ஞாயிறு, 7 அக்டோபர், 2012

உரத்த சிந்தனை: காவிரியில் கருகும் வாழ்வு: எல்.பிரைட்

உரத்த சிந்தனை: காவிரியில் கருகும் வாழ்வு: எல்.பிரைட்

"தமிழகத்தின் நெற்களஞ்சியம்' எனப் போற்றப்படும் தஞ்சைத் தரணியின் நிலை, இன்று, நெஞ்சைப் பிளப்பதாய் உள்ளது. கர்நாடக அரசு, காவிரி நதியில், நமக்குச் சேர வேண்டிய தண்ணீரை விடாமல் முரண்டு பிடிப்பதால், அந்நீரை நம்பியே விவசாயம் செய்து வரும், தமிழக விவசாயிகளின் கண்ணில், இன்று கண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது.

தஞ்சைப் பகுதியின் நிலங்களில் விளையும் விளை பொருட்கள், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுவதால், தஞ்சைத் தரணியைத் தான், தமிழகமே தன் வாழ்வாதாரத்திற்கு நம்பியிருக்கிறது. இச்சூழ்நிலையில், ஆரம்ப நிலையிலிருந்தே கர்நாடகா, இப்பிரச்னையில் நாடகங்களைத் தான் அரங்கேற்றி வருகிறது. ஆனால், அது போடும் நாடகத்தை, யாராலும் ரசிக்கத் தான் முடியவில்லை.காவிரி நதி, கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகி, தமிழகத்தில் முடிகிறது. 800 கி.மீ., நீளமுள்ள காவிரி நதி, 320 கி.மீ., தூரம் கர்நாடக மாநிலத்திலும்; 64 கி.மீ., கர்நாடக - தமிழக எல்லையிலும்; 416 கி.மீ., தமிழகத்திலும்; 125 கி.மீ., நீளம் காவிரி டெல்டா பகுதியிலும் பாய்ந்து, இறுதியில் சிறு ஓடையாகக் குறுகி, வங்கக் கடலில் கலக்கிறது.

கி.பி., இரண்டாம் நூற்றாண்டில், ஒருமுறை, காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அதன் கரைகள் உடைந்து விட்டன. உடைந்த கரைகள் வழியே வெளியேறிய தண்ணீர், தற்போது, "உள்ளாறு' என்று அழைக்கக் கூடிய சிறு ஓடை வழியாக, கொள்ளிடத்தில் கலந்ததாம்.
இந்த உடைப்பைச் சரிசெய்வதற்காக, அப்போது சோழ நாட்டை ஆண்ட மன்னன், கரிகால் சோழன் என்பவன், இன்றும் காவிரியின் குறுக்கே கம்பீரமாக நின்று கொண்டிருக்கும், கல்லணையைக் கட்டி முடித்தான்.இந்த வரலாற்றுச் சான்றிலிருந்து, ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக, காவிரித் தண்ணீரை, தமிழர்களாகிய நாம் உபயோகப்படுத்தி வந்திருக்கிறோம் என்ற உண்மை தெரிய வருகிறது. எனவே, தொடர்ந்து அந்நீரை பயன்படுத்துவதற்கான உரிமை, நமக்கு நிறைய இருக்கிறது.

காவிரி நீர், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அளவைப் பொறுத்து, வெவ்வேறு காலங்களில், பல்வேறு பாசனத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.ஆனால், கர்நாடக அரசு செய்து வரும் ஒப்பந்த மீறல் மோசடிகளால், திட்டங்களின் பலன், தமிழக விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைக்காமல் போய் விட்டது. இதன் காரணமாக, காவிரியை நம்பியிருக்கும், 35 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள், இன்று வேலை இழந்து நிற்கின்றனர்; 21.59 லட்சம் ஏக்கர் நிலம், காய்ந்து, கருகிக் கொண்டிருக்கிறது.தமிழ்நாடு, கர்நாடகம் என்று பெயர் மாற்றம் அடையும் முன்பே, இவ்விரு மாநிலங்களுக்கு இடையேயும் காவிரிப் பிரச்னைகள் ஆரம்பித்து விட்டன. இப்பிரச்னையை பிள்ளையார் சுழி போட்டுத் துவங்கி வைத்தது, அப்போதைய மைசூர் அரசு தான். அது, அன்றைய சென்னை அரசின் அனுமதி பெறாமலேயே, தன் இஷ்டத்துக்குப் பாசனப் பரப்புகளை அதிகரிக்கத் துவங்கியது.

மைசூர் அரசின், தன்னிச்சையான, தான் தோன்றித்தனமான போக்கால், சென்னை அரசின் பாசனப் பரப்புகள் பெரிதும் பாதிப்புக்கு உட்பட்டன. இதன் எதிரொலியாக, 1890 - 1892ம் ஆண்டுகளில், இரு மாநிலங்களுக்கு இடையேயும் பேச்சு நடந்து, முடிவில், 1892ல், ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.அதன்படி, காவிரியிலோ, அதன் துணை நதிகளான ஹேமாவதி, லட்சுமணத் தீர்த்தம், கபினி, சுவர்ணவதி, யகாச்சி ஆகியவற்றிலோ, மைசூர் அரசு அணைகள் கட்ட விரும்பினால், சென்னை அரசின் அனுமதி பெற்ற பின்பே, நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். மைசூர் அரசு, அணைகள் கட்டுவது, தன் பாசன வசதிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று தெரிந்தால், அதற்கு அனுமதி மறுக்கிற அதிகாரத்தையும், சென்னை அரசுக்கு அந்த ஒப்பந்தம் வழங்கியது.

போகப் போக, கர்நாடக அரசின் சுய ரூபம் வெளிப்பட்டது. 1892ல், ஒப்பந்த விதிகளை அப்பட்டமாக மீறத் துவங்கியது, கர்நாடக அரசு. சென்னை அரசின் அனுமதி பெற்று, 1911ல், 11 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கும் உயரத்தில் சுண்ணம்பாடி அணையைக் கட்டத் துவங்கியது, மைசூர் அரசு.ஆனால், எதிர்காலத்தில், 41 டி.எம்.சி., தண்ணீரைத் தேக்கி வைக்கும் உயரத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்ற சுயநல எண்ணத்தோடு, ஆரம்பத்திலேயே அணையின் அடித்தளத்தை அகலமாக அமைத்துக் கொண்டது. இதன் மூலம், ஒப்பந்த விதிக்களுக்கு முரணாகச் செயல்பட்டது மைசூர் அரசு.

இரு மாநிலங்களுக்கு இடையேயும், பிரச்னைகள் வளர்ந்தன. பிரச்னை அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு விடப்பட்டது. ஆனால், நீதிபதி ஹென்றி கிரிபின் என்பவர், மைசூர் அரசுக்கு ஆதரவாக, அப்போது தீர்ப்புச் சொல்லி விட்டார்.எனவே, பிரச்னையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது சென்னை அரசு. மத்திய அரசும், மைசூர் அரசுக்கு சாதகமாகவே நடந்து கொண்டது. எங்கும் நியாயம் கிடைக்காமல் போகவே, இறுதியில் இங்கிலாந்திலுள்ள இந்தியச் செயலரிடம், சென்னை அரசு முறையீடு செய்தது.அவர் எடுத்துக் கொண்ட முயற்சியால், இரு மாநிலங்களுக்கு இடையேயும், 1924ம் ஆண்டு, புதிய ஒப்பந்தமும், 1929, ஜூன் 17ல், மற்றொரு துணை ஒப்பந்தமும் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தப்படி -

*44.827 டி.எம்.சி., கொள்ளளவுள்ள கிருஷ்ணசாகர் அணைக்கட்டை, மைசூர் அரசு கட்டிக் கொள்ளலாம். இதன் மூலம், 12.5 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை, அது அதிகரித்துக் கொள்ள முடியும்.
*93.5 டி.எம்.சி., கொள்ளளவுள்ள மேட்டூர் அணையைக் கட்டி, புதிதாக, 3.01 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு, சென்னை அரசு பாசன வசதி செய்து கொள்ளலாம்.
*45 டி.எம்.சி., கொள்ளளவுள்ள அணையை, தன் துணை நதிகளில் அமைத்து, 1.10 லட்சம் ஏக்கருக்குப் புதிய பாசன வசதிகளை மைசூர் அரசு ஏற்படுத்திக் கொள்ளலாம். எனினும், சென்னை அரசின் நீர்ப்பாசன வசதிக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், இது அமைய வேண்டும்.
*சென்னை அரசு, தன் துணை நதிகளில் புதிய அணைகள் அமைத்துக் கொள்ளலாம். பவானி, நொய்யல், அமராவதி நதிகளில் அணைகளைக் கட்டினால், அதன் கொள்ளளவுகளில், 60 சதவீதத்திற்கு மேற்படாதவாறு காவிரியின் துணை நதிகளில் ஒன்றில், மைசூர் அரசு அணைகளைக் கட்டிக் கொள்ளலாம். எனினும், சென்னை அரசுக்குச் சேர வேண்டிய நீரின் அளவை பாதிக்காத வகையில், இது இருக்க வேண்டும்.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் ஒப்பந்தத்தில் சில பிரிவுகளை, சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அதை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்கிறது, மேற்குறிப்பிட்ட விதிகள்.ஆனால், 1892 மற்றும் 1924ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இரண்டு ஒப்பந்தங்களுமே, காலாவதியாகி விட்டதாக கர்நாடக அரசு, கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. மேலும், அன்றைய மைசூர் அரசுக்கு விதிக்கப்பட்ட ஒப்பந்த விதிகள், இன்றைய கர்நாடக அரசை கட்டுப்படுத்த முடியாது என்றும், அது வாதிடுகிறது. கர்நாடக அரசோ, தன் கிளை நதிகளில் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, சுவர்ணவதி, லட்சுமண தீர்த்தம் போன்றவற்றில் அணைகளைக் கட்டி, கிருஷ்ண சாகர் அணைக்கட்டுக்கும், மேட்டூர் நீர்த் தேக்கத்துக்கும் வருகிற தண்ணீரை தடுத்து விட்டது. அதுமட்டுமின்றி, இப்போதெல்லாம் காவிரியில் வருகிற தண்ணீரின் அளவு குறைந்து விட்டது. அதனால் தான், தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியவில்லை என்றும் கதை விடுகிறது.

இதுவரை, தமிழகத்தை ஆண்ட அனைத்து அரசியல் கட்சிகளும், காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்னை குறித்து, 27 தடவைக்கு மேல் பேச்சு நடத்தி இருக்கின்றன. ஆனால், எல்லாமே தோல்வியில் தான் முடிந்திருக்கிறது அல்லது நாய்க்கு எலும்புத் துண்டைப் போடுவதைப் போல, குறைந்த அளவு தண்ணீரே திறந்து விடப்பட்டுள்ளது.பிரச்னையைத் தீர்க்க, நடுவர்மன்றம் அமைத்ததன் பலனாக, அதன் நீதிபதிகளிடம் லட்சக்கணக்கான மக்கள், தங்கள் குறைகளை நேரிடையாகச் சொல்ல வாய்ப்புக் கிடைத்ததே தவிர, மற்றபடி தமிழகத்துக்கு நேரிடையாக தண்ணீர் திறந்து விடச் சொல்ல, அதற்கு அதிகாரமில்லாமல் போனது ஏமாற்றமளிக்கிறது.

நீதிமன்ற தலையீடு, நடுவர் மன்றம், பேச்சுவார்த்தை என்று தொடர்ந்து நாடகம் தான் "டிவி' தொடர் போல் இழுத்துக்கொண்டே போகிறது. தண்ணீர் வரும் வழியைத்தான் காணோம். மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகளும் சரி, ஆட்சியை எதிர்க்கும் கட்சிகளும் சரி, இந்த பிரச்னையை வைத்து அரசியல் ஆதாயம் தான் தேடப்பார்க்கின்றனர். பாவம், காவிரி கரை மக்கள். விவசாயமும் இல்லாமல், வருமானமும் இல்லாமல், போராடவும் முடியாமல் முடங்கி கிடக்கின்றனர்.
"இ-மெயில்' முகவரி: dmrcni@dinamalar.in

எல்.பிரைட்,சிந்தனையாளர்
தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக