வெள்ளி, 17 டிசம்பர், 2010

ilangai attacked thamizh fisher men : தமிழக மீனவர்களைத் தாக்கி மீன்களைப் பறித்த இலங்கைக் கடற்படை

உங்கள் உயிர் போனாலும் எங்களுக்குக் கவலை இல்லை. மீன் பறிபோனதற்கா வருந்தப் போகிறோம். ஆனால் சிங்களவன் ஒருவனைப் பற்றிக்கூட ஏதும் சொன்னால் நாங்கள் பொறுக்க மாட்டோம். எச்சரிக்கை என்கிறது இந்தியம். இதை நம்புவோர் இன்னும் உளரே! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக மீனவர்களைத் தாக்கி மீன்களைப் பறித்த இலங்கை கடற்படை


ராமேசுவரம், டிச. 16:       நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களைத் தாக்கி, அவர்களிடமிருந்து இறால் மீன்களை இலங்கைக் கடற்படையினர் பறித்துச் சென்றனர். இதனால் ரூ. 2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.   ராமேசுவரத்திலிருந்து இம் மாதம் 15-ம் தேதி சுமார் 650 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இப் படகுகளில் சென்றவர்கள் வழக்கம்போல் இந்திய, இலங்கைக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 7-க்கும் மேற்பட்ட போர் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். அப்போது கரை நோக்கி திரும்பிய விசைப்படகுகளை மடக்கிப் பிடித்தனர். பின்னர், 20-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த இறால் மீன்களைப் பறித்துக்கொண்டு, மீனவர்களை கயிறு, கம்பால் சரமாரியாகத் தாக்கினர். இதனால் மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க முடியாமல், ராமேசுவரம் கரையை நோக்கித் திரும்பினர். இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியத்தால் ரூ. 2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக