திங்கள், 8 அக்டோபர், 2012

பெயர்த்து நடப்பட்ட அரச மரம் துளிர்விட்டது: திருப்பூரில் முயற்சி வெற்றி

பெயர்த்து நடப்பட்ட அரச மரம் துளிர்விட்டது: திருப்பூரில் முயற்சி வெற்றி

 திருப்பூர்:வேருடன் பெயர்த்து வேறொரு இடத்தில் நடப்பட்ட அரச மரம் மற்றும் வேப்ப மரம், துளிர்விட்டு வளரத் துவங்கியுள்ளன.

திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில், டி.எம்.எப்., மருத்துவமனை அருகே, ரயில்வே ரோட்டை கடக்கும் வகையில் சுரங்க பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாலம்- ரோடு இணையும் இடத்தில், 75 ஆண்டு பழமையான அரச மரம்,வேப்ப மரம் இணைந்து இருந்தது. சுரங்கப் பால பணிக்காக, மரத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.அந்த மரங்களை காப்பாற்றுவது குறித்து வனத்துறை, வேளாண் துறையினருடன் இயற்கை ஆர்வலர்கள் ஆலோசனை நடத்தினர். புதிய தொழில் நுட்பத்துடன், மரங்களை வேருடன் பெயர்த்து எடுத்து, "நிப்ட்-டீ' கல்லூரி வளாகத்தில் நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த ஆக., 23ல் அரச மரம், வேப்ப மரம் வேருடன் தோண்டி எடுக்கப்பட்டன. "கிரேன்' உதவியுடன் கல்லூரி வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு பூஜை செய்து மரம் நடப்பட்டது. வேர் விட்டு வளர்வதற்காக, சில வகை உரங்கள் இடப்பட்டன; வெயிலின் தாக்கத்தை தாங்குவதற்காக, வைக்கோல் கயிற்றை மரத்தில் சுற்றி, தினமும் தண்ணீர் தெளித்து குளிர்விக்கப்பட்டது.

இந்த முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. கல்லூரி வளாகத்தில் நடப்பட்ட அரச மரம், துளிர்த்து வளர்ந்துள்ளது. வேப்ப மரம் துளிர்விட்டு வளரத் துவங்கியதும், விழா எடுத்து கொண்டாட, கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது
.

கல்லூரி நிர்வாகிகள் கூறுகையில், ""அரச மரம் துளிர்த்து வளர்ந்து வருகிறது. மழை இல்லாததால் வேப்ப மரம் துளிர்வதில் தாமதம் ஏற்படுகிறது. வேப்ப மரம் துளிர்விட்டதும், அன்னதான விழா நடத்தப்படும்.'' என்றனர்.
- தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக