செவ்வாய், 21 ஜூலை, 2009

இடைத்தேர்தல் புறக்கணிப்பு: அதிமுக முடிவு



உதகை,ஜூலை 20: தமிழகத்தில் நடைபெறவுள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களைப் புறக்கணிக்க அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குன்னூரில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவசர செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒரே தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை நடைபெற்றுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும், அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் திமுகவினர் அராஜகம், வன்முறை வெறியாட்டம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்திற்கு புறம்பான அனைத்து விதமான தேர்தல் தில்லு முல்லுகளையும் அரங்கேற்றி போலி வெற்றிகளை குவித்து வருகின்றனர்.அதிகாரிகளை மிரட்டி..: அரசு அதிகாரிகளை மிரட்டியும், பணத்தைக் கொடுத்தும், காவல்துறையினரின் ஒத்துழைப்பை பெற்றும் ஜனநாயகத்தை படுகொலை செய்தும் போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது. இந்நிலையில் பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளில் அடுத்த மாதம் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலின்போதும் ஆளுங்கட்சியினரால் பகிரங்கமாக நடத்தப்பட்டுவரும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார்களையும், மனுக்களையும் கொடுத்துள்ளன. ஆனால், இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதிமுக ஆதரவாளர்கள் நீக்கம்: தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, கடந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 51 லட்சம் வாக்குகள் குறைவாக உள்ளன. அதிமுகவுக்கு ஆதரவான வாக்காளர்களை திமுக ஆட்சியாளர்கள் நீக்கியுள்ளனர். நீதி கிடைக்கவில்லை: திமுகவினர் செய்யும் அனைத்து அராஜகங்களையும் இந்திய தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதிப்பதால் தேர்தல் ஆணையத்தின் மீதும், அரசின் மீதும் சந்தேகத்தின் நிழல் விழுகிறது. பல்வேறு உலக நாடுகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் தமிழக அரசும், மத்திய அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைதான் பயன்படுத்துவோம் என பிடிவாதமாக உள்ளன. தற்போது தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியிலுள்ள சூழலில், அறிவிக்கப்பட்டுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சுதந்திரமாகவும், பாரபட்சமின்றியும், நியாயமாகவும் நடத்த முடியுமென்ற நம்பிக்கை அதிமுகவிற்கு ஏற்படவில்லை. எனவே, அடுத்த மாதம் 18ம்தேதி நடைபெறவுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்க வேண்டுமென இச்செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானித்துள்ளதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்


தவிர்த்து இருக்க வேண்டிய முடிவு. நாடாளுமன்றத்திற்கு ஒரு வகையாகவும் சட்டமன்றத்திற்கு ஒருவகையாகவும் வாக்களிப்பது தமிழ் மக்கள் வழக்கம். கையூ்ட்டுகள் வழங்கப்படும் முன்பே 'கையூட்டு வாங்க மாட்டோம்' என மக்களைச் சந்தித்து உறுதிமொழி வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம். திமுக வின் சாதனைகள் மக்களை ஈர்த்திருந்தாலும் கடந்த தேர்தல் முடிவின் பொழுது ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரவலம் மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டாவது தேர்தலைச் சந்திருத்தக்கலாம். வீண் உழைப்பு ஏன் எனத் தவிர்த்தது விட்டார்கள். இனி இந்தச் சூழலில் தமிழ் நல அமைப்புகள் 5 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும். அதிமுக கூட்டணியினர் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்; படு கொலைகாரர்களுக்கு வாக்களிக்க வேண்டா எனப் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். இந்தச் சூழல் தேதிமுக விற்கும் கொங்கு நாட்டுப் பேரவைக்கும் ஒரு திருப்பு முனையைக் கூட ஏற்படுத்தலாம். பெரிய அளவில் போட்டி இல்லை என்பதால் பெருமளவு பணம் இறங்காமலும் இருக்கலாம். எனவே, தமிழ் நல அமைப்புகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தி ஈவு இரக்கமின்றி இனப்படுகொலை செய்தவர்களும் அதற்கு உதவியவர்களும் கண்டும் காணாமல் இரு்ந்தவர்களும் தோற்கடிக்கப்பட முயன்று வெற்றி காண வேண்டும்.

அன்புடன இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/21/2009 3:12:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
7/21/2009 3:13:00 AM

இடைத்தேர்தலை ம.தி.மு.க. புறக்கணிக்கும்: வைகோ



சென்னை, ஜூலை 20: தமிழகத்தில் நடைபெற உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை ம.தி.மு.க. புறக்கணிக்கும் என அதன் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து வைகோ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, "வாக்காளர்களே பணத்துக்கு ஆசைப்படாமல் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்' என்று விரக்தியான, கையாலாகாத உபதேசத்தைதான் கூறியுள்ளார். இவ்வாறு தேர்தல் ஆணையம் செயலற்றுக் கிடப்பது ஒரு விபரீதமான நிலை ஆகும். மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலும் முறைகேடுகளைச் செய்ய முடியும் என்பது வல்லுநர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நியாயமான தேர்தலுக்கு வாக்குச் சீட்டு முறையே உகந்தது. இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் ஆளுங்கட்சி அதிகார துஷ்பிரயோகத்தை தொடங்கி விட்டது. கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டி, வாக்குகளை விலைக்கு வாங்கவும் திட்டம் தீட்டப்பட்டு விட்டது. எனவே இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்ற அ.தி.மு.க. முடிவை வரவேற்பதுடன், ம.தி.மு.க.வும் தேர்தலைப் புறக்கணிக்கிறது என வைகோ கூறியுள்ளார். அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் என். சேதுராமனும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
வைகோவுடன் ஆலோசித்த பிறகே
புறக்கணிப்பு முடிவு: ஜெயலலிதா



உதகை,ஜூலை 20: தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தல்களை புறக்கணிப்பது குறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோவுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்தார். குன்னூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக அவசர செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது: தமிழகத்தில் 5 தொகுதிகளில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களை புறக்கணிப்பதாக தீர்மானிக்கப்பட்டு, தற்போது அதிமுக செயற்குழுவிலும் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல்களை புறக்கணிக்கும் முடிவை மதிமுக பொதுச்செயலர் வைகோவிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே இந்த முடிவை அவரிடம் தெரிவித்துள்ளதால், தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள இந்த முடிவை அவரும் ஏற்பார் என நம்புகிறேன். தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்டு மற்றும் பாமக ஆகிய கட்சிகளுக்கும் தெரிவிக்கப்படும் என்றார் ஜெயலலிதா.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக