சனி, 24 அக்டோபர், 2009

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை பிளவுபடுத்த கருணாநிதி முயற்சி: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு



சென்னை, அக். 22: உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை பிளவுபடுத்த முதல்வர் கருணாநிதி முயல்வதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாகும். மறைந்த தனிநாயகம் அடிகளார் பெருமுயற்சியின் விளைவாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும், தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி விவாதித்து, தமிழின் ஏற்றத்திற்கு வழிகாணவும் இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட மாநாடுகளில் அரசியல் கலப்பு என்பது ஓரளவு தவிர்க்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பையும், அது நடத்தும் ஆய்வு மாநாடுகளையும் தேவையற்ற வகையில் சர்ச்சைக்குள்ளாக்கி ஓர் போட்டி அமைப்பை உருவாக்குவதில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தும் அறிவிப்பை தன்னிச்சையாக வெளியிட்டதே தவறாகும். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரான நொபுரு கரசிமா, உலகத் தமிழ் அறிஞர்கள் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி அளிப்பதற்கு வசதியாக மாநாட்டினை 2011 ஜனவரியில் நடத்தலாம் என தெரிவித்துள்ளார். ஆனால், 2011 ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் இருப்பதால் அப்போது மாநாட்டினை நடத்த இயலாது என்று கருணாநிதி கூறியிருக்கிறார். உலகத் தமிழ் மாநாட்டுக்கும், தமிழகத் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அதிலும் தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு முன்பே நடைபெறும்போது எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அவ்வாறு நடத்துவது தனது அரசியல் நோக்கங்களுக்கு உதவாது என்பதால், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை புறக்கணித்து விட்டு, போட்டி மாநாடு நடத்துவதில் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பொறுப்புகளில் உள்ள 9 பேரில், 6 பேர் தனக்கு இசைவு அளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை தனது அதிகாரப் பலத்தைக் கொண்டு பிளவுபடுத்த கருணாநிதி முயற்சி செய்கிறார். இலங்கைப் போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை தடுத்து நிறுத்தாத கருணாநிதி மீது உலகத் தமிழர்கள் கொண்டிருக்கும் வெறுப்பை மாற்றுவதற்கு உலகத் தமிழ் மாநாட்டை அவசர அவசரமாக நடத்த அவர் முற்படுகிறார். உலகம் முழுவதும் வேரூரின்றி நிற்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை பிளவுபடுத்துவதற்கும், புறக்கணிப்பதற்கும் கருணாநிதி முற்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தான் சொல்கிறபடி செயல்படுகிற தமிழறிஞர்களைக் கொண்ட ஒரு போட்டி அமைப்பை நிறுவி, போட்டி மாநாட்டினை நடத்துவதற்கு கருணாநிதி செய்கிற முயற்சிகளை முறியடிக்க வேண்டியது உலகத் தமிழர்களின் கடமையாகும் என பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக