திங்கள், 11 மார்ச், 2013

வறுமையில் தவிக்கும் கால்பந்தாட்ட மாணவி




வறுமையில் தவிக்கும் கால்பந்தாட்ட மாணவி


இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.வறுமையில் தவிக்கும் கால்பந்தாட்ட மாணவி.

கால்பந்தாட்ட போட்டியில், இந்திய அணிக்காக விளையாடி சாதிக்கத்துடிக்கும், வறுமையில் சிக்கி உள்ள, சேலம் மாணவிக்கு பொருளாதார ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உதவிக்கரம் தேவைப்படுகிறது.

ஆறாம் வகுப்பு:சேலத்தைச் சேர்ந்த சாதிக்க துடிக்கும் மாணவி லாவண்யாவுக்கு, வறுமையே தடைக்கல்லாய் முன் நிற்கிறது. கால்பந்து என்றால் என்னவென்றே தெரியாத குடும்பத்தில் இருந்து வந்த லாவண்யா, பல மடங்கு பாய்ச்சலாய், தன், 15வது வயதிலேயே

ஆறாம் வகுப்பிலேயே, பள்ளி அணிக்காக கால்பந்து விளையாட்டில், களம் இறங்கிய லாவண்யாவுக்கு, ஒரு சில நாட்களிலேயே, "ஆண்களே அதிக ஆதிக்கம் செலுத்தும் இந்த விளையாட்டை, ஒருகால் பாத்துவிட வேண்டும்' என்ற ஆர்வம் மேலோங்க துவங்கியது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளி மாணவியருக்கான தேசிய அளவிலான போட்டியில், தமிழக அணிக்காக விளையாடியுள்ளார்.

கடந்த ஆண்டு, திருநெல்வேலியில் நடந்த மாநில அளவிலான குடியரசு தின விழா விளையாட்டு போட்டியில், 15க்கும் அதிகமான கோல்களை அடித்து, பள்ளி அணியை சாம்பியனாக்கியுள்ளார். தேசிய அளவிலான போட்டியிலும், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.கடந்த மாதம் சண்டிகரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், இவரின் விளையாட்டு திறமைக்கு பரிசாக, சர்வதேச அளவிலான போட்டிக்கு, இந்திய அணி தேர்வுக்கான முகாமில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

"நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடி பெருமை சேர்ப்பேன்' என, முழு தன்னம்பிக்கையுடன் இருக்கும் லாவண்யாவுக்கு, "2 லட்சம் ரூபாய்க்கான வங்கி வரையோலை மற்றும் பாஸ்போர்ட்' ஆகிய இரண்டும் தடைக்கல்லாக வந்துள்ளது.தந்தை முத்துக்குமார், கயிறு திரிக்கும் கூலித் தொழிலாளி. கூலி வேலைக்கு செல்லும் அண்ணன் ரவிக்குமார், பாலிடெக்னிக் படிக்கும் அக்கா சந்தியா, ஏழாம் வகுப்பு படிக்கும் தங்கை பூமிகா, நான்காம் வகுப்பு படிக்கும் தம்பி சம்பத் என, லாவண்யாவின் குடும்பமும், அவரது லட்சியத்தை போன்றே பெரிதாக உள்ளது.

தந்தை மற்றும் சகோதரனின் சம்பாத்யம், அன்றாட அடிப்படை செலவுகளுக்கே சரியாய் போக, லாவண்யாவின் விளையாட்டுத் திறனுக்கு, அவர்களால் உதவி செய்ய முடியாத நிலை. கூலி வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு, 2 லட்சம் ரூபாய் எட்டாக்கனி.

பாஸ்போர்ட்:சரி! பாஸ்போர்ட்டுக்கு முயற்சி செய்யலாம் என்றால், "லாவண்யா மைனர் என்பதால், பெற்றோருக்கு பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே, விண்ணப்பிக்க முடியும்' என்ற அலைக்கழிப்பு மட்டுமே பரிசாய் கிடைத்துள்ளது.குழு விளையாட்டிலும், தனித்துவமாய் முத்திரை பதித்த லாவண்யா, ""இந்திய அணிக்காக விளையாடி பெருமை சேர்க்கும் கணம், என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்,'' என, ஏக்கம் காட்டுகிறார்.

பள்ளி முதல்வர் அருணாசலம், உடற்கல்வி ஆசிரியர்கள் ஊக்கம் கொடுத்தாலும், இவரின் தடைக்கல்லை உடைக்க, பலரின் பொருளாதார உதவியும் தேவையாக உள்ளது. உதவிசெய்ய விரும்புவோர், 98657 55827 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது செய்தியாளர், தினமலர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக