திங்கள், 18 ஜூலை, 2011

மேலை நாட்டுக் கானல் நீர்

 

ஞாயிறு, 17 ஜூலை, 2011

படித்ததில் பிடித்தது - மேலை நாட்டுக் கானல் நீர் ...!


ள்ளளவு தமிழ் -
கொள்ளையளவு ஆங்கிலம் - அதுவே
தங்கிலீஷ் எனும் தமிங்கிலம் ;
காட்சி ஊடக கடல்களில்
அதிகம் ஆளும் இந்தத் திமிங்கிலம்...!

மொழியின் நலிவு -
மொழிக் கலப்பில் துவக்கம் ; - ஓர்
இனத்தின் அழிவு -
மொழியின் நலிவினில் துவக்கம்...!


மொழியில் மட்டுமா கலப்பு - இன்று
அனைத்திலும் மேலை நாட்டுக் கலப்பு ;
உணவில் கலப்பு -
நோயின் பிறப்பு ;
பண்பாட்டில் கலப்பு - சமூக
சீரழிவின் தொகுப்பு ; - இவையே
இன்றைய தீரா அருவருப்பு...!

பிறமொழிகளின் ஆளுமைக்கு காரணம் - அவை
வருமானம் தரும் மொழிகளாம் ;
வருமானம் தரும் - ஆனால்
அவை தன்மானம் தருமா...?
அதைப் பற்றி - இங்கு
யாருக்கு கவலை...!?

வருமானம் தரும்
மொழி... - அது
ஒரு புறம் இருக்கட்டும் ;
ஆயினும் - இந்த
நாறிய மேலை நாட்டு -
நாகரிகம் என்ன தரும்...?!



நடையில், உடையில்
பழகும் பண்பில், பாசத்தில் -
சிறந்த நட்பில் -
அழகிய காதலில் - இனிய
உறவில் - அட

அன்பில் கூட - நாம்
அன்னியப்பட்டுப் போனோம் - நம்
பழம்பெரும் உயர் பண்பாடு மறந்து !

கவின்மிகு - நம்
பண்பாட்டுச் சோலை ;
ஏன்...? - இந்த
மேலைக் கானல் நீர் -
பாய்ச்சும் வேலை...!

பாரதி போல்... தேவநேய பாவாணர் போல்...
பன்மொழிப் புலமை வேண்டும் -
பன்னாட்டுக் கலைகள் யாவும் -
பழகிடல் வேண்டும் - அவை
நம் மொழியின் , நம் பண்பாட்டின் புகழினை
எந்நாட்டிலும் பேசிடுவதற்கே...!

நம் - அண்டை
கன்னடத்தில் ஓர் அரும் நிகழ்வு...
கோடிக்கணக்கான மதிப்பில் -
வேளாண் துறை திட்டம் - அதன்
கருத்துரு ஆங்கிலத்தில் எழுதியவர்களுக்கு -
1000 ரூபாய் தண்டம் விதித்தது -
உத்தர கன்னட மாவட்ட நிர்வாகம் ;
கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டதால்...!

இங்கும் ஒரு நிகழ்வு அதே நேரத்தில்...
ஓசூருக்கு அருகில்,
ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் - தம்
தாய் மொழித் தமிழில் பேசியதற்கு -
தண்டம் விதித்தது கல்லூரி நிர்வாகம் ;
இது போல் - இங்கு
நாள்தோறும் நிகழ்வுகள் ஆயிரம்...!



மனவேதனையுடன்...
கடுந்தவம் தானிருந்து
கடவுளிடம் வரம் கேட்டேன் !
தனித் தமிழுக்கு ‘பாதுகாப்பு’
தா என்று...!

என்ன...

தனித் தமிழுக்கு 'பாதுகாப்பா...?’
இவ்வரம் தர எம்மால் இயலாது -
வேறு வரம் கேள் என்றே - புன்னகைத்து
சென்று விட்டான் - எம்
செந்தமிழ்க் கடவுள்...!

ஏதும் விளங்காமல் வீடுவந்தேன் ;
கேட்ட வரமே பிழை என்று -
பிறகே உணர்ந்தேன்...!

‘பாது’ என்பதே -
‘காப்பு’ எனும் பொருள் தரும் -
வடமொழிச் சொல்லே !

தமிழ் மொழியின் ஊடே இருந்து -
குழி பறிக்கும் - இம்
மொழிக் கலப்பினை - நலமில்லா
நாறிய மேலை நாகரிகக் கலப்பினை -
அடியோடு களையெடுக்க ; -மீண்டும்
தவம் இருக்கிறேன் -

பிழையில்லா வரம் கேட்க...!


நா. இதயா ஏனாதி ...
நந்தவனம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக