செவ்வாய், 28 டிசம்பர், 2010

raghul gandhi and intellectuals: article in dinamani

எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத கல்வியாளராகவோ  மக்கள் நலத் தொண்டராகவோ இல்லாத இராகுல் வருகை அவர் கட்சிக்கு முதன்மையாகஇருக்கலாம். ஆனால் கல்விச்சாலைகளும் அரசு இயந்திரங்களும் அதற்காகப்பயன்படுத்தப்படுவது தவறல்லவா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ராகுல் காந்தியும் தமிழக அறிவு ஜீவிகளும்


இளைஞர் காங்கிரஸôரிடமிருந்து ஓர் அலைபேசி கோரிக்கை வந்தது. தமிழகத்துக்கு இரண்டு நாள் சூறாவளிப்பயணமாக வரும் ராகுல் காந்தி, தமிழக அறிவுஜீவிகளுடன் கலந்துரையாட விரும்புகிறார்; இக் கூட்டத்தில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தலைக்குப்பின் உடனடியாக ஒரு ஒளிவட்டம் ஏற்பட்டது போலத் தோன்றியது. மார்கழி குளிரையும் மீறி உடலில் சுகமான வெப்பம். அண்ணா சாலையில் உள்ள கன்னிமாரா ஐந்து நட்சத்திர விடுதியில், அறிவுஜீவிகள் குவிந்தனர். ஊடகங்களுக்கு அனுமதி இல்லாத கூட்டமாயிருந்தாலும், கணிசமாக மூத்த பத்திரிகையாளர்கள், பல்வேறு சமூக  ஆர்வலர்கள், ஓவியர்கள், காந்தியவாதிகள் என்று சுமார் எழுபது எண்பது பேர் வந்தனர். ராகுல் 55 நிமிடங்கள் தாமதமாக வந்ததால், இரண்டு மணி நேர நிகழ்வு, ஒரு மணிநேரக் கலந்துரையாடலாகச் சுருங்கியது. ஒரு மணிநேரமும் நின்றபடியே  எளிமையுடனும், மிகுந்த மரியாதையுடனும் ராகுல் நடந்து கொண்டார். கலந்துரையாடல் நடக்கும் அறையில் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தால், முன் வரிசைகளில் கிட்டத்தட்ட 30 திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர், நடிகைகள். இவர்கள் நாட்டின் அடிப்படைப் பிரச்னைகள் பற்றி ராகுலுடன் அளவளாவ வந்திருப்பார்களோ என்ற நினைப்பு சற்று மகிழ்ச்சியளித்தது.அறிமுகவுரை முடிந்தவுடன் எடுத்த எடுப்பிலேயே, இந்தியாவில் விஸ்வரூபமாகி விட்ட சாராய சுனாமி பற்றி விவாதிக்கப்பட்டது. காங்கிரஸில் லட்சக்கணக்கான இளைஞர்களைச்   சேர்ப்பதில் அதிக ஆர்வம் எடுத்துக்கொண்டுவரும் வேளையில், இந்திய இளைஞர்களின் எதிர்காலம் சாராயத்தில் கரைந்துவிடும் ஆபத்து உள்ளது. 1947-ல் உள்ள நிலை வேறு, 21-ம்  நூற்றாண்டில், மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் வேறு. மலேரியா, காசநோய், ஊட்டச்சத்துக் குறைபாடு என்று காலங்காலமாக உள்ள ஆரோக்கியப் பிரச்னைகள் சிறிதும் குறையாத நிலையில் வாழ்க்கைமுறை நோய்கள் பெரிய அளவில் இந்திய இளைஞர்களைத் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் வரைமுறையில்லாமல் அதிகரித்து வரும் மதுநுகர்வு மிகமுக்கிய பங்காற்றுகிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதனால் மிகப்பெரிய  பின்னடைவு ஏற்பட்டு வருகிறது என்று எடுத்துச் சொல்லப்பட்டது.யாருடைய தீவிரவாதம் மிக அபாயகரமானது என்று பேசி சர்ச்சையில் மாட்டிக்கொண்ட நீங்கள், மது வியாபாரிகள் தான் இன்றைக்கு இந்திய மக்களுக்கு எதிரான உண்மையான  தீவிரவாதிகள். இவர்களது பிடி, சட்டமன்றங்கள் முதல் நாடாளுமன்றம் வரை இறுகியுள்ளது, இந்தச் சாராய தீவிரவாதத்தை வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுடன், மாநில அரசுகளும் இணைந்து கட்டவிழ்த்து விட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில் மாநில அரசே நேரடியாக இலக்குவைத்து சாராய வியாபாரம் செய்வதை ஆதரிக்கிறீர்களா என்று ராகுல் காந்தியிடம் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, ""ஆதரிக்கவில்லை'' என்று தெளிவாகவே பதில் கூறினார். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாகத் திகழும் இந்தியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சியும் சேர்ந்து கொள்ளும்போது, அது சாராய வியாபாரிகளுக்கு நல்ல வேட்டைக்களமாக அமைகிறது. ஆனால், மக்களுக்கோ, நோயும், உடல் முடக்கமும், சாவும்தான் பிரதிபலனாகக் கிடைக்கிறது. இன்றைக்கு மதுநுகர்வை ஒழுக்க ரீதியாகப் பார்க்காமல், மிகப்பெரிய  சுகாதாரப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும். அதனால், எய்ட்ஸ், புகையிலை போன்றவற்றுக்கு எதிராகப் போர் தொடுத்திருப்பது போன்று, மத்திய, மாநில சுகாதாரத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த மதுக்கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கொண்டுவந்து, மதுவுக்கு எதிராகத் தீவிரமாகப் போர் தொடுக்க வேண்டும் என்று விளக்கியபோது, சொல்வதைக் கூர்ந்து கவனித்தார் ராகுல். மதுவை ஒரு சுகாதாரப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும் என்பதை ஆமோதித்த ராகுல், அதே வேளையில் தனிமனிதரைக் குடிக்காதே என்று அறிவுரை கூற முடியாது, இது அவரவர் விருப்பம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இது எனது தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார். திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என எடுத்துக்கொண்டாலும், குழந்தைத் திருமணத்தை மாவட்ட ஆட்சியரே முன்னின்று தடுத்து நிறுத்துகிறாரே, அப்படியிருக்க, தமிழகமெங்கும் பள்ளிகளுக்கு அருகிலேயே இருக்கும்  டாஸ்மாக் கடைகளில், 13 வயது மாணவர்கள்கூட சரக்கு அடிக்கும் நிலையில், இதை  அவரவர் விருப்பம் என்று விட்டுவிடலாமா என்று ராகுவிடம் விவாதிக்க நேரம் இடம் கொடுக்கவில்லை. 1993-ம் ஆண்டிலேயே  மனிதக்கழிவை மனிதன் அகற்றுவதைத் தடுக்கும் சட்டம் கொண்டு வந்திருந்தாலும், நடைமுறையில் பல்பிடுங்கிய பாம்பாகவே கடந்த 17 ஆண்டுகளாக இச்சட்டம் காட்சியளிக்கிறது. பாதாளச் சாக்கடை வேலை போன்ற அவலங்கள் அதிகரித்துள்ள நிலையில், 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு ஏற்ற, நடைமுறைப்படுத்தக்கூடிய புதிய சட்டம் ஒன்றை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர ராகுல் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதேபோன்று, மத்திய அரசு நிதி ஒதுக்கி, மாநில அரசால் நடைமுறைப் படுத்தப்படும்  ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் என்பது இன்றைக்கு நகர்ப்புறத்தில் வசிக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் உதவும் வகையில் அமல்படுத்தப்படாமல், சேரி மக்களின் தலைக்கு மேலே தொங்கும் கூரிய கத்தியாகிவிட்டது. காண்ட்ராக்டர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரிய ஆதாயமாகவும், நகர்ப்புற ஏழைகள், நகருக்கு வெளியே  உள்நாட்டு அகதிகளாய் தனிமைப்படுத்தப்பட்டு அழிந்தொழியும் திட்டமாகவும் மாறிவிட்டது. ஒரு பக்கம் கல்வி அடிப்படை உரிமை என்று பேசிக்கொண்டு, மறுபுறம் ஏழை தலித் குழந்தைகளுக்குக் கல்வி அறவே மறுக்கப்படும் நிலையை, இந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கி வருகின்றன. ஆதலால், மத்திய அரசு, மாநில அரசுடன் இதுபற்றிக் கலந்து பேசி, இதை நன்மை பயக்கும் திட்டமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அவரிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. மாற்றுப்பாலினத்தார், திருநங்கைகள் ஆகியோருக்காக, தமிழக அரசு வாரியம் ஒன்று அமைத்துள்ளது. இதனால் உடனடியாகப் பெரிய நன்மை விளையவில்லை என்றாலும், ஒரு நல்ல துவக்கம் ஏற்பட்டுள்ளது. அரசின் அங்கீகாரம் இந்த மக்களுக்குக் கிடைத்துள்ளது. இதைப்போன்று இந்தியா முழுவதுமே மற்ற மாநிலங்களிலும், கொண்டு வர வேண்டும் என்று ராகுலிடம் கூறப்பட்டது. மாற்றுப் பாலினத்தாரின் உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் முற்போக்காக நடந்து கொள்ள வேண்டும். இளம்வயதுடைய மாற்றுப் பாலினத்தாரின் முன்னேற்றத்திலும், உரிமைகளிலும், ராகுல் அதிக  ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாற்றுப்பாலினப் பிரதிநிதி கேட்டுக்கொண்டபோது, அதை ஏற்றுக்கொண்டார் ராகுல்.இந்தியா முழுவதும் விளைநிலங்கள், வேகமாக வீட்டுமனைகளாவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், இன்னும் 20 ஆண்டுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால், விளைநிலங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்கும் வகையில்  சட்டம் இயற்றி, அவற்றைச் சீரழியாமல் பாதுகாப்பது மிக அவசர அவசியம். இல்லையென்றால், மாவோயிஸ்டுகள் போன்ற ஆயுதப்  போராளிகள் இந்தியா முழுவதும் பரவி விடுவார்கள் என்று ஒருவர் எச்சரிக்கை விடுத்தார்.விடுதலைப்புலிகளுக்காக நான் பரிந்து பேசவில்லை என்றாலும், இலங்கையில் போர்  உச்சகட்டத்தை நெருங்கிவிட்டிருந்த நிலையில், இந்திய அரசு, அப்பாவி இலங்கைத் தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்று ஒரு பெண்மணி மிக அழுத்தமாகக் கூறினார்.ஆனால், தானும், காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய அரசும் போரின் போது இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல்களைப் பலமுறை கண்டனம் தெரிவித்துப் பேசியிருக்கிறோம். போருக்குப் பின்னர், தமிழ் மக்களை மறுகுடியமர்வு செய்வதற்கும், வீடுகள், ரயில்பாதைகள்  போன்றவற்றை ஏற்படுத்துவதற்கும் மத்திய அரசு தாராளமாக நிதிஉதவி செய்துள்ளது என்றும் ராகுல்காந்தி கூறினார்.இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும்  விதமாக, பலர் தங்கள் கருத்துகளை சரமாரியாகப் பதிவு செய்தனர். இலங்கையில் நடந்தவற்றை மனித உரிமை மீறல்கள் என்று கருதுவது சிறிதும் நியாயமற்ற கூற்று. அங்கு நடந்து முடிந்தது மிகப்பெரிய இனப்படுகொலை. அதற்கான பல ஆதாரங்கள் வெளி வந்துள்ளன என்று ஒருவர் குரலெழுப்பினார். குழுமியிருந்தவர்களின் உண்மையான உணர்வுகள் அழுத்தம் திருத்தமாகவே அவருக்குப் புரியவைக்கப்பட்டிருந்த நிலையில், இனிமேல், இலங்கைத் தமிழர்களின் பிரச்னையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதாக உறுதியளித்துச் சென்றார் ராகுல். அவரது எளிமையான மனம் திறந்த நடவடிக்கைகளை உண்மையான ஒன்று என்று ஒரு சாராரும், நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்தும் முயற்சி அவ்வளவுதான் என்று மற்றொரு சாராரும் கருதுவதற்கு வாய்ப்பு உள்ளது.மக்கள் பிரச்னைகளைப் பேசப் போகிறார்கள்  என்று எண்ணியிருந்த நிலையில், திருட்டு விசிடி தொந்தரவாலும், காப்பிரைட் தொடர்பான பிரச்னையாலும், திரைப்படத் தொழிலுக்கு முழுக்குப் போடவேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறித் தங்கள் கல்லாப்பெட்டிப் பிரச்னைக்கு மனுப்போடத் தொடங்கினர் திரைப்படத் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும். மனு அளித்தால், உரிய அமைச்சரிடம் கொண்டு சேர்க்கிறேன் என்று சமாதானம் கூறிய ராகுலிடம், மேலும் மேலும் திரைப்படத் துறையினர் அழுத்தம் கொடுத்ததால், சரி, தில்லியில் வந்து சந்தியுங்கள் என்று கூறினார் ராகுல்.இப்படியாக, விவாதத்துக்கான நேரம் ஒரு மணிநேரமாகக் குறைந்ததாலும், திரைப்படத்துறையினரின் குறுக்கீடுகளாலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பெரும்பாலான அறிவுஜீவிகள்  ஏமாற்றமடைந்திருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறது. மாலை நேரம் வீட்டுக்கு வந்து, தொலைக்காட்சியைப் பார்க்க நகர்ந்தபோது, அண்மைச் செய்தி ஒன்று மீண்டும் மீண்டும் வந்து போனது.கோலிவுட்டுடன்  ராகுல் காந்தி  சந்திப்பு. திரைப்படத்துறையினர் மகிழ்ச்சி. அதுவரை, தலைக்குப் பின்னால் இருந்ததுபோலத் தோன்றிய ஒளிவட்டம், திடீரென்று மறையத் தொடங்கியது. அதோடு, ஜன்னலுக்கு வெளியே மக்கள் முகம் அலைமோதும் பொதுவெளியில் இருளும் வேகமாகக்  கவ்வத் தொடங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக