ வேண்டும். மொழி வழித் தேசிய இனங்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட்டால்தான் உண்மையான குடியரசு நடைபெறுவதாகப் பொருள். ஒரு காலத்தில் தமிழ நிலமாக இருந்த இந்நிலப்பரப்பு தமிழ்த் துணைக் கண்டம் என்றும் அழைக்கப் பெற வேண்டும். அல்லது ஆட்சி அமைப்பிற்குத் தமிழ் இந்தியக் கூட்டரசு நாடுகள் என்று பெயர் சூட்டலாம். நாட்டைப் பிளவு படுத்த முயல்வோர் கூறும் குறைகளைக் களைவதன் மூலம் ஒன்று பட்ட நல்லரசாகவும் திகழலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/26/2010 3:20:00 AM

நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்.அனைவரும் இனைந்து இன்னும் பல சாதனைகள் புரிவோம்.எங்கோ படித்தது போல் உள்ளது?.ஆனால் இந்தியன் என்றால் பெருமை கொள்ளுபவர் நாட்டில் இன்று எவர் இருக்க முடியும்.சுதந்திரம் பெற்றும குடியரசாகியும் பொன்விழாக்களை கடந்து விட்ட நிலையில் நாள் தோறும தெலுன்கானக்களாலும் நவ நிர்மாநியர்களாலும் தகர்க்கப்படும் குடியுரிமைகளும் ஜன நாயகமும் மேலும் நாள் தோறும் நடக்கும் சாலை ரயில் விபத்துக்களால் உயிர் இழப்புகள் ஏற்படுவதாலும் நம் நாட்டின் மீதான மதிப்பை பிற நாடுகளில் குறைக்க செய்கிறதே?.தேவை ஒற்றுமையுடன் கூடிய சிறந்த நிர்வாகமும் கட்டுபமேலும்மேலும்்பாடுடன் கூடிய மன உறுதிமிக்க ஆட்சியாளர்களும் !அதனை சிரத்தையோடு பின் பிற்ற வேண்டிய குடிமகன்களும் தான். புதிதாய் இன்று சபதம் எடுக்க வேண்டியதில்லை.ஏற்கனவே எடுத்த சபதத்தை நிறைவேற்றி முடித்தோமா?பின்பற்றுகிறோமா என்று பாருங்கள்.!.வளமான இந்திய நம் கையில்.! நம்பிக்கையுடன் வாருங்கள்! முன்னேறுவோம் ! முன்னேற்றுவோம்! ஜெய் ஹிந்து!

By RAMESHBABU SALEM
1/26/2010 3:18:00 AM

DINAMANI SOLLUM ARASIYAL SATTAM MAKKAL PURINTHU KOLLA INI MELL VAIPPE ILLAI KARANAM, JATHI, MATHA PIRIVINAI INDRI INDIAN ENA ENNI ALUM THAHUTHI ULLAVARHALAI VETRI PERA SEYYA INDRAYA ARASIYALVATHIHAL ORUPOTHUM VIDAMATTARHAL.PAKKATHTHU NATTUKKARANUM,VALLARASSU NATTUKARANUM KUDA INDIA VIL ARASIYAL PANNUHIRARHAL ENNA SEYVATHU?AALM KATCHIYAI MUDIVU SEYVATHU INDIYA MAKKAL ILLAI PANA MUTHALAIHALUM,ANNIYA NATTU SAKTHIHALUM THAN ENPATHU ELLORUM ARITHATHU THANE PINNAR ETHARKKU INTHA VEEN MUYARCHI.........?

By TMS.PEER MOHAMED
1/26/2010 2:31:00 AM

முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் இந்தியா அரசியல் அமைப்புச் சட்டம் என்பதை சுட்டி காட்ட மறந்தது ஏனோ !

By Aravindhan
1/26/2010 1:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக