செவ்வாய், 18 மே, 2010

ஈழத் தமிழர்களின் அவலத்தை வெளிப்படுத்திய இச்செய்தியாளருக்குப பாராட்டுகள். வெளியிட்ட தினமலருக்கு உண்மை உணர்வுடன் செய்திகளைத் தொடர்ந்து வெளிக் கொணர வேண்டுகோள். விரைவில் தொலையட்டும் துயரம்! மலரட்டும் தமிழ் ஈழம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இலங்கையில் தனிஈழம் கேட்டு நடந்த போர் முடிந்து ஓராண்டுநிறைவடைகிறது. தமிழர்களின்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் சோகம் தொடர்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உள்ளது. அங்கு வளர்ச்சிப் பணிகளை இரண்டாம் பட்சமாகவே அதிபர் ராஜபக்ஷே கருதுகிறார்.


கடந்த ஆண்டு முடிந்த போரின் ஓர் ஆண்டு வெற்றியைக் குறிப்பிடும் வகையில், மே 12 முதல் மே 18 வரை, இலங்கை அரசு ராணுவ தினம் கொண்டாடி வருகிறது. ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடந்த 26 வருடங்களாக நடந்து வந்த சண்டை, கடந்த 2009ம் ஆண்டு மே 18ல் முடிவுக்கு வந்தது.தமிழ் ஈழம்' வேண்டி போராடிய விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் மூத்த தலைவர்கள் பலரும், இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ராணுவம் வெற்றி பெற்றதாகவும், போர் முடிந்து விட்டதாகவும் அதிபர் ராஜபக்ஷே அறிவித்தார். விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.


போர் தர்மத்தை மீறி இலங்கை ராணுவம் செயல்பட்டது.ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் ராணுவத்தின் தாக்குதலில் பலியானார்கள். அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டு, உள் நாட்டிலேயேஅகதிகளாகினர். 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், வெவ்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு போதியவசதிகள் அளிக்கப்படவில்லை. போர் நடந்த பகுதிகளில், விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்ட கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டவுடன், முகாம்களில் உள்ளதமிழர்கள் மறு குடியமர்த்தப்புடுவர் என்று இலங்கை அரசு தெரிவித்தது. தமிழக எம்.பி., க்கள் குழுவும்தமிழர்களின் முகாம்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டது. தமிழர்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மறு குடியமர்த்துமாறு ராஜபக்ஷேவை அவர்கள்வலியுறுத்தினர். ஒரு லட்சத்து 75ஆயிரத்துக்கும் மேற்பட்டதமிழர்கள் வடக்குபகுதியில்மறு குடியமர்த்தப் பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


வளர்ச்சி இல்லை: கடந்த 2009 டிசம்பரில், முல்லைத்தீவில் வடக்கு - தெற்கு பகுதிகளை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இருந்தவரை இந்த சாலையில் மக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது இங்கு திருமண மண்டபங்கள் பல துவக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நகரம் தற்போது சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துள்ளது. வங்கிகள் மற்றும் மொபைல் நிறுவனங்கள் தங்களது கிளைகளை துவக்கி உள்ளன. உலக வங்கியின் கிளை 4 மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது.


யாழ்ப்பாணத்தில் நடந்த வர்த்தக கண்காட்சியில், இந்தியாவின் 12 நிறுவனங்கள் உட்பட 200 நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன என இதன் பொறுப்பாளர் கனகசபை பூர்ணச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகளை தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெரும் பிரச்னையாக இன்னும் தொடர்கிறது. போர் முடிந்தாலும், முல்லைத் தீவில் ராணுவ கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை. அங்கு செல்ல விரும்பும் வெளிநாட்டினர், பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும்.


மக்கள் மனதில் இன்னும் பயம் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. சுற்றுலாவை பெருக்க தீவிரம் காட்டும் இலங்கை தமிழர்களை கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் வன்னி பகுதியில் சுற்றுலா துறை வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் இலங்கை அரசு, விடுதலைப்புலிகளின் நினைவிடங்களை அழித்து வருகிறது. அந்த இடங்களில் ஓட்டல்கள் அமைக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.போரின் துன்பத்திலிருந்து இன்னும் தமிழர்கள் மீளவில்லை. இலங்கை அரசு, தமிழ் மக்களுடன் அதிகாரத்தை பங்கிட்டு கொள்வதுதான், காயம் பட்ட அவர்களது மனதுக்கு அருமருந்து. ராஜபக்ஷே அரசு அதுபற்றி வாய்வார்த்தைக்குக் கூட ஏதும் பேசுவதில்லை என்பதுதான் வருத்தத்துக்கு உரிய செய்தி.


ராஜபக்ஷே பிடியில் இலங்கை : விடுதலைப்புலிகளை தோற்கடித்த பெருமையுடன் ராஜபக்ஷே, அதிபர் தேர்தலை அறிவித்தார். இந்நிலையில்விடுதலைப்புலிகளுக்குஎதிரான போரின் போது ராணுவ தளபதியாக இருந்த பொன்சேகா, ராஜபக்ஷேயுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அப்பதவியில்இருந்து விலகினார்.அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டார். 2010 ஜன., 26ல் நடந்த பரபரப்பான அதிபர் தேர்தலில் பொன்சேகாவை தோற்கடித்து ராஜபக்ஷே அதிபரானார். பின் பொன்சேகாராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இலங்கை பார்லிமென்டுக்கு நடந்த தேர்தலிலும் ராஜபக்ஷே கட்சியே வெற்றி பெற்றது. தனி ஈழம் என்ற கோரிக்கை இந்த மன்றங்கள் எங்கேயும் ஒலிக்காத நிலையே உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக