வெள்ளி, 10 டிசம்பர், 2010

World Human Rights Day

உலகெங்கும் உள்ள ஆட்சியாளரின் அடிமைப்படுத்தலுக்கு எதிராகவும் சிங்களத்தின் மனித உரிமைக்கு எதிராகவும் உள்ளத்தில் குரல் எழுந்தாலும் கை அதனை வெளிவராமல் பார்த்துக் கொண்டது என எண்ணுகிறேன். சிங்கள இறையாண்மைக்கு எதிரான  குரல்களை ஒடுக்குவதும் எதற்கெடுத்தாலும் காவல்துறை தடை விதித்து உரிமைக்குக்  குரல் கொடுப்போரைச்   சிறையில் தள்ளுவதும் இந்த மனித   உரிமை நாளில் இருந்தாவது  நிற்கட்டும்.  அடிமை ஆட்சியில் இயற்றப்பட்ட ஒடுக்கு முறைச் சட்டங்களை அடியோடு அகற்றி அனைத்துக் குடி மக்களுக்கும்  முழு உரிமை அளிக்கும் நாடாக  நம் நாடு மாறட்டும்!  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



உலக மனித உரிமை நாள்: கருணாநிதி வாழ்த்து

சென்னை, டிச. 9: "மண்ணில் மனிதம் காப்போம்-மனிதநேயம் வளர்ப்போம்' என்று உலக மனித உரிமை நாளில் முதல்வர் கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்."உலக மனித உரிமை நாள், டிசம்பர் 10-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாக சாதி, மத, இன பேதங்கள் கூறி நசுக்கப்பட்டுவரும் நலிந்த பிரிவினர், மலைவாழ் பழங்குடியினர், குழந்தைத் தொழிலாளர்களாக-கொத்தடிமைகளாகச் சுரண்டப்படுவோர், மகளிர், மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைவருக்கும் ஆதரவுக்கரம் கொடுத்து அவர்களுக்குத் துணைபுரியும் அமைப்பாக மனித உரிமை ஆணையம் செயல்பட்டு வருகிறது.ஒவ்வொரு மனிதனுக்கும் அளிக்கும் வாழும் உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, சுதந்திரம் போன்றவைகளை நிலைநாட்ட அது தொடங்கப்பட்ட 1997-ம் ஆண்டு முதல் இதுவரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 199 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.அதில், 97 ஆயிரத்து 615 விண்ணப்பங்கள் மீது உத்தரவு பிறப்பித்து நலிந்தவர்களின் நலன்காக்கும் பணிகளை ஆற்றி வருகிறது. மனிதக் கழிவை மனிதனே தலையில் சுமந்த கொடுமையை ஒழித்து, அப்பணியில் ஈடுபட்டு இருந்த அருந்ததியர் சமுதாயம் மற்ற சமுதாயங்களைப்போல முன்னேற வேண்டும் என்பதற்காக 2008-ல் 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி அவர்கள் உயர வழிவகுத்து தமிழகத்தில் மனித உரிமைகள் சிறந்திட தொடர்ந்து பாடுபட்டு வருகிறது தமிழக அரசு.இத்தகைய சூழலில், மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்ற உணர்வோடு ஒவ்வொருவரும் செயல்படுவோம்' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக