ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

அண்ணா வளர்ப்பு மகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

 
தம் குடும்பத்தினரைத் தன் வழியில் அரசியலில் குறுக்கு முறையில் இறக்காத பேரறிஞர் அண்ணா அவர்களின் பெருந்தன்மைக்கேற்ப அவர் வளர்ப்பு முறையால் ஊழல் பார்வையையும்  மோசடிச் செயல்பாட்டையும் கொள்ளாது  எளிமையாக வாழ்ந்த திரு  இளங்கோவன் மறைவிற்குத் தனி மணி நேயர்கள் சார்பில் ஆழ்ந்த  இரங்கல்கள்! அரசியல் மூலம் ஆதாயம் பெற்றுச் செல்வம் பெருக்காத பெருந்தன்மை நாளைய உலகில் உங்களைப்பற்றியும் பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றியும் பேசும். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

அண்ணா வளர்ப்பு மகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

First Published : 07 Aug 2011 04:54:41 AM IST


சென்னை, ஆக. 6: முன்னாள் முதல்வர் அண்ணாவின் வளர்ப்பு மகன் இளங்கோவனின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:  அண்ணாவின் வளர்ப்பு மகன் சி.என்.ஏ.இளங்கோவன், உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். இளங்கோவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.  நேரில் அஞ்சலி: முதல்வர் ஜெயலலிதா சார்பில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைப்புச் செயலாளர் சுலோச்சனா சம்பத், அமைச்சர் செந்தமிழன் ஆகியோர் இளங்கோவனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினர். இளங்கோவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது மனைவி விஜயாவுக்கு தந்தி அனுப்பியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து, திமுக வெளியிட்ட செய்தி:  திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக அரசைக் கண்டித்து நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருவாரூர் சென்றுள்ளார். இதனால் இளங்கோவன் துணைவியார் விஜயாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி ஆறுதல் தெரிவித்து இரங்கல் தந்தி அனுப்பியுள்ளார். இதனிடையே, இளங்கோவனின் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக