ஞாயிறு, 25 அக்டோபர், 2009

சீனாதான் பெரிய நாடு!: இலங்கை அமைச்சர் முத்து சிவலிங்கம்



உதகை, அக். 24: இலங்கை பிரச்னைகளில் பெரிய நாடு என்பதால் இந்தியா தலையிட முடியாது. அதைவிட பெரிய நாடு என்ற வகையில்தான் சீனா தலையிடுகிறது என்று இலங்கை தோட்ட கட்டமைப்புப் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் கூறினார். திருப்பதி செல்லும் வழியில் உதகைக்கு வந்துள்ள அவர், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் டிசம்பர் மாத இறுதிக்குள் அவரவர் இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவர். இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்கள் 15 லட்சம் பேர் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 28 சதம் பேர் தமிழ் மக்கள். ஆனால், இலங்கையில் நிலவிய பல்வேறு பிரச்னைகள் காரணமாக அங்கு பொருளாதார மேம்பாடு இல்லை. அரிசி கிலோ ரூ. 100க்கும், பருப்பு கிலோ ரூ. 260க்கும் விற்பனையாகிறது. தனி நாடு கோரிக்கை: இலங்கையில் போதிய அளவில் கல்வி வளர்ச்சி இல்லை. இலங்கையில் வந்து குடியேறிய தமிழர்கள் வேறு. மலையக தமிழர்கள் வேறு என்ற நிலையே உள்ளது. இதனாலேயே தனி நாடு கோரிக்கைக்கு அங்கு ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கவில்லை. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரால் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், தனி நாடு என்ற கோரிக்கைக்கு மலையகத் தமிழர்கள் ஆதரவு அளிக்கவில்லை. இலங்கையிலுள்ள சிங்களர்களே விஜயன் காலத்தில் அங்கு வந்து குடியேறியவர்கள்தான் என்றும் இலங்கை வரலாற்றில் கூறப்படுகிறது. இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13-வது சட்ட திருத்தத்தை ஏற்கலாம் என அதிபர் ராஜபட்ச அறிவித்துள்ளார். இலங்கை பிரச்னையில் இரு சாராரும் விட்டுக் கொடுக்க வேண்டும். வன்னிப் பகுதியில்தான் அதிக அளவில் பிரச்னைகள் உள்ளன. போரில் ஈடுபட்ட இருசாராரும் ஆங்காங்கே கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது. இந்திய அரசு பிரதிநிதிகள்... இந்தியாவிலிருந்து இலங்கை வந்த எம்.பி.க்கள் குழுவினர், இந்திய அரசின் பிரதிநிதிகளாகவே வந்திருந்தனர். இவர்கள் தங்களது ஆய்வு தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் கொடுத்துள்ளனர். அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பாக இந்திய-இலங்கை அரசுகள் கூடிப் பேசி இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். கோவை மாநாட்டில் பங்கேற்பில்லை: கோவையில் நடைபெறுவது உலகத் தமிழ் மாநாடல்ல, தமிழக அரசு தானாக நடத்தும் தமிழ் செம்மொழி மாநாடு என்பதால் இதில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றார் முத்து சிவலிங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக