புதன், 12 ஜனவரி, 2011

print out for voting: வாக்குப்பதிவு இயந்திரத்தில்அச்சீடு: தேர்தல் ஆணையம் ஆய்வு

இது மிக மிக மோசமான ஏற்பாடாகும்.ஏனெனில் இப்பொழுது அவரவர் வணங்கும் கடவுள் பெயர்மீது ஆணையிடச் சொல்லிக் கையூட்டுத் தருபவர்கள் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் வாக்குப்பதிவு அடையாளத்தைக் காட்டினால் மீதியைத்தருவதாகக் கூறியும் அவ்வாறு இல்லாத பொழுது வன்முறை வெடிக்கவும் வாய்ப்பாககும். வாக்களிப்பு என்பது  தனிப்பட்ட கமுக்க  உரிமையாகும். ஆனால், வாக்களித்தவுடன் வாக்குப் பதிவுப் பொறியிலேயே வாக்களித்த சின்னத்தைக் காட்டி மறையும் வண்ணம் ஏற்பாடு செய்யலாம். செல்வாக்கு மிக்கவர்கள் கொடுமைகளுக்கு அப்பாவிகள் பலியாவதற்கு வழி வகுக்கும் திட்டத்தைச் செயற்படுத்தாமல் இருப்பவதே நன்று. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரிண்ட் அவுட்: 
தேர்தல் ஆணையம் பரிசீலனை

புவனேஸ்வரம், ஜன. 11: வாக்களித்த பிறகு அடையாளச் சீட்டு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி எஸ். ஓய். குரேஷி தெரிவித்தார். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களித்த பின் பிரிண்ட் அவுட் வருவதற்கான வழிமுறைகள் குறித்து தொழில்நுட்பு நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.ஒரிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில தேர்தல் தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடப்பதாக பரவலாக புகார் கூறப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் அளித்த வாக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த சின்னத்துக்குத்தான் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வழி வகை காண வேண்டும் என்று பல அரசியல் கட்சிகள் யோசனை தெரிவித்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, வாக்களித்த பின் வாக்குப்பதிவு இயந்திரத்திலிருந்து பிரிண்ட் அவுட் (அடையாள சீட்டு) வரும் வசதியை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.இதற்காக உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரிண்ட் அவுட் அல்லது ஏதாவது அடையாளச் சீட்டு வழங்கு முடியுமா என இந்தக் குழு பரிசீலித்து வருகிறது என்றார்.2 கோடி புதிய வாக்காளர்கள்: இந்த மாதம் புதிதாக 2 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய வாக்காளர்கள் தினமான ஜனவரி 25-ம் தேதி அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பு சில மாநிலங்களில் வெளியிடப்பட்டுவிட்டன. பிற மாநிலங்களில் விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர். ஜனநாயக நடைமுறையில் வாக்களிப்பதை கட்டாயப்படுத்த இயலாது. வாக்குரிமையின் அத்தியாவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அவர்களது வாக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணரச் செய்யலாம். தங்களது ஜனநாயக உரிமையின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துவிட்டால் பின்னர் அவர்கள் தாமாகவே முன்வந்து வாக்களிப்பார்கள் என்று குரேஷி கூறினார்.தேர்தலில் கறுப்புப் பண நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய வழிகாட்டு நெறிமுறைகள் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி அவர்கள் செயல்படுவார்கள் என்றார்அவர்.பிகார் தேர்தலில் கறுப்புப் பண நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. இதனால் கறுப்புப் பண நடமாட்டம் வெகுவாகக் குறைந்தது என்றார் அவர்.கறுப்புப் பண நடமாட்டதைக் கட்டுப்படுத்த வருமான வரித்துறையின் உதவியும் கோரப்படும். பணம் கொடுத்து செய்தி வெளியிடும் வழக்கம் கவலை அளிப்பதாக உள்ளது. பிகாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பணம் கொடுத்து செய்தி வெளியிட்டதாக 86 வேட்பாளர்கள் ஒப்புக்கொண்டனர் என்றார் அவர்.தேர்தலில் இளைஞர்கள் பங்கேற்பது மிகவும் முக்கியமானது. இப்போது வாக்காளர் பட்டியலில் 30 முதல் 35 சதவீதம் பேர் இளைஞர்கள் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக