திங்கள், 25 ஜூலை, 2011

தமிழ் ஈழம் அமைவதற்கான முன்னோடி: தேர்தல் முடிவுகள் குறித்து வைகோ கருத்து

தமிழ் ஈழம் அமைவதற்கான முன்னோடி: தேர்தல் முடிவுகள் குறித்து வைகோ கருத்து

First Published : 25 Jul 2011 12:30:30 PM IST


கொழும்பு, ஜூலை.25: இலங்கையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தமிழ் ஈழம் அமைவதற்கான முன்னோடி என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தாயகம் வடக்கு-கிழக்கு மாநிலங்களில், பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள 26 மாகாண கவுன்சில்களில், 18 மாகாண கவுன்சில்களைக் கைப்பற்றி உள்ளது; 183 உறுப்பினர்கள் வெற்றி பெற்று உள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு, மதிமுக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.இலங்கை நாடாளுமன்றத்துக்கு 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 இடங்களில் வெற்றிபெற்றது.தனித்தமிழ் ஈழமே தீர்வு என்று, 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா நிறைவேற்றிய தீர்மானத்துக்குப் பின்னர், 1977 ஆம் ஆண்டு, இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், வடக்கு கிழக்கு மாநிலங்களில், 90 விழுக்காடு தமிழர்கள் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்கு அளித்தனர். அதேபோலத்தான், இப்போது, உள்ளாட்சித் தேர்தல்களிலும், தமிழ் ஈழ ஆதரவாளர்களையே தேர்ந்து எடுத்து இருக்கின்றார்கள்.  இது தமிழ் ஈழம் அமைவதற்கான முன்னோடித் தேர்தல் முடிவுகள் என்றே கொள்ள வேண்டும்.எரித்ரியா, கிழக்குத் தைமூர், தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில், தனி நாடு அமைப்பதற்காக, அம்மக்களிடையே வாக்குப்பதிவு நடத்தி, புதிய நாடுகளை அமைத்துக் கொடுத்த ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும், அதேபோல தமிழ் ஈழத்தை அமைப்பதற்காக, தமிழ் ஈழ மக்களிடம் பொது வாக்குப்பதிவை நடத்திட வேண்டும் என்று, அண்மையில் நடைபெற்ற பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் நான் தெரிவித்த கருத்தை, உலகம் முழுமையும் உள்ள தமிழ் ஈழ ஆதரவு அமைப்புகள் வரவேற்று உள்ளன.எனவே, உலக நாடுகளின் பார்வையாளர்கள் முன்னிலையில், தமிழ் ஈழம் அமைப்பதற்கான வாக்குப் பதிவை நடத்திட வேண்டும். அந்த வாக்குப்பதியில், உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ள ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே வாக்கு அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்; இலங்கையில் தமிழ் இனக்கொலை நடத்திய ராஜபட்ச மற்றும் அவரது கூட்டாளிகளை உலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும் நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதாக வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக