ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

புட்டிப் பாலாக ஆங்கிலம் எதற்கு?

ஓவியர் பார்த்தசாரதி சின்னச்சாமிக்குப் பாராட்டுகள். செய்தியாளர் ஆனந்து அத்தகைய சில படங்களையும் வெளியிட்டு இருந்தால் சிறப்பாக  இருந்திருக்கும்.  தொடர்பு முகவரி தெரிவித்து இருந்தால் எல்லா ஊர்களிலும் இத்தகைய ஓவியத்தமிழ்க் காட்சி நடத்த வாய்ப்பாக  இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


புட்டிப் பாலாக ஆங்கிலம் எதற்கு?

First Published : 06 Aug 2011 02:13:09 PM IST


தாய்ப்பாலாகத் தமிழ் இருக்க, புட்டிப் பாலாக ஆங்கிலம் எதற்கு? இந்தக் கேள்வியை ஓவியத்தின் மூலமே எழுப்புகிறார் ஓர் ஓவியர். அவர், அமெரிக்க வாழ் தமிழரான பார்த்தசாரதி சின்னசாமி. கோவை பீளமேடு கஸ்தூரி ஸ்ரீனிவாசன் கலைக் கூடத்தில் நான்கு நாள்கள் நடந்த "ஓவியத்தமிழ்' என்னும் தலைப்பில் அமைந்த ஓவியக் கண்காட்சியில் அவரைச் சந்தித்தோம்.இப்படியொரு கண்காட்சியை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?ஆங்கிலத்தில் பேசுவது நாகரிகம் என்று யாரோ விதைத்த விதை. இன்று ஆலமரமாய் கிளை பரப்பியுள்ளது. மொழிக் கலப்பு இல்லாமல் தமிழ் மட்டும் அல்ல, இந்திய மொழிகள்... ஏன் உலக மொழிகள் எதுவும் பேசப்படுவதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் எந்த நகரத்தில் நாம் நின்று சுற்றிப் பார்த்தாலும், உற்றுப் பார்த்தாலும் இது தெளிவாக விளங்கும்.நமது சமூக சூழலில் உள்ள பிரச்னைகளை மையப்படுத்தி வரைய வேண்டும் என்று ஒரு கால கட்டத்தில் யோசித்துக் கொண்டிருந்தேன். சுமார் மூன்று வருடங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் பல ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்குக் காரணம், தாய்மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசுவதுதான் என்பதை உணர்ந்தேன். அப்போது தோன்றிய உணர்வுகளுக்கு வண்ணமேற்றி ஒவியங்களில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். எனக்கே நான் சொல்ல ஆசைப்பட்ட செய்திகளைத் தாய் மொழி நலம் விரும்பும் என் உடன்பிறப்புகளுக்குச் சொல்ல கடல் தாண்டி, ஓவியங்களைச் சுமந்து வந்தேன். "ஓவியத்தமிழ்' என்ற தலைப்பில் கண்காட்சி நடத்தக் காரணம்?தமிழில் பேசும்போது அதில் ஆங்கிலம் கலந்துள்ளது என்பதை ஓவியம் வாயிலாக வெளிபடுத்தியுள்ளேன். ஓவியம் என்பது வண்ணச் சிதறலாக மட்டுமல்லாமல் எண்ணச் சிதறலாகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையோடு ஓவியம் வழி எனக்கு நானே சொல்லிக் கொண்ட செய்திகளை உங்கள் பார்வைக்குப் படைக்க நான் தேர்வு செய்த தலைப்பு இது.அமெரிக்காவில் இருந்து வந்து தமிழ் நாட்டில்இந்த ஓவியக் கண்காட்சியை ஏன் வைத்தீர்கள்?அமெரிக்காவில் வாழும் தமிழ் இளைஞர்கள் தங்களுக்குள் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள்தான். காரணம், அங்கிருக்கும் தமிழர்கள் நீண்ட நேரம் உரையாடுவது அமெரிக்கர்களுடன்தான். அதனால் அவர்கள் தமிழ் பேசினாலும் அதில் ஆங்கிலக் கலப்பைத் தவிர்க்கமுடியாது. ஆனால் தமிழ்நாட்டில் வாழும் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும்போது நாகரிகம் எனும் போர்வையில் தாய்மொழியில் பேசாமலும் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து "தமிங்கல'மாகப் பேசுவதும் இங்குதானே நிகழ்கிறது! அதனால்தான் தமிழ்நாட்டில் ஓவியக் கண்காட்சியை நடத்தினேன்.எந்த கல்லூரியில் ஓவியம் பயின்றீர்கள்?நான் யாரிடமும் ஓவியம் பயிலவில்லை. சிறுவயது முதலே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. எனது தந்தை வெ.சின்னசாமி என்னை உற்சாகப்படுத்தினார். என் உள்ளக் குமுறல்கள், மொழி சிதைவடைகிறது என்ற எண்ணத்தினால் ஏற்படும் நடுக்கங்கள் கை வழியே ஊடுருவி ஓவியமாக மாறின. நீங்கள் எந்த ஊரில் எந்த மொழியில் கல்வி பயின்றீர்கள்?நான் உதகை அருகே உள்ள கீழ் கோத்தகிரியில் இருந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். 12-ம்வகுப்பு வரை தாய்மொழியில்தான் படித்தேன். பள்ளிப் படிப்பில் சிறப்பிடம் பெற்றேன். தமிழில் கற்றதால் ஆங்கிலம் வராது என்ற தவறான எண்ணம் எனக்கும் இருந்தது. ஆனால் நம்பிக்கையுடன் ஆங்கில நாவல்கள் மற்றும் சிறுகதைகளைப் படிக்கத் துவங்கினேன். தற்போது. ஆங்கிலம், தமிழில் நல்ல புலமையுண்டு. கொமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம். கல்லூரியில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றேன். மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று எம்.எல்., படித்தேன். தற்போது டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.

1 கருத்து: