திங்கள், 16 ஏப்ரல், 2012

fraud priest buy hotel and apartments

கயவர்களிலும் கயவர் சாமியார்

தினமலர் : பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012,23:37 IST
புதுடில்லி :வேலையற்ற இளைஞர்களை ஏமாற்றிய புகாருக்கு ஆளான, சர்ச்சைக்குரிய சாமியார் நிர்மல் பாபா, சீடர்கள் நன்கொடையாக, பதிவுக் கட்டணமாக அளித்த பணத்தில் டில்லியில் 35 கோடிக்கு ஓட்டலும், 1.80 கோடி ரூபாய்க்கு அடுக்கு மாடி குடியிருப்பும் வாங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

டில்லி, ஜார்க்கண்ட் உட்பட பல மாநிலங்களில் பிரபலமான நிர்மல் பாபா என்ற சாமியார் மீது, கடந்த வெள்ளியன்று, போபாலில், ராஜேஷ் சென் என்ற வாலிபர் புகார்
கொடுத்தார். வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக நிர்மல் பாபா பல இளைஞர்களை ஏமாற்றியதாகவும், பணம் பறித்துள்ளதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

கவுரவமான வேலை :சாமியார் நிர்மல் பால், தன் சீடர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஆங்காங்கே அடிக்கடி நடத்துவார். அதில், ஒன்றில், ராஜேஷ் சென்னும் அவரைச் சந்தித்துள்ளார். அப்போது, கறுப்பு கலர் பணப்பை ஒன்றை வைத்துக் கொண்டால், கவுரவமான வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளார். காணிக்கையாக, பதிவுக்கட்டணமாக கணிசமான பணத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். அவர் சொன்னபடி, ராஜேஷ் பையை வாங்கி தன்னுடன் வைத்துப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை.

விசாரணை கோரிக்கை :இதேபோல், பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த இந்தர்ஜித் ஆனந்த் மற்றும் பூனம் என்ற தம்பதியரிடமும், நீங்கள் வங்கிக்குச் சென்று, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை மாற்றி வந்தால், உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் கமிஷனாக தரப்படும் என, பாபா கூறியுள்ளார். தொழிலில் நஷ்டமடைந்து கஷ்டத்தில் இருந்த அவர்களும் சாமியாரின் வார்த்தையை நம்பி, வங்கிக்கு சென்றனர். அதன் பின்னரே, அந்த காசோலையில் பிரச்னை இருந்தது தெரியவந்தது. இதனால், அந்த தம்பதி மீது போலீசில் வழக்கு பதியப்பட்டது. இது போன்று பலரிடம் சாமியார் நிர்மல் பாபா மோசடி செய்திருப்பதால், அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ராஜேஷ் சென் கோரியிருந்தார்.

திடுக்கிடும் தகவல்கள்:இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், சாமியார் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அத்துடன் ஜார்க்கண்ட் பத்திரிகை ஒன்றிலும் அவரைப் பற்றி பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
டில்லியைச் சேர்ந்த சாமியார் நிர்மல் பாபா, தன் சக்தியால், எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் எனக் கூறி வலம் வரத் துவங்கினார். வழக்கம் போல் இவரிடமும், பலதரப்பட்ட மக்களும் செல்லத் துவங்கினர். இவரிடம் ஏமாந்தவர்களில், பெண்கள், வேலை இல்லாத இளைஞர்கள், தொழிலதிபர்கள் என, பலரும் உள்ளனர். அவ்வாறு வந்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பதை, நிர்மல் பாபா வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

சொகுசு ஓட்டல்; சீடர்கள் நன்கொடை மற்றும் காணிக்கையாக தந்த பணத்தைக் கொண்டு, டில்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில் 30 கோடி மதிப்பிலான நட்சத்திர ஓட்டலை விலைக்கு வாங்கியுள்ளார். அதுபோல், 1.80 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றையும் வாங்கி குவித்துள்ளார். சாமியாரால் வாங்கப்பட்ட ஓட்டலின் முன்னாள் உரிமையாளர் கூறுகையில், ""தலைநகர் டில்லியில், பல ஓட்டல்களை வாங்க வேண்டும் என்ற ஆசை, சாமியாரிடம் இருந்தது. அதனால், தற்போது 35 கோடி ரூபாய் மதிப்பிலான என் ஓட்டலை அவருக்கு, 30 கோடிக்கு விற்றேன்' என்றார்.

காணிக்கை பணம்:அதுபோல், சாமியார் வாங்கிய அடுக்கு மாடி குடியிருப்பின் முன்னாள் உரிமையாளர் கூறுகையில், ""சாமியாரிடம் வரும் சீடர்கள் தரும் நன்கொடை மற்றும் காணிக்கை தொகையில் தான் அவர் இந்த அடுக்கு மாடி குடியிருப்பை வாங்கினார்,'' என்றார்.

வேலையில்லாத இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்ததற்காக, நிர்மல் பாபாவிடம், போபால் போலீசார் விரைவில் விசாரணை துவங்கவுள்ளனர். அப்போது, அவரைப் பற்றிய மேலும் பல ரகசியங்கள் தெரிய வரலாம்.

யார் இந்த நிர்மல் பாபா?நிர்மல் பாபா என்றழைக்கப்படும் நிர்மல் சிங் நரூலா, கடந்த 1950ல் ஜார்க்கண்ட் மாநிலத்தில், சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு திருமணமாகி, ஒரு மகன், மகள் உள்ளனர். ஜார்க்கண்ட் சட்டசபையின் முன்னாள் சபாநாயகரான இந்தர் சிங் நம்தாரி, இவரது மைத்துனர். துவக்கத்தில், ஜவுளி வியாபாரியாக தன் வாழ்க்கையை துவங்கிய நிர்மல் பாபா, பின், செங்கல் வியாபாரம் செய்தார். இதில், அவருக்கு நஷ்டம் ஏற்படவே, கடந்த 1980ல் டில்லிக்கு தஞ்சமடைந்தார். இந்த காலகட்டத்தில் தான் அவருக்கு தெய்வீக சக்தி கிடைத்ததாக, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். இதன்பின்னரே சாமியாராக வலம் வரத் துவங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக