திங்கள், 29 அக்டோபர், 2012

தமிழ்நாடு சிறப்பு க் காவல் இளைஞர் படை,முதல்வர் அறிவிப்பு

காவல்துறை யினருக்கு உதவ தமிழ்நாடு சிறப்பு க் காவல் இளைஞர் படை: சட்டசபையில் செயலலிதா அறிவிப்பு
போலீசாருக்கு உதவ தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, அக்.29:-

சட்டசபை இன்று முதலமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்ற நிகழ்வுகளை கண்டுபிடிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, போக்குவரத்தை சீர்படுத்துவது, இயற்கை இடர்பாடுகளின் போது மீட்புப் பணிகளை மேற்கொள்வது, விழாக் காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்களை முறைப்படுத்துவது என பல்வேறு இன்றியமையாப் பணிகளை தமிழக காவல் துறை ஆற்றி வருகிறது.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையில் உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 629 ஆகும். இது, 635 மக்களுக்கு ஒரு காவல் அலுவலர் என்ற விகிதாச்சாரத்தில் அமைந்துள்ளது.

1.1.2012 நிலவரப்படி, இந்த அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு எதிராக 82 விழுக்காடு காவல் அலுவலர்கள் மட்டுமே பணியில் இருந்து வருகிறார்கள். காவல் துறையில் நிலவும் இந்தப் பற்றாக்குறையினை சீர் செய்யும் வகையில், காலியாக உள்ள 12,208 காவலர் பணியிடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புமாறு நான் உத்தரவிட்டேன்.

எனது உத்தரவினையடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், காவலர்களுக்கான எழுத்துத் தேர்வை 24.6.2012 அன்று நடத்தியது. இதனைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உடற்தகுதித் தேர்வினை நடத்திய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், 12.10.2012 அன்று  தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 12,162 காவலர்களுக்குத் தற்போது மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவப் பரிசோதனைக்குப் பின், தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களுக்கு 7 மாத கால பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பின்னரே அவர்கள் பணியில் சேரும் நிலை உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டும், பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ள அளவுகோல்களின்படி 19,096 காவல் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும்; ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான காவலர்கள் ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொண்டும் பார்க்கும் போது, காவல் துறை ஈடுபடும் பல்வேறு நடவடிக்கைகளில் குறிப்பிட்ட சிலவற்றில் அவர்களுக்கு துணையாக ஒரு துணைப் படையை உருவாக்குவது அவசியமாகிறது.

இவ்வாறு அமைப்பதன் மூலம், சட்டம் ஒழுங்கு பராமரித்தல், குற்றங்களை கட்டுப்படுத்துதல், குற்றப் புலனாய்வு போன்ற பிரதான காவல் பணிகளில் தற்போதுள்ள காவலர்களை முழுமையாக ஈடுபடுத்த இயலும்.

இதற்கு வழி செய்யும் வகையில், ‘தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை’ என்ற ஒரு சிறப்புப் படை தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சிறப்புப் படைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல்; நீதிமன்றங்களால் வெளியிடப்படும் வருவிப்பு ஆணைகளை சார்வு செய்தல்; கூட்ட நெரிசல்களை ஒழுங்குபடுத்துதல்; இரவு ரோந்து மற்றும் ஓட்டுநர் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு விளம்பரம் செய்யப்பட்டு; மாவட்ட வாரியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மூலம் தேர்வு நடத்தப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் இத்தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர் ஆவர். தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அந்தந்த மாவட்டங்களில் தமிழ் நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர்களாக பணி அமர்த்தப்படுவர்.

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர்களுக்கு பயிற்சி காலத்திலும்; பணி காலத்திலும் மாதம் ஒன்றுக்கு மதிப்பூதியமாக 7,500/- ரூபாய் வழங்கப்படும். மேலும், அவர்கள் காவலர்களுக்கான சிறப்பு அங்காடிகளில் அளிக்கப்படும் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.

இதுதவிர, அரிசி, கோதுமை, சர்க்கரை, மைதா, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வகுக்கப்பட்டுள்ள அளவுகோலின்படி அவர்களுக்கு வழங்கப்படும். ஓர் ஆண்டு காலம் திருப்திகரமான பணியினை நிறைவு செய்யும் தமிழ் நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர்கள், காவல் துறையில் காலியாகும் காவலர் பணியிடங்களில் ஈர்த்துக் கொள்ளக் கூடிய தகுதியைப் பெறுவர்.

ஒவ்வொரு ஆண்டும் காவல் துறையில் காவலர் நிலையில் ஏற்படும் காலியிடங்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இந்த சிறப்புக் காவல் இளைஞர் படையிலிருந்து தேர்ச்சி பெறும் நபர்களுக்கு ஒதுக்கப்படும். சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இதற்கென ஒவ்வொரு ஆண்டும் சிறப்புத் தேர்வினை நடத்தும்.

அத்தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுபவரின் பட்டியல் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும். இத்தேர்வில் வெற்றி பெறாதவர்கள், 40 வயது வரை, இந்த தமிழ்நாடு சிறப்புக் காவலர் இளைஞர் படையிலேயே, தொடர்ந்து பணியாற்றுவர்.

40 வயதிற்கு மேல், அவர்களுக்கு, தமிழக அரசே வேறு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும். இந்த நிதியாண்டில் தமிழ் நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கென மாநிலம் முழுவதும் 10,000 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதற்கான தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் நடத்தப்படும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் இந்த நிதியாண்டிற்குள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

2013-2014 ஆம் நிதியாண்டில் 15,000 பேர் இந்த இளைஞர் படைக்கென தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ப 50,000 உறுப்பினர்கள் வரை இந்த தமிழ் நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் சேர்க்கப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக