ஞாயிறு, 16 மே, 2010

நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம்: முதல்வர் கருணாநிதி



கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பாடல் குறுந்தகட்டினை, சென்னையில் சனிக்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட டாக்டர் எல்.சுப்பிரமணிய
சென்னை, மே 15: இளைஞர்கள் நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய நோக்கப் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் கருணாநிதி குறுந்தகட்டை வெளியிட, அதை இசைக் கலைஞர் எல். சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது:ரஹ்மானுடைய இசையை நான் எழுதிய வார்த்தைகளோடு குழைத்து நீங்களெல்லாம் பருகக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் எழுதிய பாடல் தான். ஆனால், தமிழகத்தினுடைய புலவர்கள், சங்க காலத்து பெருமக்கள், சங்க காலத்திற்குப் பின்னர் வந்த கடைச் சங்க காலம், இடைச் சங்க காலம் எனப் பல்வேறு காலக் கட்டங்களில் வாழ்ந்த கம்பர், காளமேகம் காலம் வரையில் எழுதப்பட்ட கவிதைகளை, அறிவுரைகளை, கொள்கைகளை, பண்பாட்டினை, தமிழர்களுடைய பழக்க வழக்கங்களை எல்லாம் ஒரு பாட்டில் அமைத்து, அதை எழுதுவது எவ்வளவு பெரிய இடர்பாடு கொண்டது என்பதை நன்கு அறிவேன். பாடலை எழுதும் போது அருகில் இருந்தவர்கள், இந்தப் பாடல் வெற்றிகரமான பாடலாக வர வேண்டும் என்று ஒரு பிரார்த்தனையோடு எதிர்பார்த்தார்கள். இந்தப் பாடலை எழுதும் போது ஏற்பட்ட உணர்வை நான் மட்டுமே அறிவேன். எனது வாழ்நாளில் 10, 12 ஆண்டுகளைத் தவிர்த்து மீதியுள்ள ஆண்டுகள் எல்லாம் தமிழ், தமிழ் என்றுதான் என் உதடுகள் உச்சரித்திருக்கின்றன. அதனால் யார் ஒருவர் தமிழ் என்று சொன்னாலும் திரும்பிப் பார்ப்பேன், ஒன்றிக் கலந்திடுவேன், உணர்வுகளை மதிப்பேன், அதனை மதிக்கின்றவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை வாழ்த்துவேன். தரணி வாழ் கலைஞர்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் நம் வீட்டுப் பிள்ளை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த பெருமைதான் ஆஸ்கார் விருதுகள். ரஹ்மானை போன்ற இளைஞர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒவ்வொரு இளைஞனும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையைப் பெற முடியும். ஏனெனில், நம்பிக்கை தான் வாழ்வின் முதல் படி. அதில் கால் வைத்துவிட்டால் வெற்றி நிச்சயம்.நம்பிக்கையோடு நான் செலுத்திய உழைப்புதான் எனது முன்னேற்றத்துக்குக் காரணம். அதே போல், ரஹ்மான் உலகப் புகழ் பெறுவதற்கு அவரது நம்பிக்கை, இடைவிடாத முயற்சிதான். இது யாரோ ஒரு சிலருக்கு மட்டும் அல்ல. சமுதாயத்தில் உள்ள எல்லா இளைஞர்களுக்கும் ஒரு உந்துச் சக்தியை ஏற்படுத்தக் கூடியது. இந்த பாடல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தொடங்குகிறது. எல்லா உயிர்களும் பிறப்பால் ஒன்றுதான். பிறப்பு எல்லா உயிர்களுக்கும் ஒன்றேதான் என்பதுதான் அதற்கு பொருள். பிறந்த பின் என்ன என்பது தான் இன்றைக்கு உள்ள பிரச்னை. பிறந்த பின் எல்லோரும் ஒரே குலம், ஒரே இனம் என்ற உணர்வைப் பெற வேண்டும். எல்லாரும் ஒரே இனம் என்ற முத்திரையுடன் வாழ வேண்டும் என்ற வகையில் இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. கோவை மாநாடே இந்தப் பாடலுடன்தான் ஆரம்பமாகும். இந்தப் பாடல் விளம்பரத்துக்கு பயன்படுத்தப்படும். நானே விளம்பரமாக இருந்து ஒவ்வொருவரையும் மாநாட்டுக்கு அழைக்கின்றேன் என்றார் கருணாநிதி.அமைச்சர்கள் க. அன்பழகன், பரிதி இளம்வழுதி, தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, பாடகர் டி.எம்.செüந்தரராஜன், சட்டப் பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், திரைப்பட இயக்குநர் கெüதம் மேனன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

(தொடர்ச்சி) 4/4)௪) கல்வெட்டு எழுத்துகளுக்கும் தமிழ் எழுத்துகளுக்கும் தொடர்பில்லாத பொழுது தமிழல்லாத பிற எழுத்து வடிவங்களை மேடைப்பின்னணியாக அமைத்ததும் தவறான அறிவூட்டலாக அமைகிறது. தவறான கொள்கையுடையவர்கள் மாநாட்டுக் குழுக்களில்செல்வாக்கு செலுத்துவதால் இந்த நிலைமை போலும்! தமிழ் மொழியை - தமிழ் இலக்கியத்தை- தமிழ் பண்பாட்டை - தமிழ் நாகரிகத்தை - தமிழ் வரலாற்றை - தமிழ்ச் செம்மையை உணர்த்தும் வகையில் மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வடிவமையுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/16/2010 5:44:00 AM

1/4) ௧.) இப்பாடலை மாநாட்டின் மைய நோக்குப் பாடல் என்று சொல்வதைவிட மாநாட்டை முன்னிட்டு வெளியிடும் தமிழ்நெறி விளக்கப் பாடல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். 2/4 ௨) உலகில் பெரும்பான்மைத் தமிழர்களின் எதிர்ப்பையும் தமிழ்நாட்டில் ஒரு சாராரிடம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள இம்மாநாட்டை விழிப்புடன் நடத்த வேண்டும். செம்மொழி மாநாட்டில் அயல்முரசு (டிரம்) இசை எதற்கு? ஒப்பீட்டு அடிப்படையில் பிற கலையை அறியச்செய்யவோ பல கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமையவோ வாய்ப்பிருப்பின் ஏற்கலாம். தமிழிசைவாணர்களுக்கு முதன்மை அளியுங்கள். 3/4 ௩) அயல் இசையாய் இருப்பினும் பாரதியார், பாரதிதாசன், கவிமணி. நாமக்கல்லார் முதலான தமிழ்க்கவிஞர்களின் பாடலை இசைக்கக் கூடாதா? சிவப்புப் பகுதியில் விலை மகள் அழைக்கும் ஓ! இரசிக்கும் சீமானே வா என்னும் பாடலையா இசைப்பது? இதுதான் செம்மொழித் தமிழை உயர்த்தும் பண்பாட்டு நிகழ்ச்சியா? வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது? பொறுப்பாளர்கள் மைய நோக்கிற்கேற்ப இசை நிகழ்ச்சிகளை அமையுங்கள். (தொடர்ச்சி 4/4 காண்க)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/16/2010 5:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக