சனி, 13 அக்டோபர், 2012

"என் அடையாளத்தை மாற்றிய மரம்!'

சொல்கிறார்கள்

"என் அடையாளத்தை மாற்றிய மரம்!' 


இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டும், இன்னும் மரங்கள் நட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள கருணாநிதி:விழுப்புரம் மாவட்டம், சங்கீதமங்கலம் கிராமம் தான், என் சொந்த ஊர். கடலூர் அரசுப் போக்குவரத் துக் கழகத்தில், ஓட்டுனராக உள்ளேன். மாதம், 22 ஆயிரம் ரூபாய் சம்பளம்; பிடித்தம் போக, 17 ஆயிரம் ரூபாய் வரும். அதில், 10 ஆயிரம் ரூபாயை மரங்களுக் காகவே செலவு செய்கிறேன். நான் பத்தாம் வகுப்பு வரை தான் படித்தேன்; மேற்கொண்டு படிக்க ஆர்வமில்லை. காடு, மேடெல்லாம் சுற்றித் திரிவேன். எங்கு விதை கிடைத் தாலும், அதை எடுத்து, முளைக்க வைத்து, யாரிடமாவது கொடுப்பேன். நர்சரி போட்டு, அதில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து கொடுக்கும் அளவிற்கு, நிலமோ, வசதியோ என்னிடம் இல்லை. என் சம்பளப் பணத்தில் இருந்து, மரக்கன்றுகளை வாங்கி, மக்களுக்குக் கொடுப்பேன். ஆரம்பத்தில் என் கிராமத்திற்கு மட்டும் தான், இதை செய்தேன். இப்போது, தமிழகத்தில், எங்கு அழைத்தாலும், மரக்கன்றுகள் வழங்குகிறேன். திருமணத்திற்கு தாம்பூலப் பைக்கு பதிலாக, மரக்கன்று கொடுக்கும் பழக்கத்தை, பல ஆண்டுகளுக்கு முன், நான் ஆரம்பித்து வைத்தேன். விழுப்புரம் மாவட்டத்தில், எனக்குத் தெரிந்து, யாருக்குப் பெண் குழந்தை பிறந்தாலும், உடனே, ஒரு சந்தன மரக்கன்று கொடுப்பேன். சந்தன மரம் வளர்ந்து வர, 25 ஆண்டுகள் ஆகும். அந்த பெண் குழந்தைக்குத் திருமணம் ஆகும் போது, அந்த மரம், திருமணச் செலவிற்கு உதவியாக இருக்கும். எனக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்காக நான் எதையும் சேர்த்து வைக்கவில்லை; ஆளுக்கு, இரண்டு சந்தன மரம் நட்டிருக்கிறேன்; அது போதும். ஊருக்குள் என்னை, கோமாளி போல பார்க்கின்றனர். என் காதுபடவே, கிண்டல் செய்கின்றனர். ஆனால், எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. காரணம், இந்த மரம் என் அடையாளத்தையே மாற்றியுள்ளது. என் பெயருக்குப் பின்னால் இருந்த, ஜாதிப் பெயரை நீக்கி, "மரம்' கருணாநிதி என அழைக் கும்படி செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக