செவ்வாய், 30 அக்டோபர், 2012

உலக ச் சிக்கன நாள்

வரவை அறிந்து, செலவை உணர்ந்தால், வாழ்க்கை வசமாகும்!:இன்று உலக ச் சிக்கன நாள்


"வரவு எட்டணா... செலவு பத்தணா' வாக இருந்தால், வாழ்க்கையில் சந்தோஷம் வராமல் போகும். ஆயிரங்களிலும், லட்சங்களிலும் சம்பளம் வாங்குவோர் மட்டுமல்ல... அன்றாடம் கூலி வேலை செய்பவர்களுக்கும், சேமிப்பு அவசியம். வரவு அறிந்து செலவு உணர்ந்து செயல்பட்டால், சந்தோஷம் நம் வசமாகும்.
அடுத்து வரும் காலங்களில் குடிநீருக்காக பெரும் போராட்டம் நடக்கும். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு, நமக்கு ஒரு எச்சரிக்கை. புழக்கத்திற்குத் தேவையான தண்ணீரில், 75 சதவீதம் நிலத்தடி நீரை நம்பியுள்ளோம். பெரு நகரங்களில் உள்ள அடுக்குமாடி வீடுகள், மற்றும் மூடப்பட்ட கிணறுகளால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது.
தமிழ்நாட்டை தற்போது அச்சுறுத்தும் ஒரே விஷயம், மின்வெட்டு தான். இனி வரும் காலங்களில், ஒவ்வொருவரின் மின் தேவையும் அதிகரிக்கும் போது, இப்பிரச்னை இன்னும் பூதாகரமாக எழும். இன்று உலக சிக்கன நாள்... ஒவ்வொரு வீட்டிலும், பொருளாதாரம், மின்சாரம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் தான், அடுத்த தலைமுறை தப்பிக்கும், என்கின்றனர் குடும்பத்தலைவிகள்.
ஆர்.செல்வி, மதுரை:
ரேஷனில் ஒவ்வொரு மாதமும் அரிசியை வாங்கி, வீணாக்குகிறோம். இட்லிக்கு இதையும் சேர்த்து அரைக்கலாம். இடியாப்பத்திற்கு ருசியாக இருக்கும். அரைத்து வேக வைத்து கூழாக்கி, வடகம் செய்யலாம். இதன்மூலம், மாதந்தோறும் கிட்டத்தட்ட ஏழு கிலோ அரிசிக்குரிய காசை மிச்சப்படுத்தலாம். ஆடம்பரத்திற்கு ஆடைகள் வாங்காமல், அத்தியாவசியத்திற்கு வாங்கலாம். குழந்தைகளின் நாளைய கல்விக்கு, சிறுமுதலீடாக இன்சூரன்ஸ் செய்யலாம்.
கே.பவுன்தாய், மதுரை:
மளிகைப் பொருட்களை தினமும் வாங்குவதை விட, மொத்தமாக வாங்கலாம். சிலர் சமைக்கும் போது அளவு தெரியாமல், கூடுதலாக செய்வர். தேவைக்கேற்ப சமைத்தால், எதுவும் வீணாகாது. ஒரு பொருளை வாங்கும் போது, இருமுறை யோசித்து வாங்க வேண்டும். வருமானம் முழுவதையும் செலவு செய்யாமல், சம்பளத்தில் 10 சதவீதத்தை, தனி சேமிப்பாக வைக்க வேண்டும். மிக அவசரம் என்றால் ஒழிய, அப்பணத்தை தொடக்கூடாது.
ஆர்.பவித்ரா, திண்டுக்கல்:
குடும்பத்தில் கணவன், மனைவியும் தங்கள் சம்பளத்தை வைத்து முதலில் திட்டமிட்டு, நாமே ஒரு "பட்ஜெட்' போட வேண்டும். வருமானத்திற்குள் செலவு அடங்க வேண்டும். அடிக்கடி ஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். "பாக்கெட்' பொருட்களை தவிர்த்து, குழந்தைகளுக்கு விருப்பமானவற்றை, வீட்டில் செய்து கொடுப்பது, வீண் செலவை தவிர்க்கும். நடந்து செல்லும் தூரத்திற்கு வாகனம் வேண்டாம்.
எஸ்.பார்கவி, திண்டுக்கல்:
கணவன் சொல்வதை மனைவி கேட்டு, சிக்கனமாக இருந்தால், வீட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்த்து, தீபாவளி உட்பட முக்கிய விழாக்களுக்கு ஆடைகள் வாங்கலாம். வீட்டு சூழ்நிலையை பொருத்து திட்டமிட வேண்டும். அடுத்த வீட்டில் வாங்கும் பொருட்களை கணக்கில் எடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கும் சேமிப்பை கற்றுக் கொடுக்க வேண்டும்.
*அ.ஈஸ்வரி, தேனி:
குழாயில் தண்ணீரை திறந்து விட்டுக்கொண்டே, "ஷேவ்' செய்வது, பல் துலக்குவது கூடாது. பாத்திரங்களில் தண்ணீரை பிடித்து பயன்படுத்த வேண்டும். சலவைக்கு பயன்படுத்திய தண்ணீரை கழிப்பறை உபயோகத்திற்கு பயன்படுத்தலாம். பழைய தண்ணீர் குழாய்களை மாற்றிவிட வேண்டும். பாத்திரம் கழுவும் போது, குழாயை சிறிதாக வைக்க வேண்டும். வெளியூருக்கு செல்லும் போது, மெயின் குழாயை அடைக்க வேண்டும்.
எஸ்.சத்தியா, போடி: குடிக்க மட்டுமே குடிநீரை பயன்படுத்தலாம். சிலர் கால்நடைகளை குளிப்பாட்டுவது, வாசல் தெளிப்பது, வாகனம் கழுவுவதற்கும் குடிநீரை பயன்படுத்துகின்றனர். இதை தவிர்க்க வேண்டும். குழாயை திறந்து விட்டு, வேறு வேலைகளை பார்க்கச் சென்றால், தண்ணீர் வீணாகும். குடிநீர் சிக்கனம் குறித்து பள்ளி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

ஆர்.தனலட்சுமி, ராமநாதபுரம்:
ஒரு நாளைக்கு ஒரு முறை தான் பாத்திரம் கழுவ தண்ணீர் பயன்படுத்துகிறேன். வாரம் ஒரு நாள், வீட்டை சுத்தம் செய்கிறேன். மழை நீரை முழுமையாக சேமித்து, அதை காய்ச்சி குடிநீராக பயன்படுத்துகிறோம். இதனால் மழைக் காலத்தில், "மினரல் வாட்டர்' வாங்கும் செலவு, மாதம் ரூ.250 வரை மிச்சமாகிறது. குழாய்களில் "ஷவர்' பயன்படுத்துவதால், தண்ணீர் அதிகமாக விழாமல், சேமிப்பாகிறது.

ஆர்.ஸ்ரீவித்யா, ராமநாதபுரம்: மதிய சாப்பாட்டிற்கு, வாழை இலைகளை பயன்படுத்திறோம். மூன்று நாளைக்கு ஒரு முறை, துணிகளை துவைக்கிறேன். பெரிய பிளாஸ்டிக் "டப்'புகளில் அமர்ந்து குளிக்கும் போதும், துணி துவைத்த பின், அந்த அழுக்கு நீரை சேமித்து, அன்று கழிப்பறை, தோட்டத்திற்கு விடுகிறோம். நேரத்தை கணக்கிட்டு, பம்ப்செட்டை நிறுத்துவதால், தண்ணீர் வீணாவதில்லை.
மின் சிக்கனம் எப்படி?
வி.அனுசியா, காரைக்குடி:
"பிரிட்ஜில்', காய்கறிகளை சேர்த்து வைக்காமல், தினமும் மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகளை வாங்கலாம். வாய்ப்பிருந்தால் ஒரே அறையில் அனைவரும் தூங்கலாம். அவசியத்திற்கு "மிக்ஸி'யும், மற்றவைகளுக்கு அம்மியிலும் அரைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் போது அம்மி அரைத்தால், ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டினால், உடல்நலம் மேம்படும். பொருளாதார ரீதியாகவும் நமக்கு பணம் மிச்சமாகும்.
பி.பல்கீஸ் பானு, காரைக்குடி:
"வாஷிங் மிஷின்', வாட்டர் ஹீட்டர் பயன்பாட்டை குறைக்க வேண்டும். உடைந்த "ஸ்விட்ச்',"பிளக்', பழுதுபட்ட "வயர்'களை மாற்றி, மின்கசிவை தடுக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும். தினந்தோறும் துணிகளை "அயர்ன்' பண்ணுவதை தவிர்த்து, வாரத்தில் ஒரு நாள் செய்யலாம். "டியூப் லைட்'களில், "எலக்ட்ரானிக் சோக்' பொருத்தலாம்.
எம்.சுமதி, விருதுநகர்:
மின்சாரம் இருந்தால் தான் சேமிக்க முடியும். மின்சாரம் இருக்கும் நேரத்தில்தான், அனைத்து பணிகளையும் செய்யும், கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். குண்டு பல்புகளை மாற்றி, குழல் விளக்குகளை பொருத்தியுள்ளோம். தேவையில்லாத இடங்களில் விளக்குகளை எரிப்பதில்லை. துணிகளை தேய்க்கும் போது, மொத்தமாக ஒரே நேரத்தில் செய்து விடுகிறேன். மின் சாதனங்களிலும் தரமான பொருட்களை உபயோக்கிறோம்.
எம்.வைஷ்ணவி, விருதுநகர்:
"மிக்ஸி, கிரைண்டரை ஒரே நேரத்தில் பயன்படுத்தி, வேலைகளை முடிப்பேன். "பிரிட்ஜ்' முழுமையான "கூலிங்' இருக்கும் போது, சிறிது நேரம் அணைத்து வைத்து, தேவைப்படும் போது பயன்படுத்துவேன். மின் அடுப்புகளை பயன்படுத்துவதில்லை. தினமும் ஒரே முறையே மோட்டார் இயக்கி, தண்ணீர் பிடிக்கிறோம். "டிவி' பார்ப்பதையும் குறைத்து விட்டோம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக