ஞாயிறு, 11 நவம்பர், 2012

ஒப்புதல் பெறாக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு :விதிமீறல்களைஏற்று அரசாணை வெளியீடு

அனுமதியற்ற கட்டடங்களை வரன்முறைப்படுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு :விதிமீறல்களை அனுமதித்து அரசாணை வெளியீடு

அனுமதியற்ற கட்டடங்களை வரன்முறைப்படுத்துவதற்காக, புதிதாக இரு அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில், தள வியாபித பரப்பு விதிமீறல் 50 சதவீதம் அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற மாநகராட்சிகளில் உள்ள அனுமதியற்ற கட்டடங்களை வரன்முறைப் படுத்தும் பொருட்டு, கடந்த 2002ல், தமிழ்நாடு மாநகராட்சி சட்டத்தில் "283 ஏ' என்ற புதிய பிரிவைச் சேர்த்து திருத்தம் மேற்கொண்டது.

நகர ஊரமைப்பு சட்டம், கோவை மாநகராட்சி சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. சதுர மீட்டருக்கு எவ்வளவு அபராதம் என்பதைக் குறிப்பிட்டு, புதிய விதிகளும் வகுக்கப்பட்டன. உதாரணமாக, கோவை மாநகராட்சியில் குடியிருப்புகளில் விதிமீறல் கட்டிடங்களுக்கு சதுர மீட்டருக்கு 300 ரூபாயும், அனுமதியற்ற கட்டடங்களுக்கு 500 ரூபாயும், குடியிருப்பு அல்லாத பிற கட்டடங்களுக்கு முறையே 600 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
சட்டத்தை மதிக்காமல், அனுமதியற்ற கட்டடங்களைக் கட்டியவர்கள் மீது கருணை காட்டிய அந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து, கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு (ரிட் மனு எண்:17879/2003) தாக்கல் செய்தது.

அதில், "அனுமதியின்றியும், பாதுகாப்பின்றியும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு எவ்வளவு பெரிய தொகை வசூலித்து, வரன்முறைப்படுத்தினாலும், அதனால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்' என்று கேள்வி எழுப்பியது அந்த அமைப்பு. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், நகர ஊரமைப்புச் சட்டத்தில் செய்த திருத்தம் செல்லாது என்று கடந்த 2008ல் உத்தரவிட்டது.
ஆனாலும், இன்று வரையிலும் அந்த அனுமதியற்ற கட்டடங்கள் மீது எவ்விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; வசூலிக்கப்பட்ட அபராதத்தொகையும் திருப்பித் தரப்படவில்லை.நீண்ட இடைவெளிக்குப் பின், இந்த கட்டடங்களை வரன்முறைப்படுத்த, புதிதாக இரு அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னைக்கும் சேர்த்து:


வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில், கடந்த 30ம் தேதியன்று (அரசாணை எண்:234 மற்றும் 235 )வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணைகளில், எந்தெந்த கட்டிடங்களை வரன் முறைப்படுத்தலாம், எதற்கு விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதற்கும் இந்த அரசாணை பொருந்தும்.

சான்று கட்டாயம்: சம்மந்தப்பட்ட கட்டடத்தில், போதிய அளவு தீத்தடுப்பு வசதிகள், அவசர வழிகள் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்குனரிடம் சான்று பெற்றிருக்க வேண்டும்; கட்டிடத்தின் வளாகத்திற்குள் அல்லது 250 மீட்டர் தூரத்துக்குள் "பார்க்கிங்' வசதி செய்யப்பட்டிருந்தால், அதை வரன்முறைப்படுத்துவதற்கு பரிசீலிக்கலாம்.
இதற்காக ஒதுக்கப்படும் இடமானது, அந்த கட்டட உரிமையாளரின் சொந்த இடமாக இல்லாத பட்சத்தில், 30 ஆண்டுகள் தொடர் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்ட இடமாக இருக்க வேண்டியது அவசியம். கட்டடம் அமைந்துள்ள சாலையின் அகலத்தைப் பொறுத்தவரை, 20 சதவீதம் வரை விதிமீறலை அனுமதிக்கலாம் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, 100 அடி அகலத்துக்குப் பதிலாக, 80 அடி அகலத்தில் அணுகுசாலை இருந்தாலும் அதை அனுமதிக்கலாம். பக்கத்திறவிடம் (செட் பேக்) மற்றும் தள வியாபித பரப்பு (எப்.எஸ்.ஐ.,-புளோர் ஸ்பேஸ் இன்டெக்ஸ்) விதிமீறல், 50 சதவீதம் வரை இருக்கலாம். உதாரணமாக, 10 ஆயிரம் சதுர அடிக்கு அனுமதி பெற்று, 15 ஆயிரம் சதுர அடி கட்டியிருந்தால் அதை வரன்முறைப்படுத்தலாம்.
கட்டடம் கட்டப்பட்டுள்ள நில பயன்பாடு, அதற்குரியதாக மட்டுமே இருக்கவேண்டும்; அதாவது, விவசாய பயன் பாட்டுக்குரிய நிலத்தில் தொழிற்சாலை கட்டடம் கட்டியிருந்தால், அதை வரன்முறைப் படுத்த முடியாது. அதேபோல,
அந்தந்த கட்டடத்துக்குரிய அதிகார அமைப்பிடம் மட்டுமே திட்ட அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும்.

நகராட்சி, மாநகராட்சிகளின் அதிகாரத்துக்குட்பட்ட கட்டடங்களுக்கு அந்த உள்ளாட்சி நிர்வாகங்களிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்; கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ளூர் திட்டக்குழுமம், புதுநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர்கள், நகர
ஊரமைப்பு மண்டல துணை இயக்குனர் இவர்களில் உரிய அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

நகர ஊரமைப்புச் சட்டத்தின் எல்லா விதிகளுக்கும் உட்பட்டு, அனுமதிக்கப்பட்டுள்ள விதிமீறல் இருந்தால் மட்டுமே இந்த கட்டிடங்களை வரன்முறைப்படுத்த முடியும்; இந்த அரசாணையின் படி, தமிழகம் முழுவதும் 2007 ஜூலை 1க்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள் விரைவில் வரன்முறைப்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.

இதுபோன்று மீண்டும் மீண்டும் அனுமதியற்ற கட்டடங்களை வரன்முறைப்படுத்த புதிது புதிதாக அரசாணைகளை வெளியிடக்கூடாது என்பதுதான் சட்டத்தை மதிக்கும் மக்களின் எதிர்பார்ப்பு. இதனை உறுதிப்படுத்த வேண்டிய கடமை, இந்த அரசுக்கு உள்ளது.

- எக்சு. செல்வக்குமார் - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக