திங்கள், 20 ஜூலை, 2009

தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மக்கள் குரல் கொடுத்திருந்தால் போர் நிறுத்தப்பட்டிருக்கும்: இயக்குநர் சீமான்
[ஞாயிற்றுக்கிழமை, 19 யூலை 2009, 03:34 பி.ப ஈழம்] [க.நித்தியா]
இந்த மண்ணில் யாருக்கும் தமிழர்களின் துயர் துடைக்க ஆசை இல்லை. ஆறரை கோடி தமிழர்களில் 30 லட்சம் தமிழர்களாவது ஒரே இடத்தில் நின்று குரல் கொடுத்து இருந்தால் அங்கு போர் நிறுத்தப்பட்டு இருக்கும் அதை நாம் செய்யாதது பெரிய துரோகமாகும் என தமிழின உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க அந்த 'முள்வேலியை அகற்றுவோம் வாரீர்' என்ற முழக்கத்தோடு இயக்குநர் சீமான் தலைமையில் தமிழ்நாட்டின் மதுரையில் நேற்று சனிக்கிழமை ஊர்வலம் நடைபெற்றது.

'ஜான்சி ராணி' பூங்காவில் இருந்து தொடங்கிய ஊர்வலம் வடக்கு மாசி, மேலமாசி வீதி சந்திப்பிற்கு வந்தது.

இங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் உரையாற்றியபோது மேலும் தெரிவித்துள்ளதாவது:

தன் கணவனை கொன்றதற்காக நீதி கேட்ட கண்ணகி பிறந்த மண்ணில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. எங்களுக்கு பதவி ஆசையும் கிடையாது. எங்கள் நோக்கம் யாருக்கும் எதிரானதும் அல்ல.

காயம்பட்ட எங்கள் இனத்தை காப்பதற்காகதான் இந்த கூட்டம். அடுத்த நடவடிக்கை என்ன? இன்னும் நாம் விழிக்கவில்லை என்றால் என்ன ஆவோம்? என்பதை விளக்கதான் இந்த கூட்டம். இங்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடி இருப்பதற்கு காரணம் 'நாம் தமிழர்' என்ற உணர்வு இன்னும் இருப்பதால்தான்.

இலங்கையில் மூன்றரை லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் இருக்கிறார்கள். புத்தர் கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறிவரும் சிறிலங்கா அரசு மனித உயிருக்கு எவ்வளவு பெரிய தீங்கு செய்துள்ளது.

முள்வேலிக்குள் இருக்கும் தமிழர்கள் தாகத்துக்கு தண்ணீர் கேட்டால் சிங்கள வெறியன் சிறுநீரை கொடுக்கும் நிலை உள்ளது. சினிமாவில் ஒரு மிருகத்தை வைத்து படம் எடுத்தால் கூட முடிந்ததும் அந்த மிருகம் உயிருடன் இருக்கிறதா? என்று கேட்டுவிட்டுதான் தணிக்கை குழு சான்றிதழ் தருகிறது. சித்திரவதை இருக்கக்கூடாது என்ற சட்டம் இருக்கும் இந்த தேசத்தில், அங்கு கொடுமைக்கு ஆளாகும் மக்களை ஏன் காப்பாற்ற மனம் வரவில்லை.

விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டால் தமிழர்களை சுதந்திரமாக வாழ வைப்போம் என்று ராஜபக்ச கூறினார். இதை இந்திய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். தற்போது அவர்கள் கருத்துப்படி விடுதலைப் புலிகள் இல்லை. பிறகு ஏன் அங்கு வாழும் தமிழர்களுக்கு இந்த நிலை?

இந்த மண்ணில் யாருக்கும் தமிழர்களின் துயர் துடைக்க ஆசை இல்லை. ஆறரை கோடி தமிழர்களில் 30 லட்சம் தமிழர்களாவது ஒரே இடத்தில் நின்று குரல் கொடுத்து இருந்தால் அங்கு போர் நிறுத்தப்பட்டு இருக்கும் அதை நாம் செய்யாதது பெரிய துரோகமாகும்.

இந்த துரோகத்தை நீக்க முதல் கட்டமாக முள்வேலிக்குள் அடைக்கபட்டுள்ள தமிழர்களை மீட்டு அவரவர் இடத்தில் குடியமர்த்தவும், விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் மீதான தடையையும் மத்திய அரசு நீக்க வேண்டும்.

நம் எண்ணம் நிறைவேற தேவை ஒற்றுமை. எனவே ஜாதி, மதம், கட்சி போன்ற வேற்றுமையை மறந்து நாம் அனைவரும் 'தமிழர்' என்ற உணவுர்வுடன் உலக தமிழர்கள் செயற்பட்டால் போதும் நம் இலக்கை விரைவில் அடையலாம். இலங்கை சிங்களவர்களின் நாடு அல்ல. நம் பாட்டன் ஆண்ட பூமி என்றார் அவர்.

இந்த கூட்டத்தில் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், சாகுல் அமீது, டொக்டர் சர்மிளா, மாநில ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி சிவக்குமார், இயக்குனர்கள் சிபி சந்தர், மித்ரன், சட்டத்தரணிகளான மணி செந்தில், ஏ.கே.இராமசாமி, நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

பொதுக்கூட்ட மேடையின் முன்புறம் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை நினைவுபடுத்தும் வகையில் முட்கம்பிகளால் கட்டப்பட்டு இருந்தது.

முன்னதாக முள் வேலியில் அடைக்கப்பட்டு இருந்த மேடையில் இலங்கை தமிழர்கள் படும் அவலங்களை சித்தரிக்கும் நாடகம் நடத்தப்பட்டது.

சிங்களப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் தமிழர்களை தாக்கும் காட்சியை கண்ட பலரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது காண முடிந்தது. ஆவேசம் அடைந்த ஒரு கையில் இருந்த ஏதோ ஒரு பொருளைக்கொண்டு சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்தவரைப் போன்று வேடம் அணிந்தவர் மீது வீசி எறிந்ததால் கூட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக