புதன், 18 ஏப்ரல், 2012

Yaazh People reminiscent Thamizh EEzha police

தமிழீழக் காவல்துறையை நினைவுகூரும் யாழ் மக்கள்

http://thaaitamil.com/?p=16059


வடக்கு கிழக்கில் தமிழீழ விடுலைப் புலிகளின் ஆட்சி இல்லாமல் போனதைத் தொடர்ந்து குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற யாழ்.மாவட்டத்தில் நடைபெறுகின்ற சிறு குற்றச்செயல்கள் தொடர்பாக சிறிலங்காப் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாகவே இங்கு குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
யாழில் பொலிஸ் பிரிவுகள் வரையறுக்கப்பட்டு பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்ற போதும் கிராமப்புறங்களில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களில் பொலிஸார் அக்கறை எடுப்பதில்லை. கிராமப்புறங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொலிஸார் இருந்தும் இல்லாதது போலவே நாங்கள் உணர்கின்றோம் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
குடாநாட்டிலுள்ள கிராமப்புறங்களிலும் வீதிகளிலும் மாலை வேளைகளில் கூடி நிற்கின்ற இளைஞர்கள் அவ்விடங்களில் வைத்தே மது அருந்திவிட்டு நிறை போதையில் நின்று பொது மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துகின்றனர்.
மேலும் இரவு வேளைகளில் பெரும் சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விடுகின்ற இந்த இளைஞர்கள் பாடல்களுக்கு ஏற்ப குத்தாட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அயல் வீடுகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் பெரும்பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர்.
கிராமங்களில் உள்ள சில நலன்விரும்பிகள் இந்தச் செயல் குறித்து சிறிலங்கா பொலிஸாருக்கு தெரியப்படுத்துகின்ற போதிலும் முறைப்பாட்டை பதிவு செய்தால் மட்டுமே இவ்வாறான செயல்களைக் கட்டுப்படுத்த முடியுமென்று  பொலிஸார் தெரிவிப்பதாக மேற்படி நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.
ஒருவர் தனிப்பட்ட ரீதியில் தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களுக்கு பொலிஸ் நிலையம் சென்று முறையிட முடியும். ஆனால் பொதுவாக மக்கள் பாதிக்கும் சம்பவங்களுக்கு தனிப்பட்ட ஒருவர்  எவ்வாறு முறையிட முடியும்? என்று கேள்வியெழுப்பியுள்ள மேற்படி நலன்விரும்பிகள் தனிப்பட்ட ஒருவர் முறையிட்டமை தொடர்பில் வெளியே தகவல் தெரிந்தால் தாங்கள் தாக்கப்படக்கூடிய அச்சத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை நேரடியாகச்சென்று முறைப்பாடுகள் செய்தால் கூட பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்வதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் அசமந்தப் போக்குக் குறித்து இந்தப்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் மேற்படி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் வேரம் என்ற இடத்திலுள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை புகுந்த குழுவொன்று பொருட்களை அடித்து நொருக்கி சேதப்படுத்தியதுடன் வீட்டிலுள்ளோரையும் அச்சுறுத்தியுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்றே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
மறுநாள் மேற்படி வீட்டுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட மூளாய் கிராம சேவையாளர் சேத விபரங்களை உறுதிப்படுத்தியதுடன் பொலிஸ் நிலையத்திற்குச் செல்லுமாறு கடிதமும்  வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் கடிதத்துடன் சென்று வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த போதிலும் பொலிஸ் சம்பவ இடத்திற்கு வரவில்லையென்றும் மேற்படி பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
மேலும் யாழ் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பொலிஸார் வீதிகளில் நின்று இலஞ்சம் வாங்கும் செயற்பாட்டிலும் ஈடுபடுகின்றனர். இதேவேளை திருட்டுக்கள் அடிதடி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்களை பொது மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தால் அவர்களிடம் இலஞ்சம் பெறு;று விட்டு சில மணி நேரத்திலேயே பொலிஸார் அவர்களை விடுதலை செய்வதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின்; காவல்துறையினர் இருந்த காலத்தில் தாங்கள் இவ்வாறான நிலையை எதிர்நோக்கியிருக்கவில்லையென்று கூறுகின்ற மக்கள் தற்போது பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
யாழ.;மாவட்டத்தில் சிவில் நிர்வாகம் நடைபெறுவதாக அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் அவ்வப்போது கூறி வருகின்ற போதிலும் இங்கு பொலிஸாரின் செயலில் மக்கள் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக