ஞாயிறு, 14 மார்ச், 2010

முன்மாதிரியாகச் செயல்படுங்கள்: தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதமர் அறிவுரை



சென்னை, மார்ச் 13: தமிழக எம்.எல்.ஏ.க்களும் அரசு அதிகாரிகளும் பெரிய அளவில் புதிய ஆக்கப்பூர்வ உத்திகளைக் கையாண்டு, நாட்டுக்கே முன் மாதிரியாகச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தினார்.சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.500 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டப் பேரவை - தலைமைச் செயலக வளாகத்தை சனிக்கிழமை திறந்து வைத்து பிரதமர் பேசியதாவது:சமூக நீதி, சமத்துவத்தை வலியுறுத்தும் திராவிட இயக்கத்தின் பாரம்பரியத் தன்மையின் வழி வந்த பெருமை உங்களுக்கு (தமிழக எம்.எல்.ஏ.க்கள்) உண்டு.சமூக நீதி, சமத்துவம் இன்றி எந்தச் சமுதாயமும் முன்னேற்றம் காண முடியாது. எனவே இவற்றை இலக்காகக் கொண்டு தமிழக சட்டப் பேரவையும் தமிழக அரசும் தொடர்ந்து செயல்படும் என நம்புகிறேன்.சட்டப் பேரவைகள் புனிதமான இடம். மக்கள் தங்களுக்காக பிரதிநிதிகளை அனுப்பி செயலாற்றும் இடமாகும். அரசியல் சாசனத்தின் கொள்கைகளைக் கடைப்பிடித்து, அவற்றுக்குச் செயலாக்கம் தரும் இடமாகும்.இப்போதுள்ள சட்டங்களை மதிப்பீடு செய்வது, புதிய சட்டங்களை நிறைவேற்றும் பணியை பேரவை உறுப்பினர்கள் செய்கின்றனர். அனைத்து விஷயங்கள் குறித்தும் விவரமாக அறிந்து வைத்திருப்பதோடு, விழிப்புடன் பேரவை உறுப்பினர்கள் தங்களது கடமையை திறம்பட நிறைவேற்ற வேண்டும்.பொது மக்களின் தேவை குறித்த உணர்வு பேரவை உறுப்பினர்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும்.அரசுப் பணத்தை...: அரசுப் பணம் வீணடிக்கப்படாமல் செலவழிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடமை பேரவை உறுப்பினர்களுக்கு உண்டு.பேரவை உறுப்பினர்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டு ஊழலை ஒழிக்க முற்படுவதோடு, அரசு நிர்வாகத்தில் உள்ள திறமையின்மையை எதிர்க்க வேண்டும்.நான் (பிரதமர்) மேலே குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் சவாலான விஷயங்கள்தான். எனினும் இந்தப் புதிய தமிழக சட்டப் பேரவையில் நடைபெற உள்ள பேரவை நிகழ்வுகள், திறமை, நேர்மை ஆகியவற்றில் புதிய சிகரத்தை எட்டுவதோடு சாமானிய மனிதனுக்கு நன்மைகள் கிடைக்கும் வகையில் விவாதங்கள் இடம்பெறும் என உறுதியாக நம்புகிறேன் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.கருணாநிதியிடம் அடிக்கடி ஆலோசனை கேட்கிறேன்: பிரதமர்முதல்வர் கருணாநிதியிடம் அடிக்கடி ஆலோசனை கேட்பது உண்டு என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.புதிய சட்டப் பேரவை-தலைமைச் செயலக வளாகத்தை அவர் திறந்து வைத்துப் பேசியபோது இது தொடர்பாக கூறியது:புதிய சட்டப் பேரவை வளாகத்தை கட்டும் முடிவை அரசியலில் முதுபெரும் தலைவர் கருணாநிதி எடுத்தது மிகவும் பொருத்தமானது. தமிழக சட்டப் பேரவையில் 11 முறை உறுப்பினராகவும் இதுவரை 5 முறை முதல்வராகவும் உள்ள ஒருவரால் புதிய பேரவை வளாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பொது வாழ்வில் 50 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள முதல்வர் கருணாநிதியிடம் நான் அடிக்கடி ஆலோசனை மேற்கொள்வேன். அவரது புத்திக் கூர்மை மற்றும் தலைமைப் பண்பு காரணமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதிக பலன்களை அடைந்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் முதல்வர் கருணாநிதியின் அனுபவத்தை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள முடிவது உண்மையிலேயே நல்ல வாய்ப்புதான் என்றார் பிரதமர்.
கருத்துக்கள்

என்ன சொல்ல வருகிறார் தலைமை யமைச்சர்? ஈழத் தமிழர்கள் படுகொலை கண்டும் தமிழ் ஈழம் சிதைக்கப்பட்டது கண்டும் அமைதி காப்பதால் பொது மக்களின் தேவை பற்றிய உணர்வு வேண்டும் என்கின்றார். தம் இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டவர் அருகே இருந்து கொண்டு அவரால் ஆட்சி நலன்களைத் துய்க்கும் தான் தமிழ் இனத்தவர்க்கு வேறொரு (அ)நீதி வழங்குகின்றோமே! என்ற உணர்வு அவருக்கு வந்திருக்காதா? முதல்வரிடம் அடிக்கடி அறிவுரை பெறுவதாகக் கூறுவதன் மூலம் பழியை முதல்வர் மீது போடுகிறாரா? தமிழ் மண்ணில் காலடி எடுத்து வைத்துத் திரும்பியுள்ள தலைமையமைச்சர் அவர்களே! இனியாவது தமிழ் இனத்தைக் காப்பாற்றுங்கள்! தமிழக மீனவர்களை இந்தியராக எண்ணாவிட்டாலும் மனிதர்களாக எண்ணிக் காப்பாற்றுங்கள். ஈழத் தமிழர்களை அயலவர்களாக எண்ணிச் சிங்களர்களை உறவினர்களாக எண்ணிச் செயல்படும் போக்கை உடனே நிறுத்துங்கள். நாளைய வரலாற்றில் உங்கள் பெயர் எவ்வாறு இடம் பெற வேண்டும் என முடிவெடுத்துக கொண்டு மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ இந்திய நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/14/2010 5:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக