புதன், 10 அக்டோபர், 2012

அண்ணா போற்றிய பேராசிரியர் சி.இலக்குவனார் - கழுகார்

இளைய விகடன் (சூனியர் விகடன்)  நாள் 14.10.12. பக்கங்கள் 9-10
கழுகார் பதில்கள்

அ.குலசேகரன், மதுரை
? 'என் காலத்தில் இருந்ததமிழ்ப்பேராசிரியர்கள் போல் இப்போது இல்லை ' என்கிறார் என் ஆசிரியர்  உண்மையா?

! பேராசிரியர் சி. இலக்குவனார் இருந்தார்.  பேராசிரியர்களுக்கெல்லாம் பெரும் பேராசிரியர்.

அண்ணா  அமெரிக்கா சென்ற போது யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கும் போப்பாண்டவருக்கும் கொடுப்பதற்காக இலக்குவனாரின் தொல்காப்பிய மொழிபெயர்ப்பைத்தான் கொண்டு சென்றார். தமிழ்நாட்டில் 1965 -ஆம்ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது, இலக்குவனார், மதுரை தியாகராசர் கல்லூரிப் பேராசிரியர். போராட்டத்தை இவர்தான் தூண்டி விட்டார் என்று கைது செய்து  தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது அரசு. 'இந்தி எதிர்ப்புப் போரை நிறுத்தும் விசை, மதுரைப் பேராசிரியரிடம் உள்ளது'  என்று அப்போது அண்ணாவே பகிரங்கமாக அறிவித்தார். தி.மு.க. ஆட்சி வந்ததும் மாநிலக் கல்லூரியில் இலக்குவனாரை அமர்த்தினார் அண்ணா.

அதன்பிறகும் அமைதியாகிவிடவில்லை இலக்குவனார். அன்றைய நிதி யமைச்சர் நெடுஞ்செழியன் ஆங்கிலத்துக்கு ஆதரவாக கோவை கருத்தரங்கில் பேச,  'தமிழின் நாவலரா? ஆங்கிலததின் காவலரா?'  என்று பகிரங்கமாக  எழுந்து கேட்டவர் அவர். 1960 களின் இறுதியிலும் 70 களின் தொடக்கத்திலும் பேராசிரியரின் மாணவர் என்று பலரும் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்ளும் தகுதி படைத்தவராக இலக்குவனார் இருந்தார். தமிழ்ப்புலமையும் துணிச்சலும் ஒருங்கே பெற்ற தமிழ்ப்பேராசிரியர்கள் குறைந்து வருவதைச் சொல்லி இருப்பார் உங்கள் ஆசிரியர்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்றைய தலைமுறையினருக்குத் தமிழ்காத்த உண்மைத் தமிழறிஞரை அறிமுகப்படுத்திய கழுகாருக்கு நன்றி. கோயம்புத்தூரில் தமிழாசிரியர் மாநாடு நடந்தபொழுது பேராசிரியர் இலக்குவனார் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாவலர்  நெடுஞ்செழியன் அப்போது கல்வியமைச்சராக இருந்தார்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக