வெள்ளி, 15 மார்ச், 2013

அரசு பணியாளர் தேர்வில் புதிய பாடத்திட்டம்: தமிழ் படித்தவர்களை ப் புறக்கணிப்பதா? - வைகோ கண்டனம்

அரசு பணியாளர் தேர்வில் புதிய பாடத்திட்டம்: தமிழ் படித்தவர்களை ப் புறக்கணிப்பதா? - வைகோ கண்டனம்
அரசு பணியாளர் தேர்வில் புதிய பாடத்திட்டம்: தமிழ் படித்தவர்களை புறக்கணிப்பதா? - வைகோ கண்டனம்
சென்னை, மார்ச். 15-
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணிகளில் காலி இடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களில் மாற்றம் செய்து அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது.
இதன்படி மாற்றி அமைக்கப்பட்டு உள்ள புதிய பாடத்திட்ட முறையில், குரூப் 2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, குரூப் 4 தேர்வுக்கான பொதுத் தமிழ் பகுதியில் மதிப்பு எண்கள் குறைக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் குரூப்-1 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, குரூப்-2 தேர்வை, ஏற்கனவே பொது அறிவுப் பாடத்தில் 100 கேள்விகளுக்கு பொதுத் தமிழ் பாடத்தில் இருந்து கேட்கப்படும்.
இதற்கான மதிப்பு எண்கள்-150 ஆக இருந்தது. தற்போது இதில் பொதுத்தமிழ் பாடத்தில் கேட்கப்படும் 100 கேள்விகள் முற்றிலும் நீக்கப்பட்டு உள்ளது.
இதைப்போன்று, குரூப் 4 தேர்வில், பொதுத்தமிழ் பாடத்தில் கேட்கப்படும் 150 மதிப்பு எண்களுக்கான நூறு கேள்விகளுக்குப் பதிலாக, 50 கேள்விகள் மட்டுமே இடம்பெறும் என்று மாற்றப்பட்டு உள்ளது. மேலும் இதில் தற்போது, மொத்த மதிப்பு எண்கள் 300 ஆக உயர்த்தப்பட்டு, அதில் பொதுத்தமிழுக்கான மதிப்பெண்கள் 75 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
தமிழ் வழியில் படித்த கிராமப்புற மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
தமிழில் படித்தால் வேலை வாய்ப்பு இருக்காது என்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் புதிய பாடத்திட்டங்களைப் புகுத்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ் மொழிக்கு உரிய உரிமை மற்றும் முக்கியத்துவத்தைத் தக்க வைக்கவும், தமிழ் மொழியில் பயின்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறவும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் போட்டித் தேர்வுகளில் கொண்டு வந்து உள்ள புதிய பாடத்திட்ட முறைகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக