புதன், 29 ஆகஸ்ட், 2012

"பேராசிரியராக இருந்து தொழிலதிபர் ஆனேன்!'







சொல்கிறார்கள்

"பேராசிரியராக இருந்து தொழிலதிபர் ஆனேன்!' ஹாட் சிப்ஸ் ஓட்டல் நிறுவனர் வாசுதேவன்: நான் வணிகவியல் துறை பேராசிரியர் என்பதால், உழைப்பால் உயர்ந்த தொழிலதிபர்களின் கதைகளை, அடிக்கடி வகுப்பில் கூறுவேன். இந்தக் கதைகளை, நாமே கடைப்பிடிக்கலாம் எனத் தோன்றியது. உடனே, பகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆரம்பித்தேன். என் வீட்டுக்கு அருகில், ஒரு மருந்துக் கடை விற்பனைக்கு வந்தது. அதை வாங்கி, வெற்றிகரமாக நடத்தினேன். அடுத்து, இன்னொரு மருந்துக் கடை, பல் பொருள் கடை என விரிவுபடுத்தினேன். இதில் எதிர்பார்த்த அளவு ஏற்றமில்லை. வேறு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தேன். என் மருந்துக் கடையை ஒட்டிய சந்தில், ஒரு சிப்ஸ் கடை இருந்தது. அந்த கடையில் சிப்ஸ் தயாரித்த விதம், வாடிக்கையாளர்களை விளம்பரம் இல்லாமலே வரவழைக்கிறது என அறிந்து, அதே போல் ஒரு சிப்ஸ் கடையை, நுங்கம்பாக்கத்தில் திறந்தேன். எனக்கான திருப்புமுனை அமைந்தது, இந்த சமயம் தான். இந்த சிப்ஸ் கடையில், வாடிக்கையாளர் எதிரில், உடனே தயாரிக்கக் கூடிய, நொறுக்குத் தீனிகளைத் தந்தோம். குறிப்பாக, வட இந்திய, உடனடி சாட் உணவுகளைத் தந்தோம். இதில் நல்ல வருமானமும், பெயரும் கிடைக்கவே, 1992ல் நான் பார்த்து வந்த ஆசிரியர் வேலையை விட்டு, முழு நேர, "பிசினஸ்மேன்' ஆனேன். முதல் ஓட்டலை, நுங்கம்பாக்கம் பகுதியில் தொடங்கினேன். இதில், வாடிக்கையாளர் சுயசேவையை ஆரம்பித்தேன். இதன் மூலம், கடையின் பணியாளர் எண்ணிக்கை குறைந்தது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில், உணவைத் தர முடிந்தது. இளைய தலைமுறையின் ரசனைக்கேற்ப, ஓட்டலை நடத்த ஆரம்பித்ததிலிருந்து, ஓட்டல், வேகமாக வளர்ந்தது. முதலில் சென்னையில் ஆரம்பித்து, பெங்களூரு, சிங்கப்பூரைத் தொடர்ந்து, தற்போது, துபாய் வரை செல்ல திட்டமிட்டு வருகிறோம். என், 18 ஓட்டல்களின் ஆண்டு வருமானம், 50 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது; நிறுவனத்தில், 1,500 பேர் வேலை செய்கின்றனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக