வெள்ளி, 5 நவம்பர், 2010

விபரீத விளம்பரங்கள்


சந்தையில் கிடைக்கும் பொருள்களைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ளும் முக்கியமான ஒன்றாக இருந்த விளம்பரம் இப்போது,​​ நுகர்வுச் சந்தையில் விபரீதமான ஒன்றாக மாறிப் போயிருக்கிறது.அதாவது,​​ நுகர்வோருக்குத் தவறான தகவல்களைத் தருகின்றனர் என்பதையும்விட அதைப் பிற்போக்கான வழிமுறைகளில்,​​ மக்களின் மனதை -​ சிந்தனையைப் பாழ்படுத்தும் விதமாகத் தருகின்றனர் விளம்பர நிபுணர்கள்!​ ​விளம்பரம் என்பது "முதலில் பார்க்க வைக்க வேண்டும்,​​ பார்ப்பவர்களைப் பேச வைக்க வேண்டும்,​​ பேச வைத்த பிறகு குறிப்பிட்ட அந்தப் பொருளை வாங்க வைக்க வேண்டும்'.​ இதுதான் இதுநாள் வரை சொல்லப்பட்டு வரும் இலக்கணம்.ஆனால்,​​ நமது விளம்பரங்கள் பார்க்க வைக்கின்றன.​ பேச வைக்கின்றன,​​ ஆனால்,​​ வாங்க வைக்கின்றனவா?​ சந்தேகம்தான்.​ காரணம் பல.​ அவற்றுள் ஒன்று,​​ இப்போதுள்ள நவீன விளம்பர உத்திகள் குறுக்குப் புத்தி கொண்டவைகளாக இருப்பதுதான்.சம்பந்தமே இல்லாத காட்சிகள்,​​ சம்பந்தமே இல்லாத உரையாடல்கள்,​​ சம்பந்தமே இல்லாத பாத்திரங்கள்,​​ எல்லாமும் முடிந்து சம்பந்தமே இல்லாத ஒரு பொருளைக் காட்டி முடிக்கின்றனர்.​ இது ஒரு புதுவகை என்று வியாக்யானம் செய்கிறார்கள்.அதிலும்,​​ குறிப்பாக பெண்களை மையப்படுத்திய விளம்பரங்கள் இடையிடையே ஒன்றிரண்டு தடை செய்யப்பட்டு வந்தாலும்,​​ இப்போது கொஞ்சம் கூடுதலாக இருக்கின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு இரு சக்கர வாகன விளம்பரம் ஒன்று தொலைக்காட்சிகளில் வெளியானது.​ அதில்,​​ படுத்திருக்கும் நிலையிலிருக்கும் பெண்ணைத் தழுவுவார் ஓர் ஆண்.​ சிறிது நேரத்தில் அந்தப் பெண் இரு சக்கர வாகனமாக மாறுவார்.​ இப்படியாக காட்சிப்படுத்தப்பட்டு ஒளிபரப்பான அந்த விளம்பரம்,​​ மகளிர் இயக்கத்தினர் எதிர்ப்புக் குரல் கொடுத்த பிறகு நிறுத்தப்பட்டது.இப்போது திரையரங்குகளில் பிஎஸ்என்எல் விளம்பரம் ஒன்று திரையிடப்படுகிறது.​ ஒரு பெண் வேண்டுமென்றே போடப்பட்ட அல்லது காட்டப்பட்ட அரைகுறை ஆடைகளுடன் பேருந்தில் சென்று கொண்டிருப்பார்.​ அருகிலுள்ள ஆணுடன் நெருக்கமாக இருப்பார்.​ திடீரென ஏதோவொன்றைச் சொல்லி அவரைத் துரத்திடுவார்.​ நின்று கொண்டிருப்பவரை அழைத்து அருகில் அமர்த்திக் கொள்வார்.​ காரணம் அவரிடம் "3 ஜி செல்போன்' இருக்கிறதாம்.​ எதற்காக இப்படிக் காட்ட வேண்டும்?இதை 3 ஜி செல்போன் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்று சொல்லிவிட முடியுமா?​ அல்லது 3 ஜி வைத்திருப்பவரெல்லாம் அருகிலுள்ள பெண் தன்னை விளம்பரத்தில் வருவதைப்போலவே அழைத்து நெருக்கமாக அமர்த்திக் கொள்ள வேண்டும் என்று கருதிக் கொண்டால் என்ன ஆவது?​ பைத்தியக்காரத்தனத்தின் உச்சமாக மாறிவிடும்.முன்பெல்லாம் தனியார் நிறுவனங்கள்தான் இதுபோன்ற விளம்பர உத்திகளில் களம் இறங்கின.​ இப்போது அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் இப்படி இறங்கியிருக்கிறது.அதேபோல, ​​ பிஎஸ்என்எல் விளம்பரங்கள் எதுவும் தமிழில் தயாரிக்கப்படுவதில்லை.​ எல்லாமும் ஹிந்தியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு,​​ சில நேரங்களில் மட்டும் போனால் போகட்டுமென்று தமிழில் "டப்' செய்யப்பட்டு வெளியாகின்றன.இத்தனைக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய அமைச்சர் தமிழ்நாட்டுக்காரர்.​ அதிலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் பயிற்சி பெற்று வந்தவர்.​ எப்படியிருக்கிறது கூத்து?​ நல்லவேளையாக பெரியார் உயிருடன் இல்லை!விளம்பர உத்திகள் காலத்துக்கேற்ப மாற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.​ அதேபோல,​​ அரசுத் துறை நிறுவனங்கள் இன்னும் கூடுதலாகக் கவனம் செலுத்தி தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொழிலை நடத்த வேண்டும்.​ அதனால் அந்த நிறுவனங்களுக்கு மட்டுமல்ல,​​ அவற்றால் நாட்டுக்கே பாதுகாப்பு,​​ பெருமை,​​ வளர்ச்சி எல்லாமும்.அதேநேரத்தில் இதுபோன்ற கொடுமைகளை எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்?இன்னொரு விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டே இருக்கிறது.​ உடலில் பீய்ச்சிக் கொள்ளும் வாசனைத் திரவிய விளம்பரம் அது.​ அதைப் போட்டுக்கொண்டு நடக்கும் ஆணுடன் தெருவிலிருக்கும் பெண்கள் எல்லோரும் சேர்ந்து கொள்கிறார்கள்.​ இதென்ன அபத்தம்?இந்தியா விடுதலை அடைந்து 60 ஆண்டுகளாயிற்று.​ பெரும்பாலானோரிடம் கணினி,​​ மடிக்கணினி,​​ நவீன செல்போன்கள்.​ பொருளாதாரப் புள்ளிகள் யாருக்கும் தெரியாமல் ஏறுகின்றன,​​ இறங்குகின்றன.​ வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்க முடியாது,​​ விண்வெளிக்கும் சென்றுவிட்டோம்.பெண் விஞ்ஞானி,​​ பெண் முதல்வர்,​​ பெண் காவலர்,​​ பெண் பிரதமர்,​​ பெண் குடியரசுத் தலைவர்,​​ பெண் ஆலோசகர்...​ இருந்தென்ன பயன்?​ பெண்களை அபத்தமாக விளம்பரப் பொருளாக்கும் மடமை மட்டும் இன்னும் மாறவில்லை.பொருளைப் பற்றிய விவரங்களை மக்களிடத்தில் எப்படிச் சொல்ல வேண்டும் என்ற நேர்மை,​​ விற்பனையாளர்களிடமும்,​​ விளம்பர நிபுணர்களிடம் அற்றுப் போயிருக்கிறது என்பது புரிகிறது.​ ​ ஆனால்,​​ இதையும் தாண்டி பொதுவாக எவற்றையெல்லாம் தாமாகத் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற அடிப்படைத் தரமும்கூட ஆளுவோரிடம் குறைந்திருக்கிறது என்பதை என்னவென்று சொல்ல?
கருத்துகள்

பெண்களை முதன்மைப்படுத்தி விளம்பரங்கள் வந்தால் தவறு அல்ல. ஆனால், பெண்களைக் கொச்சைப்படுத்தித்தான விளம்பரங்கள் வருகின்றன. அவற்றைப் பெண்களே சுவைத்துப் பார்க்கின்றனர். விளம்பரத்திலும் அறம் தேவை! ஒழுக்கம் தேவை! நன்முறை தேவை! அவற்றைப் பா.செயப்பிரகாசு சுட்டிக்காட்டியுள்ளதற்குப் பாராட்டுகள். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2010 3:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக