வெள்ளி, 13 நவம்பர், 2009

இலங்கை தலைமை தளபதி ஃபொன்சேகா ராஜிநாமா தேர்தலில் போட்டியிடுகிறார்



கொழும்பு, நவ. 12: இலங்கை முப்படைகளின் தளபதி சரத் ஃபொன்சேகா (58) தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதற்கான கடிதத்தை வியாழக்கிழமை ஒப்படைத்தார். நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபட்சவை எதிர்த்து அவர் போட்டியிட உள்ளதால், தனது பதவியை அவர் ராஜிநாமா செய்துள்ளார். இலங்கையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் நாடாளுமன்றம் மற்றும் அதிபர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. ராஜபட்ச இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் ஃபொன்சேகா நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது. நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்: ராணுவத் தளபதியாக இருந்த ஃபொன்சேகா, விடுதலைப் புலிகளை ஒழித்து 30 ஆண்டுகால இனப்போரை முடிவுக்குக் கொண்டுவந்ததையடுத்து முப்படைகளின் தளபதி என்ற பதவி உயர்வுடன் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற முதல் தளபதியானார். விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். இலங்கையில் மீண்டும் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக ராணுவத்தை விட்டு விலகி சமூகப் பணிகளில் ஈடுபட அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தபோது விருப்பம் தெரிவித்திருந்தார். ராஜபட்சவுக்கு எதிராக தகுதியான வேட்பாளரை நிறுத்துவதற்காக ஃபொன்சேகாவுக்கு ஆதரவு தர சில நிபந்தனைகளுடன் எதிர்க்கட்சிகள் முன்வந்துள்ளன.
கருத்துக்கள்

கொலைகார அணி சிதைந்து தனித்தனியாகப் போட்டி போடுகிறது. ஒரு புறம் இலங்கையின் இறையாண்மையைக் காப்பாற்றியதாகப் பெருமை பேசிக கொண்டே மறு புறம் தாங்கள்தாம் தமிழர்கள் மேல் பரிவு கொண்டவர்கள் எனப் போட்டிப் போட்டுக் கொண்டு நாடக அரங்கேற்றங்கள் நிகழும். ஆனால், இவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வீழ்ந்தால்தான் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வர்களின் குடும்பத்தினர் அமைதியாவர். மனித நேயமுள்ள சிங்களர்கள் போட்டி யிட்டு அதன் மூலம் மக்க ளாட்சி மலர்ந்தோங்கவும் தமிழ் ஈழ இறையாண்மை காப்பாற்றப்படவும் வழியிருப்பின் இத் தேர்தலைப்பற்றி நாம் பேசலாம். இல்லையேல் எந்தக் கொலைகாரன் எப்படிப் போனால் நமக்கென்ன? என்று இது போன்ற செய்திகளைப் புறக்கணிப்பதே நன்று.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2009 3:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக