செவ்வாய், 13 நவம்பர், 2012

தீபாவளியா? தீ-வாளி ஆயின் சீ என்று விடுவரே!

தீபாவளியா? தீ-வாளி ஆயின் சீ என்று விடுவரே!
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்தால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பன?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமோ?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
"உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?"
என்றுகேட் பவனை, "ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்" என்று
கேட்கும்நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும்நாள், மானம் உணரு நாள் இந்தநாள்
தீபா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவரெ!
------------------------
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக