புதன், 21 நவம்பர், 2012

"வீட்டிலிருந்தாலும்தொழிலதிபர் ஆகலாம்!'

சொல்கிறார்கள்
"வீட்டிலிருந்தாலும் தொழிலதிபர் ஆகலாம்!'

வீட்டிலிருந்தபடியே, விதவிதமான கைப்பைகள் தயாரித்து விற்பனை செய்யும் மாலதி: என் சொந்த ஊர் கோவை. திருமணத்திற்குப் பின், சென்னை வந்தேன். என் கணவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். குடும்பச் சூழலால், வேலைக்குச் செல்ல முடியவில்லை. வீட்டில் இருந்தபடியே, கொஞ்சமாவது சம்பாதிக்கலாம் என்று தான், "வெரைட்டி பேக்' தயாரிப்பைத் துவங்கினேன்.

பயணங்களின் போது உபயோகப்படுத்தும் பை, வெல்வெட், காட்டன் பை, அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லும் பேக் என, பல வகைப்பட்ட பைகளை தைக்கிறேன். நான் தயாரிக்கும் பைகள் அனைத்தையும் துவைக்கலாம், "வாஷிங் மிஷினில்' துவைத்தால் கூட, எந்த சேதாரமும் ஆகாது. நிறைய வடிவங்களில் பைகள் தயாரித்தாலும், பீரோவில் சேலைகளை பத்திரப் படுத்துவதற்காக, நான் தயாரிக்கும், சூட்கேஸ் போன்ற துணி பை தான், என் தனித்துவமான அடையாளம்.

இதில், ஏழு முதல், 10 புடவைகளை அடுக்கி, பீரோவில் வைத்து விடலாம்; மடிப்பு கலையாது. பையின் ஒரு பக்கத்தில், பாலிதீன் கவர் வைத்து தைத்திருப்பதால், பிரிக்காமலேயே, உள்ளே, என்னென்ன புடவைகள் உள்ளதென்று பார்க்க முடியும். குறிப்பாக, பட்டுப் புடவைகளை பத்திரப்படுத்த, இந்த பை உபயோகமானதாக இருக்கும்.

இப்போதைக்கு, நான் வெளியில் வேலைக்குச் சென்றால், எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ, அதைவிட கொஞ்சம் அதிகமாக, இதில் சம்பாதிக்க முடிகிறது. கடந்த, 10 ஆண்டுகளாக, இந்த தொழிலை செய்கிறேன். கண்காட்சிகளில் அரங்குகள் அமைத்து விற்பனை செய்கிறேன். பைகளின் விலை, 10 முதல், 350 ரூபாய் வரை உள்ளது. தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலம், கணிசமாக ஆர்டர் வருகிறது. விரைவில், இன்னும் நல்ல நிலைக்கு வருவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக