திங்கள், 21 டிசம்பர், 2009

பேரம் பேசும் இடமல்ல அரசியல்: கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் பதில்



சென்னை, டிச.20: ""மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, அரசியல் என்பது பேரம் பேசுகிற இடமல்ல; அது ஒரு வர்க்கப் போராட்ட களம்'' என்று முதல்வர் கருணாநிதிக்கு அந்தக் கட்சி பதில் அளித்துள்ளது.மார்க்சிஸ்ட் கட்சிக்காக அனுசரணையோடும், நேசத்தோடும் தி.மு.க. செய்ததையெல்லாம் அக்கட்சி மறந்திருக்காது என நம்புவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலளித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:திரிபுரா மாநில முதல்வர் பங்கேற்கிற பேரணிக்குக் கூட காவல் துறை அனுமதி அளிக்க மறுக்கிறது. எனவே, இந்தப் பிரச்னை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.சாதாரண ஜனநாயக நடைமுறையான பேரணிக்கு அனுமதி வழங்குவதுகூட பெருந்தன்மையின் அடையாளம் என்று முதல்வர் கருதுவது வினோதமாக உள்ளது.2006}ல் திமுகவோடு உடன்பாடு கொண்டு மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இதனுடைய தொடர்ச்சியாக மாநிலங்களவைத் தேர்தலில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.இதற்கடுத்து, நடந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.கே.ரங்கராஜனை திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் ஆதரித்தன.தேர்தல்களில் தோழமைக் கட்சிகளுக்குள் விட்டுக் கொடுத்து போட்டியிடுவது, ஒரு கட்சி இன்னொரு கட்சிக்கு அளிக்கக் கூடிய சலுகை அல்ல. பரஸ்பர ஒத்துழைப்பு மட்டுமே.திமுக ஆதரவோடு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதாலேயே திமுக தலைமையிலான அரசின் தவறான அணுகுமுறையை கண்டிக்கக் கூடாது; விமர்சிக்கக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறையல்ல.தேர்தல் பணி செய்ய விடாமல்... சென்னை மாநகராட்சி மறுதேர்தலின் போது, மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் திமுக போட்டியிடாது என்று பேரம் நடத்தப்பட்டது. இதை, நாங்கள் உறுதியாக நிராகரித்தோம்.திருமங்கலம் இடைத் தேர்தல் தொடங்கி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை திமுகவினர் ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் வகையில் பணவிநியோகம் செய்தனர்.எதிர்க் கட்சியினரை தேர்தல் பணி செய்ய விடாமல் போலீஸ் மற்றும் ரவுடிகளின் மூலம் முடக்குவது என்பதை நடைமுறையாக்கி உள்ளது திமுக.மதுரை மக்களவைத் தேர்தலில் நடைபெற்ற வன்முறைகள், பண விநியோகம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மோகன் நீதிமன்றம் சென்றார். அவர் மறைவுற்றதைத் தொடர்ந்து இந்த வழக்கை தொடர்ந்து நடத்த மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.ஒரு பேரணிக்கு அனுமதி வழங்கியதற்காக, இந்த வழக்கை வாபஸ் பெற்றிருக்க வேண்டும் என்று முதல்வர் கருதுகிறார் போலிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை அரசியல் என்பது பேரம் பேசுகிற இடம் இல்ல.அது, ஒரு வர்க்கப் போராட்ட களம். மக்களுக்கான போராட்ட பாதை'' என்று வரதராஜன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

நினைவிற்காக:முதல்வரின் கருத்தில் முறையான கூட்டம் ஒன்றிற்கு இசைவு தருவது கூட பேரததின் அடிப்படையில்தான். ஆனால் இதை மார்க்சியப் பொதுவுடைமை வாதியினர் மீறுகிறார்கள் அல்லது புரிந்து கொள்ளவில்லை எனத் தொனி தெரிகிறது. முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கிலும் தினகரன் ஊழியர்கள் கொலை, அலுவலக எரிப்பு வழக்குகளிலும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றது போல் இதிலும் நீதிமன்றத் தீ்ர்ப்பை ஏற்போம் என்னும் உண்மையை இப்பொழுது கூற வேண்டிய தேவை இல்லையே! மாண்புமிகு கலைஞர் உண்மையை வெளியிட்டு நிலை தடுமாறுவது ஏன் என்று தெரியவில்லை. எபப்டியோ இதுவரை எதிர்க்கட்சிகள் கூட்டங்களுக்கு இசைவு தராததற்குக்காரணம் பேரம் படியவில்லை என்பதைப் புரிநது கொண்டு இனிமேல் கூட்டம் நடத்த இசைவு வேண்டுமென்றால் பேரத்துடனவாருங்கள் என அழைப்பு விடுக்கிறார் என உரியவர்கள் புரிந்து கொண்டால் சரி. வாழ்க மக்களாட்சி! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 20.12.09 : 03.20

By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 5:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக